"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"
Showing posts with label சைவ சமயம். Show all posts
Showing posts with label சைவ சமயம். Show all posts

Monday, April 30, 2012

நித்தியானந்தாவும் சுமார்த்த திருவிளையாடலும்! -சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8

அத்வைதத்துக்கு சங்கரர் கொடுத்த விளக்கம் தவறானது என்றும் சைவசித்தாந்தமே அத்வைதத்துக்கு உண்மை பொருளை கொடுக்கும் சுத்தாத்வைதநெறி என்றும் முன்னைய பகுதியில் பார்த்தோம்.
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் முன்னைய பகுதிகள்
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 7

இன்றைய பகுதியில் சைவசித்தாந்தம் பற்றி ஆராயாமல், சைவசித்தாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்க இருக்கின்றோம்.இது கொஞ்சம் அரசியல்வாடை கலந்த பதிவு! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற அப்பரடிகளின் அருள்வாக்கே சைவர்களுக்கு திருவாக்கு என்பதால் அரசியல்வாடை ஒரு இடைஞ்சல் அல்ல என்று கருதுகின்றேன்!

இப்பதிவு சற்று நீண்டபதிவுதான்! ஆனால் தமிழருக்கு அவசியமான பதிவு!!! ஆகவே பொறுமையோடு படிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


சங்கர அத்வைதத்தை தோற்றுவித்த ஆதிசங்கரர் பிறப்பால் பிராமணர்! அதுவொன்றுதான் இன்றுவரை சங்கரரின் அத்வைதம்பற்றிய கருத்து தவறானதாக இருந்தபோதும் இன்றுவரை உயிர் வாழ்வதற்கு ஏதுவாயிற்று! ஆதிசங்கர் தான் பிராமணராக இருந்தமையை எண்ணி பெருமைப்பட்டிருப்பாரோ தெரியவில்லை! ஆனால் அவர் சமூகம் தம்மவர் முன்வைத்த அத்வைதத்துக்கான விளக்கம் என்ற ஒரே காரணத்துக்காக அதுபற்றிய தர்க்கரீதியான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடாமல் கண்மூடித்தனமாக அதுவே மெய்யென்று தலையில் வைத்து கொண்டாடுகின்றது!

சங்கர அத்வைதத்தை தழுவியிருப்பவர்கள் சைவநெறியுடையோர் அல்லர்! வைணவநெறியுடையோரும் அல்லர்! அவர்கள் சுமார்த்தர்கள் எனப்படுவர். இதனை தெய்வத்தின் குரலில் தெளிவாகவே சங்கர பெரியவாள் தெரிவித்துவிட்டார்!

சைவசமயத்துக்கும் சுமார்த்தத்துக்கும் அடிப்படை வேறுபாடுகள்தான் என்ன?


சங்கர அத்வைதத்தில் கடவுள்
பிரம்மம்=ஆன்மா

சைவநெறியில் கடவுள்!
சிவபெருமான்


சங்கர அத்வைதமும் சாதியும்!
நான்கு வர்ணங்கள்! பிராமணரே உயர்ந்தோர்!

குறைந்தசாதி என்று அவர்களால் கருதப்படும் எவரோடும் பேசும்போதும்கூட தீட்டு ஏற்பட்டுவிடும். எனவே அத்தீட்டு ஏற்படுவதை தவிர்க்க மாட்டு கொட்டகையில் வைத்துத்தான் அப்படியானவர்களை சந்தித்தல்( காந்தியை அப்படித்தான் சங்கரப்பெரியவாள் சந்தித்தார்)

சைவநெறியில் சாதி!
சிவாகமங்களை கற்று அறுபத்திநான்காம் நாயனாராக விளங்கிய ஆறுமுகநாவலர் பெருமானால் சைவசாதியமைப்பு தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சைவர்கள் அதனை பின்பற்றுவதில்லை என்பது வேறுகதை! இதோ; நாவலர் பெருமானின் வாக்கு:

"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்."

ஒன்றே குலம் -திருமந்திரம்
ஆன்மாக்கள் அனைத்தும் பசு என்னும் ஒருகுலத்தை சார்த்தவையே! இதுவே திருமந்திரம் சொல்லும் திருமறை!

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே - அப்பர் பெருமான்

கோத்திரமுங் குலமுங்கொண்டென் செய்வீர் -அப்பர் பெருமான்

சங்கர அத்வைதத்தில் மொழி!
சங்கதமொழி(சமஸ்கிருதமொழி) ஒன்றுதான் உயர்ந்த தேவமொழி! கடவுள் மொழி! தமிழ்மொழி பூசை,நாயன்மார் பூசை(நாயன்மாரை ஆதிசங்கரர் துதித்திருந்தமையை கருத்தில் கொள்வது இவர்களுக்கு கடினமான விடயம்) ஆகியவை தமது உயர்ந்த தகுதியை குறைக்கும் செயல்கள்! தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்தவைதான்! (அறிவியலுக்கு முரணானது. சங்கர அத்வைதத்தை பரப்பிய சாய்பாபா கூட இதனையே சொன்னார். நம் தமிழர்கள் கேட்டு மெய்சிலிர்த்தனர்!)

சைவநெறியில் மொழி!
"தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே"-திருமந்திரம்

"ஆரிய முந்தமி ழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே"-திருமந்திரம்

இவ்வண்ணம் சைவதோத்திர நூல்களில் ஒன்றாகிய திருமந்திரம் தமிழ்மொழி கடவுள்மொழி என்பதை தெளிவாகவே உறுதிசெய்கின்றது.

ஆக; தமிழும் சங்கதமொழியும் சிவபெருமானால் அம்மைக்கு ஆகமங்களைப் போதிக்க ஒரேநேரத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் என்பது தெளிவு! எனவே தமிழும் சங்கதமொழியும் இறைவனின் மொழிகளே! ஒன்றை உயர்த்தி ஒன்றைத் தாழ்த்தி கருதுதல் பாவம்! இதுதான் சைவநெறி! ஆக; தமிழ்வழிபாடு என்பது ஆகமச்சைவநெறிக்கு தவறான ஒன்றல்ல!!!

சங்கர அத்வைதமும் வேதமும்!
வேதங்கள் தானாக இருந்தவை. கடவுளால் தோற்றுவிக்கப்படாதவை. வேதமும் ஸ்மிருதிகளுமே சமயநூல்! இதுதான் சங்கர அத்வைதம்!
ஆனால் சைவசமயம் இதனை மறுக்கின்றது!

சைவத்தில் வேதம்!
வேதங்கள் பொதுநூல்களே! சைவாகமங்களே சைவசமயத்தின் சிறப்பு நூல்கள்!  பன்னிருதிருமுறைகளும் தமிழ்வேதம்! பதினான்கு மெய்கண்ட சாத்திரநூல்களுமே சைவசித்தாந்த திருநூல்கள்!

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
அயந்திரு மாலொடு மயங்கி - திருவிசைப்பா
ஆக; வேதத்தினால்கூட முழுமையாக வெளிப்படுத்தமுடியாதவர் சிவபெருமான் என்பது சைவமுடிவு! எனவே சைவத்தில் வேதத்தின் பங்கு எவ்வளவு என்பது தெளிவு!

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதேனும் ஒருவழியைப்பற்றி அறிவுபெற்று ஈற்றில் சைவசமயப்பிறவி வாய்க்கவே வேதம் சிவபெருமானால் உரைக்கப்பட்டது என்பது சைவதுணிபு.

புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
      புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
      அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
      சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
      செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.- சிவஞான சித்தியார்

இப்படி பல்வேறு காரணிகளால் சுமார்தர்களுக்கு சைவசமயம் என்பது வேம்பங்காய் என்று ஆகிவிட்டது! அவர்களுடைய கொட்டங்கள் அரங்கேற இடமற்ற நெறியாக சைவசமயம் விளங்குவது உறுத்தல் ஆயிற்று! சைவசமயமே தமிழரின் பெருஞ்சமயமாக இருந்தமையால் அதனை மழுங்கடிப்பதும் கடினமாக இருந்திற்று.

மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்பர் பெருமான். ஆனால் இன்று அத்வைதத்துக்கு பிழையான பொருள்கொடுத்த சுமார்த்தமதம் அரசியல்ரிதீயில் பலம் பொருந்திய மதமாக வளர்க்கப்பட்டு வருவதும் சைவசமயம் மழுங்கடிக்கப்பட்டுவருவதும் தமிழர் செய்த துர்வினைகளின் பலன் என்றுதான் சொல்லவேண்டும்!

சுமார்த்தமடத்தின் அதிபதியாக பிராமணரே வரலாம் என்னும் விதியினாலும் பிராமணரே பிறப்பால் உயர்ந்தோர் என்னும் கருத்தை வலியுறுத்துவதாலும் பிராமணரில் பெரும்பான்மையானோரின் மதமாக சுமார்த்தம் உருவாக ஏதுவாயிற்று. ஆதிசிவாச்சாரியார்கள்,சைவசமய பிராமணர்கள் பலரும் இன்று இந்த சுமார்த்த வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பதும் இன்று பரவலாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சென்னையிலுள்ள தேவாரப்பாடல்பெற்ற
திருத்தலங்களினுள் ஆதிசங்கரரின் உருவப்படங்கள் கொழுவப்பட்டிருப்பது இப்பெருமாற்றத்தின் வெளிப்பாடே!!!

சைவசித்தாந்தநெறியை சிதைக்கும் சிந்தனை இந்துத்துவாவிடம் ஏன் உருவாகியது?

தனித்தமிழ் இயக்கம், தமிழர் ஆண்டுக்கணக்கு என்று பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டவர்களும் சைவசித்தாந்திகளே!அதை உருவாக்கி வளர்த்து பேணியவர்களும் சைவசித்தாந்திகளே! ஆக; திராவிடவாதத்தின் ஊற்று சைவசித்தாந்தமே என்ற தெளிவு பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு ஏற்பட்டது! தமிழகத்தில் திராவிடநாடு கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தில் இந்தியத்தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க, இந்திய முழுவதும் ஒரேபண்பாட்டையுடைய இந்துமதம் உருவாக்கப்பட வேண்டுமென்ற சிந்தை பார்ப்பனீயத்துக்கு உருவாகிவிட்டது. அதன்விளைவாக, தமிழகத்தில் செழிப்பாகவுள்ள தமிழ்ச்சால்புடைய சைவசித்தாந்தநெறியை தமிழரிடம் இருந்து மெதுமெதுவாக மறைத்து அதற்குப்பதிலாக, பார்ப்பனீயச்சால்புடைய சுமார்த்தநெறியை தமிழருக்கு ஊட்டவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று அதுமெதுமெதுவாக செயற்படுத்தப்படலாயிற்று. சுமார்த்தம்  சங்கதமொழி(சமஸ்கிருதமொழ்) ஒன்றே தேவமொழி என்று கருதுவதால் அதுவே இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் மதமாக இந்தியத்தேசியவாதிகளுக்கு இனித்தது! இது விசித்திரமான ஒன்றல்ல!

அம்பேக்கர் இந்துத்துவா சாதித்துவத்தை அழிக்க உதவாது என்று கருதியபோது, பௌத்தமதமே தழுவிக்கொண்டார். இஸ்லாமிய கிருஷ்தவமதங்கள் இந்தியமண்ணின் மாண்புக்கும், மனிதநேய விழுமியங்களுக்கும் எக்காலத்திலும் உறுதுணையளிக்காது என்பதை நன்குவெளிப்படுத்தி பௌத்தத்தை தழுவினார்.  அவரிடம் இருந்த அரசியல் ஞானம் பெரியாரிடம் இருந்திருக்கவில்லை! திருக்குறளையே திட்டிய பெரியாருக்கு அப்படியான சிந்தனைத்தெளிவு இருக்கவில்லை என்பதில் வியப்பில்லை!
எனவே அவரும் இந்துமதத்துக்கும் சைவசித்தாந்தத்துக்குமுள்ள பாரிய வேறுபாடுகளை உற்றுணராது நாத்தீகத்தையும் இஸ்லாமிய கிருஷ்தவசார்பு செயற்பாடுகளையும் ஆதரித்து திராவிடவாதத்தை தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடவே, சைவசித்தாந்தநெறி தனிமைப்படுத்தப்பட ஏதுவான சூழ்நிலை உருவாகிற்று.

தனித்தமிழ் இயக்கம்,தமிழர் புத்தாண்டுமுறை, தமிழ் பூசைக்கு ஆதரவு போன்ற சைவசித்தாந்திகளின் செயற்பாடுகளால் பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு கசப்பாக விளங்கிய சைவசித்தாந்தநெறி, பெரியாரின் நாத்தீகத்திராவிட அரசியலாலும் புறக்கணிக்கப்பட்டது! இதன்விளைவால், பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு இலகுவாக சைவசித்தாந்தநெறியை மழுங்கடிக்கச்செய்ய பொறிமுறைகள் உருவாக்கிற்று.

தமிழ்நாட்டில் இயங்கிய நாத்தீக அரசியல் தலைமைகள் அரசு பள்ளிக்கூடங்களில் சமயக்கல்வியை தடைசெய்தது. இதனால் சைவத்தமிழ் தேவாரத் திருமுறைகள் தமிழ் மாணவர்களுக்கு புகட்டுவது இயலாத காரியம் ஆகிற்று. இந்துப்பள்ளிக்கூடங்களென்று இந்துத்துவா நிறுவனங்களால் பேணப்படும் பள்ளிக்கூடங்களில் சைவசமயம் என்ற ஒன்று இருப்பதாகக்கூட கற்பிப்பதில்லை. காலை கடவுள் வணக்கத்தில் முழுவதும் சங்கதமொழி(சமஸ்கிருதமொழி) மந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாயன்மார் வரலாறு அறியாத தமிழினம் உருவாக்கப்படலாயிற்று. குமுதம் பக்தி,ஆனந்தவிகடன் சக்தி,கோபுரம்,ஆலயம் போன்ற வெகுஜன ஊடகங்களினூடாகவும் பார்ப்பனீய இந்துத்துவம் பார்ப்பனீய சுமார்த்தத்தையே இந்துமதமாக போதிக்கின்றன. இதனால், சைவம் என்றால் வெஜ்(Veg) என்ற பொருளைமட்டுமே அறிந்த தமிழகம் பிறந்திற்று!

மணிப்பிரவாளநடை என்ற பெயரில் தமிழ் அழிந்துகொண்டிருந்தபோது தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழைக்காத்து இன்றைய சந்ததிக்கு தமிழை தமிழாக சைவசித்தாந்தம் வழங்கியிருக்க, பெரியார்வழி நாத்தீக திராவிட அரசியல் தலைமைகளின் அறிவீனத்தால் இன்று தமிங்கிலமொழி உருவாக்கம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பார்ப்பனீய இந்துத்துவாவே இந்த தமிங்கிலமொழி உருவாக்கத்துக்கும் அடித்தளம் இட்டு வளர்த்தெடுகின்றது என்ற சிந்தனைத்தெளிவு திராவிட இயக்கங்களுக்கு இல்லை! பார்ப்பனீய இந்துத்துவத்தை பொருத்தவரைக்கும், சமஸ்கிருதம்(சங்கதமொழி) வளர்க்கப்படாவிட்டாலும், தமிழ் ஏதேனும்வழிகளில் சிதைக்கப்பட்டால் சரி என்ற தெளிவு உண்டு! அதுபோல் தமிழரிடம் தமிழ்ச்சால்பு சைவசித்தாந்தம் மழுங்கடிக்கப்பட்டு பார்ப்பனீய சுமார்த்தமே வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற புரிதலும் உண்டு. அதுவே தமிழ்த்தேசியவாதத்தை சிதைக்க உதவும் என்ற தெளிவான புரிதலும் உண்டு! ஆனால் சாக்கடை அரசியலுக்குள் சிக்கியுள்ள திராவிட இயக்கங்களுக்கு சைவசித்தாந்த்தை காக்க வேண்டிய தேவையை உணர்ந்துகொள்ள முடியவில்லை! அதனை கடந்த செம்மொழி மாநாட்டில் உணரக்கூடியதாகவே இருந்தது. தமிழகப் பாரம்பரீய சைவாதீனங்களை செம்மொழிமாநாட்டில் கண்டுகொள்ளாமல் விட்டமை இதனை உணர்த்தியது! தமிழ் நூல்களைக் காத்து தமிழை செம்மொழியாக்கும் தகுதியை உருவாக்கிய சைவாதீனங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டமையே பெரியார்வழி நாத்தீகதிராவிட அரசியலின் மோட்டுத்தனத்தை தோலுரித்துக்காட்டியது!

ஆக; தமிழரின் அரியஞானத்தின் வெளிப்பாடு என்று ஜூ.யூ.போப் போன்றோரால் புகழ்ந்துரைக்கப்பட்ட சைவசித்தாந்தம் தமிழகத்தில் இன்று ஏதேனும்வழிகளில் இருக்கின்றதென்றால் அது சைவாதீனங்களின் செயற்பாடுகளால்த்தான் என்று புரிதல் பார்ப்பனீய இந்துத்துவாவிடம் உண்டு. எனவே சைவாதீனங்களை சிதைப்பதுவே தமிழரின் தனித்துவசமயப்பண்பாடாகிய சைவசித்தாந்தத்தை மழுக்கடித்து ஒரேஇந்துமதமாக பார்ப்பனீய சுமார்த்தத்தை தமிழகத்தில் பூரணமாக நிறுவ வழிவகுக்கும் என்ற சிந்தனை பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு ஏற்பட்டுவிட்டது! திராவிட அரசியல் தலைமைகளால் கண்டுகொள்ளாமல்விடப்பட்டுள்ள தமிழ்மாண்புக்குரிய சைவாதீனங்களை சிதைப்பதென்பது கடினமான ஒன்றல்ல! அரசு-அரசியல் ஆதரவற்ற எதனையும் இலகுவாக சிதைக்கலாம் என்பது சின்னக்குழந்தைக்கும் தெரிந்த ஒன்றே!

இதன் வெளிப்பாடாக இப்போது ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தாவுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய வரலாற்றுப்புகழுடைய சைவாதீனத்தின் இளைய மடாதிபதி நியமனம் ஏற்பட்டுள்ளது!

ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தா சர்ச்சைக்குரிய சம்பவத்திற்கு பின்னால் அளிந்த பேட்டிகள் அப்பேட்டிகளில் அவர்பயன்படுத்திய சில்லறைத்தனமான வார்த்தைகள், "தூ" என்று காரி துப்புவது போன்ற கோபச்செயற்பாடுகள், முன்சொன்ன கருத்துக்களை இல்லை என்று மறுக்கின்ற அரசியல்வாதிகளைப்போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளால் அவர் சராசரி மனிதனிலும் கேவலமானவர் என்பது வெளிப்படையாயிற்று!

ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தா தனது இதுவரைகால செயற்பாடுகளில் வெளிப்படுத்திய சமயக்கருத்துகள் யாவுமே பார்ப்பனீய சுமார்த்தசமயக் கருத்துக்களே ஆகும்! ஆக அவர் பார்ப்பனீய சுமார்த்தமதத்தை தமிழரிடம் வளர்க்க பார்ப்பனீயத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர்! ஆம்; பார்ப்பன ஊடகமான குமுதத்தால் உருவாக்கப்பட்ட ஒருவரே அவர்!
தேவார திருவாச சைவசித்த்தாந்த திருமுறைகள், சைவசித்தாந்த சாத்திரநூல்கள், சைவாகமங்கள் என்பவற்றில் எள்ளளவேனும் அறிவு உடையவர் அல்லர்!  சைவசித்தாந்த மடத்தில் உரியமுறையில் கற்றவரும் அல்லர்! இப்படியான ஒரு பார்ப்பனீய சங்கரமட சுமார்த்தசமய பிரச்சாரகருக்கு சைவாதீனமான மதுரை ஆதீனத்தின்  இளைய ஆதீனப்பட்டம் எங்கனம் வாய்த்தது?

தற்போது மதுரை பெரியாதீனமாக இருப்பவர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்தியங்கும் தன்மை உடையவர்! அரசியல்வாதிகளைப்போன்று பேச்சுகளை நிகழ்த்துபவர்! துறவுக்கோலத்தில் இருந்தாலும் பகட்டு "பந்தா" வாழ்க்கையை மேற்கொள்ளுபவர். ஏற்கனவே பெண்விடயத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஒருவர்! எனவே இவருக்கும் நித்தியானந்தாவுக்கும் இடையில் உறவுபூப்பதற்கு பெரிய இராமர்பாலம் அமைக்கத்தேவையில்லை! இனம் இனத்தைச்சாரும் என்ற பழமொழிக்கு ஏற்ப இருவருக்குமிடையில் பாச உறவுபற்றிக்கொண்டுவிட்டது! ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் மதுரை ஆதீனத்துக்கு சென்றுள்ளமையும், பெண் சீடர்கள் இருவர் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டதாக கசிந்துள்ள செய்திகளும் இருவருக்குமான பாசமழையை உலகுக்கு வெளிப்படுத்திற்று.

ஆக; இருவருக்குமான உறவுக்கு ஊடகமாக சுமார்த்த இந்துமதம் சூட்சுமாய் விளங்கியுள்ளதென்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது. இனிமேல் மதுரை ஆதீனம் சைவசமய உலகாலும், அறிவுள்ள பொதுசனங்களாலும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே மாறவுள்ளது! இத்தனை நூற்றாண்டுகால ஆதீனச்சிறப்பும் சிதைந்திற்று! ஆக; மதுரை ஆதீனம் அழிந்திற்று என்றே கூறலாம்! எனவே சுமார்த்த பார்ப்பனீயம் உருவாக்கிய நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் அழிக்கப்பட்டுள்ளது! சைவாதீனங்களில் ஒன்றை சிதைப்பதில் சுமார்த்தம் வெற்றிபெற்றுவிட்டது! நாத்தீக பெரியார்வழி திராவிட அரசியல் இந்துத்துவத்தின் கணக்குப்புரியாது கண்ணிருந்தும் குருடராகவுள்ளது!  சைவசமயம் அரசியல் ஆதரவுமில்லாது சுமார்த்த பார்ப்பனீயத்தை எதிர்கொள்ளும் பலமும் இல்லாது தவிக்கின்றது என்றுதான் கூறவேண்டும்!!!!

சுமார்த்திகளாகிய இந்துத்துவாவின் அண்மைய செயற்பாடுகள்

தமிழ்மொழி பூசைக்கு எதிர், அனைத்து மொழியினரும் அர்ச்சகராகலாம் என்னும் அரசு சட்டத்துக்கு எதிர், திருவாசகத்தை மாணிக்கவாசகர் எங்கு அரங்கேற்றினாரோ அங்குநின்று திருவாசகம் ஓதுதல் தீட்டை உருவாக்கும் என்ற கீழ்த்தரமான சிந்தை என்று அனைத்து வழிகளிலும் சுமார்த்தசங்கர மடமும் அதன் விசுவாசிகளான பார்ப்பனீயரும் ஒரேகுடையில் நின்று செயற்படுகின்றமை!

பார்ப்பனீய இந்துத்துவாவின் அரசியல் இயக்கமான R.S.S அமைப்பு தமிழக மக்களின் சிந்தனைக்கு மாறாக ஐ.நாவில் இலங்கைக்கு சார்பாக இந்தியா செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தமை!

அணு உலைக்கு எதிராக தமிழகமே குரல்கொடுத்தபோது, தமிழக இந்து முன்னணி மத்திய அரசுக்கு சார்பாக அறிக்கை வெளியிட்டு மக்கள் போராட்டத்துக்கு எதிராக செயற்பட்டமை! இராமர் பாலம் அழியும் என்று சொல்லி,தமிழக வளர்ச்சிக்கு உதவும் தமிழக சேதுசமுத்திரக்கனவை தடுத்தவர்கள், தமிழக வளர்ச்சி உதவும் என்று சொல்லி, அணு உலைக்கு ஆதரவாக செயற்பட்டமை!

ஆக; சுமார்த்தமதமாகிய பார்ப்பனீய இந்துமதம் தமிழரிடமுள்ள தமிழ்ச்சால்பு சைவசித்தாந்தநெறியை சிதைப்பது புதிரான ஒன்றல்ல என்பது வெள்ளிடைமலை!!!!

சைவர்களின் கடமைதான் என்ன?
சைவர்களே, விழித்தெழுங்கள்!!!! தமிழை திராவிட இயக்கங்களும் காக்கமாட்டனர்! பார்ப்பனீய இந்துத்துவாக்களும் காக்கமாட்டனர்!!!
சைவர்களே, உங்கள் கடமையாதெனில் தமிழர் குலத்தை இப்பாரினில் காத்திட, சைவசமயத்துக்கு வரும் பங்கங்களை களைய முன்வாருங்கள்!!!


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் அடுத்த பகுதியில் சைவசித்தாந்த தத்துவங்களை பழையபடி தொடர்ந்து பார்ப்போம்!

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 9


இதுதொடர்பான முன்னைய பகுதிகள்
இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்
http://sivathamiloan.blogspot.com/2008/07/blog-post_21.html


சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்
http://sivathamiloan.blogspot.com/2008/11/blog-post_22.html


சைவநெறி என்று பறைவோம்
http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_22.html


"இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்
http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_23.html


ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்
http://sivathamiloan.blogspot.com/2009/09/blog-post_13.html



http://sivathamiloan.blogspot.com/2010/03/blog-post.html




மேலும் படிக்க...

Sunday, November 8, 2009

திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி

"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்

"Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram is the soul of Tamil culture..." - Swami Shivanada -On the Tirukkural
நம் செந்தமிழ்ச் சைவ நூலாகவும் உலகப் பொதுநூலாகவும் விளங்கும் திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் உள்ள மேன்மையைக் கொண்டது.



தமிழ்மறை,பொதுமறை,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தெய்வ நூல்,முப்பால் நூல், உத்தர வேதம் என்று பலவாறு அழைக்கப்படும் திருக்குறளை சமணநூல் என சிலர் சொல்வார்கள். நாத்தீகவாத அரசியலின் ஆற்றாமையில் உருவாகிய கதையே இது. இன்று ஒருசில கிருஷ்தவ போதகர்கள் திருவள்ளுவர் தொட்டு ஔவையார்வரை கிருஷ்தவர் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் யாவும் ஆதிக் கிருஷ்தவத்துள் ஆரியம் கலந்ததால் விளைந்தவை என்றும் கதைகட்டித் திரிகின்றார்கள். பணபலம் கொண்ட இவர்கள் நாத்தீகவாதப் பீடங்களை தமக்கு தலையசைக்க வைத்துமுள்ளனர். எனவே இத்தருணத்தில் திருக்குறள் சித்தாந்த சைவநூலே என்பதை தெளியவைக்க வேண்டியது காலக்கடமை!

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்கிறார் ஔவையார்.

"வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி " என்கிறார் மனோன்மணியம்

நாத்தீகவாத அரசியல்வாதிகள், திருக்குறளுக்கு ஏற்பட்ட மதிப்பை உணர்ந்து, திருக்குறளை எதிர்க்க முடியாது போகவே சமண சமயநூல் என புரளியைப் பரவவிட்டு அரசியல்மேடைகளில் அப்புரளியை அடிக்கடி ஆயிரம் தடவைகள் உண்மையென கூவி தமது ஆற்றாமையை சோற்றுக்குள் மறைத்த முழுப்பூசணிக்காயாக்கிவிட்டனர். திருக்குறளை ஆரியக் கருத்துக் கொண்ட நூல் என்றும் பகுத்தறிவுபற்றிக் கவலைப்படாமல் எழுதிய நூல் என்றும் பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமியார் தனது குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்" -20.01.1929 குடியரசு இதழ். ஆனாலும் பின்னர் திருக்குறளின் மகத்துவத்தை உணர்ந்த நாத்தீகவாத பெரியாரிசத்தால் அதை சைவநூல் என்பதை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாது போய்விடவே, சமண நூல் என்பதுபோலவும், பொதுநூல் ஆதலால் கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக எதுவுமே இந்நூலில் இல்லை என்றும் இது இந்துமதக் கண்டன நூல் என்றும் கதைகட்டி விட்டனர். 14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை" என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" "குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்த பெரியார் பின்னர் திருக்குறளை கிருஷ்தவர்க்கும் இஸ்லாமியருக்கும் ஏற்றநூல் என்றும் ஆரிய எதிர்ப்பு நூல் என்றும் தனது கருத்தை மாற்றியமை திருக்குறள் உள்ளவரை வேதநெறியை எதிர்க்கமுடியாது என்று உணர்ந்தமையை புலனாக்கிறது. இந்துமதம் என்பதும் இந்துத்துவா என்பதுவும் அழகுத் திருநெறிச் சைவத்துக்கு நன்மையை ஊட்டாதவை என்பதை ஏலவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்துமதம் என்னும் பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்ற ஸ்மார்த்தம் வேறு. தென்னாட்டுச் சைவநெறி வேறு. இந்த வேறுபாடுகளை உணரக்கூடிய தெளிவு பெரியாரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலையடிகள் தொட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காய் உழைத்தவர்கள் சைவச் சான்றோர்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெரியாரிடத்தில் இருக்கவில்லை. தமிழரிடம் இலக்கியம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருந்த பெரியாருக்கு இந்த அருமையை உணர முடியாமல் போனதில் வியப்பெதுவும் இல்லை. ஆனால் அரசியல் பலத்துடன் இருந்த நாத்தீகவாதம் தனது ஆற்றாமையில் உருவாக்கிய "சமணநூல்" என்னும் பதத்தை அற்புதமாக தமிழரிடம் பரவச்செய்திட்டு!

இஸ்லாமியர் திருக்குரானுக்கு இணையாக கருதும் திறன் திருக்குறளுக்கு இல்லை எனவும் பொதுமறையாகக் கருதமுடியாது எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி பெரியார் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. கிருஷ்தவரில் திருவிவிலியத்தை ஆழமாய் நம்புகிறவர்கள் மறுத்துவிட்டனர். பொதுமறையாகக்கூட ஏற்கவில்லை.எனினும் கிருஷ்தவ மதத்தை ஒழுகும் தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் திருக்குறளை பொதுமறை என்பர். ஆனால் சில் விசமப் பிரச்சாரத் தரகுக்கூட்டத்தார் கிருஷ்துவின் அருளால் திருவள்ளுவர் எழுதிய நூல் என்று பிதற்றுகின்றனர்.ஆக; சைவரின்மேல் மட்டும் பெரியாரிசம் திணித்த ஒன்றே திருக்குறள் சைவநூல் அல்ல என்க.

திருக்குறளை சொந்தம் கொண்டாடினால் தமிழில் நிலைத்திருக்கலாம் என கனவுகாணும் கிருஷ்வ விசமிகள் சிலர், தோமஸிடம் அருள்பெற்று வள்ளுவர் எழுதிய நூல் என்று நகைச்சுவை நாடகத்தை தமிழகத்தில் அரங்கேற்றியவண்ணம் உள்ளனர். தோமஸ் என்பவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதை கத்தோலிக்கபீடம் ஏற்கவில்லை. ஏனெனில் ஆதாரம் ஏதுமில்லை. தோமஸ் தமிழகத்துக்கு வந்தார் என்றும் அவர் திருவள்ளுவருக்கு போதித்தார் என்றும் கதையைக்கட்டிவிட்டனர் ஆங்கிலேய காலத்தில் தமிழ்கற்று கிருஷ்தவம் பரப்பிய பாதிரிகள். வரலாற்றுரீதியில் வராத ஒருவருக்கு வந்ததாக வைத்து படம்கூட எடுக்க இருந்தமையும் அதுபற்றிய விழாவில் கருணாநிதி தமிழக முதலமைச்சர் பதவியோடு பங்குபற்றி அவ்விழாவுக்கு அங்கீகாரம் அளித்தமையும் வெட்கக்கேடு! வராத ஒருவரை வந்தார் என நம்புவதுக்குப் பெயர்தான் மூடநம்பிக்கை! கருணாநிதியும் மூடநம்பிக்கைகளை விரட்ட முனைகிற கழகங்களும் இந்த மூடநம்பிக்கையை நம்புவது அவர்களது கொள்கையின் இழிநிலை என்க. இதற்கு கருணையில்லாத நிதியாகிய கருணாநிதி விலைபோனதில் வியப்பில்லை.
ஜீ.யூ.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் சேர்ச்சில் மாணிக்கவாசகர் தன்னுடன் நிற்பதுபோலவும் முழந்தாளிட்டு வழிபடுவது போலவும் யேசுநாதரின் அடிச்சுவட்டைக் கண்டு மாணிக்கவாசகர் பின்பற்றியிருப்பார் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு எவ்வண்ணம் இத்தகு உருக்கம் இருக்கமுடியும் என்றும் அத்துடன் இவருடன் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகள் ஆகியோர் யேசுநாதரின் சரிதத்தை அறிந்துதான் இருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது கிருஷ்தவாசத்தாலேயே மெய்யுணர்வு பெற்றதாக சுட்டுகிறார். தமிழின் சிகரங்களாகவுள்ள திருவாசகம், திருக்குறள் மற்றும் நாலடியார் என யாவற்றையும் கிருஷ்தவ தொடர்பின் விளைவு என்று ஜீ.யூ.போப் சொல்லியது "திருவாசகமும் திருக்குறளும் "சைவநெறியோடு பிணைந்துள்ளவரை கிருஷ்தவத்தை முழுமையாகப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தே!

திருக்குறளை சைவநெறியில் இருந்து பிரித்து சமணநூல் என்று ஆரம்பத்தில் கதைபரப்ப பெரியாருக்கு உழைத்தது இக்கிருஷ்தவ விசம தரகுக்கூட்டம் எனலாம்.இரண்டாவதாக இப்போது வந்திராத தோமஸுடன் திருவள்ளுவருக்கு உறவுப்பாலத்தை ஊட்டுகின்றது தனது பணபலம் கொண்டு!

பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? இன்னொருவரிடம் இவ்வண்ணம் வேண்டியவர் "தனது கொள்கைக்காக எவ்வளவு கலப்படம் செய்து பொருளை திரிவுபடுத்தி பேசியிருப்பார், எழுதியிருப்பார்" என்பதையும் உய்த்துணரலாம்.

பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து பாரதிதாசனும் சைவ சித்தாந்த நூலே திருக்குறள் என்று ஒப்புக்கொண்டமையை உணரமுடிகின்றது.

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பார் அவர்" என்பது திருக்களிற்றுப்படியாரில் (சைவ சித்தாந்த சாத்திர நூல்) கடவுள் வாழ்த்து பாடலாகும். உமையம்மை உடனாய அப்பனாகிய சிவமே உலகத்தாருக்கு அம்மையப்பர். அம்மையப்பராக வந்தே துணை செய்வர். எல்லா உலகத்துக்கும் அப்பாலும் இவ்வுலகில் இல்லாததுபோலும் தோன்றுவர். "ஆதி பகவன் முதற்றே உலகு" என வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஏலவே இதே சைவ சித்தாந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் நாத்தீகவாதபீடங்கள் பகவன் என்பது சமணச் சொல் என்றும் தனது அம்மாவாகிய ஆதியையும் தனது அப்பாவாகிய பகவனையும் பாடுகின்றார் என்றும் பிதற்றுவர்.

உலகப் பொதுமறையை இயற்ற விளைந்தவர் தனது சொந்த தாயையும் தந்தையையும் கடவுள் வாழ்த்தில் சுட்டுவார் என்பது எவ்வளவு அறியாமை! கடவுள் வாழ்த்தில் தமிழிலக்கியங்களில் எந்தவொரு ஆசிரியரும் இவ்வண்ணம் சுட்டியது இல்லை. ஆனால் திருவள்ளுவர் வழமைக்கு மாறாக உலகப் பொதுமறையாக இயற்றுகின்ற நூலில் சுட்டினார் என்பது நாத்தீகவாத கதைகட்டலில் ஏற்பட்ட பெரிய ஓட்டை என்க.

அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.

திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.

அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.

சமணத்தின் உட்பிரிவுகள், பௌத்தத்தின் உட்பிரிவுகள் எவற்றோடும் திருக்குறளுக்கு சம்பந்தம் இல்லை என்பதையும் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனப்தையும் திருவாவடுதுறை ஆதீனம் தெளிவாக விளக்கியிருந்தும் அரசியல் பலம், பணபலமாகியன அற்றதனால் மக்களை சென்றடையாமல் அக்கருத்துகள் உள்ளன.

"தேருங்கால்
உன்னை ஒழிய உறவு இல்லை என்னும் அது
தன்னை அறிவைத் தனிஅறிவை - முன்னம்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை அவர் என்று - நிலைத் தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய் வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும் ஆவதுவே
செய்து அங்கு அவர்வழியைத் தப்பாமல்
பாவம் எனும் பௌவப் பரப்பு அழுந்திப்"

ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளாகிய உன்னைத்தவிர எனக்கு யாரும் உறவில்லை என்னும் கருத்தை, பசு ஞானம் எனப்படும் ஆன்மாவின் அறிவையும், பதி ஞானம் எனப்படும் பரம்பொருளின் மேலான மெய்யறிவையும் முன்பு எய்தியவர்கள் கூறினர்.இவ்வுடலையும் இவ்வுலக வாழ்வையும் முற்றாகத் துறந்தவர்களான அவர்கள் கூறிய இத்தகைய உண்மைகளை உணராதவர், மயங்கி மாயைகளின் வலையில் பட்டவர் என்று கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் மெய்யான கருத்தையும் அறிந்து கொள்ள விரும்பாமல், ஐந்து புலன்களுக்கு விருப்பமானதையே செய்து, அவை காட்டும் வழியில் மட்டும் தவறாது நடந்து பாவக்கடலில் மூழ்கி வருந்துவார் என சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகப் போற்றப்படும் நெஞ்சுவிடு தூதுவில் உமாபதி சிவாச்சாரியார் திருவள்ளுவரையும் "தலைப்பட்டார் தீரத்து றந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்" என்னும் குறளையும் பயன்படுத்தி திருக்குறளை சைவநெறியுடன் சமபந்தஞ் செய்துள்ளார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரில்;

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பறிப்பீனும் விந்து"

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்" என்னும் குறள்களை;

"வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால்
வேண்டிடுக வேண்டாமை வேண்டும் அவன்பால்"

என்னும் பாடலில் மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்பதும் திருக்குறள் சைவ சித்தாந்த நூலே என்பதை எளிதாகப் புலனாக்கின்றது.

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற" என்கிறது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவுந்தியார். உள்ளீடு இல்லாத பிறசமயங்களில் சென்று ஆவியை இழந்து மீண்டும் பிறப்பை ஏற்கக்கூடாது. அவற்றின் உரைகளைக் கேட்டுக் காலம் கடத்தல் கூடாது என்கின்றது. எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.

"நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி நூலின் கடைசிப் பாடலாக ஔவையார்,
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.

திருவள்ளுவரின் திருக்குறளும் உயர்ந்த நான்கு வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளும், தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தர்,சுந்தர மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் ஆகியோரின் தேவாரங்களும் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் திருமூலநாயனாரின் தமிழாகமம் எனப்படும் திருமந்திரமும் ஒரே பொருளை உணர்த்தும் நூல்கள் என உணர்வாயாக" என்று பாடுகின்றார்.

அதாவது திருநெறிச் சைவ சித்தாந்தந்த தோத்திர நூல்களான தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார்,திருமந்திரம் போன்றவற்றுடன் திருக்குறளையும் இணைத்து ஔவையார் சுட்டுவது, அவருக்கு ஏலவே இருந்திருந்த "முற்காலம்" உணருகின்ற யோகசித்தியையே காட்டுகின்றது எனலாம்.

"உணர்வாயாக" என்று ஔவையார் யாரையோ சுட்டிச் சொல்வது போல் உள்ளமையை இங்கு கவனிப்பீர்களானால் அது யாரை என்பது தெளிவாகப் புலனாகும். நாத்தீக அரசியலில் திருக்குறளை சைவநூல் அல்ல என்று கூசாது பொய்யுரைத்த பெரியார் தொட்டு அவரது பிள்ளைகள் என துடிக்கின்ற கருணையில்லா நிதி மற்றும் வீரமணி அடங்கலாக மதம்பரப்புதல் என்ற ஒரே குறிக்கோளுக்காய் தமது மதத்தையே விற்கத் துணிந்த ஒருசில கிருஷ்தவ விசமிகள் வரைக்கும் உள்ள அறிவற்ற அரசியல் மதபோதை பிடித்தவர்களுக்கே என்க.

சைவ சித்தாந்த புறச் சந்தான குரவர்களுக்கும் சரி, ஔவையாருக்கும் சரி, மற்றும் ஏனைய புலவர் பெருமக்களுக்கும் சரி, திருக்குறள் சமணநூல் என்றால் அதை சைவநூலாக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதேவேளையில் அத்தகைய இழிவான பண்பாடு அன்றைய தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கவில்லை. பெரியாரின் வழியில் உருவாகிய அரசியல் பண்பாடே இத்தகு இழிநிலையை தமிழில் அறிமுகப்படுத்தியது.சில கிருஷ்தவ தரகர்கள் தொடருகின்றனர்.

"ஓதுசம யங்கள்பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் - இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின் இதுவாகும்
அதுஅல்லது எனும்பிணக்கம் இன்றி நீதியினால்
இவைஎல்லாம் ஓரிடத்தே காண நின்றதுயாதொருசமயம்
அதுசமயம் பொருள்நூல் ஆதலினான் இவைஎல்லாம்
அருமறைஆ கமத்தே அடங்கியிடும்
இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"

உலகில் உள்ள சமயங்களும் அவற்றின் கொள்கைகளை விளக்கும் நூல்களும் தமக்குள் முரண்பட்டனவாக உள்ளன. இவற்றுள் சிறந்த சமயம் எது? சிறந்த நூல் எது? என வினவினால், விடையாக இது அது ஆகும் அது இது ஆகும் என்று குழம்பாமல், எல்லாக் கொள்கைகளும் உரியமுறையில் உரிய இடத்தில் இருப்பதைக் கூறுவதே சரியானதாகும்.அவ்வாறான சமயம் சிறப்பான சமயம்.அத்தகு நூல் சிறப்பு வாய்ந்த நூல்.எனவே இத்தகைய சைவ சமயக் கொள்கைகளே அரிய வேதத்திலும் ஆகமங்களிலும் அடக்கம்.இவை இரண்டும் இறைவன் திருவடிகளை விளக்கி அங்கு அடங்கும். சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞானசித்தியார் அழகாக அருமையாக உலகில் உள்ள எல்லா சமயங்களின் கருத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநெறி எனின் அது சைவநெறி என விளக்கியுள்ளார். எனவே இத்தகு நெறியில் பூக்கும் எந்த நூலிலும் பிறசமயத்தவர் தமது சமயக் கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி, தமது சமயக் கருத்தைக் கொண்ட நூல் என வாதிட இடமுண்டு. தற்போது இது கண்கண்ட காட்சி! கிருஷ்தவ விவிலியக் கல்லூரிகள் தொட்டு கிருஷ்தவ பள்ளிவரை தமிழகத்தில் திருக்குறள், சைவ சித்தாந்த நூல்கள்,நாலடியார், ஆத்திசூடி என்பன கிருஷ்துவின் அருளைப் பெற்று எழுதிய நூல்கள் என நச்சுக் கருத்தை விதைக்கின்றனர். ஜீ.யூ.போப் ஏலவே திருவாசகத்தை கிருஷ்துவின் அருளையுணர்ந்து எழுதிய நூலென சுட்டியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சைவ நூல்கள் பொதுநூல்களாக விளங்கும் உன்னத உயர்ந்த தன்மையே காரணம்.

எனவே உலகப் பொதுமறையாக சைவநெறி வழங்கிய திருக்குறளை எளிதாக இந்த விசமிகள் திரிவுபடுத்தி சமணநூல், பௌத்த நூல், கிருஷ்தவ நூலென எளிதாக கதைபரப்பக் கூடியதாகவுள்ளது. சமண, பௌத்த,கிருஷ்தவத்தவர்களுக்கு உலகில் உள்ள எல்லா சமயங்களையும் சமயங்கள் என ஏற்கின்ற உணர்வுநிலை இருந்தமைக்கான அல்லது இருக்கின்றமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே இத்தகு சமய உணர்வுடன் நூல்யாக்க முனைபவர் நேரடியாகவே தமது சமயநிலையை உயர்த்தி எழுதியிருப்பர். ஆனால் திருவள்ளுவர் பெருமானார் சைவநெறி ஒழுகி,அதன் பயனாக உலகுக்கு பொதுமறையாக நூல்யாக்க விளைந்து யாத்தநூலே திருக்குறள் என்பது திண்ணம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர். தமிழ் தாத்தாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. எனவே சமயசார்பற்ற இலக்கியங்கள் படைப்பதற்கு சைவநெறி வாழ்வே பக்குவத்தை வழங்கியுள்ளதை உய்த்துணரலாம்.

இன்று மதசார்பற்ற நாடக இந்தியா விளங்குகின்றதெனில், நாத்தீகம் பேசி;வேதநெறி,சைவ நெறி என்பவற்றை உணராது அரசியலுக்காய் எள்ளி நகையாடுகின்ற கருணையில்லா நிதி அரியணையை மீண்டும் மீண்டும் சுகிக்க ஏதுவாயிருப்பதும் சமயசகிப்புணர்வுச் சால்பை சைவப் பெருமக்களும் வேதப் பண்பாட்டு மக்களும் பெற்றுள்ள ஒரேயொரு காரணத்தால் என்பது வெள்ளிடைமலை!

"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந் நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்று மற்று"
- நக்கீரனார்

புளுகு பலநாளுக்கு தாக்குப்பிடிக்காது என்பர். எத்தனை காலத்துக்கு நாத்தீவ வாதப் புளுகுகள் தாக்குப்பிடிக்கின்றது என்று பார்ப்போம்!!!!!!

குறிப்பு:- திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலை இணையத்தில் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் தமது இணைய முகவரியில் ஏற்றியிருந்தார். எனினும் இன்று யாகூ தற்காலிகமாக தமது இலவச சேவையை நிறுத்திக் கொண்டதனால் அவ்விணைய முகவரி செயலிழந்துவிட்டது. எனினும் பிரிதொரு இணையவசதியூடாக ஆறுமுகநாவலர் என்னும் பெயரில் அன்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.குறித்த வலைத்தளத்திற்கு சென்று இந்நூலைப் படித்துப் பயனடையலாம். திருவள்ளுவர் சித்தாந்த சைவர் நன்றி.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

"தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

மேலும் படிக்க...

Thursday, July 23, 2009

இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்

தமிழை நீசமொழியாக கருதுபவர் இந்துமத அதிபதியாகிய சுமார்த்த பீடமான சங்கரபீடம். தமிழில் பாடுவது தமிழில் பேசுவது இறைவனுக்கு தீட்டை உருவாக்கும் என்பது இவர்களது நினைப்பு.கருவறையில் தமிழில் உரையாடினால் அது பாவம் என்பது இவர்களது பாணி.

சிவாலய பூசையில் வேதம் ஓதியபின் ஆசீர்வாதத்திற்கு முன் தமிழ்மறை ஓதும் வழக்கத்தை இந்த சுமார்த்த அடிவருடிகள் விரும்பவில்லை. திருமுறையைப் படித்தபின்னரே ஆசீர்வாதத்தை செய்யவேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பந்ததி ஆசீர்வாதப் படலம் விதித்துள்ள விதி. வேதமொழியில் ஓதப்படுகிற ஆசீர்வாதத்துக்கு முன் தமிழ்மறை ஓதல் வேதமொழிக்கு தீட்டை உருவாக்கும் என்பது சுமார்த்தரின் நினைப்பு. எனவே, சைவவிதியை மீறி ஆசீர்வாதத்துக்குப் பின்னரே திருமுறை ஓதுதல் என்று தமது கைகள் ஓங்கியுள்ள ஆலயங்களில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் .

பூசகரால் தேவாரம் அருளிப்பாட திருவாசகம் அருளிப்பாட என அனுமதியளிக்க தமிழ்மறையை ஓதும் பழக்கமே சைவ வழக்கம். ஆனால் வழக்கத்தில் இல்லாத சொல்லான "பஞ்சபுராணம்' எனபதை புழக்கத்துக்குவிட்டு "பஞ்சபுராண அவதாரய" என்பதை வழக்கத்துக்கு கொண்டுவந்துள்ளனர். தமிழ் "மறை"யை புராணமாக்கிய கெட்டித்தனம் என இதைச் சொல்லலாம்.

இந்தச் சுமார்த்த மொழித்துவேச ஊடுருவல் சிதம்பரத்துப் பார்ப்பனருக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே ஊடுருவிவிட்டது எனலாம். திருமுறைகளை ஒழித்துவைத்து கறையானுக்கு தீணியாக்கினர். தமிழ்ப்பற்றுமிக்க நம்பியாண்டார் நம்பிகள் எனும் அந்தணரும் இராஜ இராஜ சோழனும் முயன்றதால் சைவத் தமிழுலகிற்கு திருமுறைகள் கிட்டியது.

மிக அண்மையில், எந்த மேடையில் திருவாசகம் அரங்கேறியதோ.......எந்த மேடைக்கு வந்து எம்பெருமான் திருவாசகத்தை பிரதியெடுத்துச் சென்றாரோ அந்த திருச்சிற்றம்பல மேடையில் ஓதுவார் தமிழில் திருமுறைகள் ஓதக்கூடாது என்று தடைவிதித்தனர் சிதப்பரப் பார்பனீயர். காரணம் கேட்டால் சிதம்பர இறைவனுக்கு நீசமொழியான தமிழால் தீட்டுப்படுகிறதாம்.

ஊழிக் காலத்தில் தனியாக இருக்கும் சிவன் தனது தனிமையைப் போக்கவே திருவாசகத்தைப் பிரதியெடுத்துச் சென்றதாக சைவ அறிஞர் போற்றுவர். இத்தகு மேன்மையுடைய திருவாசகம் அரங்கேறிய மேடையில் திருவாசகம் அடங்கலாக தமிழ்த் திருமுறைகள் ஏதும் ஓதக்கூடாது என்று தடைபோடும் அளவிற்கு சிதப்பரப் பார்பனரை மூடராக்கியது சுமார்த்தம் ஊட்டிய மொழித்துவேசம் என்பது வெள்ளிடைமலை.

எவ்வளவு போராட்டங்களுக்குப்பின் ஓதுவார்கள் நீதித்துறையின் மூலம் நீதிபெற்றனர் என்பது கண்கண்ட செய்தி. சுமார்த்த அதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் சிறைவைக்கப்பட்டபோது பதறியடித்து இலங்கைப் பிரபல பத்திரிக்கைகளுக்கு அவர் பற்றிய செய்திகளை பண்போடு வெளியிடும்படி அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டிக் கொண்டது. னால் தமிழ்த் திருமுறைகளை படிக்கத்தடைவிதித்தபோது இலங்கை இந்து மாமன்றம் என்ன செய்தி வெளியிட்டது என்று அறியவே முடியவில்லை. உலக இந்து குருமார் பீடம் என்று கொழும்பில் (சைவ குருமார் பீடத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது) சுமார்த்த விசுவாசியால் உருவாக்கப்பட்ட அமைப்பு தலையிட்டு சிதம்பரப் பார்பனருக்கு கட்டளை ஏதும் பிறப்பித்திருக்கலாம் தானே? "உலக இந்து குருமார்" என்று அடைமொழியை கொண்ட குருமார் பீடம் என்பதால் உலகில் உள்ள குருமார் அனைவரையும் கட்டுப்படுத்தும் சர்வ வல்லமையும் உடையவர் என்று அறியாத சனங்களுக்கு கதைவிடுகின்றனர் இந்த பீடத்தார். அவர்களின் கட்டுக்கதைக்கு வந்த ஆப்பு இதுவென்றால் மிகையில்லை.
எந்த மேடையில் மாணிக்கவாசகர் பாடினாரோ அந்த மேடையில் திருவாசகம் பாடமுடியாது ஓதுவார் தவித்தபோது உதவிக்கு சைவநிறுவனங்கள் ஏதும் புறப்படாது ஒதுங்கிக் கொண்டதை வெட்கக்கேடாகவே கருதுகிறேன்.திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வளர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட வெறு பல இயக்கங்களே அங்கு தமிழுக்காய் குரல் கொடுத்ததை இங்கு சுட்டியே ஆகவேண்டும்.

கும்மாவிஷேகத்துக்கு அழகு தமிழில் குடமுழுக்கு என்பர். சைவ ஆதீனங்கள்கூட குடமுழுக்கு என்ற சொல்லையே பயன்படுத்துவர். ஆனால் அண்மையில் வெளிநாடு ஒன்றில் குடமுழுக்கு என விளம்பரப் பிரசுரத்தில் வெளியிட்டதனால் கொதித்தெழுந்த சுமார்த்தக் குருக்கள் குடமுழுக்கை செய்யமாட்டேன் என பிடிவாதம் பிடித்துவிட்டார். அவர் சபித்துவிடுவர் என எண்ணி "சாமி"க்குற்றம் வந்துவிடும் என பயந்து குடமுழுக்கு என்று அச்சேற்றிய பிரசுரங்களை குப்பையில் போட்டு 'கும்பாவிஷேகம்" என்று மீள பிரசுரங்கள் செய்வித்து வெளியிடவேண்டியதாயிற்று ஆதீனகர்த்தாவுக்கு!

மேற்சொன்னவைகள் நல்ல உதாரணங்கள் தமிழ்மொழிமேலான துவேசத்தை எம்தமிழ் அந்தணர் குழாத்துக்குள் மெல்லமெல்ல சுமார்த்தவருடிகள் ஊட்டுகின்றனர் என்பதை நிறுவிப்பதற்கு.

சைவநெறி என்பது சிவஞானப் பேற்றை நோக்காகக் கொண்டது. ஆனால் சுமார்த்தருக்கு சைவம் அழிந்தால் சரி.மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலைகொள்ளாதது. அதனால் மக்களுக்கு காமியபூசைகளில் (ஆயுள் விருத்தி.....தாலி விருத்தி....பரீட்சைகளில் தேர்வுபெற(கொழும்பில் பிரபல சுமார்த்த கோயிலில் மாணவரைக் கவர இதுதாம் பெரும்பூசை) ஆசையையூட்டி சிவஞானத்துக்கு உதவாத பூசைகளை பெருக்குகின்றது.இதன்மூலம் பணம் பெருக்கி வயிற்றை கொழுக்கச் செய்வது ஒருவழி. எம்தமிழ் சாதியிடமே பணம்திரட்டி எம்தமிழ்ச்சாதியின் பண்பாடான சைவ சிவஞானபேறை சிதைப்பது. ஒருகல்லில் இரு மாங்காய் என்று உவகையில் உள்ளது சுமார்த்தம்.

கோயில்களை அர்ச்சனைக்கூடங்களாய் மாற்றியதில் பெரும்பங்கு இவர்களையே சாரும். சாதரண ஆகமவிதிமுறையற்ற கோயில்களுக்குள் சகல பரிவாரங்களையும் இருத்தி எந்த ஆகமமும் அனுமதிக்காத வழிபாட்டை சிறப்பாகச் செய்கின்றனர். நவக்கிரகங்களை வரிசையாக அடுக்கிவைத்து (கொழும்பு ஆஞ்சநேயர் ஆலயத்தில்) ஏதோ சக்தி என்று புரியாத சனங்களின் காதுகளில் பூச்சுற்றிவிடுகின்றனர் சமயவியாபாரிகள்

"அனுமானுக்கு உலகிலேயே தேர் நாம்தான் இழுத்தோம்" என்று கொழும்பில் றியபோதே சைவத் தமிழ்ச் சமுதாயம் விழித்திருக்க வேண்டும். அனுமான் கிராமிய வழிபாட்டுத் தெய்வம். அனுமானை சக்திதரவல்ல தெய்வமாகக் கருதுபவர் வைணவர். வைணவம் உள்ளநாடு தமிழகம். இராமருக்கும் அனுமானுக்கும் விசேடமரியாதை செய்யும் இடம் அயோத்தி. இங்கு எங்குமே அனுமானுக்கு தேர் இழுக்கவில்லை.கொழும்பில் இழுத்துவிட்டார்கள். கொழும்பில் இழுத்தால் "ஆகமமுறையை மீறி இழுக்க உமக்கு உத்தரவு தந்தது யாரு?" என்று கேள்விகேட்க வைணவ ஆதீனங்கள் இல்லை. இருக்கிற சைவ ஆதீனம் அமைதியானது. சைவநிறுவனங்கள் தடுக்கும் சக்தியில்லாதவை. கொழும்பில் உள்ள "இந்து" பெரும் நிறுவனங்கள் ஆதரவு. எனவே இழுத்தார்கள். அன்று சீதையைக் கவர்ந்ததால் அனுமான் இலங்கைக்கு தீ வைத்தார். இன்று முறையற்ற வழிபாட்டால் தமிழரின் எதிர்காலத்துக்கு கேள்விக்குறி வைத்துவிட்டார்.

இனிய சைவத் தமிழ்ச் சமுதாயமே, தொன்று தொட்டு காலம் காலமாக வைரவரை காவல்தெய்வமாக வழிபடுகிறோம். சிவனின் ஓர் மூர்த்தமே வைரபர்.
ஆனால் இன்று வைரவர் வழிபாடு அருகி வருகிறது. சைவ நிறுவனங்கள் சற்று சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும். ஆஞ்சநேயர் வழிபாட்டை பெருந்தெய்வ வழிபாடாக சித்தரிக்கும் சுமார்த்தத்தை அரவணைப்பதால் ஏற்பட்ட விளைவு இதுவாகும். அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்க்கதரிசனத்துடன் சிந்திக்க வேண்டிய விடயம் இது!!!

சுமார்த்தரின் சிவாகமத்தில் இல்லாத வழிபாடுகளுக்கும் இந்துவுக்கும் வக்காளத்துவாங்கும் விசுவாசிகள் "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்று சிவஞான சித்தியாரை வம்புக்கு இழுப்பார்கள்.
சுடர் ஒளி(வாரப் பத்திரிக்கை) பத்திரிக்கையில் பலவருடங்களுக்கு முன் சர்ச்சை அடிபட்டபோது ஒருவர் இப்படித்தான் வித்துவத்தனத்தைக் காட்டினார். அவரது வித்துவத்தனத்துடன் சர்ச்சை ஓய்ந்தது எம்தமிழ்சாதியின் இழிநிலையைக் காட்டுகின்றது. சைவ சித்தாந்த பண்டிதர்களின் அறிவுரைகள் பூக்காமலே சர்ச்சை ஓய்ந்துவிட்டது. மரபுக் கவி எழுதத் தெரியாதவர்கள் புதுக்கவிதையை போற்றுவர். புதுக் கவிதையின் வரவேற்பு மரபுக் கவிதையை மங்கச் செய்ததன் விளைவு கிருத்தவக் கம்பனுக்குப் பின்னர் இன்னொரு கம்பன் இன்னும் பூக்கவேயில்லை.அதுபோல்தான் சைவப் பண்டிதர்கள் அருகிவருகிற காலமிது. அவர்களை போற்றி பண்டிதர்களை உருவாக்க வேண்டியது தமிழ்ச்சாதியின் கடமை. ஆனால் அவர்களது கருத்துகளையும் அறிவுரைகளையும் செவிமடுக்கத் தவறுகிற இழிநிலைக்கு எம்மை இட்டுவந்தது யார்?

பண்டிதமணி மு.கந்தையா ஐயா தனது சைவஞான விளக்கம் எனும் நூலில்"யாதொரு தெய்வம் கொண்டீரத்" என்ற சிவஞான சித்தியார் பாடலுக்கு விளக்கம் அளிக்கிறார்.குறித்த ஒரு செய்யுட் பொருளை அறியவேண்டுமானால் அதனோடு இணைந்த ஏனைய செய்யுள்களையும் கருத்தில் எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகிறார். குறித்த செய்யுளுக்கு முன் உள்ள செய்யுள்களையும் பின் உள்ள செய்யுள்களையும் விளக்கி, மயக்க உணர்வால் தேவதைகளை தெய்வங்களாக பூசிப்பவர்களுக்கு அவர்களது நல்வினைக்கு ஏற்ப சிவபெருமானே வரமளிப்பார். ஆதலால் எல்லாவற்றுக்கும் உரியவர் என்ற உத்தரவாதமுள்ள சிவனையே அன்பு செய்து பூசித்தல் அறமாகும் என்றே சிவஞான சித்தியாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அறிவுறுத்தியுள்ளார்.

117ஆவது செய்யுள் சிவன் ஒருவனே வழிபாட்டுக்குரியவன் என்று வலியுறுத்தியிருக்க,

"யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படுமிறக்கும் பிறர்க்குமேல் வினையுஞ் செய்யும்
ஆதால னிவையி லாதா னறிந்தருள் செய்வனன்றே"

எனும் 115ம் செய்யுளை சாதரண பொதுசனத்திடம் திணிக்கும் கெட்டிக்காரர்களுக்கு சைவ சமூகம் வரவேற்பளிப்பது துயரான ஒன்றே. பண்டிதமணி மு.கந்தையா ஐயாவின் மறைவு கெட்டிக்காரர்களுக்கு வசதியாயிற்று. மறுப்பு அறிக்கைவிட எவரும் இலர் என்று உவகையடையக்கூடும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரம் இவர்களுக்கு கைகொடுக்கும் இன்னொரு பாடல். ஆனால் பண்டிதமணி மு.கந்தையா ஐயா அவர்கள் தனது சைவ ஞான விளக்க நூலிலே இதற்கும் விளக்கம் அளித்துவிட்டார்.
சைவத்தில் சிவன், அவனல்லாத உயிர்கள் என இருவகை மாத்திரமே உண்டு.ஒன்றே குலம் என்பது சிவனல்லாத உயிர்களையும் ஒருவனே தேவன் என்பது ஒருவனாக நிற்கின்ற சிவனையும் குறிக்கும். இது இப்படியிருக்க "எல்லா கடவுளும் ஒரே கடவுள்தான்" என்று சைவச் சனங்களுக்கு போதிக்கும் சுமார்த்த விசுவாசிகளின் உள்நோக்கு சைவர் உளரீதியாக பலவீனமானவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.
.
மேலைத்தேயத்தவர் தமிழகத்துக்கு வந்தவுடன் சைவநூல்களை கற்பது தமது மதம்மாற்றும்திட்டத்திற்கு உதவும் என்று கருதினர்,எனவே இவர்கள் சைவ சித்தாந்தங்கள் திருமுறைகளை கற்றுத் தேர்ந்தனர்.தமிழர்களை உளவியல்ரீதியாக பலமற்றவர்களாக்க "ஒருவனே தேவன்" "யாதொரு தெய்வம்" இவர்களுக்கு கைகொடுத்தது.
சைவ சித்தாந்தத்தில் தெளிவில்லாத சாதரண பொதுசனம் இவர்களது தவறான பிரசாரத்தில் வீழ்ந்தனர். இன்று சுமார்த்தத்தைப் பரப்ப, இந்துவை வாழவைக்க சுமார்த்திகள் இதையே பயன்படுத்துகிறார்கள். உண்மையான விளக்கம் எங்கும் எந்த ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுவதில்லை.எவருக்கும் சரியான பொருள் தெரிவதில்லை. மேலைத்தேயத்தவர்களின் பரப்புரையின் தாக்கம் எத்தகையது என்பதை இதன்மூலம் உய்த்துணரலாம்.


அம்மன்,முருகன்,பிள்ளையார்,பைரவர்,சோமஸ்கந்தர் போன்றோரை வழிபடலாமா என்று நையாண்டிக் கேள்விவேறு கேட்பர். சிவனே சக்தி, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மா என்ற நிலைகளை எய்துவதாக சிவாகமம் எடுத்தியம்புகிறது.எனவே இவை அனைத்தும் சிவ வழிபாடே!

புராண,இதிகாச கதாப்பாத்திரங்கள்,தொண்டர்கள்,அவர்களின் தொண்டர்கள் என்று இவர்களுக்கு செய்யும் வழிபாடு சிவாகம துரோகம்.

திருமாலை வணங்கலாம் என்றால் ஏன் திருமாலின் அடியவரை வணங்கக்கூடாது என்று கேள்வி கேட்பர் அறிவிலார்.
திருமாலை வழிபடலாம் என்று வரையறுத்துள்ளது சிவாகமம். திருமாலின் அடியவரை வழிபடலாம் என்பது வைணவ ஆகமம். திருமாலின் அடியவரை வழிபடுபவர்கள் வைணவ ஆகமத்தை ஏற்பவர்கள்.எனவே சைவர்கள் அல்ல. திருமாலை சிவாகமவிதிக்கு ஏற்ப வழிபடுவது சைவரின் சால்பு. சைவர்களிடம் அனுமான் உட்பட புதுப்புது தெய்வங்களை இறக்குமதி செய்து பரப்பும் சுமார்த்தர் வைணவத்தாரிடம் சைவக் கடவுள்களான பைரவர் உட்பட எவரையேனும் அறிமுகஞ் செய்கின்றனரா? இல்லை!!!!
வைணவ ஆதீனங்கள் சுமார்த்தரை வைணவ ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை. சங்கரமடத்துக்கு பெரும் அவமானத்தை இவை ஏற்படுத்திவிட்டன.சைவ ஆதீனங்கள் அமைதி காக்க; சுமார்த்தம் தமது விருப்புக்கு ஏற்ப சைவத்துள் புகுந்துவிளையாடுகிறார்கள். இலங்கையில் "இந்து" மூலம் வந்து தமது கைவண்ணத்தைக் காட்டுகிறார்கள்.

இன்று கொழும்பில் உள்ள சில தரகு நிறுவனங்கள் கொழும்பு,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,திருகோணமலை உட்பட ஏனைய இலங்கையின் பிரதேசங்களில் இருந்து சைவ அந்தணர்களின் பிள்ளைகளை திரட்டி சங்கரபீடத்துக்கு சிவாச்சாரியார் பட்டப்படிப்புக்கு அனுப்புகிறார்கள். சலுகைகள்,இலவசங்கள் இவர்களுக்கு கைகொடுக்கின்றது.
இதுகால்வரையும் சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்றவற்றுக்கே அனுப்புவது மரபு. இந்த மரபை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்ச் சைவ அந்தணர்களிடம் தமிழ்மொழிமேல் கசப்புணர்வை ஊட்டவேண்டுமாயின் சிறுபிராயத்திலேயே ஊட்டுவதே சாலச் சிறந்தது என்பதுவே இவர்கள் திட்டம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழி நினைவிருக்கிறதா? பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ச் சைவ அந்தணர் குழாத்திடம் "தமிழ் நீசமொழி/தீட்டு மொழி" என்று போதிக்கும் திட்டம்தான் சுமார்த்தபீடமாகிய சங்கரமடத்துக்கு எம் அந்தணக் குழந்தைகள் அனுப்பப்படுதல்!
"பஞ்சபுராண அவதாரய" தொடர இது கைகொடுக்கும் என்பது இவர்கள் கணிப்பு.

தமிழ் சைவ அந்தணர்கள் தமிழ் சைவ ஆதீனங்களுக்கு செல்வதே அழகு; மரபு. தமிழ்மறை காத்த ஆதீனங்களிடம் இருந்து சைவ அந்தணரைப் பிரிப்பது காலத்தால் மன்னிக்க முடியாத குற்றமாகும். அண்மையில் சிதம்பரத்தில் "தமிழ்த்" திருமுறைகள் ஓதக்கூடாது என்று பிடிவாதம் பிடித்த பார்ப்பனரை இலங்கையில் உருவாக்கும் முயற்சியை அந்தணப் பெற்றோர் இனங்கண்டு தமிழுணர்வும் சைவ உணர்வும் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் சைவர்களுடன் சங்கரர் வாதிட்டுள்ளார்.எனவே, சைவநெறியை சங்கரபீடம் வளர்க்குமா என்ன? சிவாச்சாரியார்கள் சங்கரபீடத்தில் சைவ மேன்மையைப் படிப்பார்கள் என்பது பகற்கனவே!
ஆட்டைக் காக்க ஓநாயிடம் விட்டகதைதான் சங்கரபீடத்திடம் சிவாச்சாரியர் பட்டப்படிப்பு. 'தமிழரை சூத்திரர்" என்று திட்டும் மடத்திற்கு தமிழ் அந்தணக் குழந்தைகள் சிவாச்சாரியார் படிப்புக்கு!!!! என்ன கொடுமை!!!!!!!

எங்கள் சனங்கள் எதுக்கும் தலையாட்டும் என்பது இந்திய வடநாட்டு விசுவாசிகளான சுமார்த்த இந்துபீடங்களும் குருமார்களும் கண்டுவைத்துள்ள தவறான கணிப்பு. நாவலர் பூத்தபோது எழுந்த சமூகம் எம் சமூகம். விழிப்புக்கு உள்ளாகும்வரைதான் இவர்கள் சதிகள் அரங்கேறும்.எம் சைவச் சாதி விழிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்த "இந்து"விசுவாசிகள் இந்து என்பதன் வாயிலாக வடநாடு எங்கும் தொடர்பு ஏற்படும். உலகம் பூராகவும் ஒருகுடையில் நிற்கலாம் என்று கதையடிப்பர்.கவனம்!!!!!!
யுத்தத்தால் வாடியபோது சங்கரபீடம் ஏதும் அழுததா? சைவ ஆதீனங்களுக்கு அரசியல் வலுவில்லை. உண்ணாவிரதங்களுடன் சரி. ஆனால் வடநாட்டு அரசியல் பலமுடைய சங்கரபீடம் சிரித்துக் கொண்டுதானே இருந்தது. அவர்களுக்கு தமிழ்மொழிமேல் என்றுமே துவேசம் உண்டு.மாறாத துவேசம்.இராவணன் காலந்தொட்டு இன்றுவரை தொடரும் தமிழ்மேலான துவேசத்தின் இன்றைய வடிவமே சங்கரபீடம் என்றுணர்க.. சங்கரபீடம் இதன் ஒரு வடிவம். அது நூற்ற சுமார்த்தம் இன்று இந்து எனும் பெயரில் இலங்கை வந்து இறங்கியுள்ளது.

யுத்தத்தால் வாடியபோது இந்து எனும் பெயர்தாங்கிய இந்தியப் பத்திரிக்கைகள்,நிறுவனங்கள்,அதன் விசுவாசிகள் யாவரும் மகிழ்ந்தார்கள். இதுபோதும் எம்சனங்களுக்கு "இந்து" என்பது எவ்வளவு அபயமான ஒன்று என்பதை நிறுவிக்க!
நாம் அழுதபோது "இந்து"குருமாருக்கு அதிபதி அழுதாரா ? அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பது சிவாச்சாரியார்களுக்கு உள்ள விதிகளில் ஒன்று. வாக்களிக்கச் சொல்லி வேண்டி கடந்த சனாதிபதித் தேர்தலில் இவர்களிடம் இருந்து மடல்கள் வந்தபோதே தமிழ்ச்சாதி திருந்தியிருக்க வேண்டும்.


"சைவ சமயமே சமயம்" என்ற தாயுமானசுவாமிகளின் திருவரிகளையும் "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்ற திருமந்திரத்தையும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றதன் உண்மையான விளக்கத்தையும் போதிக்காது, இந்திய இந்துமத மிசனரிகளின் ஸ்தாபகர்களையும் அவர்களது பெருமைகளையும் போதிக்கும் நூலாகவும் வெறும் வரலாற்று மனப்பாடப் புத்தகமாகவும் இன்றைய சைவநெறி பாடத்திட்டம் அமைந்திருக்கின்றது. காரணம் யார்? பாடத்திட்டத்தை தொகுப்பவர்கள், பாடத்திட்டத்தை தொகுப்பதற்கு உதவுபவர்கள் யார் என்ற பெயர்ப்பட்டியலே சுமார்த்த ஊடுருவலுக்கு சான்று.

ஆனால் இன்று சைவநெறி என்று பெயர்தாங்கி சைவக்குழந்தைகளிடம் தவழுகிற பாடத்திட்டநூலிலேயே சைவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாடங்கள் புகட்டப்படுவது எமது தமிழ்ச் சாதியின் இழிந்தநிலையையே எடுத்துக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சக் காலத்தில் "அம்மா பகவான்" "பாபா" பாடங்களும் சேர்க்கப்பட்டுவிடும். யேசு கிருஷ்துவைப்பற்றி போதித்தாலும் தவறேயில்லை.

"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகமநூல் நெறி எத்தண்டமும் செயும் அம்மையில்" என்பது திருமந்திரம்.

பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் என்பதுவே சுமார்த்த
இந்துவாதிகளின் செயல்கள்."இந்து" என்பது தமிழ்மொழிக்கு தீட்டான ஒன்று. தமிழர்கள் "சைவநெறி" என்பதை வலியுறுத்துகிற பீடங்களையும் ஆதீனங்களையும் மாமன்றங்களையும் பேரவைகளையுமே சார்ந்திருத்தல் வேண்டும். எவன் ஒருவன் இந்து மதம் என்று பிதற்றுகிறானோ அவனே முதலில் தமிழ்மேல் துவேசம் கொண்டவன் என்பதை உணர வேண்டும். சைவநெறியை "இந்து"விடம் இருந்தும் நாத்தீகவாதிகளிடம் இருந்தும் பணமுதலைகளாகிய கிருத்தவமிசனரிகளிடம் இருந்தும் காக்க வேண்டிய கடமை தமிழரிடம் உண்டு. சைவநெறியைக் காப்பதனூடாகவே தமிழரின் பாரம்பரியத்தைப் பேணமுடியும் என்பது திண்ணம். அதற்கு புத்தளம் நல்ல உதாரணம்.

சி.வை.தாமோதரப்பிள்ளை "தேசப்பற்றும் மொழிப்பற்றும் சமயப் பற்றும் இல்லாதவர் பெருமையும் பெருமையா? " என்றார். தமிழ்ச்சாதியே என்ன செய்யப் போகிறாய்! பண்பாட்டை சிதைத்து சுய பண்பாடற்ற இனமாக மாற்ற வடநாடு முனைகிறது. சுமார்த்த இந்து உதவுகிறது. உன் கதிதான் என்ன?????
மேலும் படிக்க...