"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"
Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

Thursday, December 11, 2014

கௌமாரம் என்ற மதம் உண்டா?

இன்று சமய எழுத்தாளர்களில் பலர் கௌமாரம் என்ற பெயரில் முருகவழிபாட்டை தனிமத வழிபாடாக காட்டமுனைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  இவர்கள் சமய அறிவுமட்டுமல்ல, வரலாறு, இலக்கிய அறிவு அற்றவர்கள் என்பதோடு செந்தமிழ்ப் பண்பாட்டுக் கரிசனை அற்றவர்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

தன்னை சைவர் என்று அடையாளப்படுத்தாது, ஸ்மார்த்த சமயத்தவர் என்று அடையாளப்படுத்திய ஏகன்மவாதக் கொள்கையுடைய ஆதிசங்கரர் ஆறுமதங்கள் என்று சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்தியம்,சௌரம் என்பவற்றைப் பட்டியலிட்டு, முறையே அவை சிவன்,திருமால்,அம்மன்,முருகன்,பிள்ளையார்,சூரியன் ஆகிய கடவுள்களை முழுமுதற் தெய்வமாக வழிபடும் சமயங்களென அடையாளப்படுத்தினார். ஆனால் இவரது இவ்வடையாளப்படுத்தலை அன்றும்,இன்றும்,என்றும் எவரும் ஏற்றிலர்.இவ்வாறான அடையாளப்படுத்தும் முறை ஆதிசங்கரர் கூற்றாக உருவாக்கப்பட்டு அண்மைக்காலத்தில் புகுத்தப்பட்ட இடைச்செருகல் கூட!

சைவம்,வைணவம் என்பவற்றிற்கு முறையே ஆகமங்கள்,தனிக் கொள்கைகள் உண்டு. ஆனால் ஏனையவற்றிற்கு அவ்வாறு ஏதும் இல்லை. தனிமதம் என்ற ஒன்றிருக்கேமேயானால் அம்மதத்துகென்று தனி ஆகமங்கள் இருக்கவேண்டுமல்லவா?  வைணவத்துகென்று பாஞ்சராத்திரம்,வைகாசம் என்னும் ஆகமங்கள் உள்ளதுபோல் கௌமாரம்,காணபத்தியம் என்பவற்றுக்கு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் முருகன் ஆலயப் பூசைகள் குமாரதந்திரம் என்னும் சைவ உபாகம நூலின் வழியும் ஏனைய சைவாகமங்கள் வழியுமே பின்பற்றப்படுகின்றன.

வைணவத்தை எடுத்துக் கொண்டால் அதில் விஷிட்டாத்வைதம்,துவைதம் என்னும் இரு கொள்கைகள் உண்டு. சைவத்தை எடுத்துக் கொண்டால் அதில் சித்தாந்த சைவம்(தூய அத்வைதம்), காஷ்மீரக சைவம்,வீர சைவம் போன்ற பல்வேறு சமயக் கொள்கைகள் உண்டு. ஆனால் இதுபோல் காணபத்தியம்,கௌமாரத்திற்கு இல்லை.

மணிமேகலையில் சைவவாதி என்னும் பாத்திரத்தினூடாக சைவசமயம் அடையாளப்படுத்தப்பட்டதுபோல், கௌமாரம் என்னும் சமயப்பெயர் பண்டு தமிழ் இலக்கியங்களில் எங்கும் காணோம். தென்னாட்டில் தொன்றுதொட்டு வழிபடப்பட்டுவந்த முருகவழிபாட்டை பண்டுதமிழ்நூல்கள் கௌமார சமயமாக எங்கும் அடையாளப்படுத்தவில்லை.

சரி, குறைந்த பட்சம் அந்த சமயங்களை ஒழுகும் அடியவர்களாயினும் இருக்க வேண்டுமல்லவா?

நக்கீரர்,கச்சியப்ப சிவாச்சாரியார்,குமரகுருபரர்,அருணகிரிநாதர்,பாலன் தேவராயர்,பாம்பன் சுவாமிகள்......இப்படி முருகனடியார்களாய் திருமுருகன்பால் தோத்திரங்கள் பாடிய அனைவரும் சைவர்களே. தம்மை எவ்விடத்தும் கௌமாரத்தவராக அடையாளப்படுத்தியிருக்கவில்லை.
சங்க காலத்தமிழ் இலக்கியமான முருகனின் பக்தி இலக்கியமான திருமுருகாற்றுப்படையை பாடிய நக்கீரர் சைவர். சிவமைந்தனாகவே முருகனைப் பாடுகின்றார்.

ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே-திருமுருகாற்றுப்படை

கந்தபுராணத்தைப் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் ஒரு சைவர். இவர் முருகப் பெருமானை சைவத்திலகமாக,சைவ நாயகனாக, ஆறுமுகச் சிவனாகவே குறிப்பிடுகின்றார்.

இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்று இனிதுமேவிச் 
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி தன்னில் சேர்வர்
அந்தமில் அவுணர்தங்கள் அடல் கெட நின்ற செவ்வேள்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோதுவோரே

முருகவழிபாட்டினால் சிவகதியே சேரும் என்று முருகனைச் சிவனாகவே காட்டுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் முருகனை கௌமார மதமாக அடையாளப்படுத்தவில்லை. திருமுருக கிருபானந்தவாரியார் ஓர் வீரசைவர். முருகனை கௌமாரக் கடவுளாக அணுகவில்லை. ஆறுமுகச் சிவனாக சைவக்கடவுளாகவே வழிபட்டார்.

சிவப்பரம்பொருளின் எண்குணங்களும்   சத்,சித்,ஆனந்தம் என்னும் இம்மூன்று தன்மைக்குள்  அடங்கும் என்பது சைவசித்தாந்தம். இதன் விளக்கமாக விளங்கும்  சோமஸ்கந்த மூர்த்தத்தில் முருகன் இறைவனின் ஆனந்தம் என்னும் தன்மையை விளங்குகின்றார். இவ்வாறு, சைவசித்தாந்தம் சிவன்,சக்தி,முருகனை சத்,சித்,ஆனந்தமாக கொள்கின்றது. சிவனே முருகன் என்பதுதான் சைவசித்தாந்தம்.


திருமகன் முருகன் தேவியேல் உமையாள் - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்

திருமுருகாற்றுப்படை பன்னிருதிருமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவ்வண்ணம் முருகவழிபாடு சைவவழிபாடாகவே தொன்றுதொட்டு விளங்கிவருகின்றது. இதுவே எம்தமிழ் மரபு.


சுடரோ சிவபெருமான்; சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை – படரொளியோ
கந்தவேளாகும்; கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு 
-பழம் பாடல்(ஞானசாரம்)
நெருப்பு – சிவபெருமான், அதில் உள்ள சூடு – உமாதேவி, நெருப்பின் நிறம் – கணபதி, அதன் ஒளி – முருகன். இவை ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை.
சிவன்,சக்தி,முருகன்,கணபதி இவர்களுக்குள் பேதமில்லை. இதுதான் நம்தமிழ் வழக்கு.

கணபதி வழிபாட்டை தமிழ்மரபில் வளர்த்த ஔவையார் தனது விநாயகர் அகவலில்
"சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி"
என்று சைவவழிபாடாகத்தான் காட்டுகின்றார். காணாபத்தியம் என்னும் தனிவழிபாடாக இல்லை.

இப்படி, சைவ மரபிலும் தமிழ் மரபிலும் முருகனையும் சிவனையும் பிரித்தறியும் பழக்கம் வழக்கத்தில் என்றுமே இருந்ததில்லை. இன்று முளைத்த காளான்கள், கொஞ்சமேனும் படிப்பறிவும் பகுத்தறிவும் இன்றி ஸ்மார்த்த புழுகுமூட்டைகளைச் சுமந்துசெல்லும் கழுதைகளாகிவிட்டதன் விளைவுதான் கௌமாரக் கட்சி!!!  சைவ சித்தாந்தக் கொள்கையை தர்க்கரீதியில் எதிர்கொள்ளமுடியாதுபோகவே ஏகன்மவாதத்தை நிலைநாட்ட, சைவநெறியை வலுக்குன்றச்செய்யும்  முயற்சியாகவே ஷண்மத கதையை ஸ்மார்த்தர் உருவாக்கினர். அன்று எடுபடாதுபோன இக்கதை இன்று அரைகுறை சமயமேதாவிகளால் மீண்டும் உலாவரத் தொடங்கியுள்ளது.
அண்மையில் முகநூலில் கௌமாரமதத்தவராகிய பாம்பன் சுவாமிகள் என்று ஓர் சமய எழுத்தாளர் கட்டுரை தீட்டியிருந்தார். பாவம் அவர் பாம்பன் சுவாமிகளின் பாடல்களைப் படித்ததில்லைப் போலும்.

தெய்வநசை முன் தந்தான் தெய்வப்பிரதான 
சைவநசை பின் தந்தான் சாற்று எனக்குச் - சைவமுடி
வாகிய சித்தாந்த நசை தந்தான் அதன்பின் மெய்
யோக நசை தந்தான் சேயோன்
என்று குமரகுருதாச சுவாமிகளான பாம்பன் சுவாமிகள் சைவநெறியினை ஒழுகும் வாய்ப்பையும் சைவசித்தாந்த வழி நிற்கும் பேறையும் முருகப்பெருமானே தந்ததாகப் பாடுகின்றார்.

செழும் தூவி மயில் ஊரும் சிவனுக்குத் தாசன் - பாம்பன் சுவாமி

மயிலை வாகனமாக உடைய சிவன் என்றே முருகனை பாம்பன் சுவாமிகள் பாடுகின்றார்.

இப்படிப்பட்ட ஓர் அற்புத சிவஞானியை சமய அரசியலுக்காய் "கௌமாரர்" என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு இன்றைய இந்துமதம் ஸ்மார்த்தவலையில் சிக்குண்டுள்ளது.



வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில்  இருந்து......

உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"
- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்" - கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.

மேலும் படிக்க...

Sunday, December 14, 2008

நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்

கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள் தமிழின விரோத விதைகளை மக்கள் மத்தியில் பதியவைக்க முயன்றவேளை தன்னையறியாமலேயே தனது உட்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டார். பாவம் ஓளி ஒலிப்பதிவு வலைப்பூ ஏறும்.......தமிழரை தமிழ் பற்றாளர்களாக வாழும் தமிழ் பிரமணர்களை சிந்திக்கவைக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இங்கே அடியேன் குறித்த ஒளி ஒலிப்பதிவை இணைத்துள்ளேன் YOUTUBEமூலமாக. PLAYபண்ணி சிறிது நேரம் பொறுத்திருந்து BUFFERING ஆகவிட்டு ஒலி ஒளிப்பதிவை அவதானியுங்கள்



இங்கு சிவாகம்பற்றி நவிலமுயன்ற இவர், வைதீக ஆகமம் என்ற ஒன்று உண்டென்றும் அது பிராமணர்களின் வீட்டிலேயும் வைதீகர்களின் சம்பிரயாயத்திலேயும்.......... என்று ஏதோ சொல்லுகின்றார்.
இவர் திருமாலுக்கு பூசை செய்கின்ற பிராமணர் என்ற கோதாவில் பார்த்தால் சிலவேளைகளில் இவர் வைணவ ஆகமத்தை பின்பற்ற நீதியுண்டு. ஆனால் வைதீக ஆகமம் இங்கு ஏன் வந்தது? பிரமணர் பின்பற்றுவர் என்று கூறுகின்றார். அப்படியானால் சிவாச்சாரியார்கள் எல்லோரும் அதைப் பின்பற்றுகின்றனரா? சிவாச்சாரியார்கள் சிவாகமவழி நடப்பவர்கள். இலங்கையில் இராவணன் காலந்தொட்டு சைவமே சமயமாக இருந்துவர இவர் எங்கிருந்து வைதீக ஆகமத்தாராக பிறந்தார்? ஹரியே முழுமுதல் தெய்வம் என்கின்றார். வைணவத்தை இவர் பின்பற்றுபவராக இருக்கலாம். ஆனால் ஈழவள நாட்டில் இராவணனும் அவன் குடியும் சைவமே என்பதை இவர் மறக்கக்கூடாது என்பது யான் வேண்டும் வரம். அந்த சைவக்குடிக்குள் இவருக்கு ஏன் இந்தக் குதர்கவாதம்? இலங்கையில் சைவ சமய வரம்புக்கு உட்பட்டு காத்தற் கடவுளாக திருமாலை வழிபடும் தமிழ் பண்பாட்டை பேணி வருகையில் இவர் இப்படி ஒரு போதனையை மக்களுக்கு ஊட்டவேண்டிய அவசியம் என்ன? ஊட்டும் துணிவை எப்படிப் பெற்றார்? இவர் பேச்சில் சைவ பண்பாட்டுக்கு எதிரான இலங்கையில் இல்லாத ஒரு பண்பாட்டுக்கு வித்திடும் போக்கான தன்மையை வெள்ளிடைமலையாய் அம்பலமாகி நிற்கின்றது. சட்டித்தனம் செய்யும் போக்கல்லவா இவர் பேச்சில் உறைந்துள்ளது.இலங்கையில் பிறக்கும் ஒவ்வோரு குழந்தையும் சமய பாடமாக சைவ நெறியையோ,கிருத்தவ சமயத்தையோ அன்றி இசுலாம் சமயத்தையோதான் தமிழ்மொழி மொழிமூலம் தெரிவுசெய்து படிக்கமுடியும். எனவே இவர் சைவ நெறியையே படித்திருக்கவேண்டும். சிவபெருமானே முழுமுதற்பொருள் என்றும் அவனுக்கு ஒப்பாய் எவரும் இலர் என்றும் படித்து சித்திபெற்ற( சாதரண தர பரீட்சையில் சித்திபெற்றார் என்ற எடுகோளில்) இவர் எங்கேபோய் ஹரியேதான் முழுமுதல் என்ற ஞானத்தைப் பெற்றார் என்பது; தமிழர்களே, உங்களுக்கு விளக்கவில்லையா?
சுமார்த்தபீடமான சங்கரபீடமாகத்தான் இருக்கும். தமிழரின் தேசியம் சைவசமயத்தால் பேணப்படும் என்று கருதி அன்றே சைவத்தின் தனித்தன்மையை அழிக்க வடக்கின் வைதீக நெறி கங்கணங்கட்டி சுமார்த்தத்தைப் படைத்து தமிழரிடையே ஊடுருவவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் புற்றாக சைவத்தை (திருமுறைகளையும்) அழிக்க முயன்று தோற்று பின்னர் இந்து என்ற பெயரில் விசுவருபம் எடுத்து தமிழ் நாட்டைத் தாங்கி, 95களில் இலங்கையின் கொழும்பையும் தாங்கி, அங்கு தளம் அமைத்து இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று தமிழரின் தேசிய மண்ணிலும் காலடி எடுத்துவைத்து விட்டது. இதற்கான ஆணித்தரமான சாட்சிதான் இந்த ஒளி ஒலிப்பதிவு.



தமிழனே, இந்து என்ற பெயரில் சைவத்தைத் தொலைத்து வைதீகத்தை ஏற்றுவிட்டாயேயானால் உனது தேசியம் அழிந்துவிடும். உணர்க. உனக்கென்று ஒரு பண்பாடு இருந்ததென்ற வரலாறுகூட இல்லாமல் போய்விடும். தமிழா, உனக்கு என்றுமே "கண் கெட்டபின் சூரிய வழிபாடு" என்ற பழமொழி பொருத்தமடா. அதை மேலும் வலுச்சேர்ப்பதுபோல் சைவத் தனித்துவத்தை இழந்து ஏமாந்து வேதனைப்படாதே! நித்திரையில் இருந்து விழித்தெழு.
பூணூல் போட்டவர் சொல்லுகின்றாரே என்று வாயைப்பிழந்து கேட்டுக்கொண்டு இருக்காதே. என்ன சொல்கின்றார் என்னத்தைச் சொல்லுகின்றார் என்பதை உணர்ந்துகொள். இந்த விசமி இப்படிச் சொல்கையில், ஒருவர் எழுந்து இல்லை இது சிவபூமி. நாங்கள் சைவர். எங்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். நாங்கள் அறிந்தது சிவாகமம் ஒன்றே! நீங்கள் எங்கே இந்த வியாக்கியானத்தைப் படித்தீர்கள்......எங்கள் நாட்டில் தமிழர் அழிவதை தூண்டிவிடும் ஆரியக்கூட்டத்திடம் இருந்தா? " என்று கேள்வி தொடுத்திருந்தால் பூணூல்போட்டு சைவம் படித்து பணத்துக்கு சுமார்த்தராய் விலைபோன இவர் தலைகுனிந்து நின்றிருப்பார். இன்னொரு பிரசங்கத்துக்கு மேடையேறவும் மாட்டார். தமிழா.....இனியாவது விழித்துக்கொள்!
சங்கரபீடத்துக்கு கொடிபிடிக்கும் அறிவு மங்கிய தமிழர்களே, திரைப்படத்துறை தொட்டு திரு நங்கையர் சங்கம் ஈறாய் தமிழருக்காக குரல்கொடுக்கையில் தமிழகத்தில், சுமார்த்தைத்தை ஆதரிக்கும் இராமகோபலன், சோ போன்ற மேதாவிகள் தொட்டு சிறையனுபவித்த மதுரை சங்கரபீடம் வரை ஒருவர்கூட தமிழனுக்காய் குரல்கொடுக்கவில்லை. ஏன்?
தமிழா, சைவன் ஆன உன்னை இந்துவாய் சுமார்த்த வைதீகனாய் மாற்றி உன் அடையாளத்தை அழித்து உன்மொழியை அழிக்க திட்டம் தீட்டியுள்ள கூட்டமே வட இந்தியப் பார்பனீயமும் அதன் அடிவருடைகளான தமிழகத்தின் இந்த பார்ப்பன மேதாவிகளுமடா. உணர்க. இவர்கள் உனது நண்பரல்ல. ஆன்மீகப் பேரொளிகள் அல்ல.
உனது இனத்தை அழிக்கத்துடிக்கும் எதிரிகள். ஈழத்துப் பிராமணர் இவர்களில் இருந்து வேறுபட்டு சைவ வாழ்வை தமிழோடு நுகர்பவர்கள். ஆனால் இன்று கொழும்பில் சிலர் பிறழ்வடைந்து பெரியபெரிய பதவிகளையெல்லாம் அனுசரித்து, உயர்தானங்களைப் பெற்று இன்று ஈழத்து பிராமணக் குழந்தையை சுமார்த்தபீடமான சங்கரபீடத்துக்கு அனுப்பி குருபட்டம் பெற வழிசமைத்துள்ளனர். இதுவரைகாலமும் சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனமே ஈழத்து பிராமணக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வந்தனர். ஆனால் இன்று திடிர் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளைய பிராமண சமுதாயத்தை தமிழர் என்ற வட்டத்துக்குள் இருந்து (தமிழகத்தில் நடந்ததுபோல்) அகற்றவேண்டும் என்ற பேராசையா இவர்களின் செயலின் நோக்கம்?
பிராமண சமூதாயத்திடம் சிவத்தமிழோன் மன்றாடுவது உங்கள் பிள்ளைகளை சைவ ஆதீனங்களுக்கு அனுப்பிவையுங்கள் குருபட்டம் படிப்பதற்கு. இலவசம்...........சலுகைகள்.......என்பவற்றுக்கு மயங்கி தமிழின விரோத சுமார்த்த பீடங்களுக்கு மறந்தும் அனுப்பிவைத்து சிவத்துரோகம் செய்யாதீர். திருஞான சம்பந்தர் போன்ற சைவக்கொழுந்துகளே உங்கள் வீடுகளில் பூக்கவேண்டும்.இல்லையேல் தமிழன்னை நாளை மன்னிக்காது. மறவாதீர்.

சமயத் தலைவர்களே, நீங்கள் நித்திரையிலா உள்ளீகள்? கொதிக்கும் கோபத்தை என் நெஞ்சு சுமக்கின்றது உங்களின் அறிவற்ற ..........கொழும்பின் சுமார்த்த பணத்திற்கு கைப்பிள்ளையாக நடக்கும் போக்கால். தமிழரின் தேசியமான சைவம் அழிக்கப்படுவது உங்கள் கனவா? திருந்துங்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பர். எழுதுகிறேன்.................எழுதுகிறேன்.......விழிப்புணர்வு கொண்ட தமிழினம் உருவாகும் என்ற நம்பிக்கையில். நீங்கள் விழித்து தீர்ப்பு வழங்கினால் சுமார்த்த ஆரியச் சதி ஒரு தூசி மாதிரிபோய்விடும்.
மேலும் படிக்க...

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்" கருத்தைக் கேட்டு அவரது facebookதளத்தில் சிறுகுறிப்புப் பகுதியில்(note) குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


அன்பர் தமிழ் சமூகத்தில் கொண்டுள்ள தீராத பற்றால் எளியேன் கவரப்பட்டிருந்ததால் உருவான அன்புப் பிணைப்பும் எளியேனின் நண்பராதலால் ஏற்பட்ட உரிமையோடும் சைவப் பிரசையாதாலால் எளியேனுக்கு விதிக்கப்பட்ட கடமையின் நிமித்தமும் அன்பருடைய சிறுகுறிப்பில் பல துண்டுகளாக எளியேன் எழுதிய பின்னூட்டங்களைத் தொகுத்து சிறு திருத்தங்களோடு இங்கு பிரசுரம் செய்கின்றேன். அன்பர் என்னிடம் இதுபற்றி முழுமையாக விபரித்து எழுதும்படி வேண்டினார். எனினும் பல்கலைக்கழக கல்விச்சுமை எளியேனை வாட்டி வதைப்பதால் எழுதுவதற்கு போதிய அவகாசம் இன்னும் கிட்டவில்லை. எனவே அன்பரின் சிறுகுறிப்புப் பகுதியில் எழுதியவற்றையே தொகுத்து இங்கு பிரசுரம் செய்ய வேண்டியதாயிற்று.


இந்துவைப் பற்றி சிகல உறுமய சொன்னதில் என்ன தவறு?
கலைஞர் கருணாநிதி( தமிழரின் சொத்தான சைவம் இந்து எனும் ஆரியத்தால் அபகரிக்கப்படுவது தெரியாத நாத்தீக வித்தகர். இந்துவை எதிர்க்கிறேன் சைவத்தை மறந்த அரசியல் மேதை) மட்டுமல்ல சைவ புலவர்கள் சைவ ஆதீனங்கள் எல்லாமே அதைத்தானே சொல்லுகின்றனர்.

சிங்கள சிறீயைத் தமிழன் எதிர்ப்பது நியாயம் ஆனால் ஆரிய இந்துவை தமிழன் ஏற்பது முறை! என்ன நியாயம் இது?

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர்.சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்றார் திருமூலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? தமிழ் வாழப் போராட்டம் தமிழ் வரலாறு வாழப் போராட்டம் என்று நம் முன்னோர்கள் விட்டதவறால் நாம் இன்று தவிப்பது அதுபோல்த்தான் இன்று இந்துவுக்கு அனுமதி அளித்தால் நாளை சைவத்துக்காய் போராடவேண்டி இருக்கும்.

இந்து எனப்து ஆரியம் சைவத்தை அழிக்க உருவாக்கிய கலப்படச் சமயம். அப்படியே சங்கராச்சாரியாரின் சுமார்த்த மதத்தை copyபண்ணி உருவாக்கப்பட்ட மதம். அங்கு சைவத்திற்கு வேலையேயில்லை. சுவாமி விவேகானாந்தர் அமெரிக்கா மாநாட்டில் இந்து என்ற பெயரை பயன்படுத்தியதால் ஏற்பட்டவிளைவுதான் இந்துவும் இந்துவோடு கூடி சுமார்த்தமும் பிரபல்யமடைய ஏதுவாயிற்று.

சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்திருந்தவேளை அவரை மகிழ்விக்கும் பொருட்டு அடிக்கடி இந்து என்ற சொல்லை பலர்பயன்படுத்தியபோது இலங்கையின் சைவச் சிறப்புத் தன்மையை கண்டு "இந்து என்ற பெயருக்குப்பதில் சைவன் என்றே கூறவேண்டும்" (உதயன் 07.09.98)என்று சுவாமிகள் கூறியது எப்படி மறந்துபோனது சில புத்திஜிவிகளுக்கு?

சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் கப்பலில் பயணம் செய்தபோது அவரைச் சந்தித்த அமெரிக்கர் "தாங்கள் இந்துவா?" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள் .நாங்கள் சைவர்கள்" என்று மறுத்துக்கூறியிருந்தார். திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் இன்றும் சாட்சியாய் அவர் கருத்து பதியப்பட்டுள்ளது. அன்று விவேகானந்தர் ஈட்டிய வெற்றிவாகையை கொண்டாடும் காலகட்டத்தில் மலர்ந்த கல்லூரிகளும் பத்திரிக்கைகளும் இந்து என்ற பெயரைத் தாங்கத் தொடங்கின. ஆனால் அவை இம்மியளவும் இந்து என்ற பெயர்மூலம் ஆரியச் சதிக்கு இடமளிக்கவில்லை.

ஆனால் இன்று? அஞ்சனேயர் வழிபாடு. சாயி வழிபாடு, கல்கி வழிபாடு, கண்டபாட்டுக்கு தேரோட்டம் அப்பப்பா எத்தனை கலவைகள்! இக்கலவைச் சமயத்தால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானது. கலைஞர் கருணாநிதிகூட இதே கேள்வியைக் கேட்டதோடு இந்து என்றால் கள்ளர் என்றும் கூறியிருந்தார். சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களிடம்(திராவிடர் எனப்து ஆராய்சித்துணிபு) வெறுப்புக்கொண்ட பாரசீகர் கிந்து என்றால் கள்ளர் என்று பொருள் கொண்டனர். ஆங்கிலேயர் இந்தியா என்று பெயர் சூட்டியதும் ஆரியர் இந்தியாவில் தோன்றிய சமயங்களை இணைத்து ஆரிய சமயத்தை வளர்க்க சுமார்த்த மதத்தை தெரிவு செய்தனர்.( சங்கராச் சாரியாரால் உருவாக்கப்பட்டது. சிவன் முழுமுதற்கடவுள் அல்ல. பிரம்மம் தான் கடவுள் என்ற கொள்கை. பிரம்மம் சிவனாகவும் விஷ்ணுவாகவும் சக்தியாகவும் தோற்றம் கொள்ளும்)

ஆனால் சுமார்த்தத்தை தமிழர் ஏலவே நிராகரித்துவிட்டதால் அதற்கு புதுப்பெயர் கொடுக்கவிரும்பி இந்து என்ற பாரசீகரின் சொல்லை இட்டனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதம் என்பது பௌத்தம் சமணம் சீக்கியம் உள்ளடக்கியதாகும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பது இலங்கையில் பௌத்தத்திற்கும் உடமையான மன்றமா? சீக்கியமும் சமணமும் இலங்கையில் உண்டா?

சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து என்பது எம்மொழிச் சொல் என்று வாதிட்டு ஆய்வு நடாத்தி அது தமிழுக்கு விரோதமான தமிழ் பண்பாட்டிற்கு விரோதமான தமிழர் சமயமான சைவத்தை அழித்து ஆரிய வைதீக சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஆரியச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் என இனங்கண்டு நிராகரித்து யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி அதன்பெயரை சைவ வாலிபர் மன்றம் என்று 1956களில் மாற்றி புரட்சி செய்ததை இன்று இந்து மாமன்றம்............. இந்துக் கல்லூரி.............( அடியேனும் ஓர் இந்துக் கல்லூரியில்த்தான் கற்றவன்) கொழும்பில் உள்ள இந்து குருமார் பீடம்(யார் தமிழின் மேன்மைகாக்க மாற்றினாலும் இவர்கள் இந்து என்ற ஆரியச் சதியை விட்டுக் கொடுக்க்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள்தான் ஆரியச் சதியின் இலங்கை ஏஐண்டுகள்) இப்படிப்பல சிவபாத சுந்தரனாருக்கும் தமிழருக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் கேட்டை விளைவிக்கின்றனர்.(தெரிந்தும் தெரியாமலும்)

தேவாரங்கள் திருவாசகம் பெரியபுராணம் கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் சைவ ஆகமங்கள் திருமந்திரம் சைவ சித்தாந்த நூற்கள் எவற்றிலுமே இந்து என்னும் பெயர் சமயத்தின் பெயரைத் தாங்கி வந்ததில்லை. தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரியும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள் வழங்கி சிரிக்கும்.
சைவம் என்பது தொன்று தொட்டு சிவனோடு சம்பந்தமானது எனும் பொருளில் விளங்கிவருவது. சுத்தத் தமிழ்ப் பெயர். சிங்கள சிறிக்கு எதிராகப் போராடிய எம்மவ்ர்கள் ஆரிய சதிக்கு வரவழைக்கப்பட்ட பாரசீகச் சொல்லான இந்துவை முத்தமிடுவது வெட்கக் கேடானது!

"சிவனெனும் ஓசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்கிறார் அப்பரடிகள்.சிவன் என்னும் ஓசைக்கல்லது மற்றெவ்வோசைக்காயினும் திருநின்ற செம்மையுள்ளதா? சபதம் பிடிக்கவா? எனப்து அதன் பொருள்.
சட்டத்தரணிகள் எமது சமயத்தை தலைமைதாங்கும் இக்காலத்தில் அவர்களுக்கு அப்பரடிகள் பாடிய இப்பாடலின் பொருள் எப்படித் தெரியவரும்? சிவன் எனும் ஓசையோடு கூடியது சைவம் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?.

இந்து என்ற கலப்பட ஆரியச் சதியைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் சமயமான சைவத்தை வளர்ப்போம்.

மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்று வினாவினார் தாமோதரம்பிள்ளையார். மொழியோடு சமயமும் சமயத்தோடு மொழியுமாக இரண்டறக்கலந்து விளங்குவது சைவமும் தமிழும்.
தமிழராகிய நாங்கள் பண்டைய காலந்தொட்டு சைவத்தை அழித்து சுமார்த்தத்தை பரப்பத்துடிக்கும் ஆரியச் சதியை எப்படியெல்லாம் வென்று வந்தோமோ அந்த வரலாறுகளை மறக்காது எமது இளைய சமுதாயத்தை ஆரியத்திடம் கொடுத்து ஏமாந்து தமிழால் சபிக்கப்படாது விழிப்புக் கொள்வோம்.

பிற்குறிப்பு:- facebookகுழுமங்கள் தொட்டு பல்வேறுபட்ட இணையத்தளங்கள்வரை எளியேன் வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் தமது கல்லூரி பெயரை வலிய இந்து மகளீர் கல்லூரி என்று எழுதுவது காணும்போது கண்களில் குருதிவழிகிறது. கொழும்பில் சைவம் எனும் பெயரோடு இருக்கும் ஓரே ஒரு கல்லூரி சைவ மங்கையர் கல்லூரி. குறித்த கல்லூரி மாணவிகள் இந்து எனும் சொல்லில் மயங்கி கல்லூரி பெயரையே மாற்றியமை வருந்தவைக்கின்றது. சைவம் என்பதன் ஆங்கிலப்பதம் saivismஆதலால் colombo saivism ladies college என்பதே சரியானது.
சைவம் என்ற நல்ல தமிழ் சொல்லை இழந்து இந்து என்ற ஆரிய சதி சொல்லுக்கும் அதனோடு கூடி மறைந்திருக்கின்ற தமிழ்விரோத சதித்திட்டங்களுக்கும் சைவர்களே தமிழர்களே இரையாகிப் போகாதீர்.


பிற்குறிப்பு:-facebookஇல் தமக்கென profileவைத்திருப்பவர்களுக்கும் ஏனைய இணையத்தளத்தில் சமயப் பெயராக இந்து என்று தவறுதலாக பயன்படுத்தும் சைவப் பெருமக்களுக்கும் எளியேன் அன்போடு வேண்டுவது சைவம்/சைவன் saivism/saivite என்று மாற்றி இந்து என்ற ஆரிய தமிழ் விரோத ஆரியச் சதியை தோற்கடிக்க விழிப்புணர்வு கொள்வோம். ////சிறுதுளி பெரு வெள்ளம்//////

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
மேலும் படிக்க...