"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, May 20, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3

ஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த சித்தாந்திகளை ஒப்பிடுவதா? அவர்களின் அரிய முடிந்த முடிவான சிந்தாந்தத்தை ஒப்பிடுவது அழகானதா? இப்படியான எண்ணங்கள் தோன்றியமையால் தவிர்த்துவிட்டேன். சரி; ஜன்ஸ்டீனுக்கு இங்கு என்ன சம்பந்தம்? பார்ப்போம்.

முன்னைய பதிவுகளை படித்தவர்களுக்கு இப்பகுதி இலகுவாக விளங்கும். முன்னைய பகுதிகளை படித்திராவிட்டால்;  சிதம்பர சக்கரமாக இப்பகுதி தோன்றிவிடும். எனவே முன்னைய பகுதிகளுக்குரிய சொடுக்கிகளை கீழே தந்துள்ளேன்.
கடந்த பகுதியில் இறைவனின் சொரூபநிலையை/இயற்கை இயல்பைப் பார்த்தோம்.  இறைவனின் இயற்கை இயல்பே சத்து, சித்து, ஆனந்தம் என்னும் சச்சிதானந்தம் என்று பார்த்தோம். சத்து,சித்து,ஆனந்தம் என்றால் என்ன என்பதையும் பார்த்தோம். இப்பகுதியில் சத்து,சித்து,ஆனந்தத்தை விரித்து எப்படி எண்குணம் உடையவனாக இறைவனை சைவசித்தாந்தம் காணுகின்றது என்பதை பார்க்கவுள்ளோம். 

அதற்கு முதல்; இறைவனின் சொரூப இயல்புக்கும் ஜன்ஸ்டீனின் இறைகோட்ப்பாட்டுக்கும் உள்ள தொடர்ப்பை தெரிந்து கொண்டால் விஞ்ஞானத்தை மிஞ்சிய நெறி சைவநெறி என்பதை உணர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.

ஜன்ஸ்டீன் ஆளுமையுள்ள இறைவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்."ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்லவேண்டும்" என்கிறார்.
சைவசித்தாந்தம் இறைவனின் சொரூப இயல்பை/ இயற்கை இயல்பை அப்படித்தான் காணுகின்றது. ஆனால் ஜன்ஸ்டீனின் கருத்தை கடந்து இன்னும் தெளிவாக இறைவனின் இயற்கை இயல்பை விளக்குகின்றது.

அனைத்து ஆளுமைகளையும் கொண்ட இறைவனின் இயற்கை இயல்பு(சொரூப இயல்பு) எத்தொழிலும் செய்யாது ஆளுமையற்று இருத்தலே என்கின்றது.

சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடு அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்
தவமுதலி யோகபோகத் தரிப்பவனும் அல்லன் தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே -  சிவஞானசித்தியார்

இப்பாடலையும் அதற்குரிய பொருளையும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். இப்பகுதியில்  மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

"தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால்;  அவர் உருவம்,அருவுருவம்,அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம்,யோகம்,போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவற்றை ஆன்மாக்களுக்கு வழங்குவதன்றி எதையும் அவர் தனக்கு ஏற்பதில்லை.  இவை அவரோடு பொருந்தினாலும், இவை எவற்றாலும் அவர் பற்றப்படுவதில்லை" என்பதே சைவசித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்புக்கு தரும் இலக்கணம்.

ஆக; ஐந்தொழில்கள் பண்ணுகின்ற இயல்பையெல்லாம் கடந்து, "சும்மா" இருக்கின்ற நிலை!  "சிவனே என்று சும்மா இருந்த என்னை..........." என்று நாம் பேச்சுவழக்கில் கையாளுக்கின்றோமே.......அதுதான் சைவசித்தாந்தம் கண்ட அருமை!   அதனால்த்தான் சித்தாந்தம் என்பதன் பொருள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து சிந்தித்து ஏற்பட்ட முடிந்த முடிவு என்கின்றோம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது.ஏன் என்று தெரியுமா? இறைவனின் ஆனந்த தாண்டவ திருவடிவத்தில் பிரபஞ்சப் படைப்பு தொட்டு, ஒடுக்கம் வரையான அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும் அருமையை விஞ்ஞானிகள் கண்டு வியந்தமையால் ஆகும்.திருவாசகத்தின் திருவண்டப்பகுதியினைக் கண்டு, விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்பது சைவரில் பலருக்குத் தெரியாது. உலகம் உருண்டை வடிவானது என்று கூறியதோடு மட்டுமல்லாது, அண்ட பிரபஞ்சங்களின் காட்சியை அழகாக சொல்லிய அருமையோடு, பிரபஞ்ச ஒடுக்கம் -விரிவையும் தெளிவாக விளக்கியுள்ளார். இவற்றை ஏன் நினைவூட்டுகின்றேன் என்றால், சைவசித்தாந்தம் என்பது தத்துவ ஆராய்வின் முடிவு என்பதை சைவர் யாவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே!

சரி, இறைவனின் இயற்கை இயல்பில்(அதாவது சொரூப இயல்பில்) "சும்மா" என்று இருந்த சிவப்பரம்பொருள் எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அவ்வாறு எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்தும் சொரூப இயல்புடைய சிவப்பரம்பொருள் சச்சிதானந்தம் என்று போற்றப்படுவார்.

அதுவென்ன தடத்தநிலை? அடுத்தபகுதியில் அதை விரிவாகப் பார்ப்போம். இப்போது எண்குணங்கள் யாவை என்பதைப் பார்ப்போம்.

தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன். இவனது ஆணைவழியே அனைத்தும்.

தூய உடம்புடைமை - உயிரின் இருப்பை எமக்கு அறிய உதவுவது உடம்பு. அதுபோல் இறைவனது இருப்பை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் உதவுகின்றது. எனவே உவமைகளைக் கடந்த, இப்படிப்பட்டது,இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி.

முடிவிலா ஆற்றல் உடையவன் / அளவிலா ஆற்றல் உடையவன் -  அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.

இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே  ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசத்துக்குள் அகப்படாதவன். ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசம் இறைவனை அணுகும் திறனற்றவை. இறைவனும் இயல்பாகவே அவற்றில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.

பேரருள் உடையவன் - பயன் கருதாது அருள் வழங்கும் தன்மையுடையவன். ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களின் நிமித்தம் அறிவு சுருங்கி, பேரின்பத்தை அனுபவிக்கமுடியாது துன்புறுவது கண்டு; அவற்றுக்கு பாசநீக்கம் செய்து பேரின்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும் என்று எழுகின்ற பெரு இரக்கமே இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுமெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகின்ற இறைவனின் ஒப்புவமையற்ற பெரு இரக்கம்.


இயற்கை உணர்வினன் -  ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது.( ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது) ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.

முற்றுணர்வினன் - அறிவு இயற்கையாகவே விளங்குவதுடன்;  ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன்.அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.


வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் -  பேரின்பம் உடையனாக விளங்குதல். அதாவது யாதொரு குறையும் இல்லாதவன்.


தன்வயத்தனாதல்,தூய உடம்புடைமை,முடிவிலா ஆற்றல் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை 
ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும். 

முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும். 

வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும். 

எனவே சச்சிதானந்த நிலையாகிய இறைவனின் இயற்கைத்தன்மையை சைவசித்தாந்தம் அழகுற விரித்து தெளிவுபடுத்துகின்றது என்றால் மிகையில்லை! 


நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்- சிவஞான போதம் 

அதுசரி, சைவநூல்கள் இறைவனை நிர்க்குணன் என்றும் குறிக்கின்றது. எண்குணன் என்றும் குறிக்கின்றது. குழப்பமாக இருக்கே?
மும்மலப்பிணிப்பால் வருகின்ற சாத்வீகம்,இராசதம்,தாமதம் என்னும் முக்குணங்களைக் கொண்டிருப்பவன் அல்லன் என்ற பொருளிலேயே நிர்க்குணன் என்று சைவநூல்கள் குறிக்கின்றன.

தடத்தநிலையில் எண்குணனாக வெளிப்படும் இறைவனின் எண்குணங்கள் சொரூபநிலையில் வெளிப்படுத்தப்படாது "சும்மா" இருக்கும் சிவமாக சிவப்பரம்பொருள் விளங்கும். இந்நிலையில் சச்சிதானந்தம் என்று போற்றப்படுகின்றார் என்று விரிவாகப் பார்த்தோம்.எம்பெருமான் சிவபெருமான் தன்னுடைய எண்குணங்களை வெளிப்படுத்தி நிற்கும் தடத்தநிலை பற்றி  சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதி 4 இல் பார்ப்போம்.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3"

rame20002007 said...

பகிர்ந்தமைக்கு நன்றி. இறைவனின் எண்குணங்கள் சொரூப நிலையில் கூறப்படுகிறதா அல்லது தடத்த நிலையில் கூறப்படுகிறதா?

சிவத்தமிழோன் said...

இறைவனின் எண்குணங்கள் தடத்தநிலையிலேயே சித்தாந்தம் விளக்குகின்றது. எனினும் சொரூபநிலையில் சச்சிதானந்தம் என்று இறைவனைப் போற்றுகின்றது. எனவே, அச்சொல்லின் பொருளை விளக்க முற்பட்டமையினால், எண்குணங்கள் இங்கு தரப்பட்டன. ஆனால் எண்குண இயல்புகள் தடத்தநிலைக்குரியனவே.

இங்கு சொரூபநிலையின் தலையங்கத்துக்குள் சச்சிதானந்தம் என்னும் சொல்லின் பொருள் விரிவாக பார்க்கப்பட்டதால், எண்குணங்கள் எந்நிலைக்குரியதென்ற மயக்கம் ஏற்பட ஏதுவாயிற்று. மன்னிக்க.

மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கும்வண்ணம் திருத்தத்தை கட்டுரையில் ஏற்படுத்தியுள்ளேன். அனைவரும் பயன்பெறும் வண்ணம் தாங்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஐயத்தை எளியேனுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள்.

Healthcare Raja Nellai said...

அடியேன் சைவ சித்தாந்த மாணவன் என்பதினால் இன்புறுகிறேன். அதிலும் சண்முகவேல் அய்யாஎனது குருநாதர் என்பதினால் இறை அருள் எனக்கு பரிபூர்ணமாக கிடைத்திருக்கிறது என்பதினை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

Muthu said...

ஐயா சிவனை நிர்க்குணன் என்று ஆகமங்கள் கூறுவது போன்று வேதங்களில் பிராமணம் காட்ட வேண்டுகிறேன்

Post a Comment