"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 11, 2010

சிவராத்திரி விரதம் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? (இரண்டாம் பாகம்)

"சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? " கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி எழுதியது.

கடந்த வீரகேசரி வாரவெளியீட்டின் கலைக்கேசரிப் பகுதியில்சிவராத்திரி சௌரமான முறையில் அனுட்டிப்பதே நியதியானது என்ற அடிப்படையில் ஏனைய சைவ ஆகமங்களைச் சுட்டிக்காட்டி விளக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. சிவாகமங்கள் என்பன சிவனின் வாக்காகக் கொள்ளப்படுகின்றன. காமிக ஆகமத்தில் மகாமாதத்தில் சிவராத்திரி அனுட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மகாமாதம் என்பது சௌரமான அடிப்படையிலான கும்பமாதமா(மாசி) அன்றி சாத்திரமான அடிப்படையிலான சாத்திரமாதமா என்று பெருங்குழப்பம் இரு பஞ்சாங்கத்தாராலும் சைவ சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சாத்திரமாத கணிப்பில் மாகமாசம் என்பதற்கு வேறு பெயர் எதுவும் இல்லை. சௌரமான கணிப்பில் கும்பமாதம் என்று உண்டு. இதையே மாசி என்போம். எனவே, தனியே காமிக ஆகமத்தைக் கருத்தில் கொள்ளும்போது சாத்திரமாதமே என்றே பொருள்படுகின்றது. இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரால் எழுதிப் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் ஏனைய ஆகமங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கையாண்டு விளக்கவில்லை. எனவே, காமிக ஆகமத்தை கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாள் என்று கட்டுரை பிரசுரித்திருந்தேன். எனினும் ஆத்திசூடியில் சொல்லப்பட்டுள்ள 'தூக்கி வினை செய்" என்றமைக்கு அமைவாக, ஆராய்ந்து பார்க்கும்போது ஏனைய சைவ ஆகமங்கள் திட்டவட்டமாக சிவராத்திரி விரதம் சௌரமான அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று என்று வரையறுத்து உள்ளமையால், காமிக ஆகமம் சொல்லும் மாகமாதம் கும்பமாதம்  என்றே கொள்ளவேண்டியுள்ளது.

சிவபெருமானின் வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய சூட்சம ஆகமம், ஈசான முகத்திலிருந்து தோன்றிய புரோத்கீத ஆகமம்,சத்யோசாதத்திலிருந்து தோன்றிய காரண ஆகமம் என்பன தெளிவாக கும்பமாதமே மாகமாதம் என்று வரையறுக்கின்றது. எனவே, இறைவனின் சத்யோசாத முகத்திலிருந்து தோன்றிய காமிக ஆகமமும் ஏனைய கந்தபுராணம் போன்றனவும் கூறும் மகாமாதம் என்பது கும்பமாதம் எனக்கொள்வதில் தவறில்லை.

சாத்திரமான கணிப்பை ஆதரிப்போர், காமிக ஆகமத்தில் சௌரமானதா அன்றி சாத்திரமானதா என எதுவும் கூறப்படாமையினாலும் ஏனைய காமிகத்துக்கு பிற்காலத்தில் கிடைத்த சைவாகமங்கள் சௌரமென்று வலிந்துரைப்பதாலும், பிற்சேர்க்கையாக இருக்க ஏதுவுண்டு என்று  சாதிக்கின்றனர்.

இன்று மூவாயிரம் பாடல்கள் உள்ளதாகக் கூறப்படுகின்ற திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்து ஏழு பாடல்களைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 47 பாடல்கள் பிற்சேர்க்கையே! எனவே பிற்சேர்க்கை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய வாதமாகவேபடுகின்றது எனினும்
ஆனாலும் ஏனைய எல்லா ஆகமங்களிலும் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டுள்ளதால், பிற்சேர்க்கையாக காட்டமுடியாது. மாகமாதம் என்பதைத்தவிர வேறு எப்பெயருமே சாத்திரமானக் கணிப்பீட்டுக்கு இல்லாமை அவர்களுடைய வாதத்துக்கு ஆதரமாக  உள்ளது. மாகமாதம் என்பது சாத்திரமானதுக்குரிய மாகமாதமா அன்றி சௌரமானதுக்குரிய கும்பமாதமா என்று குழப்பம் நிலவியமையால், எம்பெருமானால் சௌரமான கும்பமே காமிகத்தில் தாம் குறிப்பிட்ட மாகமாதம் என்பதை தெளிவுபடுத்த ஏனைய சைவாகமங்களை பூவுலகுக்கு அளித்தார் என்று கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிவபெருமானாலேயே சைவாகமங்கள் படைக்கப்பட்டதாக சைவமக்கள் போற்றுவர்.எனவே சைவாகமங்களின் சாரம் என்று கருதும்போது சௌரமான கணிப்பீடே சிவராத்திரிக்கு ஏற்றது என்றாகின்றது.

இ.வெங்கடேச ஐயர் எடுத்துக்காட்டுகளாக கையாண்ட ஆவணிச் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற விரதங்கள் சாத்திரமான முறையிலேயே கணிக்கப்படுகின்றன. இவ்விரதங்கள் சௌரமானமுறையில் ஒழுகவேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உத்தராயணக் காலப்பகுதி விரதங்கள் சௌரமான முறையில் கணித்தல் வேண்டும் என்று உள்ளது. எனவே உத்தராயணக் காலப்பகுதிக்குள் (தை-ஆனி) வராத ஆவணிச் சதுர்த்தி,நவராத்திரி என்பன சாத்திரமானமுறையில் கணிக்கப்படுகின்றன. எனவேதான் இங்கு எந்தவிதமான சிக்கல்களும் எழவில்லை. இவற்றுக்கு கடந்த எனது கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள கோட்டுப்படங்களின் விளக்கங்களே பொருந்தும் .


முன்னைய காலத்தில் இதுபோல் சர்ச்சை எழுந்தபோது திருவாவடுதுறை ஆதீன முதல்வர் பல ஆகம விற்பனர்களை அழைத்து கருத்தறிந்து சௌரமான முறையே உகந்தது என்று வலியுறுத்தியுள்ளார். எனவே சௌரமான முறைப்படி ஒழுகுவதில் தவறு இல்லையென்றே வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனினும் பெரும்பாலான சைவ ஆலயங்கள் தமிழகத்தில் பெப்பிரவரி 12ஐ அனுட்டிக்கின்றன. காமிக ஆகமத்தை முதன்மையாய்க் கொண்டு ஆச்சார அனுட்டானங்களையும் பூசைகளையும் பேணும் ஆலயங்களுக்கு காமிகமே முதன்மையானது. எனவே, இவ்வாலயங்கள் காமிகத்தைத் தாண்டி ஏனைய சைவ ஆகமக் கருத்துகளை அனுசரிப்பதில் சிரத்தை கொள்வதில்லை. இதுவே இவ்வண்ணம் பெப்பிரவரி 12ஐ சிவராத்திரியாக அனுட்டிப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

கட்டுரையாளர்கள் தமது கருத்தை வலியுறுத்துவதையே நோக்காகக் கொண்டு கட்டுரை எழுதுவதால் சமூகத்துக்கு முழுமையாக கருத்துகளை தெரிவிப்பதில்லை.தமது கருத்துகளை ஆதரிக்கும் விடயங்களை அலசிவிட்டு, ஏனையவற்றை கைவிட்டு விடுவர். ஆனால் சிறியேன், சைவ சமூகத்துக்கு சிறந்த ஊடக வழிகாட்டல் இல்லாமையினை உணர்ந்து எனது கருத்துகளை வழங்குவது என்பதைவிட சைவச் சான்றோர்களின் கருத்துகள் அடிப்படையில் சாலச் சிறந்த கருத்துகளை வழங்குவதையே நோக்காகக் கொண்டு; எழுதிவருவதை தொண்டாகக் கொண்டிருப்பதாலேயே, எனது கடந்த பதிவில் இ.வெங்கடேச ஐயர் எழுதிய கருத்துகளை வைத்து விளக்கம் பெற்று, அதை சைவ சமூகம் விளங்கிக் கொள்ளமுடியாமையைக் கண்டு, அவருடைய கட்டுரைக்கு அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் விளக்கி பெப்பிரவரி 12ம் நாள் மிக உகந்தது என்று பொருள்பட எழுதியிருந்தேன். குறித்த பதிவில் இதை தெளிவுபட உரைத்தும் இருந்தேன். ஆனால் வீரகேசரி வாரவெளியீட்டு கட்டுரையை அவர்களின் இணையத்தளத்தில் வாசித்தைக் கருத்தில் எடுத்து சீர்தூக்கிப் பார்க்கையில் மார்ச்சு 13ம்நாள் சாலச் சிறந்ததாகப்படுகின்றது.

வீரகேசரி வாரவெளியீட்டுக் கட்டுரையில் சிவராத்திரி நிர்ணயம் என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளனர். அதற்கு முன்னர் சௌரமான முறையே உகந்தது என்று கருத்து வெளியிட்ட எந்த சைவ அமைப்புகளுமாயினும் சரி, சைவ ஆலயங்களாயினும் சரி, சைவ அறிஞர்களாயினும் சரி, காரணமாக "திருவண்ணாமலை,சிதம்பரம் என்பன மார்ச் 13ம் நாள் அனுட்டிக்கின்றன" என்று கூறினரே ஒழிய எந்தவிதமான விளக்கத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் பெப்பிரவரி 12ம் நாள் உகந்தது என்று பரவலாக பலர் விளக்கம் கொடுத்திருந்தனர். ஞானசம்பந்த சிவாச்சாரியார், இ.வெங்கடேச ஐயர் போன்றோரின் விளக்கங்கள் இணையங்கள் ஊடாக இலகுவாக கிடைக்கக்கூடியனவாக இருந்தன. எனவே, நான் பல சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்தப் பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை" என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஒருசில அமைப்புகள் இரண்டில் ஒருநாளை முன்வைத்தனவே தவிர, அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. இதனாலேயே, பெப்பிரவரி 12ம் நாளை வலியுறுத்தி கட்டுரை வரைய வேண்டியதாயிற்று.

எளியேன் இங்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இங்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அதேநேரத்தில்,சைவ ஆகமங்களில் காமிக ஆகமத்தை மட்டும் கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாளில் சிவராத்திரியை பல சைவ ஆலயங்கள் அனுட்டிப்பதால், இந்நாளில் அனுட்டித்தால் பலனில்லை என்று சாத்திரமான கணிப்பீட்டை ஏற்றவர்களை பயமுறுத்துவதில் உடன்பாடில்லை. நாளும் கோளும் சிவனடியாருக்கு தீதில்லை என்பது ஞானக் குழந்தையின் வாக்கு. மேலும் காலனை அழித்து மார்க்கண்டேயரின் காலத்தை மாற்றியவர் காலனுக்கே காலனாகிய எம்பெருமான். அவர் இடப்பாகம் எழுந்தருளியுள்ள அம்மை, அபிராமிப்பட்டருக்காய் அமாவாசையை பௌர்ணமியாக்கி அருள்பாலித்தவள். காலனுக்கு காலனாகிய அமிர்தகடேசுவரத்தில் அமிர்தகடேசுவருடன் இடப்பாகம் கொண்டு இருப்பதால் அமிர்தகடேசுவரியாக உடனாய அம்மைக்கு முடியாதது என்ன உண்டு? எனவே, இங்கு இறை நம்பிக்கையே தலையாயது. சாத்திரமானதோ சௌரமானதோ.......நம்பினோர் கைவிடப் படார்.

வீரகேசரிக்குரிய தொடுப்பு:- வீரகேசரி
http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=16

எம் கடன் பணி செய்து கிடப்பதே

சிவத்தமிழோன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிவராத்திரி விரதம் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? (இரண்டாம் பாகம்)"

Post a Comment