"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 27, 2008

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி

ஆய கலைகள் அறுபத்தினான்கு, அதில் சோதிட சாத்திரம்(வான சாத்திரம்),கணிதம்,சித்த மருத்துவம் என்பன மணிகளாய் பூத்து வேதநெறியை அழகுபடுத்துகின்றன என்றால் மிகையாகாது.மெஞ்ஞானம் என்பது மூலமூர்த்தியாகவும் ஏனைய மருத்துவம்,கணித விஞ்ஞானம்,வான சாத்திரம்,அரசியல் என்ற ஏனையவை பிரகார மூர்த்திகளாகவும் கொண்ட மேன்மைகொள் நெறியே வேதநெறி.இதைத்தான் நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என்றும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க என்றும் திருமுறைகள் எடுத்தியம்புகின்றன.

வேதநெறியாயினும் சரி அதன் மூலாதாரமான சைவநெறியாயினும் சரி, இந்த அறுபத்தி நான்கு கலைகளையும் உலகுக்குத் தந்த பெருமையை உடையது எனலாம்.அன்றைய முனிவர்கள்(ஏன் இன்றும் தவத்தினுள் ஆழ்ந்தும் பரதேசிகள் என்ற திருப்பெயர்களோடும் உலாவருகின்றனர்) விஞ்ஞானிகள் என்றால் அது பொருந்தாப் பேச்சு அன்று.

சித்த மருத்துவம், சோதிடம், கணிதம்,இல்லற இன்பவியல் கலை என்று ஏராளமானவற்றுக்கு முன்னால் மேலைதேயம் விழிபிதுங்கி நிற்பது நம்மவர்களில் சிலருக்குப் புரியாது.

சித்த மருத்துவத்துக்கு இணையான மருத்துவம் இல்லவே இல்லை என்பேன். மேலைத்தேய மருத்துவம் வெளியோட்டமாய் பார்க்கும்போது ஆகா ஒகோ என்று இருக்கும். ஆனால் அதனுள் மூழ்கினால் பல மருந்துகள் இந்திய சித்த மருத்துவத்திற்கு பயன்படும் தாவரங்களை அறிந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது மெல்ல மெல்லப் புலப்படும்.மேலைத்தேய மருத்துவத்தில் உள்ள மருந்துகள் யாவுமே உடலில் டோக்சின்(toxin) எனும் பொருளை உருவாக்கி மிகச் சிறிய அளவேனும் பாதகத்தையேனும் உண்டு பண்ணிவிட்டே செல்லுகின்றன. இந்த டோக்சின் பொருட்கள் உடலில் அதிகரிக்க அதிகரிக்க உடலும் இயற்கை நியதிகளுக்கு மாறாக செயற்பட ஆரம்பிக்கின்றது. ஈற்றில் புதிய புதிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இதய மாற்று சிகிச்சை, ஈரல் மாற்று சிகிச்சை,சிறு நீரக மாற்று சிகிச்சை எல்லாம் மேலைத்தேய மருத்துவ மேன்மைகளாக நினைக்கும் மூடரும் உள்ளர். ஆயுர்வேத வாழ்வியலை மேற்கொள்பவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முகம் கொடுக்கும் துர்பாக்கியம் நிகழ்வதில்லை. ஏன் அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் உண்டு என்பது மறக்கப்படக்கூடாதவை.

அன்று எல்லாவகையான உணவுகளும் எல்லாக் காலங்களிலும் பெறமுடியாது. குறித்த உணவு குறித்த பருவத்தில்த்தான் விளையும்.அவை நிறைவான முறையில் சமிபாட்டிற்கு உள்ளாகும் வகையில் உணவு சமிபாட்டுத்தொகுதியும் பருவமாற்றத்திற்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துகொள்ளும். ஆனால் இன்று உணவுப்புரட்சி என்று எல்லாப் பருவத்திலும் எல்லா உணவும் கிடைக்கும் விந்தையால் உணவு சமிபாட்டுத்தொகுதி ஈற்றில் கெட்டுப்போகின்றது.நோய் வந்து சேருகின்றது. உணவுப்பழக்கமே ஆரோக்கியத்தின் அத்திவாரம் என்பர். ஆதலால்த்தான் சிலசமயங்களில் சித்த மருத்துவத்தில் உணவுக்கட்டுப்பாடு அவசியமாகின்றது
ஜேர்மனியில் பல்லாயிரம் ஏடுகள் உள்ளன என்று வீரகேசரியில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த நினைவு உண்டு. ஜேர்மன்காரர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோரும் வந்து இந்தியாவில் கொட்டிக்கிடந்த அறிவு வளங்களை எல்லாம் திரட்டிச் சென்றனர். நம்மவர்கள் நாத்தீகம் கதைப்பதிலேயே அறிவை இழந்து தம்மிடம் இருக்கும் வளங்களை மறந்து மேலைதேயத்தை துதிபாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். என்றும் இருப்பர். திருந்தவே மாட்டார்கள்.
கல்ப சூத்திரம் எனும் நூலில் போதாயனர் பைதகரஸ் தேற்றத்தை என்றோ சொல்லிவிட்டார். நம்மவர்களுக்கு இது தெரியாது.பைதகரஸ் எந்த இந்திய ஏட்டைப் படித்தறிந்து கொண்டாரோ யாரறிவர்!திரிகோண மீதி என்ற சமஸ்கிருதம் Trigonometry என்றும் ஜியோமீதி என்ற சமஸ்கிருதம் Geometry என்றும் ஆனது இவர்களுக்கு புலனாகாது.பாஸ்கராச்சாரியார் என்பவர் எண் கணிதத்தையும்(Arithmetic) வடிவ கணிதத்தையும்(Geometry) லீலாவதி என்ற நூலிலும் இயல் கணிதத்தை பீஜகணிதம் எனும் நூலிலும் விளக்கியிருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்?அவர் பூச்சியத்திற்கும் எண்ணிலிக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.Permutation and Combination என்று இப்போது அழைக்கப்படும் கணக்குமுறையை "அங்கபாச வ்யவகாரம்" எனும் பெயரில் விளக்கியுள்ளார்.ஏன் பூச்சியத்தையும் ஒன்றில் இருந்து ஒன்பது வரையுள்ள எண்களையும் கண்டுபிடித்தது வேதநெறி மக்களே என்பது யாவரும் அறிந்தது. இவ் எண்கள் இந்து அரேபியா எண்கள் என்று இன்று வழங்கப்படுகின்றன. (ஏனெனில் அரேபியரே வர்த்தகத்திற்கு இலகுவான எண் நடைமுறையாய் இருப்பதுகண்டு பாரில் பரப்பினர் என்பதால்.)

இல்லறத்தின் அத்திவாரமே சேக்கைப்போர்தான் என்பதை உணர்ந்து காமசூத்திரா,திருக்குறளின் காமத்துப்பால் என்று நின்றுவிடாமல் ஆலயங்கள் வரை காமக்கலையை வடித்து சமூகத்தோடு வாழ்ந்த சமய வாழ்வியல் பண்பாடு நமது பண்பாடு என்றுணர்க.

வானத்துக்கோள்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் வேத நெறி மக்களே என்பது வெள்ளிடைமலை. சோதிடத்தை இகழ்பவர்கள் ஒருகணம் சிந்திக்க எளியேன் இங்கு வேண்டுகின்றேன்.அமாவாசை பௌர்ணமிகளில் சிலருக்கு சித்த சுவாதீனம் இல்லாமல் போவது ஏன்?குறித்த நாட்களில் புவியீர்ப்பு மாறுவதால்த்தான் கடல் அலைகளே ஆர்ப்பரிக்கின்றன . பருவ காலங்களே இக்கோள்களின் அசைவின் தாக்கங்களை சுமந்து பூப்பது என்று விஞ்ஞானம் நவில்வதை உணர்க.. எனவே மனித வாழ்க்கையும் நாளும் கோளுடனும் ஒன்றாய் கலந்திருப்பது புலப்படும்.உலகில் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட ஆண்டு நடைமுறையைக் கொண்டிருந்தது வேதநெறிப் பண்பாடே.

ஆங்கிலேய ஆண்டில் வெறும் பத்து மாதங்களே இருந்தன.ஜீலியர் சீசரின் நினைவாக ஜீலை என்றும் அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் நினைவாக ஆகஸ்ட் என்றும் பெயரிட்டனர்.அதற்கு முதல்க்கூட பத்தாவது மாதத்தைக் குறிக்கும் டிசம்பர் தசம்(பத்து) சமஸ்கிருதத்தில் இருந்தே உருவாயிற்று என்றும் நவமி எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே நவம்பர் என்றும் அதாவது ஒன்பதாவது மாதம் என்றும் அஷ்டம் எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே எட்டாவது மாதத்தைக் குறிக்கும் அக்டோபர் உருவானது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.ஏன் யேசு பிறந்த திகதியில்க்கூட அவர்களுக்கு குழப்பம். ஈற்றில் டிசம்பர் 25 என்பது கத்தோலிக்க சபை ஒருமனதாக யேசுவின் பிறந்த நாளாய்க் கொண்டாடுவோம் என்று எடுத்துக்கொண்ட முடிவு என்பது பலருக்குத் தெரியாது.தெரிந்தவர்கள் மௌனிகளாய் உள்ளனர். இரசியாவில் யேசு பிறந்ததாக பெப்பிரவரி ஏழைக் கொண்டாடும் ஒரு கிருத்தவப் பிரிவினர் உள்ளனர். இது இப்படியிருக்கையில் வெறும் கற்பனை ஆண்டு முறையல்லாது நமது சோதிடவிஞ்ஞானம் திதி,இலக்கணம்,ராசி,நட்சத்திரம் என்று நாம் பிறந்தபோது அமைந்த வான அமைப்பை ஆதாரமாய்க் கொண்டு நமது பிறந்த நாளை தந்து நிற்கின்றது தெட்டத் தெளிவாகசூரிய சித்தாந்தத்தின்படி உலகம் தோன்றி கி.மு.198,67,71,100 என்று பறைசாற்றுகின்றது.இது விஞ்ஞானம் ஏற்ற காலக்கணிப்பு.ஆனால் பைபிள் வெறும் கி.மு 4004 என்று விஞ்ஞானம் முன் தோற்று நிற்கின்றது. இப்போது சொல்லுங்கள் சோதிடம் என்பது பகட்டுவித்தையா என்ன?
இன்று முறைப்படி சோதிடக்கலையை கற்பவர் குறைவு.அரைகுறை சோதிடர்கள் தவறாகக் கணிக்க, அவர்களிடம் ஏமாந்த அறிவற்ற கூட்டம் சோதிடத்தை இகழத்தான் செய்யும்.

அறிவு வளர வளர நாம் பெற்ற அறிவு முடிவானது இல்லை என்பது புலப்படும்.விஞ்ஞானிகளும் இதை அறிவர். உலமகே போற்றும் விஞ்ஞான மேதை நாத்தீகர்களின் கன்னத்தில் அறைவதுபோல் பின்வறுமாறு சொல்லுகின்றார்."அறிவு அறிவு என்று பேசுகின்றோம்.அப்படிப் பேசும்போதெல்லாம் நாம் எவ்வளவு சிறுமை உடையவர்கள் என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது.அந்த நேரத்தில் வெட்கம் அடைந்து தலை குனிகின்றேன். காரணம் இயற்கையின் இயங்கும் தன்மை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகின்றது. இந்தவிதி முறைகள் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் தெரிந்து கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு மனதை உறுத்துகிறது.அதற்கு அப்பால், நாம் அறிந்திராத ஒரு சக்தி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி முறைப்படி நடத்திச் செல்கின்றது. இது உணர்வுக்கும் அப்பால் உள்ள உண்மை.அந்த ஒரு மாபெரும் சக்தியை கற்பனை செய்து பார்க்கும் போது என்னை அறியாமலேயே நான் சமயத்துள் நிற்கின்றேன்!"யார் அந்த விஞ்ஞான மேதையா? ஜன்ஸ்டீன் என்றால் நம்புவீர்களா என்ன நாத்தீகர்களே?
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானி சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விஞ்ஞானி என பெருமை கொள்ள, விஞ்ஞான மேதை சமயத்தில் தான் தன்னையறியாமலே நிற்பதாகச் சொல்லி தனதறிவை மெருகூட்டுகின்றார்.

சின்மியாமிஷன் தாபகர் சுவாமி சின்மியானந்தர் நாத்தீகராய் இருந்து தவசிகளின் தோலை உரித்துக்காட்டப்போவதாக சபதமிட்டு இமயமலை சென்றவர். மீண்டும் திரும்பியபோது தவக்கோலத்திலேயே மீண்டார்.ஆராய்வில் ஈடுபடுவோர் விஞ்ஞானிகள் ஆவதுபோல் வேதநெறி ஆராய்வில் ஈடுபடுபவர் மெஞ்ஞானி ஆவதுதான் யதார்த்தம் நவிலுகின்ற உண்மை.இதுபோல்த்தான் கவியரசர் கண்ணதாசனும் கடவுளே இல்லை என்ற நாத்தீகத்தில் கருப்புச்சட்டை போட்டு; சோதிடம்,சாத்திரங்கள்,மந்திரங்கள், என்று யாவற்றையும் நையாண்டி செய்தார். நையாண்டி செய்த அவரே ஈற்றில் அர்த்தமுள்ள இந்து(வேதநெறி என்றே வழங்கப்படவேண்டும்.) மதம் எனும் பெயரில் கட்டுரை வரையும் பக்குவம் பெற்றது கண்கூடு.

ஆராயாமல் சிலர் வெளியே நின்று பிதற்றுவர். இவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். செவியிருந்தும் செவிடர்கள். காலிருந்தும் நொண்டிகள்.

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்குக."
மேலும் படிக்க...

Sunday, December 14, 2008

நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்

கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள் தமிழின விரோத விதைகளை மக்கள் மத்தியில் பதியவைக்க முயன்றவேளை தன்னையறியாமலேயே தனது உட்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டார். பாவம் ஓளி ஒலிப்பதிவு வலைப்பூ ஏறும்.......தமிழரை தமிழ் பற்றாளர்களாக வாழும் தமிழ் பிரமணர்களை சிந்திக்கவைக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இங்கே அடியேன் குறித்த ஒளி ஒலிப்பதிவை இணைத்துள்ளேன் YOUTUBEமூலமாக. PLAYபண்ணி சிறிது நேரம் பொறுத்திருந்து BUFFERING ஆகவிட்டு ஒலி ஒளிப்பதிவை அவதானியுங்கள்



இங்கு சிவாகம்பற்றி நவிலமுயன்ற இவர், வைதீக ஆகமம் என்ற ஒன்று உண்டென்றும் அது பிராமணர்களின் வீட்டிலேயும் வைதீகர்களின் சம்பிரயாயத்திலேயும்.......... என்று ஏதோ சொல்லுகின்றார்.
இவர் திருமாலுக்கு பூசை செய்கின்ற பிராமணர் என்ற கோதாவில் பார்த்தால் சிலவேளைகளில் இவர் வைணவ ஆகமத்தை பின்பற்ற நீதியுண்டு. ஆனால் வைதீக ஆகமம் இங்கு ஏன் வந்தது? பிரமணர் பின்பற்றுவர் என்று கூறுகின்றார். அப்படியானால் சிவாச்சாரியார்கள் எல்லோரும் அதைப் பின்பற்றுகின்றனரா? சிவாச்சாரியார்கள் சிவாகமவழி நடப்பவர்கள். இலங்கையில் இராவணன் காலந்தொட்டு சைவமே சமயமாக இருந்துவர இவர் எங்கிருந்து வைதீக ஆகமத்தாராக பிறந்தார்? ஹரியே முழுமுதல் தெய்வம் என்கின்றார். வைணவத்தை இவர் பின்பற்றுபவராக இருக்கலாம். ஆனால் ஈழவள நாட்டில் இராவணனும் அவன் குடியும் சைவமே என்பதை இவர் மறக்கக்கூடாது என்பது யான் வேண்டும் வரம். அந்த சைவக்குடிக்குள் இவருக்கு ஏன் இந்தக் குதர்கவாதம்? இலங்கையில் சைவ சமய வரம்புக்கு உட்பட்டு காத்தற் கடவுளாக திருமாலை வழிபடும் தமிழ் பண்பாட்டை பேணி வருகையில் இவர் இப்படி ஒரு போதனையை மக்களுக்கு ஊட்டவேண்டிய அவசியம் என்ன? ஊட்டும் துணிவை எப்படிப் பெற்றார்? இவர் பேச்சில் சைவ பண்பாட்டுக்கு எதிரான இலங்கையில் இல்லாத ஒரு பண்பாட்டுக்கு வித்திடும் போக்கான தன்மையை வெள்ளிடைமலையாய் அம்பலமாகி நிற்கின்றது. சட்டித்தனம் செய்யும் போக்கல்லவா இவர் பேச்சில் உறைந்துள்ளது.இலங்கையில் பிறக்கும் ஒவ்வோரு குழந்தையும் சமய பாடமாக சைவ நெறியையோ,கிருத்தவ சமயத்தையோ அன்றி இசுலாம் சமயத்தையோதான் தமிழ்மொழி மொழிமூலம் தெரிவுசெய்து படிக்கமுடியும். எனவே இவர் சைவ நெறியையே படித்திருக்கவேண்டும். சிவபெருமானே முழுமுதற்பொருள் என்றும் அவனுக்கு ஒப்பாய் எவரும் இலர் என்றும் படித்து சித்திபெற்ற( சாதரண தர பரீட்சையில் சித்திபெற்றார் என்ற எடுகோளில்) இவர் எங்கேபோய் ஹரியேதான் முழுமுதல் என்ற ஞானத்தைப் பெற்றார் என்பது; தமிழர்களே, உங்களுக்கு விளக்கவில்லையா?
சுமார்த்தபீடமான சங்கரபீடமாகத்தான் இருக்கும். தமிழரின் தேசியம் சைவசமயத்தால் பேணப்படும் என்று கருதி அன்றே சைவத்தின் தனித்தன்மையை அழிக்க வடக்கின் வைதீக நெறி கங்கணங்கட்டி சுமார்த்தத்தைப் படைத்து தமிழரிடையே ஊடுருவவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் புற்றாக சைவத்தை (திருமுறைகளையும்) அழிக்க முயன்று தோற்று பின்னர் இந்து என்ற பெயரில் விசுவருபம் எடுத்து தமிழ் நாட்டைத் தாங்கி, 95களில் இலங்கையின் கொழும்பையும் தாங்கி, அங்கு தளம் அமைத்து இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று தமிழரின் தேசிய மண்ணிலும் காலடி எடுத்துவைத்து விட்டது. இதற்கான ஆணித்தரமான சாட்சிதான் இந்த ஒளி ஒலிப்பதிவு.



தமிழனே, இந்து என்ற பெயரில் சைவத்தைத் தொலைத்து வைதீகத்தை ஏற்றுவிட்டாயேயானால் உனது தேசியம் அழிந்துவிடும். உணர்க. உனக்கென்று ஒரு பண்பாடு இருந்ததென்ற வரலாறுகூட இல்லாமல் போய்விடும். தமிழா, உனக்கு என்றுமே "கண் கெட்டபின் சூரிய வழிபாடு" என்ற பழமொழி பொருத்தமடா. அதை மேலும் வலுச்சேர்ப்பதுபோல் சைவத் தனித்துவத்தை இழந்து ஏமாந்து வேதனைப்படாதே! நித்திரையில் இருந்து விழித்தெழு.
பூணூல் போட்டவர் சொல்லுகின்றாரே என்று வாயைப்பிழந்து கேட்டுக்கொண்டு இருக்காதே. என்ன சொல்கின்றார் என்னத்தைச் சொல்லுகின்றார் என்பதை உணர்ந்துகொள். இந்த விசமி இப்படிச் சொல்கையில், ஒருவர் எழுந்து இல்லை இது சிவபூமி. நாங்கள் சைவர். எங்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். நாங்கள் அறிந்தது சிவாகமம் ஒன்றே! நீங்கள் எங்கே இந்த வியாக்கியானத்தைப் படித்தீர்கள்......எங்கள் நாட்டில் தமிழர் அழிவதை தூண்டிவிடும் ஆரியக்கூட்டத்திடம் இருந்தா? " என்று கேள்வி தொடுத்திருந்தால் பூணூல்போட்டு சைவம் படித்து பணத்துக்கு சுமார்த்தராய் விலைபோன இவர் தலைகுனிந்து நின்றிருப்பார். இன்னொரு பிரசங்கத்துக்கு மேடையேறவும் மாட்டார். தமிழா.....இனியாவது விழித்துக்கொள்!
சங்கரபீடத்துக்கு கொடிபிடிக்கும் அறிவு மங்கிய தமிழர்களே, திரைப்படத்துறை தொட்டு திரு நங்கையர் சங்கம் ஈறாய் தமிழருக்காக குரல்கொடுக்கையில் தமிழகத்தில், சுமார்த்தைத்தை ஆதரிக்கும் இராமகோபலன், சோ போன்ற மேதாவிகள் தொட்டு சிறையனுபவித்த மதுரை சங்கரபீடம் வரை ஒருவர்கூட தமிழனுக்காய் குரல்கொடுக்கவில்லை. ஏன்?
தமிழா, சைவன் ஆன உன்னை இந்துவாய் சுமார்த்த வைதீகனாய் மாற்றி உன் அடையாளத்தை அழித்து உன்மொழியை அழிக்க திட்டம் தீட்டியுள்ள கூட்டமே வட இந்தியப் பார்பனீயமும் அதன் அடிவருடைகளான தமிழகத்தின் இந்த பார்ப்பன மேதாவிகளுமடா. உணர்க. இவர்கள் உனது நண்பரல்ல. ஆன்மீகப் பேரொளிகள் அல்ல.
உனது இனத்தை அழிக்கத்துடிக்கும் எதிரிகள். ஈழத்துப் பிராமணர் இவர்களில் இருந்து வேறுபட்டு சைவ வாழ்வை தமிழோடு நுகர்பவர்கள். ஆனால் இன்று கொழும்பில் சிலர் பிறழ்வடைந்து பெரியபெரிய பதவிகளையெல்லாம் அனுசரித்து, உயர்தானங்களைப் பெற்று இன்று ஈழத்து பிராமணக் குழந்தையை சுமார்த்தபீடமான சங்கரபீடத்துக்கு அனுப்பி குருபட்டம் பெற வழிசமைத்துள்ளனர். இதுவரைகாலமும் சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனமே ஈழத்து பிராமணக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வந்தனர். ஆனால் இன்று திடிர் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளைய பிராமண சமுதாயத்தை தமிழர் என்ற வட்டத்துக்குள் இருந்து (தமிழகத்தில் நடந்ததுபோல்) அகற்றவேண்டும் என்ற பேராசையா இவர்களின் செயலின் நோக்கம்?
பிராமண சமூதாயத்திடம் சிவத்தமிழோன் மன்றாடுவது உங்கள் பிள்ளைகளை சைவ ஆதீனங்களுக்கு அனுப்பிவையுங்கள் குருபட்டம் படிப்பதற்கு. இலவசம்...........சலுகைகள்.......என்பவற்றுக்கு மயங்கி தமிழின விரோத சுமார்த்த பீடங்களுக்கு மறந்தும் அனுப்பிவைத்து சிவத்துரோகம் செய்யாதீர். திருஞான சம்பந்தர் போன்ற சைவக்கொழுந்துகளே உங்கள் வீடுகளில் பூக்கவேண்டும்.இல்லையேல் தமிழன்னை நாளை மன்னிக்காது. மறவாதீர்.

சமயத் தலைவர்களே, நீங்கள் நித்திரையிலா உள்ளீகள்? கொதிக்கும் கோபத்தை என் நெஞ்சு சுமக்கின்றது உங்களின் அறிவற்ற ..........கொழும்பின் சுமார்த்த பணத்திற்கு கைப்பிள்ளையாக நடக்கும் போக்கால். தமிழரின் தேசியமான சைவம் அழிக்கப்படுவது உங்கள் கனவா? திருந்துங்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பர். எழுதுகிறேன்.................எழுதுகிறேன்.......விழிப்புணர்வு கொண்ட தமிழினம் உருவாகும் என்ற நம்பிக்கையில். நீங்கள் விழித்து தீர்ப்பு வழங்கினால் சுமார்த்த ஆரியச் சதி ஒரு தூசி மாதிரிபோய்விடும்.
மேலும் படிக்க...

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்" கருத்தைக் கேட்டு அவரது facebookதளத்தில் சிறுகுறிப்புப் பகுதியில்(note) குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


அன்பர் தமிழ் சமூகத்தில் கொண்டுள்ள தீராத பற்றால் எளியேன் கவரப்பட்டிருந்ததால் உருவான அன்புப் பிணைப்பும் எளியேனின் நண்பராதலால் ஏற்பட்ட உரிமையோடும் சைவப் பிரசையாதாலால் எளியேனுக்கு விதிக்கப்பட்ட கடமையின் நிமித்தமும் அன்பருடைய சிறுகுறிப்பில் பல துண்டுகளாக எளியேன் எழுதிய பின்னூட்டங்களைத் தொகுத்து சிறு திருத்தங்களோடு இங்கு பிரசுரம் செய்கின்றேன். அன்பர் என்னிடம் இதுபற்றி முழுமையாக விபரித்து எழுதும்படி வேண்டினார். எனினும் பல்கலைக்கழக கல்விச்சுமை எளியேனை வாட்டி வதைப்பதால் எழுதுவதற்கு போதிய அவகாசம் இன்னும் கிட்டவில்லை. எனவே அன்பரின் சிறுகுறிப்புப் பகுதியில் எழுதியவற்றையே தொகுத்து இங்கு பிரசுரம் செய்ய வேண்டியதாயிற்று.


இந்துவைப் பற்றி சிகல உறுமய சொன்னதில் என்ன தவறு?
கலைஞர் கருணாநிதி( தமிழரின் சொத்தான சைவம் இந்து எனும் ஆரியத்தால் அபகரிக்கப்படுவது தெரியாத நாத்தீக வித்தகர். இந்துவை எதிர்க்கிறேன் சைவத்தை மறந்த அரசியல் மேதை) மட்டுமல்ல சைவ புலவர்கள் சைவ ஆதீனங்கள் எல்லாமே அதைத்தானே சொல்லுகின்றனர்.

சிங்கள சிறீயைத் தமிழன் எதிர்ப்பது நியாயம் ஆனால் ஆரிய இந்துவை தமிழன் ஏற்பது முறை! என்ன நியாயம் இது?

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர்.சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்றார் திருமூலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? தமிழ் வாழப் போராட்டம் தமிழ் வரலாறு வாழப் போராட்டம் என்று நம் முன்னோர்கள் விட்டதவறால் நாம் இன்று தவிப்பது அதுபோல்த்தான் இன்று இந்துவுக்கு அனுமதி அளித்தால் நாளை சைவத்துக்காய் போராடவேண்டி இருக்கும்.

இந்து எனப்து ஆரியம் சைவத்தை அழிக்க உருவாக்கிய கலப்படச் சமயம். அப்படியே சங்கராச்சாரியாரின் சுமார்த்த மதத்தை copyபண்ணி உருவாக்கப்பட்ட மதம். அங்கு சைவத்திற்கு வேலையேயில்லை. சுவாமி விவேகானாந்தர் அமெரிக்கா மாநாட்டில் இந்து என்ற பெயரை பயன்படுத்தியதால் ஏற்பட்டவிளைவுதான் இந்துவும் இந்துவோடு கூடி சுமார்த்தமும் பிரபல்யமடைய ஏதுவாயிற்று.

சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்திருந்தவேளை அவரை மகிழ்விக்கும் பொருட்டு அடிக்கடி இந்து என்ற சொல்லை பலர்பயன்படுத்தியபோது இலங்கையின் சைவச் சிறப்புத் தன்மையை கண்டு "இந்து என்ற பெயருக்குப்பதில் சைவன் என்றே கூறவேண்டும்" (உதயன் 07.09.98)என்று சுவாமிகள் கூறியது எப்படி மறந்துபோனது சில புத்திஜிவிகளுக்கு?

சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் கப்பலில் பயணம் செய்தபோது அவரைச் சந்தித்த அமெரிக்கர் "தாங்கள் இந்துவா?" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள் .நாங்கள் சைவர்கள்" என்று மறுத்துக்கூறியிருந்தார். திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் இன்றும் சாட்சியாய் அவர் கருத்து பதியப்பட்டுள்ளது. அன்று விவேகானந்தர் ஈட்டிய வெற்றிவாகையை கொண்டாடும் காலகட்டத்தில் மலர்ந்த கல்லூரிகளும் பத்திரிக்கைகளும் இந்து என்ற பெயரைத் தாங்கத் தொடங்கின. ஆனால் அவை இம்மியளவும் இந்து என்ற பெயர்மூலம் ஆரியச் சதிக்கு இடமளிக்கவில்லை.

ஆனால் இன்று? அஞ்சனேயர் வழிபாடு. சாயி வழிபாடு, கல்கி வழிபாடு, கண்டபாட்டுக்கு தேரோட்டம் அப்பப்பா எத்தனை கலவைகள்! இக்கலவைச் சமயத்தால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானது. கலைஞர் கருணாநிதிகூட இதே கேள்வியைக் கேட்டதோடு இந்து என்றால் கள்ளர் என்றும் கூறியிருந்தார். சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களிடம்(திராவிடர் எனப்து ஆராய்சித்துணிபு) வெறுப்புக்கொண்ட பாரசீகர் கிந்து என்றால் கள்ளர் என்று பொருள் கொண்டனர். ஆங்கிலேயர் இந்தியா என்று பெயர் சூட்டியதும் ஆரியர் இந்தியாவில் தோன்றிய சமயங்களை இணைத்து ஆரிய சமயத்தை வளர்க்க சுமார்த்த மதத்தை தெரிவு செய்தனர்.( சங்கராச் சாரியாரால் உருவாக்கப்பட்டது. சிவன் முழுமுதற்கடவுள் அல்ல. பிரம்மம் தான் கடவுள் என்ற கொள்கை. பிரம்மம் சிவனாகவும் விஷ்ணுவாகவும் சக்தியாகவும் தோற்றம் கொள்ளும்)

ஆனால் சுமார்த்தத்தை தமிழர் ஏலவே நிராகரித்துவிட்டதால் அதற்கு புதுப்பெயர் கொடுக்கவிரும்பி இந்து என்ற பாரசீகரின் சொல்லை இட்டனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதம் என்பது பௌத்தம் சமணம் சீக்கியம் உள்ளடக்கியதாகும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பது இலங்கையில் பௌத்தத்திற்கும் உடமையான மன்றமா? சீக்கியமும் சமணமும் இலங்கையில் உண்டா?

சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து என்பது எம்மொழிச் சொல் என்று வாதிட்டு ஆய்வு நடாத்தி அது தமிழுக்கு விரோதமான தமிழ் பண்பாட்டிற்கு விரோதமான தமிழர் சமயமான சைவத்தை அழித்து ஆரிய வைதீக சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஆரியச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் என இனங்கண்டு நிராகரித்து யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி அதன்பெயரை சைவ வாலிபர் மன்றம் என்று 1956களில் மாற்றி புரட்சி செய்ததை இன்று இந்து மாமன்றம்............. இந்துக் கல்லூரி.............( அடியேனும் ஓர் இந்துக் கல்லூரியில்த்தான் கற்றவன்) கொழும்பில் உள்ள இந்து குருமார் பீடம்(யார் தமிழின் மேன்மைகாக்க மாற்றினாலும் இவர்கள் இந்து என்ற ஆரியச் சதியை விட்டுக் கொடுக்க்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள்தான் ஆரியச் சதியின் இலங்கை ஏஐண்டுகள்) இப்படிப்பல சிவபாத சுந்தரனாருக்கும் தமிழருக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் கேட்டை விளைவிக்கின்றனர்.(தெரிந்தும் தெரியாமலும்)

தேவாரங்கள் திருவாசகம் பெரியபுராணம் கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் சைவ ஆகமங்கள் திருமந்திரம் சைவ சித்தாந்த நூற்கள் எவற்றிலுமே இந்து என்னும் பெயர் சமயத்தின் பெயரைத் தாங்கி வந்ததில்லை. தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரியும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள் வழங்கி சிரிக்கும்.
சைவம் என்பது தொன்று தொட்டு சிவனோடு சம்பந்தமானது எனும் பொருளில் விளங்கிவருவது. சுத்தத் தமிழ்ப் பெயர். சிங்கள சிறிக்கு எதிராகப் போராடிய எம்மவ்ர்கள் ஆரிய சதிக்கு வரவழைக்கப்பட்ட பாரசீகச் சொல்லான இந்துவை முத்தமிடுவது வெட்கக் கேடானது!

"சிவனெனும் ஓசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்கிறார் அப்பரடிகள்.சிவன் என்னும் ஓசைக்கல்லது மற்றெவ்வோசைக்காயினும் திருநின்ற செம்மையுள்ளதா? சபதம் பிடிக்கவா? எனப்து அதன் பொருள்.
சட்டத்தரணிகள் எமது சமயத்தை தலைமைதாங்கும் இக்காலத்தில் அவர்களுக்கு அப்பரடிகள் பாடிய இப்பாடலின் பொருள் எப்படித் தெரியவரும்? சிவன் எனும் ஓசையோடு கூடியது சைவம் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?.

இந்து என்ற கலப்பட ஆரியச் சதியைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் சமயமான சைவத்தை வளர்ப்போம்.

மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்று வினாவினார் தாமோதரம்பிள்ளையார். மொழியோடு சமயமும் சமயத்தோடு மொழியுமாக இரண்டறக்கலந்து விளங்குவது சைவமும் தமிழும்.
தமிழராகிய நாங்கள் பண்டைய காலந்தொட்டு சைவத்தை அழித்து சுமார்த்தத்தை பரப்பத்துடிக்கும் ஆரியச் சதியை எப்படியெல்லாம் வென்று வந்தோமோ அந்த வரலாறுகளை மறக்காது எமது இளைய சமுதாயத்தை ஆரியத்திடம் கொடுத்து ஏமாந்து தமிழால் சபிக்கப்படாது விழிப்புக் கொள்வோம்.

பிற்குறிப்பு:- facebookகுழுமங்கள் தொட்டு பல்வேறுபட்ட இணையத்தளங்கள்வரை எளியேன் வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் தமது கல்லூரி பெயரை வலிய இந்து மகளீர் கல்லூரி என்று எழுதுவது காணும்போது கண்களில் குருதிவழிகிறது. கொழும்பில் சைவம் எனும் பெயரோடு இருக்கும் ஓரே ஒரு கல்லூரி சைவ மங்கையர் கல்லூரி. குறித்த கல்லூரி மாணவிகள் இந்து எனும் சொல்லில் மயங்கி கல்லூரி பெயரையே மாற்றியமை வருந்தவைக்கின்றது. சைவம் என்பதன் ஆங்கிலப்பதம் saivismஆதலால் colombo saivism ladies college என்பதே சரியானது.
சைவம் என்ற நல்ல தமிழ் சொல்லை இழந்து இந்து என்ற ஆரிய சதி சொல்லுக்கும் அதனோடு கூடி மறைந்திருக்கின்ற தமிழ்விரோத சதித்திட்டங்களுக்கும் சைவர்களே தமிழர்களே இரையாகிப் போகாதீர்.


பிற்குறிப்பு:-facebookஇல் தமக்கென profileவைத்திருப்பவர்களுக்கும் ஏனைய இணையத்தளத்தில் சமயப் பெயராக இந்து என்று தவறுதலாக பயன்படுத்தும் சைவப் பெருமக்களுக்கும் எளியேன் அன்போடு வேண்டுவது சைவம்/சைவன் saivism/saivite என்று மாற்றி இந்து என்ற ஆரிய தமிழ் விரோத ஆரியச் சதியை தோற்கடிக்க விழிப்புணர்வு கொள்வோம். ////சிறுதுளி பெரு வெள்ளம்//////

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
மேலும் படிக்க...

Tuesday, November 4, 2008

தமிழன் கண்ட முருகன்

எம்.கே.ஈழவேந்தன் ஐயா கந்த சட்டி விரதத்தை முன்னிட்டு எழுதிய "தமிழன் கண்ட முருகன்" எனும் கட்டுரையினை தினக்குரலில் இணையத்தளத்தில் சுவைக்கும் பேறுபெற்றேன். அடியேன் சுவைத்த ஐயாவின் தமிழ்த்தேன் ஒழுகும் குறித்த கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கின்றேன்.

ஐயாவினது கட்டுரையைப் படித்து சுவைக்க அழுத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
நன்றி
மேலும் படிக்க...

Wednesday, October 15, 2008

யுத்தசூழலில் சைவத்தின் இக்கட்டான நிலை

திருமூலரால் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட இலங்கை மண்ணில் ஆரியத்தின் கண்பட்டதா என்னவோ தெரியாது இராமன் வந்தது தொட்டு இன்றுவரை இரத்தந்தான்.

யுத்தத்தின் கோரம் எங்கள் மக்களுக்கு பழக்கப்பட்டதொன்றுதான்.ஆனால் யுத்த சூழ்நிலைகளில் அரசியல்பலம் அரசியல் பாதுகாப்பு போன்ற எக்கவசங்களும் அற்ற எமது சைவநிறுவனங்கள் எந்தவித உரிய ஆக்கபூர்வமான தொண்டுகளை செய்யமுடியாது இடம்பெயர்ந்து அல்லல் படுகின்ற மக்களை கைவிரித்துவிடுவது சைவசமூகத்தின் துரதிட்டமே.

ஆனாலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் உள்ள பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆலயங்கள், ஆலய நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் முன்னின்று இயன்றவரை உதவவேண்டும் எனபது ஒவ்வொரு சைவப்பிரசையினதும் அவா. குறித்த போர்ச்சூழலை சாதகமாக பயன்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுகின்ற அந்நியசக்திகளுக்கு இவ்வாறன சூழல்கள் ஒருவரப்பிரசாதமே. இங்கு நான் அவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. பிறநாட்டு சமயதொண்டுநிறுவனங்களிடம் உள்ள சேவை மனப்பான்மையை கீழ்த்தரப்படுத்தவும் விரும்பவில்லை.ஆனால் அரசியல்பலம் அற்ற சேவைசெய்யமுடியாத எமது சைவநிறுவனங்களின் நிலையால் வருந்தி இதை எழுதுகிறேன்.

கொழும்பில் இந்துமாமன்றம் எனும் திருப்பெயரில் சைவத்தை உரிமைகொண்டாடும் பெருமன்றத்திடம் ஓரளவு அரசியல்பாதுகாப்பு கவசம் இருப்பது ஒப்புக்கொள்ளவேண்டியதொன்று.அவர்கள் ஆழிப்பேரலையால் வாடிய மக்களுக்கு ஆற்றிய சேவையை அருகில் இருந்து கண்டு மனம் குளிர்ந்தவர்களில் நானும் ஒருவன். எனவே இடம்பெயர்ந்து வாடும் எம்மக்களுக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அவ்மன்றம் விரைந்து செயற்பட சைவப்பிரசைகளின் சார்பில் வேண்டிகிறேன்.

புறநாட்டு சமய தொண்டுநிறுவனங்களிடம் ஒரு தமிழனாய் வேண்டுவது இந்த நேரத்தை மதம்பரப்பும் நேரமாகக் கருதாது தங்களின் உயர்ந்தபட்ச சேவையை எம்மக்களுக்கு மதபேதமின்றி வழக்குக என்பதேயாகும்.

இந்தியாவில் உள்ள சைவநிறுவனங்களிடமும் சைவ ஆதீனங்களிடமும் எங்கள் நாட்டில் உள்ள சமயநிறுவனங்களை தொடர்பு கொள்வதன்மூலமோ (அகில இலங்கை இந்துமாமன்றம்) அன்றி நேரடியாக தொண்டர்களை பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களுக்கு அனுப்புவதன் மூலமாகவோ அன்றி இந்தியத்தூதரகம் ஊடாகவோ தங்கள் தொண்டை எங்கள் மக்களுக்கு உடன்விரைந்து செயற்பட இத்தருணம் சைவப்பிரசைகள் சார்பில் வேண்டுகிறேன்.( பார்பனீய பீடங்களுக்கும் பார்பனீய சமய ஆளுகைக்கு உட்பட்ட சமய நிறுவனங்களுக்கும் இது பயனற்ற வேண்டுதல் என்பதை அறிவேன்.)

எமது சிவபூமித் திருநாட்டில் நிரந்தர சமாதானம் மலர எல்லாம் வல்ல கௌரி அம்மை உடனுறையும் திருக்கேதீச்சரத்தானின் திருவருள் பாலிக்கட்டும்

ஐயனே என்
சிவனே
வாடுகின்ற பயிர்
காணின் வாடுவர்
சைவர்-அந்தமேல்
மக்கள் வாழும்
திரு நாட்டில்
குருதியின் கால்வாய்
முறைதானோ?

தமிழான சிவமே
சிவபூமித் திருவே
நாம் வாடுவதை
அறிகிலாயோ ஐயனே

தமிழின் திருவுருவே
சிவமே
தமிழ் படுந்துயர்
தீர்ப்பாய்
அழியா அமைதி
மலர திருவருள்
பொழிவாய்
எங்கள் சிவனே
தமிழ் பரம்பொருளே
மேலும் படிக்க...

Wednesday, October 8, 2008

சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும்

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.

நவராத்திரிக்கு சிறப்பு கட்டுரை எழுதவேண்டும் என்று தோன்றியவுடன் என் சக வலைப்பூ நண்பர்கள் நவராத்திரி விரத மகிமைகளை எழுதி பிரசுரித்துள்ளமையால் என் எழுத்திலேயும் அதே சங்கதியை மீண்டும் எழுதி அலுப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தவிரும்பவில்லை. பரீட்சைகள் காரணமாக நவராத்திரிக்கு உடனடியாக சிறப்புக் கட்டுரைகள் ஏதும் எழுதமுடியா துர்சூழல் அடியேனை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது. மன்னிக்க.


எனினும் பெண் வழிபாடு சைவப் பண்பாட்டிலும் பண்டைய திராவிட சைவ வழிபாட்டு முறைகளிலும் எவ்வாறு உள்ளதென்பதை அடியேனின் அறிவுக்கு எட்டிய அளவு ஆராயவிளையலாம் என நினைக்கின்றேன்.






சிந்துவெளி கரப்பா நாகரீகம் (இன்றைய பாக்கிஸ்தான்) திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்று அறிஞர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராச்சி முடிவுகளும் அவ்வாறே பறைசாற்றியுள்ளன. சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம் இலிங்க வழிபாட்டுடன் பெண் தெய்வ வழிபாடும் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பெண்ணில் இருந்து முளைத்து வளரும் செடி உடைய வழிபாட்டுச் சின்னத்தையும் அவர்கள் அதற்கு ஆதாரமாக வைக்கின்றனர். பண்டைய எமது சிந்துவெளித் திராவிட மக்கள் உலக உயிர்களின் தோற்றத்திற்கு பெண்ணே மூலம் என்பதால், அந்தப் பெண்ணை மதிக்கவும் வணங்கவும் ஆரம்பித்துள்ளனர் . இந்த மக்கள் கூட்டத்திடம் இருந்த பெண்தெய்வ வழிபாடு, சாதரண இலிங்க வழிபாடு என்பன சைவ சித்தாந்தமாக வளர்ச்சிகண்டபோது, பரம்பொருளாகிய சிவனின் சக்தி பெண் என்று சிறப்புப் பெற்றது.


சடம் சிவன். சக்தி உமை. சக்தி இல்லாது சடம் இல்லை. ஆகா என்னே அற்புதம்.........என்னே மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞானம்!சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. அர்த்த நாதீசுவரராய் அறுபத்தி நான்கு சிவ மூர்த்தங்களில் ஒன்றாய் ஆண் பாதி பெண்பாதி என்ற உயர்ந்த தத்துவத்தை சைவம் உலகுக்கு அறிவித்தது. வீரத்திற்கு துர்க்கையாகவும் செல்வத்துக்கு இலக்குமியாகவும் கல்விக்கு சரசுவதியாகவும் பெண்ணை போற்றியது எமது பண்பாடு.


சைவத்தால் அகப்புறச் சமயங்களில் ஒன்றாக வகுக்கப்பட்ட சாக்தவழிபாட்டில் துர்க்கை வழிபாடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று கல்கத்தாவில் இவ் வழிபாட்டுமுறை பெரிதும் பின்பற்றப்படுகின்றது. இவ் வழிபாட்டில் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு போகங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் அகப்புறச் சமயமாக வகுக்கப்பட்டுள்ளது.
சனாதன சைவத்தில் சக்தியானது பெண்ணாக உருவகிக்கப்பட்டு, உமையாக போற்றப்பட்டு பரம்பொருளின் ஒருபாதியாக அர்த்தநாதீசுவரராக உயர்த்தப்பட்டு பெண் வழிபாடு முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.




அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று மணிவாசகத்தால் அம்மையாகவே முதலில் அறியப்படுகின்றான் எம் பிரான். திருஞான சம்பந்தர் குளத்திலே மூழ்கி குளித்த தந்தையைக் காணாது அழுதபோது அம்மையே அப்பா என்று அழுததாக சிறப்பிக்கப்படுகின்றார். குழந்தை முதலில் சொல்வது "அம்மா" என்ற வார்த்தையைத் தான். எனவே அப்படிப்பட்ட அம்மையை சிவத்தோடு ஒருமித்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்கின்ற தத்துவத்தை சனாதன சைவம் உலகுக்கு அறிவிக்கின்றது.திருவிளையாடற் புராணங்களாகட்டும், பெரிய புராண நாயன்மார் வரலாறுகள் ஆகட்டும் இறைவன் இடப வாகனனாய் உமையோடு இணைந்தே எழுந்தருளி அருள் பாலிப்பதை அறியமுடியும். பெண்ணில்லாமல் செய்யும் இல்லறத்தோனின் தானம் செல்லுபடியற்றது என்பர். எனவே இல்லறத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பை வழ்ங்குவதில் சைவநெறி ஆழமான பங்களிப்பை செய்துள்ளது எனபது வெள்ளிடைமலை.

சாதரண அறிவற்றோர், எமது சமய வாழ்வியல் பண்பாடு பெண்களை வீட்டுக்குள் பூட்டி சுதந்திரத்தை பறித்துவிட்டதாக புலம்புவர்.புழுகுவர். உண்மை அதுவல்ல எனபது சமயத்தை ஆழ அறிந்தவர்கள் அறிவர்.

ஈசுடோரோஜோன் ஓமோன் புரோஜோஸ்டோரோன் ஆகிய ஒமோன்கள் பெண்களுக்கும் தெஸ்தெஸ்திரோன் ஒமோன் ஆண்களுக்கும் என்று வகுத்த இறைவன் நிச்சயம் பக்கசார்பானவன் என்று எப்படி அறியப்படமுடியும்? எதிலும் சமநிலை வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்றோர் ஆணின் ஓமோன்கள்களை பெண்களுக்கு(தங்கள் மனைவிமாருக்கு....பிள்ளைகளுக்கு)வழங்குவார்களா என்ன?இயற்கை வகுத்தவிதி இந்த ஓமோன்களின் செயற்பாடு. இயற்கையை உணர்ந்து ஒழுகுவதுதான் வளமான வாழ்கை. இதை உணர்ந்த எங்கள் பண்பாட்டு நெறி, மென்மையான பெண்களிடம் உள்ள சக்தி வன்மை உடையது என்று உணர்ந்து வழிபடத் தொடங்கினர். போற்றத் தொடங்கினர். சம உரிமை வழங்கப்படவிலை என்பது வெளித்தோற்றத்தில் இருந்து சமயத்தை நோக்குபவர்கள் கூறுகிற வதந்தி.பெண்ணிடம் அதிக கடமைகளை சைவம் ஒதுக்கவில்லை எனபதுதான் உண்மை. வீட்டுக்கு அரசியான பெண்ணிடம் இருந்த சுமைகள் ஏராளம். எனவே அவளிடம் சமூக கடமைகளை ஒதுக்கவிரும்பவில்லை.அவ்வளவே.ஆனால் சமூக கடமைகளில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை என்பதை உணர்க. அதனால்தான் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், ஔவையார்( ஔவையார் என்பது காலத்திற்கு காலம் தோன்றிய இலக்கிய பெண்களின் பொதுப்பெயர் என்க.),திலகவதியார் என்று சமூக,சமய பெண்கள் சரித்திரத்தில் தோன்ற முடிந்தது. ஏனைய நெறிகளில் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எமது பண்பாடு வழங்கிய சுதந்திரத்தின் எள்ளளவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும். இன்றுகூட ஐரோப்பாவில் வழங்கப்பட்டுள்ள பெண் சுதந்திரத்தை அவர்களின் சமயப் பண்பாடுகள் ஏற்கவில்லை. அரேபியாவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவதே அருமை.

ஆனால் மனித சுதந்திரத்தை......வழிபாட்டு சுதந்திரத்தை அறிவுறுத்துகிற எமது பண்பாட்டில் "கூடாது" என்று கூறப்படாததால் பெண் சமூகம் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்துள்ளது.

உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறல் என்பது மூடநம்பிக்கை. ஏதோ ஒர் ஊரில் கணவன் மீதுகொண்டிருந்த உயர்ந்த அன்பால் ஆழமான காதலால் உடன்கட்டை ஏறிய பெண்ணைக்கட்ட சிலர் உடன்கட்டை ஏறினாலேயே அவள் உண்மையாக கணவனை நேசித்தாள் என்று அர்த்தம் என்று பிதற்றியிருக்க அது பத்து ஊருக்குச் சென்று ஒரு பழக்கவழக்கமாக உருமாறியிருந்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு அர்த்தமற்ற கீழ்த்தரமான விடயங்களும் சைவத்தால் இம்மியளவும் அரவணைக்கப்பட்டதோ அன்றி அனுமதிக்கப்பட்டதோ அல்ல.


பெண்மையை போற்றுகின்ற எமது பண்பாட்டை மதிப்போம். பெண்ணை போற்றுவோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
மேலும் படிக்க...

Sunday, September 21, 2008

தமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை

அண்மையில் தினக்குரல் இணையத்தளத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களைப் பற்றி அருமையான கட்டுரை வெளியாகிவிருப்பதைக் கண்டு பயன்பெற்றேன்.அதில் தாமோதரம்பிள்ளை அவர்கள் மதம்மாறவேண்டிய சூழ்நிலைக்கு ஊந்தப்பட்டதாக பொருட்பட எழுதப்பட்டுள்ளது. இதில் அடியேன் உடன்பாடு கொள்ளவில்லை.
மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லாத வாழ்வும் ஒர் வாழ்வா என்ற ஒருவர் நிச்சயம் சூழ்நிலைகாரணமாக சைவத்தை தழுவியிருக்கவாய்ப்பேயில்லை. தமிழ் நெறி சைவம் என்றுணர்ந்து தமிழில் ஏற்பட்ட காதல் சைவநெறிவில் பிடிப்பை ஏற்ப்டுத்தியதென்பதே உண்மை.
பணத்திற்கும், பதவிகளுக்கும், சலுகைகளுக்கும்,கல்விக்கும் ஆக கிருத்தவ மதத்தை கட்டாயம் தழுவியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் அவர் சைவ சமயத்தை தழுவ நிர்ப்பந்திக்கப்பட்டார் எனும் பொருளில் எழுதியுள்ளது மதசார்பையே காட்டுகிறது.

குறித்த கட்டுரையின் முதல்பாகத்தில் தாமோதரம்பிள்ளையின் செல்வாக்கினாலேயே அவர் மாமனார் மீண்டும் சைவத்தை தழுவிக்கொண்டார் என்று எழுதப்பட்டுள்ளது. விருப்பமில்லாது கட்டாயத்தில் சைவத்தை தழுவிய ஒருவர் தனது மாமனாரை சைவத்தை தழுவும் படி எப்படித் தூண்டுவார் என்ற வினா தொங்கிநிற்பதை கட்டுரையாளர் விளக்கவேண்டும்.
நாத்தீகமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆத்திகத்தை இறுதியில் தழுவியது ஏதேனும் கட்டாயத்திலா? சுவாமி தந்திரதேவா எனும் அமெரிக்கர் சைவத்தைத் தழுவி துறவியாகி இலங்கை வந்து யுத்த சூழ்நிலையிலும் தொண்டே சிவம் என்று வாழ்ந்தது ஏதேனும் கட்டாயத்திலா?சைவ சமயத்திடம் பணம், அரசியல் பலம் எதுவும் இல்லை.அதுவும் பிரித்தானியர் காலத்தில் இருந்திருப்பதாய் சொல்வது புழுகு.
ஆபிரிக்கா கவிஞன் " நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது. இன்று எங்கள் கைகளில் பைபிளும் உங்கள் கைகளில் எங்கள் நாடும் உள்ளது" என்று ஆதங்கத்தில் கவிவரைந்தான்.இப்படியே போனால் தமிழ் சமூகமும் இப்படித்தான் ஆகும் என்று அறிந்து தமிழ்மீது ஏற்பட்ட காதலால் சைவத்தையும் அதன் மேன்மையையும் உணர்ந்து சைவத்தை தழுவிய சி.வை தாமோதரம்பிள்ளையவர்களை சாதிகாரணமாகவே மதம்மாறியதாக எழுதியது பாரியதவறாகும்.
தமிழ் ஏடுகளை பெறுவதற்காக அவர் சைவநெறியை தழுவவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார் என்பது சோடிக்கப்பட்ட பொய். வீரமாமுனிவர் எனும் கிருத்தவபாதிரியாரும், ஜி.யு.போப்பும் சிரமங்களை தாம் சார்ந்திருந்த மதம் காரணமாக அனுபவித்தார்களா? அதற்காக சைவத்தை தழுவினார்களா என்ன? ஜேர்மனியில் எத்தனையோ ஆயிரம் நமது ஏடுகள் இருப்பதாக பத்திரிக்கையில் படித்து அறிந்ததுண்டு. அவ்வேடுகளை சைவநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு பாதிரிமார்கள் எல்லாம் மதம் மாறினார்களா என்ன?மேலும் சைவ நிறுவனங்களிடம் (ஆதினங்கள்) சமயம் சார்ந்த தமிழ் நூல்களே பெரிதும் பாதுகாக்கப்பட்டு கிடந்தன. எனவே கட்டுரையில் இது ஒரு வர்ணம் பூசப்பட்ட பொய் என்பது தெளிவு.
அருமையான கட்டுரையில் மதசார்புக் காழ்ப்புணர்ச்சி வந்திருக்கவே கூடாது. மதசார்போடு எழுதி " மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லா வாழ்வும் வாழ்வா என்று உணர்வோடு உரைத்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் வாழ்க்கையை சாதி-மத பந்தங்காட்டி கட்டுரைக்கு கலங்கம் ஏற்படுத்தியது எவ்வளவு தவறு என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

குறித்த கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.


மேலும் படிக்க...

Monday, August 25, 2008

புராணங்கள் கட்டுக்கதையா? (சேது சேதுபடமொக்க சோகத்தை ஊட்டாதா?)

விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.

அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் மதுக்குடி மன்னர்கள் விவகாரத்துக் கோரும் தம்பதிகள் என்று கொட்டிக்கிடப்பது எங்கள் கிராமத்து ஏழைக்கு தெரியவர வாய்ப்பேயில்லை. எனவே இந்தசூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி "இங்கே பார் உன் வீட்டில் எவ்வளவு பிரச்சினை, அங்கு ஒரு பிரச்சினைகளும் இல்லை.அது சொர்க்கபுரி, இங்கே இருந்தால நரகந்தான் விளையும். " என்று தமது வாய்வண்ணத்தைக் காட்டுகின்றனர். பண வண்ணத்தோடுதான்!

இராமபாலம் உண்டு என்கின்றனர் ஒருசாரார். மிதக்கும் கல்லை காட்டுகின்றனர் அதாரமாக. இல்லை என்கின்றனர் மறுசாரார்.

"உண்டு என்று நம்பும் மக்களின் நம்பிக்கையில் ஏன் மண்ணள்ளிப்போட வேண்டுமென்று?" இன உணர்வாளர், இயக்குனர், நடிகர் விஜய ராஜேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகின்றார்.






இதே கிருத்தவர்களோ இசுலாமியரோ உண்டு என்று நம்பியிருந்தால் விளைவு என்ன என்று சில பொதுசனம் முணுமுணுக்கின்றனர். இராமன் இருந்தானா இல்லையா என்பது தேவையற்றது என்னைப்பொருத்தவரையில்.



ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.


புராணங்கள் பற்றி சைவருக்கு ஆறுமுகநாவலர் எடுத்துரைத்துள்ளார். எனவே இதுபற்றி குழம்பத்தேவையில்லை. சைவ வினாவிடையில் இதோ அவர் திருவாக்கு;



திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?

திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு"

என்று வள்ளுவன் வலியுறுத்துவதும் இதையே. அதாவது எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். எனவே புராணங்கள் நடந்ததா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். அது சொல்லும் பொருளை அறிந்து வாழ்வியலை வளப்படுத்துவதே அறிவுடமையாகும்.

அவதானத்திற்கு:- இங்கு நாவலர் "திருமுறைகளில்" என்று வரையறுப்பதை மறக்கலாகாது. சிவாகமத்திற்கு ஒவ்வாதவைபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் சேது சமுத்திர விடயத்தில் நாம் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும். அது யாழ்ப்பாணத்திற்கு இதனால் கேடு விளையுமா இல்லையா என்பதிலேயே! யாழ் நீர்வளம் அழிவடையும், தீவுகள் மூழ்கலாம் என்றெல்லாம் கருத்துகள்.......ஆய்வறிக்கைகள் கூறிக்கொண்டுள்ளன. அடியேனும் சாதரண பொதுமகனாய் குழப்பத்தில்தான் உள்ளேன்.

கண் கெட்டபின் சூரியவணக்கம் போல் யாழ் நீர்வளத்தை இழந்தபின் எதுவும் செய்யமுடியாது. தமிழகம் கன்னடத்திடமும் கேரளத்திடமும் நீருக்காய் கைகட்டி நிற்பதுபோல் தயவு செய்து எங்களையும் எதிரிகளிடம் நீறுக்காய் கைகட்டி நிற்கவைத்திட வேண்டாம் என்பதுவே என் ஆதங்கவேண்டுகோள். வல்லுனர்களே சிந்தித்து செயற்படுக. பண முதலைக்கு மூளையை விலைவைத்து ஈழத்தமிழரை நீருக்கு நாதியற்ற இனமாக மாற்றாமல் இருந்தால் சரி.

மேலும் படிக்க...

Friday, August 22, 2008

பெரியாரும் விவேகானந்தரும்

சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது என்னத்தை சொன்னாலும் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அண்மையில் என் உள்ள ஆதங்கத்தை அறிந்த எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் ஜீலை 2008 ஆடி என்று திகதி இடப்பட்ட ஸ்ரி ராமகிருஷ்ண் விஜயம் புத்தகத்தில் "திராவிட வேர்கள் வியந்த விவேகானந்தர்" என்ற தலைப்பில்அருமையான விளக்கக்கட்டுரை பிரசுரமாகியிருப்பது கண்டேன்.

சுவாமி விவேகானந்தரால் தமிழ்ச் சைவத்திற்கு தனிச் சிறப்பு பெரிதாக அமையாவிட்டாலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட வேதநெறி மறுமலர்ச்சியை மறைப்பது தூற்றுவது சைவத்திற்கு அழகல்ல.
மிசனின் தொண்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால் தனிப்பெரும் முதலாகிய தமிழரின் சிவ வழிபாட்டை பேணும் போது மிசனும் விவேகானந்தரும் சைவ உலகின் வாசலோடு சரி. அதை நினைவில் கவனமோடு கொள்ளவேண்டியது அவசியம். ஆறுமுகநாவலரின் மீள் பிரதிட்டை செய்யப்பட்ட சைவவழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாது மிசனையும் விவேகானந்தரையும் கருத்தில் எடுக்கவேண்டும்.

கொழும்பில் வளர்ந்த காலப்பகுதியில் கொழும்பு இராமகிருசுண மிசனின்( மடம்) ஆன்மீக தொடர்பை பேணும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். எனினும் ராமகிருசுணரும் சாரதா அன்னையும் குருவாகக் கொண்டதோடு சரி. வாழ்கையில் அவர்களை ஆசான்களாய் ஏற்று அறிதல் சைவவாழ்வுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்று கருதினேன். ஆனாலும் கடவுளாக காட்டுவதும், மட சுவாமிகள் திருநீறு அணிதலையே தவிர்க்கவிரும்புவதும் ஏற்க இயலாதவை. ராம வழிபாட்டையும் கிருசுணர் வழிபாட்டையும் சிறுவரிடம் தூண்டுவதும் மனதை சங்கடப்பட செய்பவை. எப்படி சாயிபாபா, அம்மா பகவான் என்று தனிப்பெரும் தமிழர் வழிபாடு ஆகிய சைவ வழிபாடு சிதைக்கப்படுகின்றதோ அதுபோல்த்தான் இராமகிருசுணமிசனின் சில நடைமுறைகளும் அமைந்துள்ளன.
இங்கு, ஈழச் சைவ சமூகம் விழிப்படைந்தால் தானாகவே இராமகிருசுண மிசன் ஈழத்தில் சைவ அனுகுமுறைக்குள் வந்துவிடும் என்று நம்புகிறேன்.சைவ வழிபாட்டை பேணும் தொண்டு நோக்குடைய துறவிகளின் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு உருவானால் மிசனின் சைவ குந்தகக் கருத்துகள் தானாக மறைய வாய்ப்புண்டு.
இராமகிருசுண மிசனில் அவர்களுடைய கருத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் எதனையும் புகுத்த அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் ஆறுமுகநாவலரை வெறும் வாய்க்கு கூறிவிட்டு அவர் முதுகெலும்பையே உடைக்கும் சிலரின் செயற்பாடுகள்தான் சைவத்தின் மேன்மையை மங்கச்செய்யும் மிசனின் சில செயற்பாடுகளுக்கு காரணம் என்பதே என் கருத்து. பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் .......!!!



இன்ன இன்ன தேவையற்றது எங்கள் நாட்டில் என்று வரையறுத்திருந்தால் மடமும் உடன்பட்டிருக்கவேண்டியது நிர்பந்தமாயிருக்கும்.
ஆகவே திருநெறித் தமிழர்களே, உயர் சைவ வழிபாட்டை பேணுவோம். மறைநெறி வளர்த்தவர்களை ஆதரிப்போம். சைவ வீட்டில் சிவ தீட்சை அல்லாதோரை வாசலோடு நிறுத்திடுவோம். வாசலுக்கு வெளியே அவர்களின் மறை தொண்டு தூற்றப்படுவதை அனுமதியாது செயலாற்றுவோம்.
"வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க" என்று சிவத்தமிழ் வாழ்வை மேற்கொள்வோம்.

குறித்த அந்தக் கட்டுரையை இங்கு அப்படியே தருகின்றேன். வாசிக்க. தெளிவு பெறுக. பெரியார்(ராமசாமி) போற்றியதான பிரசுரம் இங்கு. பெரியார் தூற்றியதாய் பிரசுரம் அங்கு http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_19.html .
பெரியாரின் சாதி எதிர்ப்பு தோல்வி கண்டபோது மத எதிர்ப்பாகிகொண்டார். அதன் விளைவு போற்றியோர் எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு தூற்றினார்.
சாதி எதிர்ப்பிலேயே ஆழமாய் நின்றிருந்திருந்தால் ஒருவேளை தமிழகத்தில் சாதியையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால் மத எதிர்ப்பாக்கி அதில் சாதி எதிர்ப்பை இழகவிட்டுவிட்டார். விளைவு சாதியின் பேரில்தான் பள்ளிப்படிபென்று ஆகிவிட்டது. பார்ப்பனர் என்பது ஒரு சாதிக்கட்டமைப்பாக கண்ட பெரியார், தமிழரில் ஆயிரம் சாதிகள் இருப்பதை மறந்தது துன்பகரமானதே.



பெரியாரின் சாதி எதிர்ப்பை பார்ப்பனர் எனும் சிறு வட்டத்துகுள் நில்லாது ஒட்டுமொத்த சாதி எதிர்பாக வளர்த்து சாதியில்லா சமூகத்திற்காய் உழைப்போம். மத எதிர்ப்பு பெரியாரின் பிராமண எதிர்ப்பில் ஏற்பட்ட தோல்வியால் உருவானதென்று உணர்ந்து,சாதி இல்லா வேதநெறியை அவரின் புண்ணிய ஆன்மா மகிழ உருவாக்குவோம்.


இதோ குறித்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு



விவேகானந்தர் இல்லம் தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினையைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார்,அண்ணா ஆகியோரின் கருத்துகளைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ளவேண்டும்?"

சுவாமி விவேகானந்தரிடம் விரோதம் பாராட்ட வேண்டியதில்லை எனும் கருத்து வரவேற்கத்தக்கதே.ஆனால் பெரியார் மற்றும் அண்ணாவின் பெரும்பகுதி கருத்துகளை எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்று தலைகீழாக மாற்றிக் கூறியது, காலக்கணிப்பு வழுவுடையது.
சுவாமிஜி சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக முன்மொழிந்த கருத்துகளை பெரியார்,அண்ணா அவரவர்கள் பாணியில் வழிமொழிந்தனர் என்பதே சரியானது.
திராவிட இயக்கத்தின் முன்னோடி இதழ்களுள் ஒன்றாகப் புகழ்பெற்ற "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கில நாளேடு சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக-சமுதாய ஆளுமையை பெரியார்-அண்ணாவிற்கு முன்பாகவே புனைந்துரையோ,பிறழ்ச்சியுரையோ இன்றி நட்புறவுடன் போற்றியுள்ளது.
26.2.1917-இல் சென்னையில் இருந்து "ஜஸ்டிஸ்" இதழ்வெளிவந்தது.அரசியல் பார்வையில் பாரதியார் "ஜஸ்டிஸ்" இதழை "ஸ்வதேச விரோதிகளின் முக்கியக் கருவி" என்று ஒருமுறை குறிப்பிட்டார். "ஜஸ்டிஸ்" இதழின் ஆசிரியராக ஆற்காடு ராமசாமி முதலியார் 1927-இல் பணியாற்றினார். புகழ் பூத்த அரசியல் தலைவராக அவர் ஆற்றியுள்ள பணி தனி ஆய்விற்கு உரியது. அவரும், லட்சுமணசாமி முதலியாரும் ஆற்காடு இரட்டையர்கள் என்று போற்றப்பட்டனர். இருவருமே சுவாமி விவேகானந்தரைப் போற்றி மகிழ்ந்தவர்கள்.
"ஜஸ்டிஸ்" இதழின் தலையங்கங்களில், சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகள்,உரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்தாண்டதோடு,சரியான மதிப்பீடுகளையும் செய்தார்.
பிராமணிய எதிர்பானது, சமய எதிர்ப்பாக, ஆத்திக எதிர்ப்பாக மாற்றப்படாமல் இருந்த சூழலில் ராமசாமி முதலியாரின், பிராமணர் அல்லாதார் இயக்கப் பணி அமைந்தது.அவர் தம்மை தூய வைணவராக அடையாளம் காட்டிக் கொண்டவர்.
"புரோகிதத்துவ எதிர்ப்பு இயக்கம்", "காத்தியும் வர்ணாச்ரம தர்மமும்" எனும் இரண்டு தலையங்களை விரிவாக எடுத்தாண்டுள்ளார். அவரது சொற்றொடர்களைத் தன்மயமாக்கிக் கொண்டும் எழுதியுள்ளார்,ராமசாமி முதலியார்.
"வேதாந்தவிற்பனரான சுவாமி விவேகானந்தர், புரோகிதர் தலையீடுகளை உறுதியாகவும், நேர்மையாகவும் கண்டித்துள்ளார்" என்று தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தலையங்கத்தில் சுவாமிஜியின் "வேதாந்தமும் தனியுரிமையும்" எனும் அற்புதமான உரை(1896) மிகவிரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. தனியுரிமையை எதிர்த்து போராட வேதாந்தம் உறுதுணையாக நிற்கின்றது என்பதை மிகத்தெளிவாக சுவாமிஜி விளக்கியுள்ளார்.
சுவாமிஜி , 1896-இல் லண்டனில் 'தனியுரிமை"எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, ராமசாமி முதலியாரை ஆட்கொண்டது. இந்த உரையி ஒருபகுதியை தலையங்கத்தில் வழங்கிவிட்டு, ராமசாமி முதலியார் சுவாமி விவேகானந்தரை "ஜீவன் முக்தர்" என்று ஏற்றிப் போற்றியுள்ளார்.
"சுவாமிஜிவின் சொற்கள் உன்னதமான ஆன்மா எழுச்சியை தரவல்லன; புனிதன் மிக்க ஒரு ஜீவன் முக்தரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டச்சொற்கள்" என்று வர்ணித்தார்.
".......நீங்கள் உடல்பலமோ,அறிவுபலமோ அதிகமாகப் பெற்றுள்ளதால் என்னைவிட உங்களுக்கு உரிமை அதிகம் இருக்கக்கூடாது.பொருள் அதிகமாக இருப்பதால் நீங்கள் என்னைவிடப் பெரியவர் என்ற நினைப்பும் உங்களுக்கு வரக்கூடாது.ஏனெனில் இந்தப் பேதங்களையெல்லாம் கடந்து நமக்குள் ஓர் ஒருமை விள்ங்குகிறது.".சுவாமிஜியின் இந்த உரை தலையங்கத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தரை அருமையான ஆங்கிலத்தில் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்துள்ளார் ராமசாமி முதலியார்.


Swami Vivekananda did not care if in his remarks he offended the sentiments and susceptiblities of any section of the people.He poured out his heart to them, told his audience in burning words of eloquence and true faith where they were lacking, showed them their weak points, refused to palliate the crimes against society committed by any section, and gave them lessions which must have gone home to their inmost hearts.

Yet there was no vulgar abuse, no ringing denunciations, no violent language. The grace of the savants, the sharpness of the zeolot, and the sincerity of one of the noblest souls in India combined to add to the divinity of his message.


"சுவாமி விவேகானந்தர், எங்கே தமது கருத்துகள் பிறரது உணர்ச்சியைப் புண்படுத்தி, குறைகளைச் சுட்டிக்காட்டிவிடுமோ என்று கவலைப்பட்டதில்லை.அனல் கக்கும் எழுச்சிமிகு சொற்களாலும், உண்மையான நம்பிக்கையுடனும் தன் உள்ளத்தைத் திறந்து காட்டி அவர்களின் குறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
"சமுதாயத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும்,தீமைகள் செய்தாலும் , சுவாமிஜி புகட்டிய பாடம் அவர்கள் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
"ஆனாலும், தரக்குறைவாகச் சாடுவதோ, வீண் கண்டனமோ, வன்சொல்லோ அவரிடம் அறவே இல்லை.ஞானிகளின் கருணை , ஆர்வம் உடையவரின் கூர்மை,இந்தியாவின் ஒரு உயரிய ஆன்மாவின் நேர்மை இவற்றுடன் தெய்விகமும் கலந்தது அல்லவா இவரது ஒவ்வொரு செய்தியும் ஆகும்!"
இவ்வாறு சொல்லொவியம் தீட்டினார் ராமசாமி முதலியார்.கல்விப் புரட்சி தொடர்பான மற்றும் சுவாமிஜியின் பாமர மக்கள் முன்னேற்றக் கருத்துகள் ராமசாமி முதலியாரைக் கவர்ந்தன.
தொடர்ந்து ஜஸ்டிஸ் ஆசிரியர் சுவாமிஜிக்குப் பின்வறுமாறு புகழ்மாலை சூட்டினார்.
"ஆற்றல் மிக்க அறிவினர், தூய்மையான சமூக சீர்திருத்தவாதி, புனித ஆத்மா,அவரது இயலபான பணியின் ஓர் அம்சமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு மக்களினுடையே சமத்துவப் பாடங்களைப் போதித்தார்."
இவ்வாறு திராவிடப் பாரம்பரியத்தின் அடிவேர்களே விவேகானந்தரைக் கண்டு வியந்த வரலாற்றை எல்லோரும் அறிந்திட வேண்டும்.




பி.கு- திரும்பத்திரும்ப கேட்கிறேன்..............தயவுடன் வேண்டுகிறேன்..........பெரியாரின் அடிப்படை கொள்கையை நடைமுறைப் படுத்துவதே முதன்மையானது. அதை செயற்படுத்துங்கள்.

கவனத்திற்கு
எனது unicode எழுத்துமுறையில் உள்ள குறைபாட்டால் sri ஒலிக்குரிய சரியான கிரகந்த எழுத்தை எழுதமுடியவில்லை. அதனால் இராமகிருசுண மடத்தின் பெயரில் வரும் sriயை திருத்தமாக எழுதமுடியவில்லை. மன்னிக்க. ராமகிருஷ்ண என்பதை ராமகிருசுண என்றே எழுதியுள்ளேன். கிரகந்தத்தை இயன்றவரை தவிர்க்கும் பொருட்டு.
மேலும் படிக்க...

Monday, August 18, 2008

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதை






அகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில் அவற்றைக் கோர்த்து தன்னுடைய தோளிலே சுமந்தவாறு தென் திசையை நோக்கிப்புறப்பட்டான்.நீண்ட நடையால் களைப்புற்ற இடும்பன் சிறிதுநேரம் இளைப்பாற எண்ணி காவுதடியை இறக்கிவைத்தான். சற்றுநேரம் இளைப்பாறிய இடும்பன், மீண்டும் புறப்பட ஆய்த்தமாகி காவுதடியை மீண்டும் தூக்கமுயன்றபோது மலைகள் அசையவில்லை. காவுதடியும் மலைகளும் இம்மியளவும் அசையாததால் வெறுப்புற்று நின்றபோது அங்கு ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். இவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணி கோபங்கொண்டு போர் தொடுத்தான் அந்தச் சிறுவனோடு. போரின் இறுதியில் தோற்றுவீழ்ந்தான். இவற்றை அறிந்துகொண்ட அகத்தியர் உடனே விரைந்து வந்தார். வந்து நிற்கின்ற சிறுவன் முருகன் என்று உணர்ந்து வணங்கினார்.அன்று தொட்டு முருகனுக்கு காவுதடி தூக்கும் வழக்கம் உருவாயிற்று. காவுதடி காவடியாகவும் மருவிற்று.

நந்தி



சிலாதர் எனும் சிவனடியார் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்துவதால் வருந்திய இறைவன் பிளைப்பேறுக்கு வரம் அருளினார். அதன் பலனாக எட்டு வயது ஆயுளுடைய நந்தி பிறந்தார். தனது ஆயுளை அறிந்துகொண்ட நந்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்து கயிலைக்கு காவலனாகும் பேறடைந்தார்.உருத்திர கணங்களின் தலைவராகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார். இறைவனே முன்னின்று நடத்தும் திருமணப்பேறையும் பெற்றுக்கொண்டார். அதிகார நந்தி எனும் சிறப்புப்பெயருக்கு உரியவரானார்.
நந்தியின் வகைகள்
ஆகம விதிமுறைக்கமைந்த சிவாலயங்களில் இருக்கக்கூடிய அதிகூடிய நந்திகளின் எண்ணிக்கை ஐந்து என்று முன்னமே கூறியிருந்தேன்.அவைபற்றி இங்கு பார்ப்போம்.போக நந்தி,பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்(விடை)நந்தி,தரும நந்தி என்பனவே அவ்வைந்துமாகும்.

ஒருமுறை போகங்களின் பதியாகிய இந்திரன் சிவபெருமானுக்கு நந்தியாக வந்து வாகனமாக பக்திசெலுத்தினான். அதனால் அந்த நந்தியை போகநந்தி என்பர்.இதனை கோயிலுக்கு வெளியே காணலாம். இது போகங்களைத் துறந்து அதாவது ஆலயத்திற்கு வரும்போது சுக துக்கங்களைத் துறந்து வரும்படி குறித்துநிற்கின்றது.

பிரம்மதேவன் தனது படைக்கும் தொழிலை மேற்கொள்ளமுதல் சிவபெருமானிடம் சென்று உபதேசம் பெற்றார். அப்போது நந்தியாகமாறி இறைவனைத் தாங்கி நின்றார். இதனால் இந்த நந்தியை பிரம்மநந்தி என்பர்.பிரகார மண்டபத்தில் சுதையால் செதுக்கப்பட்டு காணப்படும்.

ஆன்மநந்தி என்பது கொடிமரத்துக்கு அருகில் மூலமூர்த்தியை நோக்கியவாறு காணப்படும். ஆன்மாக்கள் எல்லாவற்றிலும் இறைவனாகிய சிவபெருமான் நிறைந்துயிருப்பதால் ஆன்மாவின் வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதோச காலபூசைக்குரியது.

மால் என்றால் திருமால்.விடை என்றால் நந்தி. திருமால் விடையாகமாறி சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் உருவாயிற்று. திரிபுரங்களையும் எரிக்க சிவபெருமான் புறப்பட்டபோது இடையிலே இறைவனின் தேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அப்போது திருவிளையாடல் நாயகனாகிய சிவபெருமானை கீழேவிழாது தாங்கிட திருமால் நந்தி(விடை)யாக மாறி சிவபெருமானை தாங்கி வாகனமாகி நின்றார். இவ்வாறு திருமால் நந்தியாக மாறிய நந்தியை மால்விடை என்பர். இதனை கொடிமரத்துக்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் காணலாம்.

கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகிலிருப்பது தருமநந்தி என அழைக்கப்படும். ஊழிகால இறுதியில் இறைவனாகிய சிவபெருமானிடத்தில் எல்லாமே ஒடுங்கிவிடும். தர்மத்தைத் தவிர. இந்த தர்மம் நந்தியாகமாறி இறைவனை தாங்கிநிற்கும்.


(என் கைகளை எட்டிய நூல்களிலிருந்து தொகுத்து எனது எழுத்து நடையில் தந்துள்ளேன்.)

மேலும் படிக்க...

Monday, August 11, 2008

ஈழ நாட்டிலே நல்லூரும் கத்திரகம ஆகிவிட்ட கதிர்காமமும்

இன்றைய ஈழ பண்பாட்டின் அடையாளம் நல்லூர் என்றால் அது மிகையாகாது. ஈழ வள நாட்டில் தொன்று தொட்டு வழிபடப்படும் வழிபாடுகளில் முருக வழிபாடு தனித்துவமான சிறப்பாக பின்பற்றப்படும் வழிபாடாகும்.அன்றைய கால மன்னர்களின் நாணயங்களில் வேல் குறியீடு காணப்படுவது முருக வழிபாடு எவ்வளவு மக்களோடு ஒன்றியிருந்தது என்பதை வெள்ளிடை மலையாய் நிருபணமாக்குகின்றது. ஈழத்தின் சமய சின்னமாக கதிர்காமம் அன்றைய காலங்களில் விளங்கியது எனலாம்."கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா " என்ற தேவராய சுவாமிகளுடைய கந்தர் சட்டி கவசமெனினும் அருணகிரிநாதரின் தெய்வீக திருப்புகழாகட்டும் கதிர்காமத்தின் புகழை தீட்டத்தவறவில்லை. ஏன் கமலகாசனின் தெனாலி திரைப்படத்தில் கண்டிக்கதிர்காமம் (இறுதிக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உட்பட்டு இருந்தமையால் அவ்வாறு அழைக்கப்பட்டதாக அறியாமல் நான் வினாவியபோது ஒருவர் கூறியிருந்தார்.) என்று ஈழ சமய சின்னமாகக் காட்டப்பட்டது.அந்தளவு கதிர்காமப்புகழ் தமிழகம் எங்கும் ஈழ சமய சின்னமாக பிரபல்யம் அடைந்துள்ளது. ஆனால் வருத்தத்துடன் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்வது கதிர்காமம் ஈழ சமயச்சின்னத்தை இழந்துவிட்டது என்பதையேயாகும். இந்த உண்மை ஈழத்தை தவிர கதிர்காமத்தை ஈழ சமய சின்னமாக கருதும் தமிழகத்திற்கு தெரியாது. தெரிய வர அவர்களின் ஊடகங்களும் வழிசமைக்காது.யாழ்பாணத்தில் இருந்து யாத்திரிகர் கூட்டம் கூட்டமாக நடைபயின்று கதிர்காம விழாவிற்கு செல்லும் மரபு இன்று அருகிவிட்டது. மட்டக்களப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு பக்தர்கள் நடையாக கதிர்காமம் சென்றாலும் சொற்பமே என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது. ஈழப்பிரச்சினை ஒரு காரணியாக இதற்கு அமைந்தாலும் ஈழப்பிரச்சினைக்கு வேராகவிருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பே காரணமெனலாம். கதிர்காமம் கத்திரகம என்று சிங்களமானது எப்படி என்று பாருங்கள்; முதலில் முருகனின் அருகில் சிங்கள புத்தர் வந்தார். (சிங்கள புத்தர் என்று அடைமொழி நான் இங்கு வழங்குவதற்கு காரணம் உண்மையான புத்தர் யுத்தத்தை எதிர்ப்பவர். அன்பின் வடிவம்.அரசாட்சியை துறந்தவர். ஆனால் இலங்கையில் அப்படியில்லை.பௌத்ததுறவிகள் அரசியலில் வாக்குகேட்டு பாராளுமன்றம் சென்றுள்ளனர்.யுத்தத்தை ஆதரிக்கின்றனர்.) பின்னர் ஆலய நிலத்தையே தனதாக்கினார். பின்னர் ஆலய நடுநாயகமாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் சிங்களர் முருகனை கும்பிட கதிர்காமம் வந்தனர். இன்று கதிர்காமம் வருவது புத்தரைக் கும்பிட என்ற நிலையாகிவிட்டது.முருகனைத் தேடவேண்டும் இன்று கதிர்காமத்தில். முருகன் கதிர்காமத்தில் "சப்"கடவுள் ஆகிவிட்டார். 1996இல் நான் முதன்முறை கதிர்காமம் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அப்போது மலையுச்சியில் நடுநாயகமாக முருகன் விளங்க, அண்மையில் ஒரு கட்டிடத்தில் பெரிய சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கம் முன் நின்று மௌனமாய் சில நிமிடம் தியானம் செய்து வரம் கேட்டால் பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த கட்டிடத்தில் நுழைவதற்கு கட்டணம் வேறு அறவிடப்பட்டது. 1996இன் பின் பல தடவை கதிர்காமம் செல்லும் பாக்கியம் அமையப்பெற்றது. என் அம்மா இறைவன் விரும்பிவிட்டால் அடிக்கடி அவரே தானாக அழைப்பார் என்று நவின்றார். ஏன் என்றால் நான் சென்று பல தடவைகளின் பின்னர்தான் என் பெற்றோர் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்றனர்.
மாணிக்கவாசகர் அழகாக இதனை சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று. அதாவது சிவபெருமானுடைய அருளால்தான் தான் அவருடைய திருவடிகளை வணங்கும் பாக்கியம் பெற்றேன் என்கின்றார். அதாவது விளக்கிச் சொன்னால் இறைவன் அருள் இருந்தால்தான் இறைவனையே வழிபடமுடியும். அடையமுடியும் என்பதாகும். புகழுக்கு சொல்லவில்லை. கதிர்காமம் செல்லும் பாக்கியம் அடிக்கடி என்னைத் தேடி தானே வரும்.அப்படி அடிக்கடி சென்றதால் அங்கு மெல்லமெல்ல நடந்த இன ஆக்கிரமிப்பை எளிதில் உணரக்கூடியதாக இருந்தது. நான் முதன்முறை செல்லும் போது உடைந்து சிதைவடைந்திருந்த நவக்கிரக சன்னதி 2005வரை அப்படியே தான் இருந்தது. மாற்றமேதும் இல்லை. ஆனால் முதல்முறை சென்றபோது மலையில் காணப்பட்ட சிவன் சன்னதி அகற்றப்பட்டு மிகப்பெரிய புத்தர் சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த புத்தர் சன்னதிதான் மலை சிகரத்தில் ஆலய நடுநாயகமாக விளங்குகின்றது. அங்கு அண்மையில் நடப்பட்டிருந்த பெரியவேலும் தூரத்தே ஒரு மூலையில் அரக்கப்பட்டிருந்தது. பெரிய கதிர்காமம் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் 1996இல் சிறிய சன்னதியாக இருந்த புத்தர் 2005இல் நன்றாகவே வளர்ந்து ஆலய நடுநாயகமாய் மாறிவிட்டார். 1995இல் இருந்து 2005வரை( கடைசியாக நான் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்ற ஆண்டு) வளர்ந்த.......புதிது புதிதாக முளைத்த புத்தர் அன்று தொட்டு 2005வரை( இன்று கூட இருக்கலாம்) சிதைவடைந்து கவனிப்பார் அற்று கைவிடப்பட்ட மலைசிகரத்தில் உள்ள நவக்கிரகங்களைப் பார்த்து முறுவல் பூப்பது அங்கு செல்லும் அனைவரும் உணரும் ஒன்று. இடையிடையே சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மாணிக்ககங்கையோரத்தில் வீற்றிருக்கும் பிள்ளையார் புத்தபிக்குகளால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலையை ஏற்று கள்ளச்சிரிப்பொன்று பூப்பார். பெரிய கதிர்காமத்தில் தமிழில் இருக்கும் ஓம் என்ற அடையாயளத்தை அடிக்கடி அகற்றி பின் தமிழ் பாராளுமன்ற உருப்பினர்கள் விழவேண்டியோர் காலில் எல்லாம் விழுந்தபின் மீண்டும் மாட்டுவது அரசியல்.இவற்றால் ஏற்பட்டவிரக்தியால் கதிர்காமம் ஈழத்தமிழரின் மனதில் இருந்து மெதுவாக விலகத்தொடங்கி இன்று ஈழத்தவரின் சமய பண்பாட்டின் சின்னம் என்ற தகுதியை இழந்து நிற்கின்றது அருளுக்கு பஞ்சம் இல்லாக் கதிர்காமம். இவ்வாறு படிப்படியாக கதிர்காமம் தனது நிலையை இழக்க, ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் சமயச் சின்னங்களில் ஒன்றாய் காணப்பட்ட நல்லூர் படிப்படியாக யாழ் மக்கள் மனதுக்குள் ஒன்றி யாழ்ப்பாணம் என்றதும் நல்லூரே நினைவுக்கு மீளும்வகையில் யாழ்ப்பாண சமயப் பண்பாட்டின் சின்னமாகி கதிர்காமம் வகித்துவந்த ஈழ சமய சின்னம் என்கின்ற உரிமையை, புகழை எப்போது கதிர்காமம் இழக்கத்தொடங்கியதோ அப்போது முதல் நல்லூர் பெறத்தொடங்கி இன்று அந்த உரிமையை முழுமையாய்ப் பெற்றுவிட்டது எனலாம்.
பரமேசுவராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி எனும் இரு உயர்ந்த தரம் மிக்க கல்லூரிகளை அழித்துத்தான் யாழ்.பல்கலைக்கழகத்தை தமிழருக்கு வழங்கியது அரசு. அதுபோல்த்தான் கதிர்காமம் என்கின்ற வரலாற்று புராண தலத்தை இழந்த துயரில் வளர்த்து எடுக்கப்பட்டதுதான் நல்லூர்............கதிர்காமத்தில் மழுங்கடிக்கப்பட்ட முருகன் நல்லூருக்கு செல்லுங்கள் என்று சொல்வதைப்புரிந்த கொண்ட தமிழன் கதிர்காமத்தை இழந்த துயரத்துடன் நல்லூரையே தனது சமய பண்பாட்டின் சின்னமாக மாற்றிவிட்டான்.
நான் இங்கு நல்லூர் திருவிழாக்காலத்தில் நல்லூரையும் கதிர்காமத்தையும் ஒப்பிட்டதன் நோக்கம் யாதெனில் இனியாவது கமலகாசனோ அன்றி யாரேனும் படமெடுத்தால் ஈழத்தமிழரின் உணர்வுகளையுணர்ந்து ஈழத்தமிழரின் சமய அடையாளத்தை காட்டும்போது நல்லூரின் பெயரைக் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கதிர்காமத்தை இழந்து துடிக்கும் ஈழத்தமிழனது உணர்வுகளைப் பிரதிபலியுங்கள் என்ற வேண்டுகோளை விடுக்கவே!



அப்படியே நல்லூரின் நினைவில் நான் கிறுக்கியதையும் பாருங்களேன்!


அழகே முருகா
தமிழே முருகா
சிவமே முருகா
அரோகரா முருகா
நல்லூர் குமரா

கதிர்காமமும் நீயே
உகந்தையும் நீயே
செல்வசந்நிதியும் நீயே
மண்டூரும் நீயே
மாவிட்டபுரமும் நீயே
என் நல்லூரா

ஆறுமுகம் கொண்டவனே
ஆறுபடை நாயகனே
அல்லல்கள் அறுப்பவனே
என் நல்லூரா

சேவல் கொடியுடையோனே
மயில் வாகனனே
சங்கம் ஆண்ட
சண்முகனே
என் நல்லூரா

வள்ளி தெய்வானை
மணவாளனே
வந்தோரின் வினையாவும்
விரட்டுகின்ற வேலவனே
என் நல்லூரா

ஈழ தமிழரசே
ஈழக் குரல்
கேட்கலையோ
இன்னல்கள் களைய
இன்னும் சித்தம்
பூணலையோ
இனிய செய்தி
தாராயோ
என் நல்லூரா!

http://mayasphotoblog.blogspot.com/
இல் (நல்லூர் என்னும் வகைப்படுத்தலுக்குள்) நல்லூர் மகோற்சவ புகைப்படங்களை கண்டு இறையானந்தம் அடையலாம்.


சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Monday, August 4, 2008

பெரியாரும் தமிழர்நெறியும் (தமிழ் ஓவியாவிற்கு ஒரு விளக்கக்கட்டுரை)

(தமிழ் ஓவியாவின் வலைப்பூ:- http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3663.htmlவின் வலைப்பூவில் சிவனும் உமையும் நீண்டநேரம் கூடியும் குழந்தை பிறக்காததால் சிவபெருமானின் விந்தை கொண்டு படைக்கப்பட்டதே முருகன் என்று வால்மீகியின் இராமாயணப் பாடலையும் கந்தபுராணத்தில் தன்னால் பிறக்கவில்லை என்று உமைவருந்துவதாகவும் ஆதலால் கந்தபுராணமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் பெரியார் கூறிய கருத்தாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு எளியேன் வழங்கவிரும்பும் விளக்கம்.)

தமிழ் கடவுள் என்று தமிழ் சங்கம் கொண்டாடிய முருகனின் பிறப்பை பெரியாரின் எழுத்தைக்கொண்டு இழிவுபடுத்தியிருப்பது வருந்தவைக்கின்றது. தமிழ் ஓவியாவிற்கு விளக்கம் கொடுக்கவிரும்பி எளியேன் முயலுகின்கின்றேன். என்னை எழுதவைத்த எம்பெருமான் இந்தவிளக்கக்கட்டுரைக்கு துணையிருக்கட்டும். சைவசித்தாந்தமும் கந்தபுராணமும் கற்றோர் விளக்கக் கடிதம் எழுதி நேரத்தை வீணடிக்கார் என்பது இயல்பே! உனக்கு தெரிந்ததை எழுது என்று இள இரத்தம் என்னை எழுதத்தூண்டுகின்றது. கந்தபுராணப்படலம் ஆலயங்களில் பாமரருக்கும் விளங்கும் வகையில் படிக்க வழிசமைத்த நாவலரின் நாட்டில் பிறந்ததால் கந்தபுராணம் கற்றிராத வேளையிலும் தமிழ் ஓவியா அவர்கள் பெரியாரின் எழுத்தாக குறிப்பிட்ட கந்தபுராண வசனவரிமூலமே விடையளிக்க முடியும் என நம்புகின்றேன்.
தமிழ் கடவுள் என்று சங்கம் கொண்டாடிய முருகனையும் திராவிடவழிபாடே சைவவழிபாடு என்று அகழ்வாராய்வுகள் விளக்கி மொகஞ்சதரோ, கரப்பா நாகரிகம் (சிந்துவெளி நாகரிகம்) தமிழர் பண்பாடு என்று வடக்கின் தலையில் குட்டிச் சொல்லிருக்கும் வேளையில் சிவனை இழிவுபடுத்தும் வகையில் பெரியாரின் எழுத்தை பிரசுரித்து பிரபல்யம் தேடுவது ஆரோக்கியம் அன்று. பெரியாரின் திராவிடப் பாசறையை பல நூல்கள் வாயிலாய் அறிந்து அவரோடு ஈர்க்கப்பட்டவன் நான். பெரியார் சாதிக்கொடுமைகளை எதிர்த்தார். சாதிகளின் வேர் பார்ப்பனர் என்பதால் அவர்களையும் எதிர்க்கவேண்டிய நிலைக்கு உள்ளானார். ஆனால் அவர் நூறுவீதம் சரியான கொள்கைகளையே கொண்டிருந்தார் என்றால் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் அர்த்தம்.ஆரம்ப காலகட்டத்தில் ராஜாஜியுடன் இருந்த நட்பின் நிமித்தம் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பின்னர் அது தவறு என்று அதில் இருந்து மீண்டவர் பெரியார். தனது முதுமைவயதில் மறுமணம் செய்து கொண்டபோது அதன் காரணமாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக ஆனந்தவிகடன் "நாயகன்" தொடர்மூலம் அறிந்துகொண்டேன்.தனது கொள்கைகளை தனக்குப்பின் கட்சியில் பேணுவதற்குத்தான் மறுதிருமணம் பெரியார் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நேருவும் காந்தியும் மறுதிருமணமா செய்திருந்தனர் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்கு? கட்சிக்கொள்கைகளைக் காப்பற்ற முதிர்ந்த தலைவர்களை திருமணம் செய்ய அறிவுறுத்துகின்றாரா பெரியார்? பெரியாரை கடவுளாகக் காண்பவர்களுக்குத்தான் அவர் நூறுவீதம் சரியானவர். மனிதராய் அவரை நோக்கினால் அவரின் கருத்துக்கள் பிழையாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பது விளங்கிக்கொள்ள முடியும். யேசுநதர் சொல்லவில்லையா உலகம் தோன்றி ஐயாயிரம் வருடம் என்று? (விஞ்ஞானம் அவரைப் பார்த்து சிரிக்கின்றது இன்று.)யேசுநாதர் தன்னை வழிபடாதவர்கள் பாவிகள் என்றும் நபிகள் உருவ வழிபாட்டை சிதையென்றும் சொன்னதாக அந்தந்த மதநூல்கள் சொல்வது போல் என்ன குறையை கண்டீர் "அன்பே சிவம்""ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழரின் சைவத்தில்? ( சைவத்தில் வடக்கு கலப்புகள் எமக்கு பாதகமாய் இருப்பின் புறக்கணிப்போம். நல்லவற்றைக் காப்போம். நல்லன எல்லாவறையும் தமிழுக்கு மொழிபெயர்த்து கொண்டுவரச் சொல்லவில்லையா பாரதி?) பெரியாரின் கருத்துக்கள் நூறுவீதம் சரியானதே என்று வாதடின் அவர் கடவுள் ஆகிவிடுவார் கவனம்......கடவுள் கொள்கை எதிர்ப்பாளர்களே! கடவுள் இல்லை என்பதும் கடவுள் இருப்பது என்பதும் அவரவர் நம்பிக்கை. பெரியாரின் நம்பிக்கை கடவுள் இல்லை என்பது. அதில் குறைகாண யாராலும் (கடவுளால் கூட) முடியாது. ஆனால் புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை அமெரிக்காவில் பிறந்தார் என்று கூறியிருந்தால் அதை ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகூட மறுத்துவிடும். கடவுள் இல்லை என்ற ஒரே நோக்கத்தில் கந்தபுராணத்தை வாசித்ததன் விளைவு அதன் பொருள் அவருடைய சிந்தைக்கு எட்டாமல் போயிருக்கலாம்.( இல்லை, அவருக்கு நன்கு விளங்கியிருக்கும். பெரியாரை எதிர்ப்பவன் தான் நான்.அதனால் அவர்மீது கறைபூச முயலுகின்றேன் என்று தாங்கள் கருதின், பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள் பெரியார் ஒரு மனிதரே ஒழிய கடவுள் அல்லர். எனவே பிழையான முடிவுகள் கொள்ளவாய்ப்புண்டு என்பதை.) பெரியார் நூறுவீதம் சரியாகவே செயற்பட்டார், அவர் நவின்றது யாவும் சரியானதே, கடவுள் கொள்கையாளர்களின் கடவுள் மட்டும்தானா நூறுவீதம் சரியாக இருப்பார், எங்கள் பெரியாரும் நூறுவீதம் சரியே என்று கருதின் தர்க்கவாத அடிப்படையில் பெரியார் கடவுள் ஆகி பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கையையே கொலைசெய்துவிடுவார்.வடக்கின் பண்பாடு வேறு. தமிழரின் பண்பாடு வேறு. அதனால்த்தான் கம்பன் வால்மிகியின் இராமாயணத்தை தமிழில் பலமாற்றங்களுடன் எழுதினான். சீதையின் கைகளைப்பற்றியிழுத்து இராவணன் கடத்திச்சென்றதாக வால்மிகி எழுதியிருக்க சீதைமீது இராவணனின் கைகள் படவில்லை, நிலத்தோடு சேர்த்தே சீதையை கடத்தியதாக கம்பனும் எழுதியுள்ளான். இங்கு இராமாயணம் உருவானதே தமிழரை கேவலப்படுத்த என்பதனால் பெரியாரே இராமாயணத்தை எதிர்த்திருந்தார் என்பதை கவனிக்க. எனவே நிச்சயமாக தமிழரின் வழிபாட்டுமுறையான சிவ வழிபாட்டை இராமாயணம் கேவலப்படுத்த தயங்காது. அதிலும் வடக்கரான வால்மிகியின் எழுத்துக்கள் எப்படி தமிழர் வழிபாட்டை ஆதரித்து இருக்கும் என எதிர்பார்க்கமுடியும்? வால்மிகி சிவவழிபாட்டை கேவலப்படுத்தவேண்டும் என்ற சிந்தையில் எழுதாது தான்சார்ந்த பண்பாட்டில் அது தவறாக தெரியாததால் அவ்வாறு எழுதயிருக்கவும் வாய்ப்புண்டு.எனவே தமிழ் வழிபாட்டை வடக்கரின் நூல் கொண்டு சிதைக்க நினைப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. கந்தபுராணத்தில் உமை தன்மூலம் முருகன் பிறக்கவில்லை என்று வருந்துவது சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கலாம். வால்மிகியின் படி கூடலில் நீண்டநேரம் ஈடுபட்டும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் கூட இருக்கலாம். ஆனால் கந்தபுராணத்தில் நெற்றிக்கண் மூலம்தான் முருகன் பிறந்தான் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருக்க வால்மிகியின் கதையை இதற்குள் கொண்டுவந்து புகுத்துவது படித்தவர்களுக்கு அழகு ஆகாது.

இந்து என்னும் சொல் பாரசீகர் பாரதத்தவர்களை திருடர் என்று குறிப்பிட பயன்படுத்திய சொல். இந்து இந்தியா ஆனது. ஆகவே இந்தியர் என்றால் கள்ளர் என்று பொருள் கொள்ளமுடியுமா? பொருள் கொண்டால் அது எவ்வளவு பெரிய தவறாகிவிடும். எங்கள் தமிழில் புக்கை என்றால் உணவுப்பண்டத்தைக்குறிக்கும். சிங்களத்தில் நிதம்பத்தை குறிக்கும். நான் விருந்தினராக தமிழர் வீட்டுக்கு சென்று அங்கு உங்கள் புக்கையின்று வாய்க்கவில்லை என்று கூற அதற்கு அவர்கள் சிங்களத்தில் "புக்கை" என்ற சொல்லின் பொருளைக் கொள்ளமுடியுமா? அப்படிக் கொண்டுவிட்டால் எவ்வளவு பெரிய ஒழுக்கக்குறைவு ஏற்பட்டுவிடும் எனக்கு!

இதற்குமேல் இதுபற்றி பெரியாரை விமர்சிப்பது அவர்மேல் நான் கொண்டிருக்கும் பற்று "கூடாது" என்று தடுக்கின்றது. என் எழுத்து சாதியற்ற சைவத்திற்குகாய் உழைக்கவிரும்புகின்றது. அதலால் பெரியார்மீதும் விசுவாசம் உள்ளது. தாயில் குறைதேடின் தாயின் பாசம் விளங்காமல் போய்விடும்.திருமந்திரமும் "ஆதிபகவன் முதற்றேயுலகு" என்ற திருக்குறளும் தமிழரின் சொத்துக்கள். சோழன் கட்டிய தஞ்சை கோயில் ஒக்க ஒரு கட்டிடத்தை இன்றுவரை தமிழனால்( வேறு எவராலும் கூட)கட்ட முடியவில்லை. திருவாசகத்தின் முன் விஞ்ஞானம் மெய்சிலிர்த்து நிற்கின்றது. திருமந்திரம் திருக்குறள் ஒக்க ஒருநூலேனும் படைக்க இன்றைய தமிழனால் முடியவில்லை.இது இப்படியிருக்க,அந்த வியப்புக்குரிய முன்னோர்கள் காத்த சைவத்தை சாதியை ஆதரிக்கும் வேதத்தை பொதுநூலாய் கொண்டது என்ற ஒரே காரணத்துக்காக சிதைக்க எப்படித்தான் மனம் விரும்பிற்றோ? . வேதத்தில் உள்ள எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. சிவ வழிபாட்டை ஏளனம் செய்யும்(தமிழர் வழிபாடு ஆதல்லால்) வேதப்பகுதிகள் கூட உண்டு. அவற்றை சைவம் புறக்கணித்துத்தான் பொதுநூலாக வேதத்தை ஏற்றுள்ளது. ஆதலால் சாதியை வேதத்தில் புறக்கணிப்பது இயலாத ஒன்று அல்ல. ஒன்றே குலம் என்ற திருமந்திரமே சைவம்.பாரதி ஈழத்திருநாட்டை சிங்களத்தீவு என்று பாடி வரலாற்றுத்தவறுவிட்டுவிட்டான். ஆனால் பாரதியையும் அவருடைய பாடல்களையும் பாலர் பள்ளி தொட்டு பல்கலைக்கழகம் வரை புகட்டுவதுதான் ஈழத்தமிழ்கல்விமுறை. எங்களுக்குத்தெரியும் பாரதி ஒரு மனிதன். பிழைவிடுவது தவிர்க்கமுடியாதது. அவர் திருமந்திரம் சிவபூமி( சிவபூமி என்றால் தமிழர்பூமி என்பதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேன்.) என்று கூறியிருக்க சிங்களத்தீவு என்று பாடியது எவ்வளவு பிழை என்பதை நான் சொல்லி யாரும் அறியவேண்டிய நிலையில் இருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். ஆனால் அவர் விட்ட ஒருபிழைக்காக அவருடைய தமிழ்ப்பற்றையும் சாதி எதிர்ப்பையும் அவருடைய தமிழ் பாடல்களையும் புறக்கணிப்பது எங்களுக்குத்தான் நட்டத்தை விளைவிக்கும். பாரதியாருக்கு அல்ல. அதேபோல் பெரியார் பார்ப்பனர் சாதியை கையில் தூக்கிபிடித்திருந்தகாரணத்தால் அவர்களை எதிர்க்கவெளிக்கிட்டு அது மதஎதிர்ப்பாகி அந்தமதஎதிர்ப்பு சிலதவறான கருத்துள்ள அவருடைய எழுத்துக்களுக்கு வித்திட்டுவிட்டது என்று உணரும் திறன் என்னிடம் உண்டு. பெரியார் கடவுள் அல்ல. மனிதர் என்பதிலும் நான் உறுதியாகவேயுள்ளேன். பெரியார் தொண்டர்களும் அவரை அப்படி நோக்குவதுதான் பெரியாருக்கு அழகு சேர்க்கும் முறையாகும். எனவே அவர்காட்டிய நல்லகருத்துக்களை பரப்புவோம். சாதியில்லா சமூகவிடுதலைக்கு போராடுவோம்.பெரியார் பார்ப்பனரைத்தான் சாதியின் வேர் என்று கருதினார். ஆனால் இன்று அவர்கள் அல்ல வேர். பள்ளி அனுமதிப்பத்திரத்தில் சாதிப்பெயர் குறிப்பிடப்படவேண்டியள்ளதே அதுதான் வேர். நாயுடு, செட்டியார், கள்ளர், வெள்ளாளர், பறையர்..............என்பதெல்லாம் பார்ப்பனர் வைத்தசாதிகள் அல்ல. அது தமிழர் தமிழருக்குள் படைத்ததுதான். பார்ப்பன எதிர்ப்பு சாதிக்கொடுமையை தீர்க்கமாட்டாது என்பதையும் உணர்க. எங்கள் வன்னியில் சாதி பெயரைச்சொல்ல எவருக்கும் துணிவுயில்லை. அங்கு தமிழாட்சி நடக்கின்றது. அங்கு இயற்றப்பட்டுள்ள சட்டம் சாதி என்ற சொல்லை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டது. நாளை அப்படிஎன்றால் என்ன என்று கேட்கும் சமூகம் மலரத்தான் உள்ளது.தமிழ்நாட்டை தமிழன் தானே ஆளுகின்றான். வடக்கரா ஆளுகின்றனர்? சட்டமியற்றச்சொல்லுங்கள். பெரியார்பாசறை பிள்ளைகள் தானே நாடாளுகின்றனர்? சாதியை பள்ளி அனுமதிபத்திரத்தில் தடைசெய்யகோரி அவர்களை எதிர்த்து ஒரு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துங்கள். பெரியார் பெயரை அதற்கு உபயோகியுங்கள். அதைவிட்டுவிட்டு பெரியார் தொண்டார் என்றுகாட்டிக்கொள்ள உங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் எழுத்துக்கும் சேதத்தைவிளைவிக்காத பார்ப்பன எதிர்ப்பையும் மதஎதிரிப்பெனும் பெயரில் உயர்ந்த தமிழரின் வழிபாட்டுமுறைகளையும் கேவலப்படுத்தல் என்ற இரண்டையும்தான் பயன்படுத்தும் செயல்வீரர்களையா நீங்கள்? பெரியாரின் மதஎதிர்ப்பு சாதிஎதிர்ப்பால் உருவானதென்பதை மறந்து மத எதிர்ப்பு என்று மதஎதிர்ப்பு என்று பெரியார்வேடதாரிகளிடம் சைவசித்தாந்தம் கற்றோரும் திருமுறை வித்தகர்களும் கந்தபுராண பாராயண சான்றோர்களும் கருத்துப்பரிமாற வரவாய்ப்பேயில்லை.

"கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்க்கக் கடன் அன்று
கல்லாதமூடருக்கு கல்லாதார் நல்லராம்
கல்லாதமூடர் கருத்தறியாரே"
(திருமந்திரம்)

மேலும் இவ்வாறான சமயநெறிமூலம் ஒழுக்கக்குறைவு எற்படுமென்று பெரியாரின் எழுதாய் எழுதப்பட்டிருந்தது. ஒழுக்கக்குறைவாய் பெரியார் குறிப்பிட்டதற்கும் சைவநெறிக்கும் இம்மியளவும் தொடர்பில்லை என்பது வெள்ளிடை மலையாய் யாவரும் அறிவர். அனால் பெரியார் தொண்டர் என்னும் சத்தியராஜ் (ராஜ் என்று "ஜ்" என்னும் வடசொல் வருவதால் ராசா என்று மாற்றச்சொல்லுங்கள் அவரிடம்) கர்நாடக எதிர்ப்புமேடையில் பேசியதை சக தமிழ்பற்றாளர்கள் கூட ஏற்க்கமறுக்கின்றார்கள். சத்தியராச்சின் மேடையொழுக்கம் பெரியார் பாசறையின் ஒழுக்கம் என்று யாரேனும் பொருள்கொள்ளமுடியுமா? . சத்தியராஜ் என்னும் தனிமனிதர் அளவுகடந்த கோபத்தில்(நியாயமானது தான்) தன்னைக்கட்டுப்படுத்த தவறியதற்கு பெரியாரை பிழைபிடிப்பது முட்டாள் தனமான ஒன்று. சத்தியராஜ் தன்னுடைய பேச்சில் தமிழ்கடவுள் முருகனை கும்பிடு கடவுள் தேவை என்றால் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது பெரியார் அவரைக் கோபித்துக்கொள்ளமாட்டாரா? சத்தியராஜ்சுக்கு விளங்கியிருக்கின்றது பெரியார் ஒரு மனிதர்.அவருடைய எல்லா எழுத்துக்களும் சரியென்று கூறமுடியாது என்று. தமிழ் ஒவியாவிற்கு இனிவிளங்கும் என்று நம்புகின்றேன்.
( கரே ராமா கரே கிருசுணா இயக்கம் இரசியாவில் வெள்ளைக்கார இரசியர்களுக்கு பூணூல் வழங்கி பார்ப்பனராய்யுருவாக்கியுள்ளது. ஆதலால் ஏன் அன்றைய சமயபூசாரிகளாக இருந்த தமிழர்களை இவ்வாறு பார்ப்பனராக்கியிருக்க மாட்டார்கள் என்று ஐயம் என்னுள் முளைவிட்டுள்ளது. சான்றோரே சிந்திக்க.)
மேலும் படிக்க...

Thursday, July 31, 2008

ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்.........................

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர் நவின்றதை உறுதிப்படுத்துகின்றது எனலாம்.திருநாவலரின் காலத்தின்பின்னர் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், சேர்.பொன்.இராமநாதன் போன்ற சைவச்சான்றோர்கள் காலத்தால் மறக்கமுடியாத சமூகத்திற்காய் வாழ்ந்த சிவனடியார்கள். அவர்களின் பின்? கிழக்கு சுவாமி தந்திரதேவானந்தாவையும் வடக்கு அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியையும் பெற்றிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.கிழக்கில் 2005ம் 6ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த மட்டக்களப்பு இராமகிருசுணர் மடத்தலைவர் அவர்களின் சேவையையும் கிழக்கு சைவசமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது.
இங்கு, அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியை இக்காலத்துக்குரிய ஈழத்து சைவ அடையாளமாக சைவர்கள் பார்த்தார்கள் என்று கூறலாம். தமிழகமுதலமைச்சரின் அனுதாபச்செய்தி ஈழத்தின் அடையாளமாக அன்னை இருந்துள்ளார் என்பதை ஆணித்தரமாக உறுதியாக்கியுள்ளது எனலாம். ஆனால் என்னதான் சொன்னாலும் சைவத்தமிழ் சமூகம் அன்னையை ஈழத்து தமிழ் அடையாளமாக பயன்படுத்த தவறிவிட்டது என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். கிருத்தவபாதிரிமார்கள் தமிழரின் ஆன்மீக அரசியல் அடையாளமாக சித்தரிக்கப்பட்டுவருகையில் அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்த அன்னையை அவ்வாறு பயன்படுத்த தவறிவிட்டது வெட்கப்படவேண்டிய ஒன்று.(கிருத்தவபாதிரிமார்கள் போர்ச்சூழலில் ஆன்மீக அரசியல் அடையாளத்தை பயன்படுத்தி மதமாற்றத்தில் சுறுசுறுப்பாக இருந்தாலும் அவர்களுடைய தக்கதருணத்தில் மக்களோடு மக்களாய் நின்று வழங்கும் சேவையை மத அடையாளம் கொண்டு நான் மறைக்கவிரும்பவில்லை.அவ்வாறு செய்தால் ஜீ.யு.போப் வீரமாமுனிவர் ஆகியோருக்கும் அன்னையாய் விளங்கிய தமிழ் என்னை மன்னிக்க மாட்டாள். ) அல்லது நமக்கு ஏன் உந்தவம்பு என்று அன்னை நினைத்து கொண்டாரோ...........ம்ம்ம்!ஆனால் ஒன்று, கிருத்தவர்களுக்கும், இசுலாமியருக்கும் மதரீதியான அரசியல் பாதுகாப்பரண் உண்டு. சைவர்களுக்கு "இந்து"மாமன்றம் செயற்படுகின்றது என்று கூறலாம். ஆனால் யுத்தசூழ்னிலையில் மக்களோடு மக்களாய் நின்று சேவைசெய்யும் சைவப்பிரதிநிதிகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். எங்கள் மதகுருமார்கள்............குடும்பம் குட்டியென்று பாதுகாப்பாய் ஓடவேண்டியனிலை.ம்ம்ம்........இவர்களும் பாவம் தான்! அரசியல்ரீதியான பாதுகாப்பு கவசம் இவர்களிடம் இல்லையே!காலியில் உயிரோடு கோயில் ஐயரை எரித்ததை கேட்பதற்கு என்ன.........போப் பாண்டவர் வரவா போறார்? அல்லது இந்தியா ஆரியச்சதியின் அத்திவாரமான சங்கரமடமா வரும்? இனிமேல் சங்கரமடத்தை நினைத்தே பார்க்கமுடியாது. அதுவே இந்தியப்பிரதமரையே நடுங்கவைக்கும் ஜெயலலிதாவின் கடும் நடவடிக்கையில் இறையே......இறையே......இறையே......என்பதற்குப்பதிலாக சிறையோ.......சிறையோ.......சிறையோ.......என்று இருக்கின்றது. 83கலவரத்தின்போது கொழும்பில் பலதமிழரைத்துரத்திக்கொண்டு கொழும்பு இராமகிருசுணர் மடத்தை நோக்கி வந்த காடையர்கள் அங்கிருந்ததுறவியைக்கண்டதும் திரும்பி சென்றுவிட்டனர் என்று செவிவழிச்செய்தியாய் நான் கேட்டதுண்டு. துறவிக்கு பிள்ளையில்லை.........குட்டியில்லை; ஆதலால் மக்களுக்காய் நிற்கும் திறனும் இயல்பாய் உருவாகும்.(துறவியர் எல்லோரும் சமயகுருவாக முடியாது. சமய பிரதிநிதியாக அவர்களைக் கருதலாம். சிவாகமங்கள், சைவசித்தாந்தம் யாவையும் கற்றுத்தேர்ந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட துறவியர் சைவசமய குருமாராக உருவாகவேண்டியது அவசியமாகும்.)

கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் ஆகியோர் செய்வது சரியைத்தொண்டு.ஐயர்மார் செய்வது கிரியைத்தொண்டு. சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய இந்த நான்கு மார்க்கங்களுமே ஒன்றுக்கொன்று நிகர். அப்படியானால் கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் எல்லோருமே சமயகுருவாகிவிடுவர். எனவே சமயகுரு என்பவர் யார் என்பதில் தெளிவுபெறுவது அவசியமாகும். கட்டுரை பாதைமாறிச்செல்வது புரிகிறது.

மீண்டும் விடயத்திற்கு வருகின்றேன். 2002 சமாதான காலத்தில் யாழ் செல்லும் பாக்கியம் எனக்குகிட்டியிருந்தது. அவ்வேளை, தெல்லிப்பளைக்கு சென்றிருந்தேன். அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் அருமையை அவருடைய படம் இல்லாத தெல்லிப்பளை வீடுகள் கண்ணில்படுவது அருமையாய் இருந்தது கண்டு உணர்ந்துகொண்டேன். தெல்லிப்பளை ஆலயத்திற்கு சென்றபோது அன்னையைக்காணும் பாக்கியமும் பெற்றேன். சிலர் ஆலயத்துள் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியிடம் சென்று வீழ்ந்து வணங்கு என்றனர். ஆலயத்துள் ஒருவரின் காலில் இன்னொருவர் வீழ்ந்துவணங்குவது கூடாதசெயல் என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை. நின்ற கூட்டத்தினை சமாளித்துக்கொண்டு அன்னையை அடைந்துவிட என்னால் முடியவில்லை.அங்கு நின்றவர்கள் ஆலயத்திருவிழாக்கூட்டமே ஒழிய அன்னையை நெருங்குவதற்கான கூட்டமில்லை. அன்னை தன்பாட்டிற்கு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது மெல்ல எனக்கு புரியத்தொடங்கியது இங்கு நிற்கும் கூட்டம் தெல்லிப்பளை மக்கள் திரள் என்று. அமைச்சர்களுக்கு அரசனைப்பார்ப்பதில் புதினமிருக்காது. அது இயல்புதானே! (இன்று ஆலயத்தினுள் அர்ச்சகரின் காலில் விழுந்து வணங்குதல்.........அவர் இவர் என்று காலில்விழுந்து கும்பிடுதல்.......சாதரண நிகழ்வுகளாகிவிட்டன. வணக்கத்தைப்பெறுவோர் கூட வணங்குபவர்களிடம் எடுத்துவிளக்குவது இல்லை. ஏன் ஆலயத்தில் அப்படி செய்தல் ஆகாது? ஆலயத்தினுள் எல்லோரும் சமன். வணக்கத்திற்குரிய ஒரே ஒருபொருள் ஆலய இறைவன்.)பின்னர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டிபற்றி அறியும் ஆவலில் என் தெல்லிப்பளை உறவினர்களிடம் கேட்டறிந்துகொண்டேன்.சைவத்தை சிதைக்கும் நோக்கில் சைவத்தில் இல்லாத ஆஞ்சனேயர் வழிபாட்டை அன்னை ஆதரித்தார் என்னும் செய்திகேட்டு வருந்திய சைவக்குடிமக்களில் நானும் ஒருவன்.(1995களில்த்தான் இலங்கைக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது.) சேர்.பொன்.இராமநாதன் புகழை பேசும் சமூகம் அவர்விட்ட தவறுகளை (புத்தளத்தமிழரை கவனிப்பாரன்றி கைவிட்டமை, இலங்கைத்தமிழரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியமை) "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று நெஞ்சில் மீட்டு கவலையடைவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அதுபோல் அன்னைவிட்ட இந்தந்தவறு அடுத்தசந்ததிக்கு "சைவம்" என்னும் சொல் நமது புழக்கத்தில் இருந்ததே தெரியாமல் போய்விடும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அடுத்த சந்ததி "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று அன்னையை நோக்கி கேள்வி கேட்பது அன்னையின் மகத்துவத்திற்கு அழகும் இல்லை. பல கொழும்பு பணக்கார "இந்து" நிறுவனங்களை பகைத்திட்டால் ஆலய அறசெயல்களுக்கான நிதிக்கு ஆபத்துவந்துவிடும் என அஞ்சினாரோ தெரியவில்லை.

சிவபதம் அடைந்த அன்னை நிச்சயமாக ஈழப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் சைவத்தை பணக்கார சுமார்த்ததிடம் இருந்து பாதுகாப்பதற்கும் ஆயிரம் நாவலர்களின் பிறப்பிற்கு சிவபெருமானிடம் வரம் கேட்டிருப்பார் என்று திடமாக எண்ணி அன்னையின் சிவலோகவாழ்வை உள்ளத்திலே கண்டு சிவானந்தம் அடைவோமாக.

சுவாமி தந்திரதேவானந்தா, அமெரிக்காவில் பிறந்த வெள்ளைக்காரராகிய இவர் வேதநெறியில் ஈர்ப்புக்கொண்டு, வேதங்கள், உப நிடதங்கள் எனயாவும் கற்று இந்துத்துறவி/வேதத்துறவியாக மாறி திருகோணமலையில் சிவதொண்டு ஆற்றிய மகான். இவர் அமெரிக்கா வெள்ளைக்காரராக இருந்ததன்மையினால் கிருத்தவத்தின் நெளிவு சுழிவுகள் யாவும் அறிந்திருந்தார். அதன்மூலம் மதம்மாற்றிகளின் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கினார். சுவாமி மதம் மாற்றும் தரகர் கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் என்றால் மிகையாகாது.அவருடைய சொற்பொழிவுகளை வாசிக்கும் பேறு பெற்றிருந்தேன். அவருடைய சொற்பொழிவு மூலம்தான் கிருத்தவம் கிருத்துவுக்கு முன்னர் 5000ஆண்டில்தான் உலகம் தோன்றியதாக கூறுகின்றது என்று அறிந்துகொண்டேன்.( வேத உப நிடதக்கணக்குப்படி எங்கள் வைதீகநெறி அண்ணளவாக 198 கோடிமட்டில் ஒரு பெறுமதியை வரையறுக்கின்றது. விஞ்ஞானம் அண்ணளவாக 200 கோடி என்கின்றது)சாத்தனுக்கு கல்லெறிதல்.....இறைவனின் குருதியென்று "வைன்" குடித்தல் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் ஏனையமதங்களிலும் உண்டு...........இயேசு நாதர் இமயமலை வந்து ஆன்மீகம் பயின்றார்..........போன்ற பல்வேறு விடயங்கள் அவர் சொற்பொழிவுகளை வாசித்து நான் பெற்ற அறிவாகும்.சுவாமியை நேரில் காணும் பாக்கியம் எளியேனுக்கு கிட்டவில்லை. சுவாமி பிறப்பால் அமெரிக்கராக இருப்பதனால் இலங்கையில் தொன்றுதொட்டு நிலவிவருகின்ற சைவப்பாரம்பரியம் அவரால் உணரக்கூடியதாக இருந்திருக்குமென எதிர்பார்க்கமுடியாது. இங்கு பிறந்து இங்கேயே வளர்ந்த பலருக்கு இந்து என்னும் புறமொழி ஆக்கிரமிப்பும் அதற்குள் மறைந்திருக்கும் பாரிய சதியும் விளங்கக்கடினமாக இருக்கையில் சுவாமியிற்கு விளங்கியிருக்கவேண்டுமென்பது கடினமான எதிர்பார்ப்பாகும்.சுவாமியுனுடைய சமூகசேவையை ஈழச்சமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது. சிவபதம் அடைந்த சுவாமியினுடைய தொண்டுகளைத்தொடர்வதே அவருக்கு ஈழமக்கள் செயயக்கூடிய அதியுயர்ந்த நன்றிக்கடனாகும்.

ஆறுமுகநாவலருக்கு பின்னர் சேர்.பொன்.இராமநாதன், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் போன்றார் சிவாகமத்தை பேணும் சைவசமூக பிரதிநிதிகளாக மிளிர்ந்தபோதும் நாவலர் போல் சாதாரண மக்களிடம் சமயக்கருத்துக்களை கொண்டுசேர்க்கும் திறனைப்பெற்றிருக்கவில்லை. அதன்பின்னர் சைவச்சான்றோராக சாதாரணமக்களால் போற்றப்பட்ட அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, சுவாமி தந்திரதேவானந்தா போன்றோர் ஆறுமுகநாவலர் காட்டியபாதையில் சைவத்தை வழிநடத்தத்தவறிவிட்டனர். இன்று இருக்கும் நல்லை ஆதினமுதல்வரும் மௌனியாய் இவர்கள்போல் இருந்துவிடக்கூடாது என்பது சாதரண சைவக்குடிமக்களின் வேண்டுதலாகும். ஆதினத்தின் வாரிசாக சிவாகமங்களில் அனுபவமுள்ள சிவக்கொழுந்தை நியமிக்கவேண்டுமென்பது காலம் அவரிடம் எதிர்பாக்கும் சைவக்கடமையாகும்.எங்கள் கல்லூரி அதிபர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய ஆன்மீகவாதியான மாணவனிடம் "ஆதினவாரிசாகப் போரியா?" என்று கேட்டிருந்தார். ஆனால் அந்தமாணவன் ஆஞ்சநேய பக்தன்.ஆனால் ஒழுக்கத்தில் சிறந்துவிளங்கும் தன்மை ஆதினவாரிசுவுக்கான தகுதிகளில் ஒன்றே ஒழிய அதுவே ஆதினவாரிசுவுக்கான தகுதியல்ல என்பது அதிபருக்கு விளங்கவில்லை. அதுவொன்றே தகுதியென்றால் ஒழுக்கத்தில் சிறந்த கிருத்துவரையும் இசுலாமியரையும் நல்லூர் ஆதினவாரிசாக நியமிக்கலாம் தானே? சிவாகமங்களையும் சைவசித்தாந்தங்களையும் கற்றுத்தேர்ந்த வாரிசுவை நியமிப்பது காலத்தின் கட்டாயமாகும். வாரிசு இல்லாமல் ஆதினமிருப்பதும் அழகுயில்லை.


(இந்து, சுமார்த்தம் போன்றவற்றிற்கு என்னுடைய முன்னைய கட்டுரைகள் விளக்கம் கொடுத்திருக்குக்கின்றன. மீட்டிப்பார்க்க.)

வலைப்பூ:- இங்கேயும் சிறுபொழுதை கழியுங்கள்.
http://nirshan.blogspot.com/2008/06/blog-post_5427.html
( அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த நினைவுக்கட்டுரை.)
மேலும் படிக்க...

Sunday, July 27, 2008

தமிழோடு வாழ்வோம்

தேம் மதுரத்தமிழோசை உலகமெல்லொம் பரவச்செய்யவேண்டும் என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று தமிழைக் காக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.பல வ்கையான சவால்களை தமிழ் இன்று சந்தித்தாலும் முக்கியமான இரண்டு வகையான சவால்களை இங்கு நான் அலசியாரய விரும்புகின்றேன்.ஒன்று அசிங்கமான தமிழ்வார்த்தைகள் என்றும், பல்வேறு காரணங்களாலும் பொருள்சிதைவடையும் தமிழ்ச்சொற்கள். இரண்டாவது சதிகாரர்களால் தமிழ் சிதைவு தூண்டப்படுதல்.


நான் முதலில் சுட்டிக்காட்ட விளைவது ஆபத்துதன்மை குறைந்த சவாலை அதாவது அசிங்கமானது, அழகு குறைந்தது என்றெல்லாம் புறக்கணிக்கப்படும் சவாலையாகும்.

இன்று பொதுவாக " நாறுது" என்ற பேச்சுவழக்குச் சொல்லின்மூலம் நாம் உணர்த்துவது சகிக்கமுடியாத மணத்தையேயாகும். ஆனால் நாற்றம் என்பது நறுமணத்தையும் துர்நாற்றம் என்பதே சகிக்கமுடியாத மணத்தையும் குறிக்கும். எவ்வளவு பொருள் பிழையுடன் நாம் எமது மொழியை கையாளுகின்றோம்! குண்டி என்றழைக்கப்படும் உடற்பாகம் உண்மையில் நிதம்பம் என்றேயழைக்கப்படும். நிதம்பபாரத்து நேரிழையால் என்று கம்பன் இதனைக்கையாண்டுள்ளான். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கம்பராமாயணத்தை புரட்டியவேளை அறியக்கண்டேன். அப்படியானால் குண்டி என்னும் சொல் எதனைக்குறிக்கும் என்று என்னுள் கேள்வியெழுந்தது. விடை விதைப்பை என்று கழகத்தமிழ் அகராதி மூலம் அறிந்துகொண்டேன். எப்படி நாற்றம் என்பது சகிக்கமுடியாத மணமாக பொருள் மாற்றமடைந்ததோ அவ்வாறுதான் இதுவும் மாறியிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். பெண்குறியை குறிக்க அல்குல் என்ற சொற்பதம் பெருமளவான இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தனங்களை குறிக்க பயன்படுத்தியுள்ளனரோ என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும் படியாகவும் பயன்படுத்தியுள்ளனர். பாடல்களின் பொருளுரையின்மூலம் கூட தெளிவுபெறமுடியவில்லை. இந்த சந்தேகம் எனக்கு இன்றைக்கு நான்குவருடங்களுக்கு முன்னர் தோன்றியது. அதாவது பள்ளிக்காலத்தில். எனினும் அன்றைய என்னுடைய நாணம் காரணமாக ஆசிரியர்களிடம் கேட்டு சரியான தெளிவு பெறமுடியவில்லை.( இன்று என்னைச்சூழ தமிழ்ச்சூழலே இல்லை.) எனவே என்னையும் என்னைப்போல் இலக்கியத்துள் நுனிப்புள் மேய்ந்ததால் இச்சந்தேகத்துக்கு ஆளாகியிருப்போரையும் தெளிவுபடுத்தும்படி தாழ்மையோடு தமிழாசான்களை வேண்டிநிற்கின்றேன். "இலக்கியத்தில் எவ்வளவோ இருக்க உனக்கு இதுதான் சந்தேகமா?" என்று என்னை குட்டிவிடவேண்டாம். தேவாரங்களில் கூட அல்குல் என்னும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை நினைவுகூற விரும்புகின்றேன்.
நான் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகாலத்தைக் கழித்தவேளை மக்கள் தொலைக்காட்சி என்னும் தொலைக்காட்சி அலைவரிசையை கண்டுகளிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். ஏறக்குறைய நூறுவீதம் தனித்தமிழ் அலைவரிசை என்று அதைக்குறிப்பிடலாம். நடிகர் ரஜனியை திரைப்படக்காட்சிகளில் புகைபிடிப்பதை வெற்றிகரமாகத்தடுத்த அரசியற்கட்சிக்கு உரியது அத்தொலைக்காட்சி என்றனர் ஒருசிலர்.ஆனந்தமடைந்தேன். அத்தொலைக்காட்சியலைவரிசையில் பேராசிரியர். திரு நன்னன் ஐயா அன்றாடவாழ்க்கையில் நாம் விடுகின்ற தமிழ்ச் சொற்பிழை, பொருட்பிழைகளை சுட்டிக்காட்டுவார்.அத்தொலைக்காட்சியினால் ஐயா மூலம் நான் பெற்ற பலன்கள் ஏராளம். கலாச்சாரம் என்பது கல்ச்சர் என்னும் ஆங்கிலத்திரிபு என்றும் பண்பாடு என்பதே கல்ச்சரின் சரியான தமிழ்ப்பதம் என்றும் பசு மரத்தில் ஆணி அறைவதுபோல் விளக்கினார். அன்றுவரை கலாச்சாரமே தமிழ்ப்பதம் என்றும் பண்பாடு என்பது கலாச்சாரத்தின் அருஞ்சொல் என்றும் எண்ணியிருந்த எனக்கு அது எவ்வளவு மடைத்தனமான நினைப்பு என்று அப்போது தோன்றியது."வோட்டர் ப்போல்" என்பதன் தமிழ்ப்பதம் நீர்வீழ்ச்சி என்று எண்ணிருந்த எனக்கு "வோட்டர் ப்போல்" என்பதன் சரியான தமிழ்ப்பதம் அருவி என்று ஐயா மூலம்தான் அறிந்து கொண்டேன்.அதுவரை அருவி என்றால் நீரோடை என்றே தவறாக எண்ணியிருந்தேன். " வோட்டர்- நீர், ப்போல்- வீழ்ச்சி " என்னும் மொழிமாற்றே நீர்வீழ்ச்சியாகும் என்று நன்னன் ஐயா அத்தொலைக்காட்சியில் அருமையாக விளக்கியிருந்தார்.
"தமிழ்த்தினப் போட்டி" என்னும் சொற்ப்பததில் உள்ளகுறையை கொழும்பில் தனியார் வகுப்பேடுக்கும் பிரபல தமிழாசிரியர் திரு.சிவநிர்த்தானந்தா( ஆனந்தன் ஆசிரியர்) ஐயா தனது சைவமங்கையர் கழக கட்டிடத்தில் எடுக்கும் தனியார் வகுப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் கவலையுடன். "தினம்" என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமசுகிரதம். நாள் என்பதே சரியான தமிழ்ச்சொல். ஆனாலும் "தமிழ்நாள் போட்டி" என்னும்போது சொல்லில் ஒருவித அழகு தெரியவில்லை என்ற காரணத்தினால் யாரும் அவ்வாறு மாற்றவிரும்பவில்லை என்று தான் மாற்றமுயற்சித்து பெற்றதோல்வியை எம்மிடம் கூறிவருந்தினார்.அவரிடம் அத்தருணம் நான் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குரிய மாணவனாக இருந்தேன். அவர் கூறக்கேட்டு நானும் பல மாணவர்களுடன் சேர்ந்து வருந்தினேன். வருந்துகின்றேன்.
"தமிழ்த்திருநாள் போட்டி" என்பது நான் என்மூளையை சலவைசெய்து பெற்ற தலைப்பு. இதில் ஏதும் அழகுக்குறை( ஸ்டைல்லான டைடில் வேணும் என்பதுதான் இலங்கை கல்வித்திணைக்களம் தமிழ்ப்பிரிவின் நிபந்தனையாம்) உண்டோ?

மேலே நாம் பார்த்தது அன்றாட வாழ்வில் தமிழை நாம் தவறாகக் கையாளும் சில உதாரணங்களாகும். ஆனால் திட்டம் தீட்டி தமிழ் வதைக்கப்படும் விதத்தையும் வரலாறையும் சற்று அவதானிப்போம்.தமிழின் நம்பர் 1 இதழ்.................போலீஸ் ஸ்டேசனில் கத்திச் சண்டை..........ட்ரீட்மண்டின் பின் நார்மலாகிட்டார்............ நந்தனம் ஆட்ஸ் காலேஜ்...............பேங்கில ஐயாதான் சீப் கெஸ்ட்டு............அமைதிப்படையில சத்தியராஜ் கேரக்க்டரைப்..............இவன் மட்டும் லைஃப்ல கிராஸ் பண்ணலைனா....................எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு அணியை வழிநடத்தியதில் ஷேன் வார்னேதான் நம்பர் ஒன் கேப்டன்.................அப்பப்பா எவ்வளவு ஆங்கிலக் கலப்படங்கள்! ஒரு நிமிடத்தில் எழுமாறியாக ஒரு தமிழ்நாட்டு சஞ்சிகையினை புரட்டியபோது நான் பெற்றுக்கொண்டவைதான் இவை. அப்படியானால் அந்தப்புத்தகத்தில் எவ்வளவு ஆங்கிலம் கலக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்!இது ஏன்? தமிழ்நட்டில் சென்னையில் நானிருந்தவேளையில் என் தமையனார் சொல்லியும் கேட்காது, வலப்பக்கமாய்த் திரும்பு என்று நான் வேடிக்கையாக முச்சக்கரவண்டிக்காரனிடம் சொன்னபோது ரைட்டா லேப்டா என்று தமிழில் சொல்லு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ கேரளாக்காரனா என்று வேறு கேட்டுவிட்டான். சிரிப்பதா.........அன்றி தமிழின் நிலையென்னி வருந்துவதா?இப்படியொரு சமூகம் எப்படியுருவானது அங்கு? நடந்த.......நடக்கின்ற சதி என்ன?அத்தனையும் ஆரியச்சதிதான்! இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்த தமிழ்நாட்டில் இந்தியை பரப்பமுடியாவிட்டாலும் தமிழை எப்படியாவது சீர்குலைத்து தமிழ்ப்பற்றை அங்கு இழக்கச்செய்து அதன்பின்னர் மெதுவாக ஆந்திரம்வரை பரப்பிய இந்தியைப் பரப்புவதுவாகும். என் நண்பர் குழாமிலுள்ள ஆந்திரர்கள் தாம் ஆரியவம்சம் என்கின்றனர் வரலாறு தெரியாது. இயன்றவரை என் ஆங்கில அறிவில் (சாதரண அரசாங்க இரண்டாம்நிலைப் பாடசாலையில் இரண்டாம்மொழிக்கல்வியாக கற்பிக்கப்பட்டும் சிறப்பாகப்பயிலத்தவறி உயர்தரத்தின் பின்னர் சற்று கவனசிரத்தையோடு பயின்று போட்டிவாழ்க்கையில் ஆங்கிலம் தேவையானதொன்று ஆசியாவுக்கு; ஆனால் சீனன் போல் தாய்மொழி பற்று அவசியம் என்பதை நண்குணர்தவன் நான்) எடுத்தியம்பிப்பார்த்தேன். நம்புகின்றார்களில்லை தாம் திராவிடர் என்பதை. ஆரியர்-ஆந்திரா என்னும் ஒலி ஒற்றுமை அவர்கள் வாதத்திற்கு அவர்கள் சேர்க்கும் பலம்.இப்படியொரு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கும் திட்டத்தின் ஆரம்பம்.........இல்லை; இடைநிலை இந்த ஆங்கிலக் கலப்பு எனலாம்.தமிழ்நாட்டு சஞ்சிகைகள், பொதுவான பிரசித்தமான பத்திரிக்கைகள் எல்லாம் ஆரியப்பார்ப்பனீயத்தால் வழிநடத்தப்படுபவையே. அதனால்த்தான் அவர்கள் ஆங்கிலத்தை கலக்கத்துடிக்கின்றனர். எங்கே எப்படி ஆங்கிலத்தை கலக்கலாம் என்று தவமாய்த் தவமிருக்கின்றனர். சென்னையை தமிங்கில மொழியாளர்களாக ஏறக்குறைய மாற்றிவிட்டனர் தமது வலிமையான ஊடகசக்தியை வைத்து. இது யாது தமிங்கிலம் என்று யோசிக்கவேண்டாம். தமிழ்+ஆங்கிலம்=தமிங்கிலம்.பிரதிட்டையை பிரதிஷ்டை என்றும் சாத்திரத்தை சாஸ்திரம் என்றும் சாத்திரியை சாஸ்த்திரி என்றுமே எழுதவிரும்புகின்றனர் சமயசஞ்சிகைகளில் இப்பார்ப்பனர்கள்.இவையாவும் சரியான தமிழ்ப்பதத்தில் இல்லாவிடினும் தமிழ் உச்சரிப்புமுறைக்கு மாற்றக்கூடியனவாக உள்ளன. ஆனால் அவை தமிழை சீர்குலைக்கத்துடிக்கும் இவர்களுக்கு எப்படிப்புரியும்? பரிதிமாற் கலைஞர் என்று தமிழுணர்வு காரணமாக தன்பெயரை மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாத்திரி ஐயாவினை ஆரியப்பித்துப்பிடித்துள்ள தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு( எங்கள் கொழும்பில் இவர்களுக்கு விலைபோன "இந்து"குருமார்களும் இதற்குள் அடக்கம்.) தெரியவரவே வாய்ப்பில்லை. பாரதியாரை பிராமணன் என்று கூறிட இவர்களின் நா விரும்பவாய்ப்பே இல்லை.தமிழ்திருமுறைகள் ஆலயத்திற்கு மாசுகற்பிக்கின்றன என்றுகூறி அண்மையில் நீதிமன்றம் சென்று தோற்றதை தமிழ்வரலாறு மறக்காது.மன்னிக்காது. யாழ். நூலகத்தை சிங்களர் திட்டமிட்டு அழித்தனர். அவர்கள் இதை கற்றுக்கொண்டது சிதம்பர பார்பனரிடமிருந்து என்றே நானுரைப்பேன். ஆம், திருமுறை பரவி மந்திரத்தை பாதித்துவிடுமென பயந்து கறையானுக்கு அதை வழங்கிமகிழ்தனர். நம்பியாண்டார் நம்பி என்ற தமிழ்ப்பற்றுள்ள பிராமணரும் இராச இராச சோழனும் அன்று தமிழுலகில் இல்லாவிடின் திருமுறைகள் எஞ்சியிருக்கவாய்ப்பேயில்லை.
நல்ல காலம், பார்ப்பனச்சதி இலங்கையில் கொழும்பு எல்லையை தாண்டமுடியாமல் தவிக்கின்றது. ஏனெனில் வடகிழக்குத்தமிழர் தேசியம் என்று ஒருகுடையில் நிற்பதாலும் வடகிழக்கு பிராமணர் தம்மை சாதிகட்டமைப்பாக மட்டுமே கருதுவதாலும் அதாவது ஆரியருடன் தம்மை தொடர்புபடுத்தி எண்ணாததன்மையாலும் சதிகாரரின் கனவுகள் நனவாக மறுக்கின்றன. இலங்கையில் அரசியல்ரீதியாக தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை என்னுடைய எழுத்துத்தான் நவிலவேண்டும் என்று இல்லை.
தமிழ் எதிர்நோக்கும் சவால்களையறிந்து விழிப்புணர்வுடன் செயலாற்றுவது எமது கட்டாயகடமையாகும். நாம் விடுகின்ற தமிழ் பொருட்பிழைகள், சொற்பிழைகள் என்பவற்றை தமிழாசிரியர்களின் துணைகொண்டு களைவது கடமையாகும். தமிழாசிரியர்களும் இதற்கு துணை நிற்கவேண்டியது கடமையாகும். சதிகாரர்களிடம் இருந்து விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு கவசமாகும். அவர்களை அரசியல் மற்றும் பொருளாதார வழிமுறைகளில் தோற்கடிப்பதே அவர்களுக்கு பாடம் புகட்டும் வழிமுறையாகும்.

நன்றி
மேலும் படிக்க...

Friday, July 25, 2008

மீண்டு வா தமிழா..........கை கொடு!

தமிழுக்குள் சாதியை
ஒழியுங்கள்!
தமிழெனும் சாதியை
வளர செய்யுங்கள்!
தமிழா!
எந்த இனத்தவனும்
தன்னெறியை துறந்ததில்லை!
பெண்ணுக்காய் பொன்னுக்காய்
மண்ணுக்காய் நீ-மட்டும்
உன்னெறியை துறக்கலாமோ?
கடல் கடந்துவந்து
பொன்னைக் காட்டியதும்
முதுகெலும்பைத் துறந்து
ஓடோடிப்போனவனே!
பார்த்தாயா இன்று
உன் நிலையை!
வந்தவன் உன்
மண்ணிலுள்ள வளமெல்லாம்
குடித்தான்!
பண்க்கார நாடானான்!
தனக்கு உணவாக்க
உனக்கு விறகுதந்தான்!
நீயோ;
அது செய்தான்
இது செய்தான்
என்று விறகு
வாங்கிய கதையை
தம்பட்டம் அடிக்கின்றாய்!
வந்தவன்,
உன் பொட்டை
அழித்தான்
பூவை அழித்தான்
நெற்றியில் இருந்த
பட்டையை அழித்தான்!
உனக்கு வெள்ளைத்
தோளைத் தந்தானா?
நீ போரில்
சாகும்போது ஓடோடி
வந்தானா?
நலந்தானேனும் கேட்டானா?
வந்தவன் அழித்தது
பொட்டும் பூவும்
பட்டையையும் மட்டுமல்ல!
உன் மண்ணுரித்தையும்தானடா!
நீ செய்தபிழை
பொறுக்கா சங்கிலியன்
மதிகெட்டு கொலைவெறி
பூண்ட வேளையிலே
வந்தவன் உன்னைக்காக்க
துணிந்தானா?
அன்றி தன்னைக்காக்க
பத்திரமாய் தன்னுடமைகளோடு
அம்போ என்றுஉன்னைவிட்டு
ஓடோடிச்சென்றானா?
சொல்லடா தமிழா
சொல்லு!
ஆபிரிக்காவில் இப்படித்தானடா
மதம் பரப்பினான்!
மொழி பரப்பினான்!
சுரண்ட இல்லாதபடி
எல்லாத்தையும் சுரண்டினான்!
கடைசியில் எயிட்சைக்
கொடுத்தான்!
கை கழுவிவிட்டுவிட்டான்!
நாளைக்கு உன்க்கும்
அதுதான் கதி!
தமிழா!
உன் தாய்
உன்னை அழைக்கிறாள்!
கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே தோன்றிய
மூத்தகுடி நீயடா!
அன்றே தோன்றியது
உன்னுடைய நெறியுமடா!
ஆரியன் வந்தான்!
தன்னெறி ஆக்கினான் - உன்
நெறியை!
தனக்கேற்ற மாதிரியும்
ஆக்கினான்!
சாதியைப் படைத்தது
ஆரியன்!
உன் நெறியல்ல!
அன்று மௌனியாய்
இருந்துவிட்டு இன்று
பிதற்றுகின்றாய் சாதி
செப்பும் நெறியென்று!
கருப்புச்சாதி வெள்ளைச்சாதி
அங்கு உதுதான்
பிரச்சினையாம்!
ஆயிரம் சாதி
அரேபியாவிலும் உண்டடா!

தாயில் குறையெனின்
மாற்றான் தாயை
உன் தாயென்று
நவிலத்தான் முடியுமா?
முலையில்லாத் தாயிடம்
பாலை எதிர்பார்க்கத்தான்
முடியுமா?
நவிலடா தமிழா
நவிலு!

உன் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
போட்டது பட்டையடா!
உன் பூட்டன்
சொன்ன சித்தமருந்து
பொய்யாய் போகவில்லை!
உன் பூட்டன்
சொன்ன சோதிடமும்
பொய்யென்று விஞ்ஞானத்துணையுடன்
நிறுவிக்க உன்னால்
முடியவில்லை!
உன் பூட்டன்
கட்டிய கட்டிடங்களும்
செதுக்கிய சிற்பங்களும்
உன் விஞ்ஞான
மூளைக்கு விளங்காத
புதிர்கள்!
தஞ்சை பெரியகோவில்
கட்டிய சூத்திரமே
தெரியவில்லை கட்டிட
விஞ்ஞானம் பயின்ற
உனக்கு!
மதுரை மீனாட்சி
திரு அரங்கம்
எல்லாமே உன்
கற்பனைக்கு அப்பாற்பட்டவை!
அத்தனையும் உன்
பூட்டனின் திறமையடா!
அவன் சொன்ன............
அவன் வாழ்ந்த.........
தமிழர் நெறி
எப்படிப் பொய்த்துப்போகுமடா!
பௌத்தமும் சமணமும்
உன்னைத்தேடி வந்தவேளை
இரண்டுமே உண்டு
எங்கள் நெறியிலென்று
சாதியைத் தாங்கிக்கொண்டு
வழியனுப்பி வைத்தவனே!
யார் கண்ணடா
உன்மீது பட்டது?
வா..........................
மீண்டு வா....................
கை கொடு!
"சாதியில்லா வேதநெறி
தழைத்தோங்க மிகு
சைவத்துறை விளங்க"
வா..............
தமிழா வா!
கை கொடு!
தூங்கினது போதும்!
வா..............மீண்டு வா!
மேலும் படிக்க...

Tuesday, July 22, 2008

இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்

"என்று தோன்றினாள் எங்கள் தாய்" என்று பாரதி வியந்து பாடுகின்றான். ஆம், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி சிவம் மட்டும் அல்ல தமிழும் தான். ஆதலால் தான் சிவனின் மகள் என்று தமிழை பாரதி பாடியுள்ளான். அப்படி அவன் குறிப்பிட தொன்று தொட்டு தமிழர்நெறியாக சைவநெறி விளங்கிவருவதும் காரணமாயிற்று.தொன்மையான புகழுடைய சைவநெறி காலப்போக்கில் வடநாட்டால் ஏழு நெறிகளாக திரிவுபடுத்தப்பட்டது. வடக்கரான அதிசங்கரரால் அவ்வேழுநெறிகளும் அடங்கும் வகையில் சுமார்த்தம் எனும் புதுநெறி உருவாக்கப்பட்டது. அவர் சிவனின் அவதாரம் என்று வடநாட்டார் அறிமுகப்படுத்தி தமிழருக்கு ஊட்டி சைவத்தை அழிக்கமுயன்றனர்.இரத்தத்தில் தோய்ந்து பிறந்ததாய் சிவனுக்கு இலக்கணம் இல்லை என்ற திருமந்திரம் மூலம் ஆதிசங்கரரும் அவருடைய சுமார்த்தமும் தமிழரிடையே அன்று எடுபடமுடியவில்லை.
இந்திய சுதந்திரத்தின்போது மதரீதியாக பாக்கிஸ்தான் பிரிந்தபோது ஏனைய மாநிலங்களை பிரியாமல் இருக்கச்செய்தது இந்து என்ற மந்திரமே! ஆயினும் தமிழ்நாட்டை பல உரிமைகளை விட்டுக்கொடுத்தே காக்கவேண்டியநிலைக்கு உள்ளானது வடக்கு. அதன்மூலம் விழிப்புண்ர்வுபெற்ற வடக்கு தமிழ் நாட்டில் இந்துத்துவத்தை புகுத்தவேண்டியதன் அவசியத்தை உண்ரத்தொடங்கியது.இந்துத்துவம் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருதனித்துவ இனங்களினதும் அடையாளங்களை அழியச்செய்து இந்தியாமுழுவதற்கும் பொது அடையாளமாக வடநாட்டின் பண்பாட்டை பரப்புவதாகும்.அவ்வேளை இந்துத்துவப்பார்ப்பனீயத்தின் கண்ணில்ப்பட்டது ஆதிசங்கரர் படைத்த சுமார்த்தமே! அதையே இந்துத்துவக் கொள்கையாக்கினர். இந்து என்ற சொல் வேதத்திலும் இல்லை. ஆகமங்களிலும் இல்லை. பாரசீகர் பாரதத்தவரை திருடர் என்று பொருள்ப்படவமைத்த சொல்த்தான் அது.
தமிழ்நாட்டில் இந்துத்துவக்கொள்கையான சுமார்த்தத்தை ஒரளவு(கிட்டத்தட்ட) பரப்பிவிட்டனர் என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. தமிழ்நாட்டு ஆதிசங்கரரின் வாரிசுக்களான சங்கராச்சாரியார்கள் இதன் அத்திவாரம். பாபர் மசுதி பிரச்சினையில் அவரை இந்துத்தலைவராகக் காட்டியதை கவனிக்க.தமிழ்நாட்டில் நாத்தீகவாதம் அரசகொள்கையாக இருப்பது அவர்களுடையதிட்ட்திற்கு இலகுவாயிற்று. சமயபாடம் மாணவர்களுக்கு இல்லாததனால் பணபலமுடைய இந்துத்துவப்பார்ப்பனீயம் சுமார்த்தகொள்கையுடைய சஞ்சிகைகளை வெளியிட அவையே மாணவர்களைச் சென்றடைந்தது. விளைவு தமிழ்நாட்டு தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்த்தேவாரம் தெரியாதநிலை! "ஓம் பூர் புவஸ்வக" தெரிந்த குழந்தைக்கு "தோடுடைய செவியன்" தெரியாத அவலம்! தமிழகத்தமிழர் சிலர் "நான் சைவம்" என்று சொன்னபோது " நான் நீங்க வேச்சுடேரியனா என்று கேட்கேல உங்க ரிலீஜனை கேட்டேன்" என்று என்னோடு கடுத்துக் கொண்டனர். இன்று தமிழகத்தில் சைவத்தின் நிலை இதுதான்! அன்று சிதம்பரத்தில் பார்ப்பனரால் திருமுறைகள் தமிழுலகையடைந்துவிடக்கூடாது என்று ஒழித்துவைத்து அரைவாசியை அழித்ததும் இராச இராசசோழனால் அவைமீட்க்கப்பட்டதும் சிலகாலங்களுக்கு முன்னர் சிதம்பரத்துபார்ப்பனீயத்தால் மீண்டும் சிதம்பரத்தில் தமிழில் திருமுறை படிப்பதால் கோயில் மகிமை இழக்கப்படுவதாகக்கூறி தடையுத்தறவுகோறி வழக்குத்தொடுத்து தோல்விகண்டதும் நிதர்சனம்.

இலங்கையில் தொன்றுதொட்டு சைவசமயம் சிறப்பாகப்பேணப்பட்டமை காரணமாகவே திருமூலர் எம்திருநாட்டை சிவபூமியென்று குறிப்பிட்டார். நாவலர் காலத்திலும் அதுவரைக்கும் மூக்கை நுழைக்க முடியாது தவித்துக்கொண்டிருந்த சுமார்த்தம் இந்துத்துவக்கொள்கைமூல்ம் அரசியல் ஆக்கப்பட்டமையினால் 1950களின் பின்னர் இலகுவாக இலங்கைக்குள் நுழையக்கூடியதாயிற்று.இலங்கை சுதந்திரம் பெற்றகாலத்தில் இந்தியாச்செட்டியார்கள் இலங்கையில் பணபலமுடையவர்களாக இருந்ததன்மையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமயத்தலைவர்கள் அவர்களிடத்தில் தங்கியிருக்கும் தன்மையேற்பட்டது. பெரியார்திடலில் வளர்ந்த இந்தியத்தமிழர்களே இந்தியா-இந்து என்று குழம்பும்போது இலங்கை செட்டியார் சமூகம் அவ்வாறு இருக்காது என்று எதிர்பார்ப்பது கடினந்தான். அதன் காரணமாக இந்துக்கல்லூரி.............இந்துமாமன்றம்...........இந்துகலாச்சாரத்துறை..............இந்துகுருமார் பீடம்..........என்றெல்லாம் மலரத்தொடங்கி இலங்கையில் இன்று சுமார்த்தம் விரியத்தொடங்கிவிட்டது.
சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து எம்மொழிச்சொல் என்று கேட்டு ஆய்வு நடத்தி இந்து என்ற சொல்லையே நிராகரித்துவிட்டார். சேர்.பொன்.இராமநாதனிடம் "நீங்கள் இந்துவா?" என்று வினாவிய ஆங்கிலேயரிடம் மறுமொழியாய் "இல்லை, நான் சைவன்" என்று மறுத்துரைத்ததாக திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏன், இந்து என்ற சொல்லை பிரபல்யப்படுத்திய சுவாமி விவேகானந்தர் கூட இலங்கையின் சைவசிறப்புத்தன்மையை பாரட்டியுள்ளார். ஆனால் இன்று? நாவலர் தெளிவாக சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம் சைவசமயம் என்று இடித்துரைத்து இருக்க கொழும்பு பார்ப்பனீயமும் அதற்கு துணையாக நிற்கும் மாமன்றங்களும் எப்படித்தான் மதியிழந்து பணத்திற்காய் சைவத்தை விற்க்கத்துணிந்ததோ தெரியவில்லை!

இன்று எம் கல்லூரி நிகழ்ச்சிகளில் திருமுறைகளோடு "ஓம் பூர் புவஸ்ச"வும் வந்துவிட்டது. நாளை தமிழகத்தமிழ் குழந்தைகள் போல் திருமுறைகள் தெரியாதநிலைதான் எம்குழந்தைகளுக்கும் என்கின்ற அறிகுறிதான் இது.வைணவம் உள்ள இந்தியாவிலேயே ஆஞ்சநேயருக்கு தேர் இன்றுவரை இழுக்கவில்லை. ஆனால் இலங்கையில் ஆகமத்தை கேட்க்க ஆளில்லாத்தன்மையினால் இழுக்கிறார்கள்...............இழுக்கிறார்கள்............... இழுக்கிறார்கள்............... என்னென்னவோ இழுக்கிறார்கள்.இவர்களுக்கு இந்து என்னும் சுமார்த்தம் உருவானால் போதும். அதில் அர்த்தம் ஆகமம் இருக்கத்தேவையில்லை. அர்த்தமில்லாத் இந்தக்கலப்பட இந்துவால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானதை நினைவில் கொண்டால் சரி!
சாயி சங்கம்...............கல்கி சங்கம்.......... கரே ராமா கரே கிருஸ்ணா" சங்கம் ( ஓம் நமோ நாராயணா சங்கம் என்று உருவாக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழ் வழிபாட்டை குறித்துவிடும் என்ற பயம்........வெறுப்பு..............வடநாட்டாருக்கு. "குலந்தரும் செல்வம் தரும்.................தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் அது நாராயணா எனும் நாமமே" என்று தமிழ் ஆழ்வார்கள் பாடியிருக்க "கரே ராமா கரே கிருஸ்ணா" மந்திரம் தான் கலியுக காவல் மந்திரம் என்கின்றனர்.)...........எத்தனை எத்தனை சிவவாகமத்திற்கு எதிரான வழிபாடுகளை சைவவீட்டில் புகுத்திவிட்டனர்.கொழும்பு தெகிவளை திருமால் ஆலயத்தின் முன்னால் நின்று "சிவனை வழிபட்டால் பத்துக்கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் கிருஸ்ணருக்கு அப்படியில்லை" என்று கரே ராமா கரே கிருஸ்ணா இயக்கத்தினர் எடுத்தியம்பிய இழிவு! இலங்கையில் தொன்று தொட்டு வல்லிபுர திருமால் கோயில், பொன்னாலை வரதராசாப் பெருமாள் கோயில் , வண்ணை வெங்கடேசுவரர் கோயில் என்று காத்தற்கடவுளாகிய திருமாலை வழிபடும் வரலாறு தெரியாத இந்த ஏசண்டுகளும்(தரகர்கள்) அவர்களிடம் விலைபோன மாமன்றங்களும் கொழும்பு பார்ப்பனீயமும் நாவலர் மீண்டும் வந்தால் கல்லேறியத்தயங்க மாட்டார்கள்! இவர்கள் விரும்புவது எல்லாம் பாபர் மசுதி இடித்தது போல் மசுதிகளையும் சேர்ச்சுகளையும் இடித்தழிக்கும் இந்து சமூகத்தை இலங்கையில் உருவாக்குவதும் இந்தியா மத்திய அரசுக்கு அடிமையான இலங்கை சமூகத்தை வளர்ப்பதும் தான்!
இவையாவுக்கும் வடிகாலாய் அமைந்திருப்பது யுத்தசூழ்நிலையில் யாழ் சமூகம் சைவத்தலைமையை கொழும்பிடம் இழந்தமையேயாகும். சைவத்தை வழிநடத்தும் உரிமை, கடமை யாழ்.நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு இருந்தும் மௌனமாய் இருப்பது கவலையை ஊட்டுகின்றது.

சைவ இளையோர்களே, நாவலர் வருவார் வருவார் என்று காத்திராது விழித்தெழுங்கள்! சமய விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம்!

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

சிவத்தமிழோன்
மேலும் படிக்க...