"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 6, 2012

சீனத்தில் தமிழ்!! சென்னையில் சைவநெறி?

சீன வானொலியில் தமிழ்மொழிப்பிரிவு சீனர்களால் நடத்தப்படுகின்றமைக்கான காணொளியை இங்கு இணைத்துள்ளேன். இந்தக்காணொளியை இணையமொன்றினூடாக பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.



இதுபோல் இரசியாவிலும் தமிழ்மொழியை பயிற்றுவிக்கப்படுவதாக அறிந்துள்ளேன். ஜெர்மனி பல்கலைக்கழகம் ஒன்றில் தனித்தமிழ்த்துறை இருப்பதை பொதுவாக செம்மொழிமாநாட்டின்மூலம் பலர் அறிந்திருப்பர். பெருமைப்படக்கூடிய விடயங்கள்தான் இவை.

ஆனால் தமிழ்மொழிக்கு அழகு சேர்க்கும் நெறியாகிய சைவசமயத்தை இவ்வண்ணம் பரப்பும் முயற்சிகள் உண்டா? விடை பூச்சியம்தான்!

கிருஷ்ணபக்திக்கழகம், இராமகிருஷ்ண மிஷன், பாபா மிஷன், அம்மாபகவான் மிஷன், மாதா அமிர்தானந்தமாயி மிஷன், சின்மியாமிஷன் என்று அத்தனையும் "சங்கர அத்வைதத்தை" போதிக்கும் மிஷன்களும் வைணவமிஷன்களுமே உலகம் முழுக்க கிளைபரப்பி "இந்து" மதமாக மிளிர்கின்றன!!! நாம் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று பாடியவண்ணம் சாதி வளர்த்து நம் தமிழுலகில் நம்மவர்களை பிறமதங்களுக்கு அனுப்பி வேடிக்கை பார்த்து இன்னும் கிணற்றுத்தவளையாகவே இருக்கின்றோம்........எப்போது எமக்கு அறிவு வரும்?

பிள்ளைவாள்......முதலியார்.....என்று பெயருக்கு பின்னால் சாதியை கொட்டை எழுத்தில் எழுதிக்கொண்டு பசு என்னும் ஒரேசாதியை சார்த்தவர்களே ஆன்மாக்கள் என்பதை மறந்து சைவம் பேசுகின்றோம்!!!! ஆதீனமுதல்வராக இன்னென்ன சாதியுடையோரே வரலாம் என்று வரையறை செய்து வியாக்கியானம் பேசுகின்றோம்.....ஆக சைவசமயம் வளர நாம் என்ன செய்தோம்???

உலகம் முழுக்க "இந்து" மத அமைப்புகளாக சங்கர அத்வைத அமைப்புக்களும் கிருஷ்ணபக்திக்கழகங்களும் பெருகியவண்ணம் இருக்கின்றன..........சைவசித்தாந்தத்தை வளர்க்க நாம் என்ன செய்தோம்???
எவரேனும் மேல்நாட்டுக்காரன் சைவசித்தாந்தத்தை தானே தேடிவந்து படித்து இரண்டு வார்த்தை புகழ்ந்து சொன்னால் அப்படிப்பட்ட அந்த மேல்நாட்டுக்காரரை தலையில்தூக்கி கொண்டாடியதைத்தவிர நாம் ஏதேனும் உருப்படியாக செய்தோமா???

ஆங்கிலமொழியில் சைவசித்தாந்தம் எழுதியதைத்தவிர நாம் உருப்படியாக ஏதேனும் செய்திருக்கின்றோமா? புத்தகங்கள் எழுதுவது பயனுடையதே! ஆனால் அது தேடிப்படிக்கும் ஆர்வமுடைய ஒருசிலரையே சென்றடையும்!!! கிருஷ்ணபக்திக்கழகங்கள் போன்று நாம் ஏதேனும் நடைமுறையில் செயற்படுத்தியிருக்கின்றோமா?

பெலரஸ்(BELARUS) என்னும் முன்னைய இரசியாவில் நான் இருந்தபோது நடைபாதையில் நின்று இரசியமொழியில் உள்ள "கிருஷ்ணர் கதை" புத்தகத்தை ஒரு இரசியர் விற்ற வண்ணம் இருந்தார். நான் ஆர்வமுடன் வாங்கினேன். ஏனெனில் சைவசித்தாந்தம் வேதநெறியில் ஏதேனும் ஒன்றை தழுவியிருத்தல் புண்ணியத்தின் விளைவு என்று கூறுகின்றது. பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர் சிலர் என்னிடம் பலமுறை உங்கள் சமயப்பழக்கவழக்கங்களை அறிய ஆவல் என்று கூறியுள்ளனர்.எனவே அவர்களுக்கு இப்புத்தகத்தை வழங்கலாம் என்று வாங்கி வழங்கினேன்.

ஆனால் அப்போது என்மனதை வாட்டியது இதுபோல் சைவசித்தாந்த புத்தகமொன்றை இரசியமொழியில் வாங்கக்கூடியதாக இருக்குமா? ஒரு இரசியர் மொட்டைவழித்து சிறு குடுமிவைத்து நடைபாதையில் நின்று கிருஷ்ணபக்திபற்றி எடுத்துரைக்கின்றாரே......ஏன் இவ்வண்ணம் நமது சைவசமயம் வளர்க்கப்படவில்லை? இவ்வாறான கேள்விகள் என்னுள் எழுந்து வாட்டியது!!! நம்மவர்கள் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று கோயிலுக்குள் உரைப்பதோடு சரி......செயலில் எதுவும் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்!!!

சென்னையில் ஒரு இந்துப்பாடசாலையில் கற்ற மாணவர் சிலரை சந்தித்தபோது "திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர் "  ஆகியோர் யார் என்றே தெரியாதநிலையை அறிந்தபோது நமது சமயம் எப்படி "இந்து"வாக வளர்க்கப்படுகின்றது என்பதை உணர்ந்துகொண்டேன்!!! அவர்களிடம் காலை பிரார்த்தனை என்று ஒரு கையேடு இருந்தது. வாங்கிப்பார்த்தால் எல்லாமே மந்திரம்தான்!!! குருபிரம்மா.... என்று தொடங்கி ஓம் பூர் புவச... என்று மந்திரங்கள் பிரசுரிக்கப்பட்ட கையேடு அது. அவர்கள் என்னிடம் இவற்றையே தாம் பிரார்த்தனையின்போது படிப்பது என்றனர்.

நான் அவர்களுக்கு "தோடுடைய செவியன்" தெரியுமா என்று பார்த்தேன்......பாவம் அவர்களுக்கு தெரியவில்லை!!!
தேவாரம் என்றால் என்னென்று கேட்டேன்......திருவாசகம் என்றால் என்னென்று கேட்டேன்.....!!!!  திருவாசகத்திற்கு விடை வந்தது.....ஆம் இளையராஜாவின் சிம்பொனி வெளியீடு என்றனர்!!!!
கொஞ்சம் மனதை ஆறுதல்செய்துகொண்டு நீங்கள் சைவசமயமா என்று கேட்டேன்? இல்லை நொன்வேஜ் என்றனர்!!!!!

இப்போது சொல்லுங்கள் நமது சைவசமயம் நமது மண்ணில் வளருகின்றதா??? ஆக; நமது மண்ணிலேனும் நமது சமயத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முன்வருவோமாக!!!

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் படிக்க...