"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, August 31, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6

ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியில் ஐந்தொழில்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

வழமைபோலவே ஒரு வேண்டுகோள்!  முன்னைய பகுதிகளை படித்து தெளிவுபெற்றுக் கொண்டு இப்பதிவை படித்தால் பூரணமான தெளிவு ஏற்பட வாய்ப்புண்டு.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1

சைவநெறி கூறும் ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாகும். முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தானே இவையனைத்தையும் செய்வதும் உண்டு. பிரம்மா திருமால் உருத்திரனைக் கொண்டு செய்விப்பதும் உண்டு. இவர்கள் தமது புண்ணிய விசேடத்தால் முழுமுதற்பொருளாகிய சிவப்பரம்பொருளிடம் அதிகாரசக்தியை அவருடைய ஏவலால் பெற்று படைத்தல்,காத்தல்,அருளல் ஆகியவற்றை ஆற்றுவர்.

மறைத்தலை மகேசுவரனும் அருளலை சதாசிவனும் ஆற்றுவர்.

இறைவனாகிய சிவப்பரம்பொருள் எந்தவொரு கருவி காரணங்களும் இன்றி நினைத்த மாத்திரத்தில் ஐந்தொழில்களை மேற்கொள்வார்.

வேதமரபுப்படி படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூன்று தொழில்களே பேசப்படும். ஆனால் சிவாகம மரபுப்படி ஐந்தொழில்கள் சொல்லப்படுகின்றன.
காக்கும்போது மறைந்து நிற்றலால் மறைத்தல் காத்தலிலும் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு அழித்தல் நடைபெறுவதால் அருளல் அழித்தலிலும் அடங்கும்.

படைத்தல் - உள்ளதைத் தோற்றுவித்தல் (இல்லாததை தோற்றுவித்தல் எனப்பொருள் படமாட்டாது. உதாரணமாக பனிக்கட்டியைத் தோற்றுவித்தனர் என்றால் அங்கு நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளது என்றுதான் பொருள்படும். அதுபோலவே சூக்குமநிலையில் இருந்ததை(மாயையில் இருந்து) தூலநிலைக்கு கொண்டு வருதலே படைத்தல் எனப்படும்.அதாவது காரணநிலை(சூக்குமநிலை)யில் இருந்து காரியநிலைக்கு(தூலநிலைக்கு) கொண்டு வருதல். மாயையில் இருந்து தனு,கரண,புவன போகங்களைப் படைத்தல்.

காத்தல் - தூலநிலைக்கு கொணர்ந்தவற்றை அந்தநிலையில் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தல். அதாவது தனு,கரண,புவன போகங்களை உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப அனுபவிக்கும் வரை நிலை பெறச்செய்தல்

அழித்தல் - தூலநிலையில் இருந்ந்து சூட்சும்ச் நிலைக்கு வருதல், அழித்தல் என்பது முற்றாக இல்லாமல் செய்தல் என்று பொருள் அன்று.
பிறவிச்சுழற்சியால் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவகைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.

மறைத்தல் - பற்றுக் கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக இறைவன் தன்னை மறைத்து உலகத்தையே அவ்வுயிர்கள் காணுமாறு காட்டுதல்.

ஆணவம் காரணமாக இறைவனே உயிர்களுக்கு கன்மம்,மாயை ஆகியவற்றை கூட்டுவித்தான். அதாவது ஆணவ நோய்க்கு மருந்தாக ஏனைய இருமலங்களை கூட்டுவித்தான். மும்மலங்களும் சடப்பொருட்கள். தாமாகத் தொழிற்படாது. இறைவன் அவற்றைத் தொழிற்பட வைத்து அவற்றின் சக்தியை குறைவடையச் செய்கின்றான். சடப்பொருள் தொழிற்பட அதன் சக்தி தேயும் என்பது பௌதீக விஞ்ஞானம்! அதை இங்கு பொருத்தி உணர்க.

அருளல்
- பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக் காட்டித் தன்னுடைய திருவடியில் சேர்த்தல்.

எனவே படைத்தல், காத்தல்,அழித்தல் என்பன மாயையிலும் மறைத்தல்,அருளல் உயிர்களிடத்திலும் நிகழ்கின்றன.


சிவபெருமான் ஐந்தொழில்களை தனது திருநடனத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.சிவப்பரம்பொருளின் திருநடனத்தை மூன்று வகையாக நோக்கலாம்.
1.ஊன நடனம்
2.ஞான நடனம்
3.ஆனந்த நடனம்

ஊன நடனம்
ஊன நடனத்தினூடாக உயிர்களுக்கு கட்டுண்ட உலகவாழ்வை அளிக்கின்றார். அதாவது உயிர்களுக்கு பிறப்பை வழங்குவது. இவ்நடனத்தின் வழியாக உயிர்கள் உலகச்சிற்றின்பத்தை துய்க்கின்றன. ஊன நடனத்தை குறை கூத்து என்றும் வழங்குவர். குறைவான கால அளவுடைய இன்பங்களை(உலகியல் சிற்றின்பங்கள்) தருவதால் குறைகூத்து என்ப்ர்.


தூல ஐந்தொழில் - உலகத்தை படைத்து காத்து அழித்து மறைத்து அருளுகின்ற ஐந்தொழில்.

சூக்கும ஐந்தொழில் -  சர்வ சங்கார காலத்தில் உலகம் முழுவதையும் அழித்த பின்னர் மீண்டும் தோற்றுவிக்க ஆற்றும் ஐந்தொழில்.

அதிசூக்கும ஐந்தொழில் - உயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருந்து அறிவைத் தோற்றுவித்தல் ஒடுக்குதல் செய்தல். இறைவன் உயிருக்கு உயிராக உள்நின்று உணர்த்துவதனாலேயே உயிருக்கு அறிவு நிகழுகின்றது.

ஞான நடனம் 
உயிர்களுக்கு வீட்டைத் தருவது.
ஊன நடனத்தால் உலக இன்பங்களை உயிர்கள் அனுபவிக்கின்றன.படிப்படியாக உலக இன்பம் நிலையற்றது என்பதை உணர்ந்து பக்குவப்பட்டு; சிவபெருமானை அடைய நாடிநிற்கும்போது அவ்வுயிர்களின் மலங்களை நீக்கும்பொருட்டு ஆற்றும் ஐந்தொழில்.

ஞான நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - மாயையை உதறுதல்
காத்தல் - வல்வினையைச் சுடுதல்
அழித்தல் - மலம் சாய அமுக்கல்
மறைத்தல் - உலகத்தை மறைத்தல்
அருளல் - உயிர்களை ஆனந்த ஒளியில் அழுத்துதல்

ஆனந்த நடனம்
ஞான நடனத்தால் பேரின்பத்தை நுகர தலைப்பட்ட சுத்த ஆன்மாக்கள் தொடர்ந்து பேரின்பத்தை நுகரும் பொருட்டு, அவர்களின் அறிவு இச்சை செயல்களைத் தன்னையே பொருளாகப்பற்றி அழுந்தி இன்பத்தை நுகருமாறு செய்தற்கு ஆற்றும் ஐந்தொழில்.

 ஆனந்த நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - சிவானந்த அனுபவத்தை தோற்றுவித்தல்
காத்தல் - அந்த அனுபவத்தை காத்தல்
அழித்தல் - தற்போதத்தை அழித்தல்
மறைத்தல் - உயிர்,சிவம் இரண்டு என்பதை மறைத்தல்
அருளல் - பேரின்பத்தை அழுந்தி அனுபவித்தல்

சிவபெருமான் ஆடுகின்ற நடனம் ஒன்றுதான். ஆனால் உயிர்களின் பக்குவத்தன்மைக்கு ஏற்ப அது ஊன,ஞான,ஆனந்த நடனமாக அவ்வுயிர்களுக்கு தோன்றுகின்றது.

இறைவனின் ஐந்தொழிலை விளக்கும் இறைவனின் திருக்கூத்துப்பற்றி விரிவாக அறிந்து கொள்வதற்கு தமிழர் கண்ட தாண்டவக்கோன் என்னும் கட்டுரையைப் படிக்க. அடுத்த பகுதியில் அத்துவிதம் என்றால் என்ன? சங்கரரின் அத்துவிதத்தை கேவலாத்துவிதம் என்று ஏன் சொல்வர்? சுத்தாத்துவிதம் என்றால் என்ன? இவற்றை சற்று விளக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்7

மேலும் படிக்க...

Monday, August 15, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5

பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி பகுத்தறிவுப்பகலவன் என்று கொளுத்துகின்ற கடும் வெய்யிலிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?  விடையை இந்தப்பதிவை முழுமையாகப் படித்தால் பெற்றுக்கொள்ள முடியும்.சரி; நாங்கள் பகுதி ஐந்துக்குள் நுழைவோம். சைவசித்தாந்தத்தை அறிந்து கொள்வோம்.
சிவபெருமான் அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களைக் கடந்தவன் என்றும், அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களை ஏன் பூணுகின்றார் என்றும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஐந்தொழில்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இறைவனின் வடிவங்கள்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். பூரணமான தெளிவை ஏற்படுத்த அவை உதவும்.

உருவத்திருவடிவங்கள் மூன்றுவகையாக கருதப்படுகின்றன.

1.போக வடிவம்:
உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு, மணக்கோலம் பூண்டிருப்பது.உயிர்களின் பொருட்டு கல்யாண சுந்தரவடிவம் தாங்கினும் சிவபெருமான் போகம் நுகருபவதில்லை.

உ+ம் - கல்யாண சுந்தர மூர்த்தி வடிவம்



2.யோக வடிவம் - உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு, குருவடிவம் கொண்டிருப்பது.

உ+ம் :- தென்முகக்கடவுள் வடிவம்


3. வேக வடிவம் - இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துன்பத்தைப் போக்கும் பொருட்டு வேகம் கொண்டவராக போர்க்கோலம் பூண்டிருப்பது. உயிர்களின் வினையைப் போக்குவதற்கு தாங்கும் வடிவம் இதுவாகும்.
அட்ட வீரட்டச் செயல்கள் ஆற்றியபோது எடுத்த வடிவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும்.காலனை உதைத்தது,சலந்திரனைத் தண்டித்தது,திரிபுரம் எரித்தது என்பன உதாரணங்களாகும்.

உ+ம் - காலசம்கார மூர்த்தி

இறைவன் பூணுகின்ற தாதான்மிய சம்பந்தத்தில் மூவகை வடிவங்களாகிய அருவம்,அருவுருவம்,உருவம் தாங்குதலையும்; உருவவடிவத்தின் மூவகைத்தன்மைகளையும் பார்த்தோம். இனி; தாதான்மிய சம்பந்தத்தினால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில் பற்றி பார்ப்போம்.


சிவபெருமானின் ஐந்தொழிலை சிவபெருமானின் திருநடனத்தினூடு காண்பது சைவசமயமாகும்.எனவே; இறைவனின் ஐந்தொழில்களை உணர்த்தும் இறைவனின் கூத்தை வெளிநாட்டாரும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கண்டு வியப்படைந்துள்ளர்.  விஞ்ஞானத்தை விஞ்சிய மெஞ்ஞான திருநடனத்தைக் கண்டு எமது பண்பாட்டுச்சிறப்பை பாராட்டாதோர் எவரும் இலர்.

முதலில்; இறைவனின் ஐந்தொழில் ஆற்றும் கூத்தினைக் கண்டு விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கூறிய கருத்தைக் காண்போம்.

FRITJOF CAPRA எனும் மேலைத்தேய இயற்பியல் வல்லுனர்; நவீன இயற்பியலையும் நடராசப் பெருமானின் திருநடனத்தையும் அழகாக தொடர்புபடுத்தி "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena." என்கிறார்.

பண்டைய கால இந்திய மக்கள் ஆக்கல்,காத்தல்,அழித்தல் அடங்கிய தாண்டவத்தை இறைவடிவாகக் கண்டு சிலைகளாய் வடித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் CARL SAGAN குறிப்பிடுகின்றார்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது. இது தமிழர் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் என்றால் மிகையில்லை. இச்சிலையடியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய நடராசரின் சமசுகிரத துதியுடன் "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." எனும் CAPRA இன் வசனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி கொளுத்துகிற கடும் வெய்யிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?

சரி; அடுத்த பகுதியில் ஐந்தொழில் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6




மேலும் படிக்க...