"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, May 20, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3

ஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த சித்தாந்திகளை ஒப்பிடுவதா? அவர்களின் அரிய முடிந்த முடிவான சிந்தாந்தத்தை ஒப்பிடுவது அழகானதா? இப்படியான எண்ணங்கள் தோன்றியமையால் தவிர்த்துவிட்டேன். சரி; ஜன்ஸ்டீனுக்கு இங்கு என்ன சம்பந்தம்? பார்ப்போம்.

முன்னைய பதிவுகளை படித்தவர்களுக்கு இப்பகுதி இலகுவாக விளங்கும். முன்னைய பகுதிகளை படித்திராவிட்டால்;  சிதம்பர சக்கரமாக இப்பகுதி தோன்றிவிடும். எனவே முன்னைய பகுதிகளுக்குரிய சொடுக்கிகளை கீழே தந்துள்ளேன்.
கடந்த பகுதியில் இறைவனின் சொரூபநிலையை/இயற்கை இயல்பைப் பார்த்தோம்.  இறைவனின் இயற்கை இயல்பே சத்து, சித்து, ஆனந்தம் என்னும் சச்சிதானந்தம் என்று பார்த்தோம். சத்து,சித்து,ஆனந்தம் என்றால் என்ன என்பதையும் பார்த்தோம். இப்பகுதியில் சத்து,சித்து,ஆனந்தத்தை விரித்து எப்படி எண்குணம் உடையவனாக இறைவனை சைவசித்தாந்தம் காணுகின்றது என்பதை பார்க்கவுள்ளோம். 

அதற்கு முதல்; இறைவனின் சொரூப இயல்புக்கும் ஜன்ஸ்டீனின் இறைகோட்ப்பாட்டுக்கும் உள்ள தொடர்ப்பை தெரிந்து கொண்டால் விஞ்ஞானத்தை மிஞ்சிய நெறி சைவநெறி என்பதை உணர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.

ஜன்ஸ்டீன் ஆளுமையுள்ள இறைவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்."ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்லவேண்டும்" என்கிறார்.
சைவசித்தாந்தம் இறைவனின் சொரூப இயல்பை/ இயற்கை இயல்பை அப்படித்தான் காணுகின்றது. ஆனால் ஜன்ஸ்டீனின் கருத்தை கடந்து இன்னும் தெளிவாக இறைவனின் இயற்கை இயல்பை விளக்குகின்றது.

அனைத்து ஆளுமைகளையும் கொண்ட இறைவனின் இயற்கை இயல்பு(சொரூப இயல்பு) எத்தொழிலும் செய்யாது ஆளுமையற்று இருத்தலே என்கின்றது.

சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடு அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்
தவமுதலி யோகபோகத் தரிப்பவனும் அல்லன் தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே -  சிவஞானசித்தியார்

இப்பாடலையும் அதற்குரிய பொருளையும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். இப்பகுதியில்  மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

"தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால்;  அவர் உருவம்,அருவுருவம்,அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம்,யோகம்,போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவற்றை ஆன்மாக்களுக்கு வழங்குவதன்றி எதையும் அவர் தனக்கு ஏற்பதில்லை.  இவை அவரோடு பொருந்தினாலும், இவை எவற்றாலும் அவர் பற்றப்படுவதில்லை" என்பதே சைவசித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்புக்கு தரும் இலக்கணம்.

ஆக; ஐந்தொழில்கள் பண்ணுகின்ற இயல்பையெல்லாம் கடந்து, "சும்மா" இருக்கின்ற நிலை!  "சிவனே என்று சும்மா இருந்த என்னை..........." என்று நாம் பேச்சுவழக்கில் கையாளுக்கின்றோமே.......அதுதான் சைவசித்தாந்தம் கண்ட அருமை!   அதனால்த்தான் சித்தாந்தம் என்பதன் பொருள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து சிந்தித்து ஏற்பட்ட முடிந்த முடிவு என்கின்றோம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது.ஏன் என்று தெரியுமா? இறைவனின் ஆனந்த தாண்டவ திருவடிவத்தில் பிரபஞ்சப் படைப்பு தொட்டு, ஒடுக்கம் வரையான அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும் அருமையை விஞ்ஞானிகள் கண்டு வியந்தமையால் ஆகும்.திருவாசகத்தின் திருவண்டப்பகுதியினைக் கண்டு, விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்பது சைவரில் பலருக்குத் தெரியாது. உலகம் உருண்டை வடிவானது என்று கூறியதோடு மட்டுமல்லாது, அண்ட பிரபஞ்சங்களின் காட்சியை அழகாக சொல்லிய அருமையோடு, பிரபஞ்ச ஒடுக்கம் -விரிவையும் தெளிவாக விளக்கியுள்ளார். இவற்றை ஏன் நினைவூட்டுகின்றேன் என்றால், சைவசித்தாந்தம் என்பது தத்துவ ஆராய்வின் முடிவு என்பதை சைவர் யாவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே!

சரி, இறைவனின் இயற்கை இயல்பில்(அதாவது சொரூப இயல்பில்) "சும்மா" என்று இருந்த சிவப்பரம்பொருள் எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அவ்வாறு எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்தும் சொரூப இயல்புடைய சிவப்பரம்பொருள் சச்சிதானந்தம் என்று போற்றப்படுவார்.

அதுவென்ன தடத்தநிலை? அடுத்தபகுதியில் அதை விரிவாகப் பார்ப்போம். இப்போது எண்குணங்கள் யாவை என்பதைப் பார்ப்போம்.

தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன். இவனது ஆணைவழியே அனைத்தும்.

தூய உடம்புடைமை - உயிரின் இருப்பை எமக்கு அறிய உதவுவது உடம்பு. அதுபோல் இறைவனது இருப்பை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் உதவுகின்றது. எனவே உவமைகளைக் கடந்த, இப்படிப்பட்டது,இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி.

முடிவிலா ஆற்றல் உடையவன் / அளவிலா ஆற்றல் உடையவன் -  அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.

இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே  ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசத்துக்குள் அகப்படாதவன். ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசம் இறைவனை அணுகும் திறனற்றவை. இறைவனும் இயல்பாகவே அவற்றில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.

பேரருள் உடையவன் - பயன் கருதாது அருள் வழங்கும் தன்மையுடையவன். ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களின் நிமித்தம் அறிவு சுருங்கி, பேரின்பத்தை அனுபவிக்கமுடியாது துன்புறுவது கண்டு; அவற்றுக்கு பாசநீக்கம் செய்து பேரின்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும் என்று எழுகின்ற பெரு இரக்கமே இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுமெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகின்ற இறைவனின் ஒப்புவமையற்ற பெரு இரக்கம்.


இயற்கை உணர்வினன் -  ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது.( ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது) ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.

முற்றுணர்வினன் - அறிவு இயற்கையாகவே விளங்குவதுடன்;  ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன்.அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.


வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் -  பேரின்பம் உடையனாக விளங்குதல். அதாவது யாதொரு குறையும் இல்லாதவன்.


தன்வயத்தனாதல்,தூய உடம்புடைமை,முடிவிலா ஆற்றல் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை 
ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும். 

முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும். 

வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும். 

எனவே சச்சிதானந்த நிலையாகிய இறைவனின் இயற்கைத்தன்மையை சைவசித்தாந்தம் அழகுற விரித்து தெளிவுபடுத்துகின்றது என்றால் மிகையில்லை! 


நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்- சிவஞான போதம் 

அதுசரி, சைவநூல்கள் இறைவனை நிர்க்குணன் என்றும் குறிக்கின்றது. எண்குணன் என்றும் குறிக்கின்றது. குழப்பமாக இருக்கே?
மும்மலப்பிணிப்பால் வருகின்ற சாத்வீகம்,இராசதம்,தாமதம் என்னும் முக்குணங்களைக் கொண்டிருப்பவன் அல்லன் என்ற பொருளிலேயே நிர்க்குணன் என்று சைவநூல்கள் குறிக்கின்றன.

தடத்தநிலையில் எண்குணனாக வெளிப்படும் இறைவனின் எண்குணங்கள் சொரூபநிலையில் வெளிப்படுத்தப்படாது "சும்மா" இருக்கும் சிவமாக சிவப்பரம்பொருள் விளங்கும். இந்நிலையில் சச்சிதானந்தம் என்று போற்றப்படுகின்றார் என்று விரிவாகப் பார்த்தோம்.எம்பெருமான் சிவபெருமான் தன்னுடைய எண்குணங்களை வெளிப்படுத்தி நிற்கும் தடத்தநிலை பற்றி  சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதி 4 இல் பார்ப்போம்.



மேலும் படிக்க...

Saturday, May 14, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2

இறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய சமயங்கள். அதே நேரத்தில்; இதுதான் அந்தக்கடவுளின் பெயரென்று ஏதேனும் ஒரு பெயரைத் திட்டவட்டமாக கூறுகின்றன. பெயருள்ள பொருளுக்கு வடிவம் இருக்கும் என்பது வெளிப்படை உண்மை. இதனால் உருவ வழிபாட்டை நிந்திக்கின்ற சமயங்கள்கூட, விஞ்ஞானத்தத்துவ ரீதியில் பூச்சியமாகிவிடுகின்றன. ஆனால் சைவசித்தாந்தம் அருமையான விளக்கத்தை இறைவனுக்கு அளித்து விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானமாக விளங்குகின்றது.

அப்படியென்ன அருமையான விளக்கத்தை சைவசித்தாந்தம் அளிக்கின்றது?
சிவபெருமானுக்கு சொரூப இயல்பு,தடத்த இயல்பு என்னும் இருவகையான இயல்புகளுண்டு என்கின்றது சைவசித்தாந்தம்.

அதுவென்ன இறைவனின் சொரூப இயல்பு? சரி; இத்தொடரில் சிவபெருமானின் சொரூப இயல்பைப் பார்ப்போம்.
அதற்குமுன்னர் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதி 1ஐ படிக்காதவர்கள் படித்திடுக. ஏனெனில் சைவசித்தாந்தம் பற்றிய அறிமுகத்தை எளிமையாகவும் சுருக்கமான முறையிலும் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.


சைவசித்தாந்தம் இறைவனுக்கு கண்ட அருமையான இலக்கணமே இறைவனின் சொரூப இயல்பு. இறைவனின் சொரூப இயல்பை சிறப்பியல்பு அல்லது இயற்கைத் தன்மை என்றும் அழைப்பர்.

பதியாகிய சிவபெருமான் அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் முன்றுவகையான தன்மைகளையும் கடந்தவர். உவமைகள் கொண்டு அளக்கப்படக்கூடியவர் அல்லர். யாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். யாவற்றுக்குள்ளும் இருப்பவர். தூணிலும் இருப்பவர். துரும்பிலும் இருப்பவர். எங்கும் வியாப்பித்து இருப்பவர். எல்லாவற்றையும் கடந்தும் இருப்பவர். இறைவனின் இந்த இயல்பு சொரூப இயல்பு எனப்படும். ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாக என்றுமுள்ள இயல்பு எனப்பொருள்படும்.

சொரூப இயல்பு என்பது அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் மூன்று தன்மைகளையும் கடந்த இறைவனின் தன்மையாகும்.அருவம் என்பது உருவத்தின் நுட்பம். கண்ணுக்கு தெரியாத தன்மையை அருவம் என்போம். நுண்ணங்கிகளும் அணுமூலக்கூறுகளும் எமது கண்களுக்கு புலப்படுவதில்லை. எனவே அவற்றுக்கு உருவமில்லை என்று ஆகிவிடுமா? எனவேதான் அருவம் என்பது உருவத்தின் நுட்பம் என்பதை உணர்ந்து, அருவத்தையும் கடந்த நிலையே இறைவனின் சொரூபநிலை என்கின்றது சைவசித்தாந்தம்.


இறைவனின் சொரூப இயல்பை மொழிகளால் பூரணமாக விளங்கிக்கூற முடியாது.சொற்பதம் கடந்த தொல்லோன் என்றும் சொல்பதம் கடந்த அப்பன் என்றும் மாணிக்கவாசகப்பெருமான் இறைவனின் இயல்பை சொற்களுக்குள் அடக்கமுடியாது என்று கூறிவிடுகின்றார். இத்தன்மையே சொரூப இயல்பு என்போம்.


ஒருநாமம் ஒருருவம் ஒன்றும்
இல்லாற்கு -  -திருவாசகம்


மூவரும் முப்பத்து மூவரும் மற்று ஒழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் -திருவாசகம்


பெண் ஆண் அலி எனும் பெற்றியன் - திருவாசகம்


பெண்டிர் ஆண் அலி என்று ஒண்கிலை - திருவாசகம்


இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே - ஆறாம் திருமுறை


சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி - திருவாசகம்

எவராலும் அறியமுடியாத தன்மையை உடையவர்,ஆண்,பெண்,அலி எனும் பேதங்களைக் கடந்தவர், அருவம்,உருவம்,அருவுருவம் எனும் வடிவங்களைக் கடந்த தன்மையுடையவர்,  இப்படிப்பட்டவர், இந்த நிறமுடையவர்,இந்த வடிவம் உடையவர் என்று எழுத்தாலோ சொற்களாலோ விபரிக்கமுடியாத தன்மையை உடையவர் என்று இறைவனின் சொரூப இயல்பை திருமுறைகள் தெளிவுபடுத்துகின்றன.

சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையே இறைவனின் சொரூப இயல்பு என்பதை மாணிக்கவாசகர் "சிந்தனைக்கரிய சிவமே போற்றி" என்று திருவாசகத்தில் உணர்த்துயுள்ளார்.


சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடு அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்
தவமுதலி யோகபோகத் தரிப்பவனும் அல்லன் தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே -  சிவஞானசித்தியார்

தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால்;  அவர் உருவம்,அருவுருவம்,அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம்,யோகம்,போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவற்றை ஆன்மாக்களுக்கு வழங்குவதன்றி எதையும் அவர் தனக்கு ஏற்பதில்லை.  இவை அவரோடு பொருந்தினாலும், இவை எவற்றாலும் அவர் பற்றப்படுவதில்லை என்று சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்பைத் தெளிவுபடுத்துகின்றது.



இச்சொரூப இயல்பை சச்சிதானந்தம் என்று சொல்வர். சத்தாகியும் சித்தாகியும் ஆனந்தமாகியும் நிற்கின்ற இயல்பு; சத்து+சித்து+ஆனந்தம்= சச்சிதானந்தம் எனப்படும்.

சத்து = என்றும் யாதொரு மாற்றமும் இன்றி நிலைபேறுடையதாய் உள்ள தன்மை.
சித்து = பேரறிவு
ஆனந்தம் = குறைவில்லா நிறையுடைய பேரின்பம்

சத்து,சித்து,ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் விரித்து சிவபெருமானுக்கு எண் குணங்கள் உண்டென்று சைவசித்தாந்தம் அறிவுறுத்துகின்றது.

அதுவென்ன இறைவனின் எண்குணங்கள்? இறைவனின் தடத்தஇயல்பு என்றால் என்ன? சுருக்கமாகவும் தெளிவாகவும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 4
மேலும் படிக்க...

Monday, May 9, 2011

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 1

சைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும்.

Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope


The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope


In real truth, Saiva siddhanta has something to offer which is suited to all minds. its very strength lies in its infinite adaptability to the infinite diversities of human character and human tendencies -  Sir Monier William


Saiva Siddhanta attempts to comprehend the universe as a sum total of 36 categories. this exposition is purely a logical account on Scientific principles - Thaos Bernard



இப்படிப்பட்ட சைவசித்தாந்தம் இன்று இந்துமதம் என்னும் பெயரில் சங்கரரின் அத்வைத்தாலும் ஏனைய அந்நிய மதபோதனைகளாலும், அரசியல்-நாத்தீகவாதங்களாலும் மறைக்கப்பட்டு வருகின்றமை தென்னாட்டின் ஊழ்வினையின் விளைவே! தமிழ்நாட்டில் பள்ளிசெல்லும் மாணவர்களுடன் உரையாடியபோதுதான் சைவ நாயன்மார்களையே நான் கலந்துரையாடிவர்களில் எவரும் அறிந்திலர் என்பதை உணர்ந்தேன். ஈழவளநாட்டில் இந்தக்குறை இல்லை! அரசுப பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சைவப்பிள்ளைகளுக்கு சைவசமயத்தை சமயப்பாடமாக கற்பிப்பதால் சைவசமயத்தைப்பற்றிய தெளிவு காணப்படுகின்றது. தமிழகத்தில் இக்குறையைப் போக்க, சைவாதீனங்கள் தமது பணிகளை இன்னும் வீரியமாக்க வேண்டும். 

இன்று பக்தி,சக்தி,ஆன்மீகம், இராமகிருஷ்ண விஜயம் என்று வெளியாகின்ற இதழ்களூடாகவே சமயம் பரப்பப்படுகின்றது. அவையும் சங்கரரின் அத்வைதத்தையே பெரிதும் புகட்டுகின்றது. இதன் தாக்கத்தை இந்துமதம் என்னும் போர்வையில் சுமார்த்த அத்வைதம் போதிக்கபடுவதன் விளைவை, சிவபூமி என்று திருமூலர் சுட்டிய இலங்கையிலும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே சைவசமயம் பற்றிய தெளிவை ஏற்படுத்தவேண்டியது சைவ சான்றோரின் கடமையாகும். 


இந்துமதம் என்றபதத்தினூடாக இன்று சைவசித்தாந்தம் மழுக்கடிக்கப்படுகின்றதென்பதை சைவர் யாவரும் முதலில் உணரவேண்டும். இரண்டாவது; சைவசித்தாந்தம் பற்றிய தெளிவு சைவர் யாவருக்கும் இருத்தல் வேண்டும்.எனவே; சைவசித்தாந்தம் பற்றிய தெளிவை சைவர் யாவரும் பெறவேண்டும் என்ற நோக்கில் தொடராக 'கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் தருகின்றேன். அதன் பொருள்; யாம் நூல்களைத் தேடிக் கற்றது. நாடிச் சான்றோரிடமிருந்து பெற்றது.  


இத்தொடரில் சைவசித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையை எளிமையான முறையிலும் சுருக்கமான முறையிலும் தரவிரும்புகிறேன். பயப்படாதீர்கள்.........சின்னத்திரை நாடகங்கள்போல் நீட்சியாக நீளாது இத்தொடர். 

சரி; சைவசித்தாந்தம் பற்றி பார்ப்போம்.


சைவசித்தாந்தத்துக்கு பொதுநூலாக நான்மறையும் சிறப்புநூலாக சிவாகமங்களும் விளங்குகின்றன.  சைவசித்தாந்தம் பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களால் விளக்கப்படுகின்றது. இந்நூல்கள் சைவசித்தாந்தத்தின் சாத்திரநூல்கள் எனப்படும். பன்னிரு திருமுறைகள்  சைவசித்தாந்தத்தின் தோத்திரநூல்கள் எனப்படும்.

சைவசித்தாந்தம் பதி(இறைவன்),பசு(உயிர்கள்),பாசம் எனும் முப்பொருள் உண்மையை தெளிவாக விளக்குவது சைவசித்தாந்தமாகும். சைவசித்தாந்தம் என்பது வேதாகமங்களின் தெளிவு. சித்தனையின் முடிந்த முடிவு.

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் - சிவப்பிரகாசம் (சைவசித்தாந்தநூல்)

பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப்
பதி பசு பாசம் தெரிதல் - சிவப்பிரகாசம் (சைவசித்தாந்தநூல்)

சைவசித்தாந்தத்தை சிவபெருமான் திருநந்திதேவருக்கு உபதேசித்து அருளினார். திருநந்திதேவரிடம் இருந்து சனற்குமாரர் உபதேசம் பெற்றார். சனற்குமாரரிடம் இருந்து சத்தியஞானதரிசினி உபதேசம் பெற்றார். சத்தியஞானதரிசினியிடம் பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்றார்.

பரஞ்சோதி முனிவர் ஒருமுறை அகத்தியரைக் காண்பதற்காக, ஒளியை விமானமாக்கி வான்வழியாக பொதிகைமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திருவெண்ணெய் நல்லூரில் அவரது விமானம் திடிரென நின்றுவிட்டது. அங்கு சுவேதவனப் பெருமான் என்னும் சிவஞானம் பெருகியிருந்த குழந்தையைக் கண்டார். அக்குழந்தைக்கு மெய்யுணர்வு அருளி மெய்கண்டார் என்று பெயரிட்டார். பரஞ்சோதி முனிவரின் குருநாதராகிய சத்தியஞானதரிசினியின் பெயரையே சுவேதவனப் பெருமானுக்கும் இட்டார். அதாவது சத்தியம் -மெய், ஞானதரிசினி - கண்டார் என்று பொருள்படும்.

மெய்கண்டார் தமது தந்தையாரின் குலகுருவாக விளங்கிய அருள்நந்திசிவாச்சாரியாரை தனது சீடராக; தலை மாணக்கராக   ஆட்கொண்டார்.அருணநந்தி சிவாச்சாரியாரிடம் மறைஞான சம்பந்தர் உபதேசம் பெற்றார். மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவாச்சாரியார் உபதேசம் பெற்றார்.

இங்கு திருநந்திதேவர்,சனற்குமாரர்,சத்தியஞானதரிசினி,பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானகுரவர் என்று போற்றப்படுவர். மெய்கண்டார்,அருணநந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் புறச்சந்தானகுரவர் எனப்போற்றப்படுவர்.

சைவசித்தாந்த சந்தானகுரவரின் வாழ்க்கையை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். தற்போது, சைவசித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையை உணர்ந்து கொள்வதற்கு, சந்தானகுரவர் பற்றிய இத்தரவு போதுமானதாகும்.

சைவசித்தாந்த தொடரில் அடுத்து நாம் பார்க்க இருப்பது பதியாகிய சிவபெருமானின் இயல்புகளைப் பற்றியாகும். சிவபெருமான் உருவம்,அருவுருவம்,அருவம் ஆகிய மூன்றுதன்மைகளையும் கடந்த இயல்புக்குரியவர். அதுவென்ன அருவத்தையும் கடந்த இறைவனின் இயல்பு? கடவுளுக்குச் சொல்லப்பட்ட மிகச்சிறந்த இலக்கணம் சைவசித்தாந்தம் கண்ட இலக்கணமே! அப்படியென்ன இலக்கணத்தை சைவசித்தாந்தம் கண்டது? அடுத்த தொடரில் பார்ப்போம்.

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 2
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 3
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 4
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 5
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 6
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 7
மேலும் படிக்க...

Saturday, May 7, 2011

வேத நெறியை புண்படுத்த எண்ணி அவுஸ்ரேலியா பட்ட அவமானம்!


வேதநெறிக் கடவுள்களின் திருவடிவங்களை நீச்சலுடையில் பொறித்து அதை மங்கைகளுக்கு அணிவித்து நடையழகு காட்சியில் அறிமுகஞ்செய்த அசிங்கமான செயல் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளதென்பதை இணையச்செய்தியூடாக அறியக்கூடியதாக இருந்தது. 


ஏனையோரின் சமயத்தை புண்படுத்தி இரசிப்பது சிலருக்கு இனிமையான ஒன்று. அது ஒரு மனநோயின் வடிவம்! இந்த மனநோய் நம்மவருக்கு இல்லாமைக்கு காரணம் பரந்தமனப்பான்மை! இந்த அருமையான சால்பை நமக்கு அளித்த நமது வேதநெறிக்கு நன்றிகூறியே ஆகவேண்டும். 


‘ஏகம் சத் விப்ர பஹூத வதந்தி' -  என்கின்றது இருக்கு வேதம். அதாவது ‘உண்மை ஒன்றே, அதை சான்றோர்கள் பலவிதமாக அழைக்கின்றார்கள்" என்கின்றது.


அகளமாய் யாரும் அறிவுஅரிது அப்பொருள்
சகளமாய் வந்து என்று உந்தீபற
தானாகத் தந்தது என்று உந்தீபற
-திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்


கடவுளாகிய அந்தப் பொருள் உருவமற்றது. யாராலும் அறியமுடியாதது. ஆனால் அன்பால் நாம் நினைத்த வடிவத்தை தனக்கு அமைத்துக்கொண்டு, அந்த வடிவத்தோடு நினைத்தவர் முன்வந்து தோன்றும் என்று திருவுந்தியார் சைவசித்தாந்த நூல் தெளிவுறுத்துகின்றது.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்கின்றது திருமந்திரம்.


இவ்வண்ணம் எமது வேதநெறிச் சைவச்சால்பு நன்னெறியில் பாரை வழிநடத்துவதுபோல் உலகிலுள்ள சமயங்கள் யாவும் நன்னெறியில் பாரை இட்டுச்சென்றால் பார் சாந்தமும் சமாதானமும் நிறைந்ததாய் காட்சியளிக்கும்! 


ஏனைய சமயத்தவரை பாவிகளாகவும்,சாத்தான்களாகவும் பாவிக்கின்ற கொடூரமான மனநோய்க்குள் வீழ்ந்துவிடாது காத்து அன்பே சிவமென்ற அருமையான தத்துவங்களை கொண்டு ஆன்மீக ஞானத்தை வளர்ப்பதனால்த்தான் உலகத்தில் அகிம்சை என்ற சொல் உயிர்ப்புடன் இருக்கின்றது. அன்பு என்ற சொல் அர்த்தத்தோடு புழக்கத்திலுள்ளது. 


நீச்சலுடையில் எமது கடவுள்களின் வடிவங்களைப் பொறித்தமைக்கு உரிய கண்டனங்களை வேத-சைவ உலகம் முன்னெடுக்குமானால் யாவரும் மகிழ்ச்சியடைவர். ஆனால்; காமப் பொப் இசைப்பாடல் இறுவெட்டுகளில் மேற்கத்திய நாடுகளில் பிள்ளையார் சிலை பொறிக்கப்பட்டிருந்தமை, பிரபல நடிகையொருவர் தனது பிறந்தநாள் குதப்பியை (கேக்கை) பிள்ளையார்சிலையாகச் செய்து அதை வெட்டி உண்டு மகிழ்ந்தமை, வீட்டுதளபாடங்களிலும்,கழிவறை உபகரணங்களிலும், செருப்புகளிலும் எமது கடவுள் உருவங்களைப் பொறிக்கின்றமை போன்ற ஏராளமான செயற்பாடுகளை வேத -சைவ உலகம் ஏற்கனவே கண்டு கண்டனங்களை பதிந்தும் எந்தவிதமான உருப்படியான தாக்கத்தையும் நாம் ஏற்படுத்தியிருக்கவில்லை! அதற்கும் நமது சகிப்புணர்வே காரணம்! 


எமது கடவுள் வடிவங்களை இவ்வண்ணம் இழிவடையச்செய்யும் நோக்கில் பயன்படுத்துகின்றார்களாயினும் உண்மையில் இழிவடைவது இவர்களும் இவர்கள் வளர்த்த சூழல் காரணிகளுமே! 


எனவே; உரியமுறையில் அவுஸ்ரேலிய அரசு அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக்கேட்டு அவுஸ்ரேலியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்குவார்களா? அவுஸ்ரேலியாவின் நலன்விரும்பிகள் கேட்க்கும் கேள்வி இது!


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


( "ஆபாச காட்சிகள்" தவிர்க்கும் பொருட்டு இணையத்தில் இதுதொடர்பாக உலாவுகின்ற நிழற்படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. )
மேலும் படிக்க...