"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, March 11, 2010

சைவமும் தமிழும் 2010 போட்டி

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள சைவமும் தமிழும் போட்டி 2010 இல் பிள்ளைகளை பங்குபற்ற ஊக்குவிக்குமாறு சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி தங்கள் பிள்ளைகளை அறநெறியில் ஒழுக வழிசமைக்க கிடைத்துள்ள பேறை நன்குபயன்படுத்துமாறு சுவிஸ்வாழ் பெற்றோரை தாழ்மையுடன் வேண்டுகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், போட்டிநிகழ்வுகளை தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அழைத்து செல்லவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்" என்ற அறநெறியை போதிக்கும் சைவத் திருநெறியில் தங்கள் பிள்ளைகள் ஒழுக வழிசமைப்பீராக!




பிற்குறிப்பு:- போட்டிக்குரிய விளப்பரப்படங்கள் லங்காசிறி இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.



சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமும் தமிழும் 2010 போட்டி

நன்றி
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Wednesday, March 10, 2010

ஜேர்மனியில் மகாசிவராத்திரி

மேலும் படிக்க...

Tuesday, March 9, 2010

சிறுதெய்வங்களும் மானிடரும் அருள்கின்றனவே....எப்படி?


மானிடரையும் மற்றச் சிறுதெய்வங்களையும் வழிபடும்போதும் நன்மைகள் கிடைக்கின்றனவே? அது எப்படி?  இவ்வண்ணம் எழுகின்ற வினாக்களை, சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் தெளிவுபடுத்துகின்றது. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை.சித்தியாருக்கு மிஞ்சிய நூலுமில்லை என்பது முதுமொழி.




சிவஞானசித்தியார் நூலின் சுபக்கம் இரண்டாம் சூத்திரம் 24,25,26,27 ஆம் பாடல்கள் சிவபெருமான் உயிர்கள் மேல் எவ்வளவு கருணையுடையவன் என்பதை உணர்ந்துகின்றன.

மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! (24)


தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும்  இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்.

யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே! (25)


எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.

இங்குநாம் சிலர்க்குப் பூசை
இயற்றினால் இவர்க ளோவந்(து)
அங்குவான் தருவார் அன்றேல்
அத் தெய்வம் எல்லாம்
இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்(கு)
ஆணைவைப்பால் அளிப்பான்  (26)


இங்கு நாம் சிறுதெய்வங்கள்,பெரியோர்,உயர்ந்தோருக்கு வழிபாடு செய்தால்,அவர்களே அவற்றுக்கான பலன்களை மறுபிறவியில் நமக்குத் தரமாட்டார்கள். எங்கும் உள்ள சிவனே வந்து அருள் செய்வான்.எல்லாம் அவன் ஆணை வழியாக நிற்பதுவும் இயங்குவதுமாகையால் அவனே நமக்குப் பயன் தருவான்.

காண்பவன் சிவனே ஆனால்
அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பறம் அரன் தன் பாதம்
மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன
விதிஅறம் விருப்பொன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும்
பூசனை புரிந்து கொள்ளே   (27)


எல்லாம் ஏற்பவன் சிவனேயாதலால், அவனடிக்கு அன்பு செய்வது சிறந்த அறமாகும். அவன் திருவடியை மறந்து செய்யும் அறங்கள், வீண் செயலே ஆகும். ஆகவே அவனை வழிபடுவதே அறமும் செய்யத்தக்கதாகும்.



சைவ சமயத்தில் பிறத்தல், சைவ சமயத்தை சார்ந்து ஒழுகுதல் புண்ணியத்தின் பயன் என்பதையும் இந்நூல் உணர்த்துகின்றது.


நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே
                                - சிவஞான சித்தியார்


மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம்.

வாழ்வெனும் மையல் விட்டு
வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே
                                                 -சிவஞான சித்தியார்


வாழ்வுபற்றிய செருக்குகள் பற்றாமலும், வறுமையில் சிறுமையடையாமலும் பணிவு கொண்டு, சைவ சமயம் சார்வது; நல்வினையில் பெறுதற்கரிய பேறு. மிக உயர்ந்த சிவஞானம் பெற்று பிறைமதி சூடிய, இறைவனை வழிபட்டு இருப்போர் அருள்மிகப் பெற்றவராம்.
                              
எனவே, வேதம் பயிலுகின்ற நாட்டில் பிறக்க முடியாதவர்களுக்கும், அன்றி பிறந்தும் நல்லூழ் குறைவால் திருநெறிச் சைவத்தை ஒழுகும் பெறு வாய்க்கமுடியாதவர்களுக்கும், அன்றி திருநெறிச் சைவத்தில் பிறந்தும் ஞானக்குறைவால் சிறுதெய்வவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் எம்பெருமான் சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு, அவர்கள் வழிபடும் தெய்வத்தின் வடிவம் தாங்கி அவர்களின் நல்வினை-தீவினைக்கு ஏற்ப அருள்பாலிக்கின்றார்.
 

பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றியை இழந்து தவித்தபோது தாய்ப்பன்றியாக உருவெடுத்து பாலூட்டிய எம்பெருமானின் கருணையை வார்த்தைகளால் அளவிடமுடியாது. அப்படிப்பட்ட எம்பெருமான்; நல்வழியில் நடப்பவர் ஞானக்குறைவால் தேவதைகளையோ அன்றி மானிடர்களையோ கடவுளாகக் கருதி வழிபட்டால், அவர்களை கைவிட்டுவிடுவாரா என்ன?

பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே ஆவர். எனவே வினைகள் செய்வனவாகவும், இன்ப-துன்பம் நுகர்வனவாகவும், பிறப்பு-இறப்பு என்னும் சாகரத்துள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இவர்கள் இருப்பதால் இச்சிறுதெய்வங்களால் ஆவதொன்றில்லை. ஆனால்  நல்வினை தீவினைக்கு ஏற்ப வந்தமைய வேண்டிய பலன்களை சிவபெருமானை அறியாத சிறுதெய்வ-பிறநெறி வழிபாட்டாளர்களுக்கு அவர்கள் நம்புகின்ற உருவெடுத்து சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்.  இது எப்பெருமானின் தனிப் பெருங்கருணையால் சிறுதெய்வ- பிறநெறி வழிபாட்டாளர்கள் பெறும் பயனாகும்.

எனவே; இத்தகு எம்பெருமானின் கருணையையும் முழுமுதற்தன்மையையும் உணர்ந்து எம்பெருமானின் திருவடிக்கு அன்பு செய்வதே சிறந்த அறமாகும். "காண்பவன் சிவனே ஆனால் அவனடிக்கு அன்பு செய்கை" என்று  மேலே தரப்பட்டுள்ள சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி  இதை வலியுறுத்துகின்றது.  இவ்வுண்மையை உணர மறுத்து,  சிவபெருமானின் திருவடியை மறந்து செய்கின்ற அறங்கள் யாவும் வீண் செயலே! "மாண்பறம் அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம் வீண்செயல்" என்று 
சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி இதை தெளிவுபடுத்துகின்றது.

மயக்கவுணர்வால் தேவதைகளையும், மானிடர்களையும் வழிபடுபவர்க்கு சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு பலனளிப்பதால், எல்லாவற்றுக்கும் உத்தவரவாதமாக விளங்கும் சிவபெருமானையே அன்புசெய்து பூசித்தல் வேண்டும் என்பதையே சிவஞானசித்தியார் நூல் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
 

நம்முடையதும் நம்மில் சிலர் மயக்கவுணர்வால் ஞானக்குறைவால் கடவுளாகக் கருதும் மானிடர்களினதும் தேவதைகளினதும் பிறப்பையும் இறப்பையும் அவரவர் கருவில் உதிக்கும் முன்னரே வரையறை செய்த எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செய்து பூசிப்பது தவப்பயனே!
 

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக்  கருணை செய் தானே " - திருமந்திரம்


ஆகமப் பொருளை சிவபெருமான் தமிழ்-ஆரியம் என்னும் இருமொழிகளிலும் ஏக காலத்தில் அம்மைக்கு விளக்கியபோதும் நமது நல்லூழ் குறைவால் சிவாகமங்கள் தமிழில் கிடைக்காமற் போயிற்று. எனினும் சமயகுரவர்கள் வழியாக சைவசித்தாந்த நூல்களாக தமிழில் சிவாகப் பொருளை அறியும்பொருட்டு நமக்கு எம்பெருமான் வழிசமைத்திருக்க, நாம் அவற்றை அறியாது, உதாசீனம் செய்து வாழ்வது, அறிந்தோர் எடுத்தியம்பும் அறிவுரைகளை செவிமடுக்காது தவிர்ப்பது யாவும் மீளாப்பழிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்வோமாக!

மானிடப் பிறவி தானும்
வகுத்தது மனவாக்கு காயம்
ஆன் இடத்து ஐந்தும் மாடும்
அரன்பணிக் காக அன்றோ
வானிடத் தவரும் மண்மேல்
வந்துஅரன் தனைஇர்ச் சிப்பர்
ஊன் எடுத்து உழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ
                              -சிவஞானசித்தியார்

மனிதப் பிறவிக்கு, மனம் வாக்கு காயம் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது சிவன் பணிக்காகவே ஆகும்.ஐம்பொறிகளும் சிவன் பணிக்காகவே! வானில் உள்ள தேவர்களும் மண்ணில் வந்து சிவனை வழிபடுவர். அப்படியிருக்க; உடம்பைப் பெற்றும் இவை உணராதவர்கள் அறியாமை உடையவரே ஆவர் என்று சிவஞானசித்தியார் நூல் உரைக்கின்றது.

தேவர் சிவனை வழிபடும் பொருட்டு பூமிக்கு வருகையில்; நாம், பூமியில் சிவாலயங்களால் சூழப்பட்ட நற்றமிழ் நாட்டில் வாழும் பேறுபெற்றும் சிவாலய வழிபாட்டை மறந்து சிறுதெய்வ-பிறநெறி தெய்வ- மானிடச் சாமிகளை மயக்கத்தால் வழிபடுபது தீய ஊழின்  விளைவே!


பிறவாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை வழங்குபவனுமாகிய சிவபெருமானை வணங்குங்கள்; அவ்வாறு வணங்கினால் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப் பேறு அடையலாம்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி  மாயா  விருத்தமு மாமே
                                                 -திருமந்திரம்

 

சிவனருள் இருந்தால்தான் சிவனை வழிபடும் பேறு அமையும் என்பதை திருவாசகத்தில் சிவபுராணத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் தனது தேன் தமிழால் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்கிறார். சிவபெருமானின் அருள் இருந்தால்தான் சிவபெருமானை வழிபடும் சைவநெறியை ஒழுகும் பேறு அமையும்.
மேலும் படிக்க...

Friday, March 5, 2010

சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்

இந்துமதம் என்ற கூட்டுச்சரக்குக்கு சங்கரபீடத்தின் சுமார்த்த அத்வைதக் கொள்கையால் துணியுடுத்தி, சைவம் என்றால் மாமிசம் அற்ற உணவுப் பண்டத்தை குறிக்கும் என்று பொருள்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில், சுமார்த்தம் வெற்றியீட்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதம் பக்தி, ஆனந்த விகடனின் சக்தி மற்றும் ஏனைய சமய இதழ்களாகிய திரிசக்தி, ஆன்மீகம், இராமகிருஷ்ண விஜயம் யாவுமே சுமார்த்த அத்வைதக் கொள்கையை போற்றுபவை. இவை சைவம் என்ற பெயரை தமிழகத்தில் சாப்பாட்டுப் பண்டத்தைக் குறிக்கும் வகையில் மாற்றியதில் முக்கியபங்கை வகுப்பவை.இவர்களுக்கு சிவனும் சும்மா. விஷ்ணுவும் சும்மா. எல்லாம் ஒன்று என்று "ஜால்ரா" அடித்து இந்தியா முழுவதும் ஒரேசமயமாக எந்தவிதமான கோட்பாட்டு வேறுபாடுகளும் இல்லாத இந்துமதத்தை உருவாக்கி, ஒற்றைப் பண்பாட்டை விதைக்க வேண்டும்.அவ்வளவுதான்!!!! இதன்மூலம் அகண்ட பாரதக் கனவை ஒருகால் நனவாக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே, இவர்களுக்கு சைவ சித்தாந்தம் தென்னாட்டில் இடைஞ்சலாக இருக்க, தென்னாட்டில் நிலவிய நாத்தீகவாதத்தை சாதகமாக்கி ஊடகபலத்தின் துணையால் சுமார்த்த அத்வைதக் கொள்கையை இலகுவாகப் பரப்பிவருகின்றனர். ஒருதசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையிலும் இதே கதையை உருவாக்கிவிட்டனர்.அதற்கு ஏதுவாக இருந்தது "இந்து" என்கின்ற பெயர்!!!!


இவர்கள் தமது சுமார்த்த அத்வைதக் கருத்துகளைப் பரப்ப, "நான் கடவுள்" என்று பிதற்றும் சாமியார்களை உருவாக்கி உலாவவிட்டார்கள். இவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் மக்கள் "இந்து" என்ற பெயரில் அத்வைதத்தை ஒழுகினால் போதும்! ஆன்மீக முன்னேற்றம், ஞான விருத்தி, முக்தி இவைபற்றி அக்கறையில்லை!!! நாள்தோறும் விலைவாசி உயர்வாலும், வீட்டுப் பிரச்சினைகளாலும் வேலையில்லாப் பிரச்சினைகளாலும் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏதேனும் புளுடாக் கதைகளை அவிட்டுவிட்டு, "நான் கடவுள்" என்று சொல்லித்திரிகின்ற யாரையேனும் பின்பற்றும்படி செய்துவிட்டால் போதும்!!!!

அத்வைதத்தை தாபித்த ஆதிசங்கரரை சிவனென்று கதையளந்து பார்த்தனர். பலிக்கவில்லை!!!! சிவனுக்கு இரத்தமும் சதையும் சேர்ந்த கருவறையில் பிறத்தல் என்பது ஒருக்காலும் இல்லை என்பது சைவம். எனவே, ஆதிசங்கரரை சிவனாக்க முயன்று தோற்றபின், கண்டவரையெல்லாம் கடவுளாக்கத் தொடங்கிவிட்டது.
 
திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் மற்றும் ஏனைய நாயன்மார்கள் யாவரும் இறையருளால் அற்புதங்கள் செய்து ஏனையோருக்கும் இறையருளை நுகர வாய்ப்பு வழங்கி மேன்மைகொண்ட சைவநீதியை பாரிலே நிலைபெற வழிசமைத்தனர். திருவாசகத்தை இறைவனே பிரதியெடுத்து "திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை உலகறியச் செய்தான். சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரை சிற்றம்பலத்து பஞ்சாட்சர வாசற்படியில் வைத்தபோது இறைவனின் திருவருட்சம்மததால் அவ்வாசற்படிக்கு அருகாமையில் இருந்த கல்யானைகள் தமது துதிக்கைகளால் தூக்கி நடராசப்பெருமானின் திருவடியில் வைத்து சைவ சித்தாந்த நூலின் புனிதத்தை பாரறியச் செய்தன.

இவ்வண்ணம் இறைவனின் திருவருட்சம்மதம் பொருந்திய சைவநீதியை "நான் கடவுள்" மாயாவிகளை வளர்த்து அவர்களின் துணையால் இந்துமதக் கூட்டுச்சரக்குக்குள் சைவநெறியை ஒழித்து வைத்து காலவெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்துவிடலாம் என்று கற்பனை காணுகின்றனர் சுமார்த்த பீடங்கள்!!!!!

சமணர் சுண்ணாம்புக்குள் போடுதல், கடலில் கல்லோடுகட்டி வீசுதல், யானையால் மிதிக்கச் செய்தல் என்று பல்வேறுவழிகளில் சைவரைத் துன்புறுத்தி, சமணத்தை வளர்த்தபோது அத்தனை கொடுமைகளையும் சிவனருளால் தகர்த்து சைவநெறியை நால்வர் மீண்டும் தழைத்தோங்கச் செய்தனர். மேற்குநாடுகளில் ஆட்சியில் தென்னாட்டில் சைவம் தளர்வுற்றபோது யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி தென்னாடெங்கும் சைவம் தழைக்க வழிசமைத்தார். இவ்வண்ணம் சைவநெறிக்கு பங்கம் உச்சமடையும்போதெல்லாம் சைவநெறியை-சைவ சித்தாந்தத்தை காத்து வளர்க்க அருளாளர்கள் பூப்பது சுமார்த்தர் அறியவில்லைப் போலும்!!!!!!!!

இவர்கள் வளர்த்துவிட்ட கல்கி பகவான்,சாயி பகவான் மற்றும் நித்தியானந்தரை இனிப் பார்ப்போம்!!!!!!

கல்கி என்பது வைணவம் சொல்லுகின்ற விஷ்ணுவின் பத்தாவது அவதாரம். கலி முற்றி பிரளயக் காலத்தில் கல்கியாக விஷ்ணு அவதரிப்பார் என்கின்றது வைணவம். ஆனால் விஜய்குமார் நாயுடு என்கிற இயற்பெயருடையவர் "தானே கல்கி" என்று கல்கிபகவான் என்று பெயர்பூண்டு கடவுளாக பிரபல்யமாகியுள்ளார்.இவருக்கு ஆந்திர மாநிலந்தொட்டு கொழும்பு-யாழ்ப்பாணம் என்று பெரு வரவேற்பு!

இவரை பிரபல்யமாக்கியது யார் என்றால் "இந்து"மதம் என்கிற சுமார்த்தக் கொள்கையே!!!!! இன்று இவரது ஆச்சிரமத்தின் ஒருபகுதியான வரதபாளையத்தில் உள்ள தொழில்நுட்பப் பகுதியை அங்குள்ள மக்கள் அடித்து நொருக்குமளவுக்கு அங்குள்ள மக்களுக்கு அசுரனாகியுள்ளார். ஏனைய வெளியூர்காரருக்கு தேவாதி தேவன்! இவர் "தப்புத்தாளங்கள்" செய்வதாக ஆந்திரா தொலைக்காட்சியொன்று அடிக்கடி செய்தி வெளியிட்டு சூடேற்றியுள்ளது. உண்மை இறைவனுக்குத்தான் தெரியும்!!!!!

ஆச்சிரமத்தில் போதைப்பொருள் இருப்பதாகவும் போதைப்பொருளே பிரசாதகமாக வழங்கப்பட்டு ஒருவித பரவசநிலையை ஊட்டப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் காவற்துறையில் புகார் செய்துள்ளனர். அதன் உண்மைத்தன்மையும் இறைவனுக்கே வெளிச்சம்!!!!

எனவே இப்பிரச்சினைகள் யாரும் உருவாக்கிவிட்ட வதந்திகளின் விளைவாகக்கூட இருக்கலாம்.அதனால் இப்பிரச்சினைகள்பற்றி ஆராயவிரும்பவில்லை.

ஆனால் ஏனைய சில கேள்விகள் கல்கிபகவான் என்று சுயபிரகடனம் செய்துள்ள விஜயநாயுடு மற்றும் அவரது துணைவியாரான இறைவியாகப் போற்றப்படும் அம்மா பகவான் பத்மாவதி தேவி தொடர்பாக எழுந்துள்ளது. அவற்றின் விடைகள் "இவர்கள் போலிகள்" என்றே புலனாக்குகின்றது. அவைதான் என்ன???

1) சிறப்புத் தரிசனத்துக்கு 25,000 கட்டணம், ஓமம் செய்ய 60,000 ருபாய் கட்டணம், என்று கட்டணத் தொகை பணக்காரரின் கடவுளாக இவரை வெளிக்காட்டியுள்ளது.

2) இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்கின்றார் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்மீதும் சிலர் காவற்துறையில் புகார் பதிவுசெய்துள்ளனர். கடவுளுக்கு மகன் உண்டா? அப்படியானால் இல்லற சுகத்தை இனிக்க இனிக்க சுவைத்தாரா? அல்குல் சுவையில் மயங்கி சேக்கைப்போர் செய்தாரா? விஷ்ணுவின் அவதாரம் என்று போற்றப்படும் இராமன் - கிருஷ்ணர் இருவரும் மனைவி பந்தம் கொண்டவர்களாகவும் புத்திரர்கள் கொண்டவர்களாகவும் காட்டப்படுவதால் இதை ஏற்பதில் என்ன தவறு? இராமர் பட்டாபிடேகத்துடன் கம்பராமாயணம் முற்றுப்பெறுகின்றது. காரணம் லவ-குச கதைகள் தென்னாட்டு கடவுள் மரபுக்கு இயல்பில்லை என்பதால்!!! கிருஷ்ணர் கதையும் இதற்கு விதிவிலக்கல்ல!

எனவே கடவுள் சேக்கைப்போர் புரிந்தார் என்பது தென்னாட்டு ஆன்மீகமரபில் வரவேற்கப்படாத ஒன்று! இராம அவதாரம்-கிருஷ்ண அவதாரம் யாவும் சேக்கைப்போரின் விளைவால் உருவாகாதவை!!! சீதையும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கல்கி என்று பிரகடனப்படுத்தியுள்ள இவருடைய பிறப்பு அதிசயப் பிறப்பா என்ன? இவரது துணைவியாரும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவரா என்ன?கடவுளின் மகன் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்வது முறையாகுமா என்ன?

வரதராஜுலுவு-வைதர்பி எனும் தம்பதியரின் மஞ்சப் போரில் இவர்களின் விந்துவும் முட்டையும்(சூல்) இணைவினால் உருவானவரே கல்கி என்று அழைக்கப்படும் விஜயநாயுடு.அதுபோல் வெங்கய்யா - பென்சலம்மா தம்பதியரின் மஞ்சத்து மோகத்தில் அவர்களுடைய விந்துவும் சூலும் இணைந்ததன் விளைவால் உருவானவரே பத்மாவதி இறைவி என்று கல்கியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவரது துணைவியார். எனவே, இவர்களின் பிறப்பு எமது சமயமரபு கூறும் இறை இலக்கணத்துக்கு ஏற்புடையதன்று! வைணவம் கூறும் கல்கி அவதார இலக்கணத்துக்கு எள்ளளவும் தொடர்பற்றது. ஆனால் இதுபற்றி சுமார்த்த அத்வைத இந்துமத முகவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களுக்கு வைணவமும்-சைவமும் தீண்டத்தகாதவை!!!

கண்ணன் ஆயர்குல மக்களுடன் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இராமன் குகனுடனும் குரங்கினங்களுடனும் தோழமைபூண்டு சகோதர உறவு கொண்டு வாழ்ந்ததாக இராமாயணம் தெரிவிக்கின்றது. ஆனால் கணனியுகத்தில் தோற்றிய இவர் 25,000 ரூபாயில் சிறப்புத் தரிசனம் கொடுக்கும் "பணம் நாடும்" கடவுளாகியுள்ளார்............என்ன கொடுமை? ஆலயங்களில் அன்று சிறப்புத்தரிசனம் என்று கட்டணம் வாங்கும் பழக்கத்தை மனிதர் புகுத்தினர். இவரும் அதே விதியைப் புகுத்தியுள்ளார். அப்படியானால் இவரும் வெறும் பணத்தேவையுள்ள மனிதராகியுள்ளார் என்பது வெள்ளிடைமலை!

ஏழைக் குசேலரின் அவலை உண்ட கண்ணன், சபரி கடித்துக் கொடுத்த எச்சில் பழத்தை உண்ட இராமன் என்று திருமாலின் அவதாரங்கள் போற்றப்படுகின்றன.ஆனால் இவரது கட்டண வசூலைக் கருத்தில் கொள்ளும்போது எள்ளளவுக்கும் இவருக்கு அவதாரங்களோடு தொடர்பில்லை என்பது தெளிவாகின்றது.

உள்ளம் உருகில் உடனாவர் என்று சைவ சித்தாந்த நூல் திருவுந்தியார் கூறுகின்றது. உள்ளக் கமலமே உத்தமனார் வேண்டுவது என்றார் விபுலானந்த சுவாமி. மலர்மிசை ஏகினான் என்றார் வள்ளுவர்.கடவுளுக்கு வேண்டியது மலர்போன்ற உள்ளம் ஒன்றே; கடவுள் என்று பிரகடனப்படுத்திய இவரோ 25,000 ருபாயை சிறப்புத் தரிசனத்துக்கு வசூலிக்கிறார் என்றால் வசூல்ராஜாக் கடவுள்தான் இவர்!!!!

கல்கியைவிட சாயிபாபாவுக்கு பக்தர்களும் "மவுசும்" அதிகம் எனலாம். சாயி பாபாவைப் பற்றி புகார்களை பிரித்தானிய வானொலி சேவையகம்- பிபிசி வெளியிட்டிருந்தமையும் டில்லி அமெரிக்க தூதரகம் தனது நாட்டவர்களுக்கு இவர்பற்றி அவதானமாக இருக்கும்படி எச்சரித்திருந்ததும் இவர்பற்றிய ஐயத்தை ஊட்டியுள்ளது ஒருப்பக்கம் இருக்கட்டும். கிருஷ்தவர்கள் இவரைப் பின்பற்றுவதாலும் இவரை சார்ந்துள்ளோரை மதம்மாற்ற முடியாது மிசனரிகள் பாடும்பாடாலும் எழுந்த வதந்திகளாக இவையிருக்கக்கூடும்!


ஆனால், இவரது பிறப்புக்கு அற்புதக்கதை கூறப்பட்டாலும் அது அவரது சுயசரிதையாக இருப்பதையே அறியக்கூடியதாகவே உள்ளது.

திருநீறையும் தங்க நகைகளையும் கையைச் சுழற்றி வித்தைக்காட்டி வரவைப்பவர் ஏன் பெரிய பெரிய பொருட்களை வரவைப்பதில்லை?
இலிங்கத்தை வாய்க்குள் இருந்து எடுக்கும் இவர் பாம்புகளை எடுத்து வித்தைகாட்டினால் கொஞ்சம் ஆச்சரியப்பட நியாயமுண்டு!


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


கண்ணன் தன்னை நம்பிய கோபியரை கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தார் என்று கண்ணன் கதைகள் கண்ணன் பெருமைகளைக் கூற, இவரோ தங்கச் சங்கிலி(ஆபரணம்) வரவைப்பதுடன் நிறுத்திக் கொண்டது ஏன்? சுனாமியைத் தடுக்காதது ஏன்? ஈழ யுத்த அழிவை தடுக்காதது ஏன்? நடமாடும் கடவுளாயிற்றே?

இவரே இராமன், இவரே கிருஷ்ணன், இவரே சிவன், இவரே அல்லா, இவரே இயேசு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்; அல்லது பிரகடனப்படுத்தியுள்ளார். போதாக்குறைக்கு சீரடி பாபாவும் இவரே என்று கூறியும் உள்ளார்.


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


இராமனாக இருக்கட்டும்! கண்ணனாக இருக்கட்டும்! அற்புதங்கள் வெறும் "மஜிக்மான்" செய்வதுபோன்ற ஆபரணங்கள் எடுக்கும் வித்தைகளை செய்யட்டும்! அதுபற்றி கவலையில்லை! ஆனால் பிறவாத, கருவறையில் உருண்டு பிரண்ட கதையில்லாத சிவனும் இவரே என்று கதையளப்பது அத்வைத சுமார்த்தம் இவரை வருடிவிடுவதை புலனாக்குகின்றது. ஆதிசங்கரருக்கு கட்டி எடுபடாதுபோன கதையை இப்போது திரைமறைவிலிருந்து சாயிபாபாவுக்கு கட்டிவிட்டுள்ளது.

"சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை" (5)


"அவனை ஒழிய அமரரும் இல்லை " (6)
'தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்" (7)

என்கிறது திருமந்திரம். சிவனைவிட மேம்பட்ட அமரர்கள் எவரும் இலர் என்பதையும் சிவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இலர் என்பதையும் திருமந்திரம் வலியுறுத்தியிருக்க;

"பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்" (25)

பிறப்பிலி இறப்பிலி என்று சிவனைப் போற்றியிருக்க;

பிறந்து மூப்பு,நரை, தோல் சுருக்கம் என்று அத்தனையும் அமைந்த இரத்தமும் சதையும் கூடிய உடலை அந்த உடலினுள் உள்ள குடலினுள் புழுக்களையெல்லாம் சுமக்கும் ஒருவரை மலம்,சலம் என்று இயற்கை உபாதைகள் என்று அத்தனையும் கொண்ட ஒருவரை பிறந்தான் வளர்ந்தான் சாமதியானான் என்று வரலாறு இல்லாத சிவனோடு ஒப்பிடுவதும் சிவனென்றே சொல்வதும் கிஞ்சித்தும் ஏற்கமுடியாத வொன்று.

திருமால் பிருகு முனிவரின் மனைவியை அடைய விரும்பியதால் பிருகுமுனிவர் "சிவனைத் தவிர வேறு தெய்வம் தொழுது அறியேன் என்பது உண்மையானால் திருமாலுக்கு பத்துப்பிறவிகள் உண்டாகட்டும்" என்று சாபமிட்டதன் விளைவே திருமாலுக்கு பத்து அவதாரங்கள் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. எனவே மாலன் அயன் அறியாத பரமனை தானே என்றும் பின்னர் மால் எடுத்த பத்து அவதாரங்களும் தானே என்றும் பாபாவைச் சொல்லவைத்தது சுமார்த்தம். சொல்லும் அளவுக்கு வளர்த்து விட்டதும் சுமார்த்தம்

அடுத்து நித்தியானந்தா........?

சந்தி சிரிக்கும் அளவுக்கு சுமார்த்த ஊடகம் வளர்த்துவிட்ட நித்தியானந்தா நடிகையோடு நடத்தும் மஞ்சப் போர் இணையத்தில் உலாவுவது இந்துசமயத்தவரை தலைகுனிய வைத்துவிட்டது என்று பலர் வாடிப்போய்யுள்ளனர்.ஆனால் உண்மையில் வாடிப்போய்யுள்ளவர்கள் சுமார்த்த முகவர்களே!!!!

தாம் வளர்த்துவிட்ட ஒருவரின் அந்தரங்க கூத்து ஊரெங்கும் உலாவருவதால் வாடிப்போய்யுள்ளனர். சைவர்களும் சுமார்த்த இந்துவை உணராது அறியாமையில் தலைகுனிந்துவிட்டனர். இந்த அறியாமையை சுமார்த்தம் இந்து என்ற போர்வையில் இத்தனைகாலமும் சைவர்களுக்கு ஊட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்!
பக்தர்களின் முகத்தை அவர்களின் நன்மைகருதி மறைத்துள்ளேன்.


இந்த நித்தியானந்தா யார்? சுமார்த்த அத்வைதத்தை இந்துமதம் என்று போதிக்க சுமார்த்த சங்கராச்சாரியார்களின் ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஆசாமி!!!! இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனார்.

இந்த நித்தியானந்தா சிவனே முழுமுதற் பொருள் என்றுணர்ந்து சிவபூசை செய்தாரா? சைவ சமயத்தை ஒழுகினாரா? இவரது வண்டவாளம் தண்டவாளங்கள் ஊரறிய உலகறிய இணையமெங்கும் தொலைகாட்சி செய்தியெங்கும் உலாவருவதைக் கண்டு நாம் தலைகுனிவதற்கு?


"நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே"
                                - சிவஞான சித்தியார்

சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது
                               -சிவஞான சித்தியார்

மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம் என்றும் சைவமாம் சமயத்தை ஒழுகுவது நல்லூழ் தரும் பயன் என்றும் மேலே உள்ள பாடல்கள் உணர்த்துகின்றன.

"நான் கடவுள்" என்று ஒன்றுக்கு பலர் கதைவிட யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று கலங்குவதைவிட மானிடரை கடவுளாக மாற்றும் சுமார்த்த அத்வைத இந்துத்துவாவை உதாசீனஞ்செய்து, சிவாகமவழி நின்று, சிவாலய தரிசனம், சிவபூசை என்று உயர்வழியில் ஒழுகுவதே உத்தமமானது.உயர்வை அளிப்பது.


போலிகள் பெருக்கெடுக்க வைக்கப்பட்டுள்ளனவேயொழிய தானாக பெருகவில்லை என்பதை உணருங்கள்! இந்த மானிடருக்கு தம்மைக் காக்கவே வழிதெரியவில்லை........எம்மைக் காப்பது எப்படி? எனவே, மனிதர்களை கடவுளாக்கி உலாவரவிட்டுள்ள சங்கரபீட சுமார்த்த அத்வைத இந்துமத வலைப்பின்னலை உணர்ந்து, அவற்றுள் மூழ்காது; உன்னத சைவநெறியின்பால் நின்று உய்வடைவதே உயர்ந்த மார்க்கமாகும்.
 
"மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகமெலாம்"
மேலும் படிக்க...