"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 13, 2009

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு கட்டுரைத் தலைப்புகள்

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு வருகின்ற பெப்பிரவரி மாதம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் உலக சைவ மாநாட்டு வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்ற அன்பர்கள் கட்டுரைத் தலைப்பை குறித்த வலைப்பூவுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். கீழே குறித்த வலைப்பூவுக்குரிய சுட்டியை இணைத்துள்ளேன்.

உலக சைவ மாநாட்டு வலைப்பூ

கட்டுரைகள் 31ம் திகதி டிசம்பர் மாதத்துள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். நவம்பர் 18ம் திகதியன்று கட்டுரைத் தலைப்புகள் மாநாட்டு வலைப்பூவில் பிரசுரமாகிவிட்டன. எனினும் எளியேன் இவ்வலைப்பூ மூலம் அறியத்தர தாமதமாயிற்று. மன்னிக்க.

நன்றி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மேலும் படிக்க...

Sunday, November 8, 2009

திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி

"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்

"Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram is the soul of Tamil culture..." - Swami Shivanada -On the Tirukkural
நம் செந்தமிழ்ச் சைவ நூலாகவும் உலகப் பொதுநூலாகவும் விளங்கும் திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் உள்ள மேன்மையைக் கொண்டது.



தமிழ்மறை,பொதுமறை,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தெய்வ நூல்,முப்பால் நூல், உத்தர வேதம் என்று பலவாறு அழைக்கப்படும் திருக்குறளை சமணநூல் என சிலர் சொல்வார்கள். நாத்தீகவாத அரசியலின் ஆற்றாமையில் உருவாகிய கதையே இது. இன்று ஒருசில கிருஷ்தவ போதகர்கள் திருவள்ளுவர் தொட்டு ஔவையார்வரை கிருஷ்தவர் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் யாவும் ஆதிக் கிருஷ்தவத்துள் ஆரியம் கலந்ததால் விளைந்தவை என்றும் கதைகட்டித் திரிகின்றார்கள். பணபலம் கொண்ட இவர்கள் நாத்தீகவாதப் பீடங்களை தமக்கு தலையசைக்க வைத்துமுள்ளனர். எனவே இத்தருணத்தில் திருக்குறள் சித்தாந்த சைவநூலே என்பதை தெளியவைக்க வேண்டியது காலக்கடமை!

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்கிறார் ஔவையார்.

"வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி " என்கிறார் மனோன்மணியம்

நாத்தீகவாத அரசியல்வாதிகள், திருக்குறளுக்கு ஏற்பட்ட மதிப்பை உணர்ந்து, திருக்குறளை எதிர்க்க முடியாது போகவே சமண சமயநூல் என புரளியைப் பரவவிட்டு அரசியல்மேடைகளில் அப்புரளியை அடிக்கடி ஆயிரம் தடவைகள் உண்மையென கூவி தமது ஆற்றாமையை சோற்றுக்குள் மறைத்த முழுப்பூசணிக்காயாக்கிவிட்டனர். திருக்குறளை ஆரியக் கருத்துக் கொண்ட நூல் என்றும் பகுத்தறிவுபற்றிக் கவலைப்படாமல் எழுதிய நூல் என்றும் பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமியார் தனது குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்" -20.01.1929 குடியரசு இதழ். ஆனாலும் பின்னர் திருக்குறளின் மகத்துவத்தை உணர்ந்த நாத்தீகவாத பெரியாரிசத்தால் அதை சைவநூல் என்பதை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாது போய்விடவே, சமண நூல் என்பதுபோலவும், பொதுநூல் ஆதலால் கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக எதுவுமே இந்நூலில் இல்லை என்றும் இது இந்துமதக் கண்டன நூல் என்றும் கதைகட்டி விட்டனர். 14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை" என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" "குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்த பெரியார் பின்னர் திருக்குறளை கிருஷ்தவர்க்கும் இஸ்லாமியருக்கும் ஏற்றநூல் என்றும் ஆரிய எதிர்ப்பு நூல் என்றும் தனது கருத்தை மாற்றியமை திருக்குறள் உள்ளவரை வேதநெறியை எதிர்க்கமுடியாது என்று உணர்ந்தமையை புலனாக்கிறது. இந்துமதம் என்பதும் இந்துத்துவா என்பதுவும் அழகுத் திருநெறிச் சைவத்துக்கு நன்மையை ஊட்டாதவை என்பதை ஏலவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்துமதம் என்னும் பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்ற ஸ்மார்த்தம் வேறு. தென்னாட்டுச் சைவநெறி வேறு. இந்த வேறுபாடுகளை உணரக்கூடிய தெளிவு பெரியாரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலையடிகள் தொட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காய் உழைத்தவர்கள் சைவச் சான்றோர்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெரியாரிடத்தில் இருக்கவில்லை. தமிழரிடம் இலக்கியம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருந்த பெரியாருக்கு இந்த அருமையை உணர முடியாமல் போனதில் வியப்பெதுவும் இல்லை. ஆனால் அரசியல் பலத்துடன் இருந்த நாத்தீகவாதம் தனது ஆற்றாமையில் உருவாக்கிய "சமணநூல்" என்னும் பதத்தை அற்புதமாக தமிழரிடம் பரவச்செய்திட்டு!

இஸ்லாமியர் திருக்குரானுக்கு இணையாக கருதும் திறன் திருக்குறளுக்கு இல்லை எனவும் பொதுமறையாகக் கருதமுடியாது எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி பெரியார் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. கிருஷ்தவரில் திருவிவிலியத்தை ஆழமாய் நம்புகிறவர்கள் மறுத்துவிட்டனர். பொதுமறையாகக்கூட ஏற்கவில்லை.எனினும் கிருஷ்தவ மதத்தை ஒழுகும் தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் திருக்குறளை பொதுமறை என்பர். ஆனால் சில் விசமப் பிரச்சாரத் தரகுக்கூட்டத்தார் கிருஷ்துவின் அருளால் திருவள்ளுவர் எழுதிய நூல் என்று பிதற்றுகின்றனர்.ஆக; சைவரின்மேல் மட்டும் பெரியாரிசம் திணித்த ஒன்றே திருக்குறள் சைவநூல் அல்ல என்க.

திருக்குறளை சொந்தம் கொண்டாடினால் தமிழில் நிலைத்திருக்கலாம் என கனவுகாணும் கிருஷ்வ விசமிகள் சிலர், தோமஸிடம் அருள்பெற்று வள்ளுவர் எழுதிய நூல் என்று நகைச்சுவை நாடகத்தை தமிழகத்தில் அரங்கேற்றியவண்ணம் உள்ளனர். தோமஸ் என்பவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதை கத்தோலிக்கபீடம் ஏற்கவில்லை. ஏனெனில் ஆதாரம் ஏதுமில்லை. தோமஸ் தமிழகத்துக்கு வந்தார் என்றும் அவர் திருவள்ளுவருக்கு போதித்தார் என்றும் கதையைக்கட்டிவிட்டனர் ஆங்கிலேய காலத்தில் தமிழ்கற்று கிருஷ்தவம் பரப்பிய பாதிரிகள். வரலாற்றுரீதியில் வராத ஒருவருக்கு வந்ததாக வைத்து படம்கூட எடுக்க இருந்தமையும் அதுபற்றிய விழாவில் கருணாநிதி தமிழக முதலமைச்சர் பதவியோடு பங்குபற்றி அவ்விழாவுக்கு அங்கீகாரம் அளித்தமையும் வெட்கக்கேடு! வராத ஒருவரை வந்தார் என நம்புவதுக்குப் பெயர்தான் மூடநம்பிக்கை! கருணாநிதியும் மூடநம்பிக்கைகளை விரட்ட முனைகிற கழகங்களும் இந்த மூடநம்பிக்கையை நம்புவது அவர்களது கொள்கையின் இழிநிலை என்க. இதற்கு கருணையில்லாத நிதியாகிய கருணாநிதி விலைபோனதில் வியப்பில்லை.
ஜீ.யூ.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் சேர்ச்சில் மாணிக்கவாசகர் தன்னுடன் நிற்பதுபோலவும் முழந்தாளிட்டு வழிபடுவது போலவும் யேசுநாதரின் அடிச்சுவட்டைக் கண்டு மாணிக்கவாசகர் பின்பற்றியிருப்பார் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு எவ்வண்ணம் இத்தகு உருக்கம் இருக்கமுடியும் என்றும் அத்துடன் இவருடன் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகள் ஆகியோர் யேசுநாதரின் சரிதத்தை அறிந்துதான் இருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது கிருஷ்தவாசத்தாலேயே மெய்யுணர்வு பெற்றதாக சுட்டுகிறார். தமிழின் சிகரங்களாகவுள்ள திருவாசகம், திருக்குறள் மற்றும் நாலடியார் என யாவற்றையும் கிருஷ்தவ தொடர்பின் விளைவு என்று ஜீ.யூ.போப் சொல்லியது "திருவாசகமும் திருக்குறளும் "சைவநெறியோடு பிணைந்துள்ளவரை கிருஷ்தவத்தை முழுமையாகப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தே!

திருக்குறளை சைவநெறியில் இருந்து பிரித்து சமணநூல் என்று ஆரம்பத்தில் கதைபரப்ப பெரியாருக்கு உழைத்தது இக்கிருஷ்தவ விசம தரகுக்கூட்டம் எனலாம்.இரண்டாவதாக இப்போது வந்திராத தோமஸுடன் திருவள்ளுவருக்கு உறவுப்பாலத்தை ஊட்டுகின்றது தனது பணபலம் கொண்டு!

பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? இன்னொருவரிடம் இவ்வண்ணம் வேண்டியவர் "தனது கொள்கைக்காக எவ்வளவு கலப்படம் செய்து பொருளை திரிவுபடுத்தி பேசியிருப்பார், எழுதியிருப்பார்" என்பதையும் உய்த்துணரலாம்.

பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து பாரதிதாசனும் சைவ சித்தாந்த நூலே திருக்குறள் என்று ஒப்புக்கொண்டமையை உணரமுடிகின்றது.

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பார் அவர்" என்பது திருக்களிற்றுப்படியாரில் (சைவ சித்தாந்த சாத்திர நூல்) கடவுள் வாழ்த்து பாடலாகும். உமையம்மை உடனாய அப்பனாகிய சிவமே உலகத்தாருக்கு அம்மையப்பர். அம்மையப்பராக வந்தே துணை செய்வர். எல்லா உலகத்துக்கும் அப்பாலும் இவ்வுலகில் இல்லாததுபோலும் தோன்றுவர். "ஆதி பகவன் முதற்றே உலகு" என வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஏலவே இதே சைவ சித்தாந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் நாத்தீகவாதபீடங்கள் பகவன் என்பது சமணச் சொல் என்றும் தனது அம்மாவாகிய ஆதியையும் தனது அப்பாவாகிய பகவனையும் பாடுகின்றார் என்றும் பிதற்றுவர்.

உலகப் பொதுமறையை இயற்ற விளைந்தவர் தனது சொந்த தாயையும் தந்தையையும் கடவுள் வாழ்த்தில் சுட்டுவார் என்பது எவ்வளவு அறியாமை! கடவுள் வாழ்த்தில் தமிழிலக்கியங்களில் எந்தவொரு ஆசிரியரும் இவ்வண்ணம் சுட்டியது இல்லை. ஆனால் திருவள்ளுவர் வழமைக்கு மாறாக உலகப் பொதுமறையாக இயற்றுகின்ற நூலில் சுட்டினார் என்பது நாத்தீகவாத கதைகட்டலில் ஏற்பட்ட பெரிய ஓட்டை என்க.

அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.

திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.

அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.

சமணத்தின் உட்பிரிவுகள், பௌத்தத்தின் உட்பிரிவுகள் எவற்றோடும் திருக்குறளுக்கு சம்பந்தம் இல்லை என்பதையும் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனப்தையும் திருவாவடுதுறை ஆதீனம் தெளிவாக விளக்கியிருந்தும் அரசியல் பலம், பணபலமாகியன அற்றதனால் மக்களை சென்றடையாமல் அக்கருத்துகள் உள்ளன.

"தேருங்கால்
உன்னை ஒழிய உறவு இல்லை என்னும் அது
தன்னை அறிவைத் தனிஅறிவை - முன்னம்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை அவர் என்று - நிலைத் தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய் வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும் ஆவதுவே
செய்து அங்கு அவர்வழியைத் தப்பாமல்
பாவம் எனும் பௌவப் பரப்பு அழுந்திப்"

ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளாகிய உன்னைத்தவிர எனக்கு யாரும் உறவில்லை என்னும் கருத்தை, பசு ஞானம் எனப்படும் ஆன்மாவின் அறிவையும், பதி ஞானம் எனப்படும் பரம்பொருளின் மேலான மெய்யறிவையும் முன்பு எய்தியவர்கள் கூறினர்.இவ்வுடலையும் இவ்வுலக வாழ்வையும் முற்றாகத் துறந்தவர்களான அவர்கள் கூறிய இத்தகைய உண்மைகளை உணராதவர், மயங்கி மாயைகளின் வலையில் பட்டவர் என்று கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் மெய்யான கருத்தையும் அறிந்து கொள்ள விரும்பாமல், ஐந்து புலன்களுக்கு விருப்பமானதையே செய்து, அவை காட்டும் வழியில் மட்டும் தவறாது நடந்து பாவக்கடலில் மூழ்கி வருந்துவார் என சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகப் போற்றப்படும் நெஞ்சுவிடு தூதுவில் உமாபதி சிவாச்சாரியார் திருவள்ளுவரையும் "தலைப்பட்டார் தீரத்து றந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்" என்னும் குறளையும் பயன்படுத்தி திருக்குறளை சைவநெறியுடன் சமபந்தஞ் செய்துள்ளார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரில்;

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பறிப்பீனும் விந்து"

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்" என்னும் குறள்களை;

"வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால்
வேண்டிடுக வேண்டாமை வேண்டும் அவன்பால்"

என்னும் பாடலில் மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்பதும் திருக்குறள் சைவ சித்தாந்த நூலே என்பதை எளிதாகப் புலனாக்கின்றது.

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற" என்கிறது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவுந்தியார். உள்ளீடு இல்லாத பிறசமயங்களில் சென்று ஆவியை இழந்து மீண்டும் பிறப்பை ஏற்கக்கூடாது. அவற்றின் உரைகளைக் கேட்டுக் காலம் கடத்தல் கூடாது என்கின்றது. எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.

"நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி நூலின் கடைசிப் பாடலாக ஔவையார்,
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.

திருவள்ளுவரின் திருக்குறளும் உயர்ந்த நான்கு வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளும், தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தர்,சுந்தர மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் ஆகியோரின் தேவாரங்களும் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் திருமூலநாயனாரின் தமிழாகமம் எனப்படும் திருமந்திரமும் ஒரே பொருளை உணர்த்தும் நூல்கள் என உணர்வாயாக" என்று பாடுகின்றார்.

அதாவது திருநெறிச் சைவ சித்தாந்தந்த தோத்திர நூல்களான தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார்,திருமந்திரம் போன்றவற்றுடன் திருக்குறளையும் இணைத்து ஔவையார் சுட்டுவது, அவருக்கு ஏலவே இருந்திருந்த "முற்காலம்" உணருகின்ற யோகசித்தியையே காட்டுகின்றது எனலாம்.

"உணர்வாயாக" என்று ஔவையார் யாரையோ சுட்டிச் சொல்வது போல் உள்ளமையை இங்கு கவனிப்பீர்களானால் அது யாரை என்பது தெளிவாகப் புலனாகும். நாத்தீக அரசியலில் திருக்குறளை சைவநூல் அல்ல என்று கூசாது பொய்யுரைத்த பெரியார் தொட்டு அவரது பிள்ளைகள் என துடிக்கின்ற கருணையில்லா நிதி மற்றும் வீரமணி அடங்கலாக மதம்பரப்புதல் என்ற ஒரே குறிக்கோளுக்காய் தமது மதத்தையே விற்கத் துணிந்த ஒருசில கிருஷ்தவ விசமிகள் வரைக்கும் உள்ள அறிவற்ற அரசியல் மதபோதை பிடித்தவர்களுக்கே என்க.

சைவ சித்தாந்த புறச் சந்தான குரவர்களுக்கும் சரி, ஔவையாருக்கும் சரி, மற்றும் ஏனைய புலவர் பெருமக்களுக்கும் சரி, திருக்குறள் சமணநூல் என்றால் அதை சைவநூலாக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதேவேளையில் அத்தகைய இழிவான பண்பாடு அன்றைய தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கவில்லை. பெரியாரின் வழியில் உருவாகிய அரசியல் பண்பாடே இத்தகு இழிநிலையை தமிழில் அறிமுகப்படுத்தியது.சில கிருஷ்தவ தரகர்கள் தொடருகின்றனர்.

"ஓதுசம யங்கள்பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் - இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின் இதுவாகும்
அதுஅல்லது எனும்பிணக்கம் இன்றி நீதியினால்
இவைஎல்லாம் ஓரிடத்தே காண நின்றதுயாதொருசமயம்
அதுசமயம் பொருள்நூல் ஆதலினான் இவைஎல்லாம்
அருமறைஆ கமத்தே அடங்கியிடும்
இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"

உலகில் உள்ள சமயங்களும் அவற்றின் கொள்கைகளை விளக்கும் நூல்களும் தமக்குள் முரண்பட்டனவாக உள்ளன. இவற்றுள் சிறந்த சமயம் எது? சிறந்த நூல் எது? என வினவினால், விடையாக இது அது ஆகும் அது இது ஆகும் என்று குழம்பாமல், எல்லாக் கொள்கைகளும் உரியமுறையில் உரிய இடத்தில் இருப்பதைக் கூறுவதே சரியானதாகும்.அவ்வாறான சமயம் சிறப்பான சமயம்.அத்தகு நூல் சிறப்பு வாய்ந்த நூல்.எனவே இத்தகைய சைவ சமயக் கொள்கைகளே அரிய வேதத்திலும் ஆகமங்களிலும் அடக்கம்.இவை இரண்டும் இறைவன் திருவடிகளை விளக்கி அங்கு அடங்கும். சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞானசித்தியார் அழகாக அருமையாக உலகில் உள்ள எல்லா சமயங்களின் கருத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநெறி எனின் அது சைவநெறி என விளக்கியுள்ளார். எனவே இத்தகு நெறியில் பூக்கும் எந்த நூலிலும் பிறசமயத்தவர் தமது சமயக் கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி, தமது சமயக் கருத்தைக் கொண்ட நூல் என வாதிட இடமுண்டு. தற்போது இது கண்கண்ட காட்சி! கிருஷ்தவ விவிலியக் கல்லூரிகள் தொட்டு கிருஷ்தவ பள்ளிவரை தமிழகத்தில் திருக்குறள், சைவ சித்தாந்த நூல்கள்,நாலடியார், ஆத்திசூடி என்பன கிருஷ்துவின் அருளைப் பெற்று எழுதிய நூல்கள் என நச்சுக் கருத்தை விதைக்கின்றனர். ஜீ.யூ.போப் ஏலவே திருவாசகத்தை கிருஷ்துவின் அருளையுணர்ந்து எழுதிய நூலென சுட்டியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சைவ நூல்கள் பொதுநூல்களாக விளங்கும் உன்னத உயர்ந்த தன்மையே காரணம்.

எனவே உலகப் பொதுமறையாக சைவநெறி வழங்கிய திருக்குறளை எளிதாக இந்த விசமிகள் திரிவுபடுத்தி சமணநூல், பௌத்த நூல், கிருஷ்தவ நூலென எளிதாக கதைபரப்பக் கூடியதாகவுள்ளது. சமண, பௌத்த,கிருஷ்தவத்தவர்களுக்கு உலகில் உள்ள எல்லா சமயங்களையும் சமயங்கள் என ஏற்கின்ற உணர்வுநிலை இருந்தமைக்கான அல்லது இருக்கின்றமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே இத்தகு சமய உணர்வுடன் நூல்யாக்க முனைபவர் நேரடியாகவே தமது சமயநிலையை உயர்த்தி எழுதியிருப்பர். ஆனால் திருவள்ளுவர் பெருமானார் சைவநெறி ஒழுகி,அதன் பயனாக உலகுக்கு பொதுமறையாக நூல்யாக்க விளைந்து யாத்தநூலே திருக்குறள் என்பது திண்ணம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர். தமிழ் தாத்தாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. எனவே சமயசார்பற்ற இலக்கியங்கள் படைப்பதற்கு சைவநெறி வாழ்வே பக்குவத்தை வழங்கியுள்ளதை உய்த்துணரலாம்.

இன்று மதசார்பற்ற நாடக இந்தியா விளங்குகின்றதெனில், நாத்தீகம் பேசி;வேதநெறி,சைவ நெறி என்பவற்றை உணராது அரசியலுக்காய் எள்ளி நகையாடுகின்ற கருணையில்லா நிதி அரியணையை மீண்டும் மீண்டும் சுகிக்க ஏதுவாயிருப்பதும் சமயசகிப்புணர்வுச் சால்பை சைவப் பெருமக்களும் வேதப் பண்பாட்டு மக்களும் பெற்றுள்ள ஒரேயொரு காரணத்தால் என்பது வெள்ளிடைமலை!

"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந் நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்று மற்று"
- நக்கீரனார்

புளுகு பலநாளுக்கு தாக்குப்பிடிக்காது என்பர். எத்தனை காலத்துக்கு நாத்தீவ வாதப் புளுகுகள் தாக்குப்பிடிக்கின்றது என்று பார்ப்போம்!!!!!!

குறிப்பு:- திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலை இணையத்தில் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் தமது இணைய முகவரியில் ஏற்றியிருந்தார். எனினும் இன்று யாகூ தற்காலிகமாக தமது இலவச சேவையை நிறுத்திக் கொண்டதனால் அவ்விணைய முகவரி செயலிழந்துவிட்டது. எனினும் பிரிதொரு இணையவசதியூடாக ஆறுமுகநாவலர் என்னும் பெயரில் அன்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.குறித்த வலைத்தளத்திற்கு சென்று இந்நூலைப் படித்துப் பயனடையலாம். திருவள்ளுவர் சித்தாந்த சைவர் நன்றி.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

"தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

மேலும் படிக்க...

Sunday, September 13, 2009

ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்

ஸ்மார்த்த மதம் எமது சைவாச்சாரியகளான சிவாச்சாரியர்களை சாதிவலை கொண்டு தமக்குள் ஈர்க்கத் துடித்தவண்ணம் இருக்கும் இக்காலகட்டத்தில் நாவலர்பெருமானார் அன்று ஸ்மார்த்தரிடம் இருந்து சைவநெறியைப் பாதுகாக்க ஏற்படுத்திய விழிப்புணர்வுகளை பரப்புவது காலக் கடமையாகும்.

ஸ்மார்த்தர்கள் நாயன்மாருக்கு பூசை செய்கின்ற பிராமணர்களை பதிதர்கள் என அழைத்து சாதித்துவத்தை துதிபாடியபோது நாவலர் பெருமான் நமது சிவாச்சாரியார்களின் மனக்குறையை போக்கும் வகையில் ஐந்து வினாக்களை ஸ்மார்த்தர்மேல் தொடுக்குக என ஆணையிட்டுள்ளார்.

இதோ நாவலர் பெருமானின் திருவாக்கு
ஓ சைவ சமயிகளே, உங்களெதிரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு,அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள்.அவ்வினாக்கள் இவை.
1. ஓ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகரான ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ?
2. சௌந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசரியர் செய்த கிரகந்தங்கள் அன்றோ?
3. அறுபத்துமூன்று நாயன்மார்கள்ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைச் சௌந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுரநாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராச்சாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ?

4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே,அச் சங்கராச்சாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தர்களானீர்களோ அன்றோ?

5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாம் சொல்லி அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ?

மேலும் சைவத்தில் சாதி என்றால் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்."

இவ்வண்ணம் சாதி என்பதன் பொருள் சைவத்தில் எவ்வண்ணம் கையாளப்பட்டுள்ளது என்பதை வேதசிவாகமங்கள் சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள் யாவும் கற்ற ஈழவள நாட்டில் அறுபத்தி நான்காவது நாயனாராகப் போற்றப்படும் நாவலர் பெருமான் தெளிவாக விளக்கியிருக்க "சாதித்துவ குடைபிடிக்கும்" சுமார்த்தத்தை அறிந்தும் அறியாமலும் ஒழுகுவது எவ்வளவு மடமையாகும்!!!!!!!

"உங்கள் சங்கராச்சாரியர்" என நாவலர் பெருமான் சுமார்த்தரைச் சுட்டி வினாத் தொடுத்துள்ளதில் இருந்து ஆதிசங்கரர் கோட்பாடுகள் சைவநெறிக்கு ஏற்றதல்ல என்பதும் ஆதிசங்கரர் துதிபாடுவது சைவநெறிக்கு விரோதம் என்பதும் சங்கராச்சாரியர் பரம்பரை சைவநெறிக்கு உடன்பாடனதன்று என்றும் புலனாக்கியுள்ளார்.
சைவநெறியில் சாதித்துவம் உண்டு என்று உழறுகின்ற மூடர்களுக்கு நாவலர் பெருமானின் திருவாக்கு போதும் என நினைக்கிறேன்.
எனவே, சைவப் பெருமக்களே, இந்துத்துவம் என்னும் பெயரில் தமிழரில் தொன்று தொட்டு நிலவிவருகின்ற பண்பாடாகிய சைவப் பண்பாட்டை சிதைக்கும் வடக்குவலைக்கு சிக்காது சைவநெறி போற்றி மேன்மைகொள்வோம்.
மேலும் படிக்க...

Saturday, September 5, 2009

சிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்தேன்

கடந்த இரண்டு மாதங்களும் தமிழகத்தில் கல்வியாண்டு விடுமுறையைக் கழித்த சமயம் பெற்ற பயன்கள் ஏராளம். ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்பர். ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் என்பதை உணர்த்திய திருக்கோயில்கள் ஏராளம்.

தமிழகம் சென்றதில் இருந்து திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்ற அவா உள்ளத்தை தூண்டியவண்ணம் இருந்தது. சைவ சமயத்திற்குரிய ஆதீனங்களில் காலத்தால் பழமையும் ஞாலத்தில் தமிழ் தொண்டிற்கான பெருமையையும் தாங்கி நிற்கின்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் ஈழத்து சைவப் பாரம்பரியத்துக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. இத்தகு பெருமையை உடைய திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வரை தரிசனம் செய்து ஆசி பெறவேண்டும் என்ற அவா ஏற்படுவது இயல்பே!

எனவே; ஆலய தரிசன சுற்றுலாவுக்காக திட்டமிட்ட சமயம் திருவாவடுதுறை ஊடாக வாடகைக்கு அமர்த்திய மகிழூர்ந்து செல்லும்வகையில் பாதைகளை தெரிவுசெய்தேன். சீர்காழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மகிழூர்ந்து இயங்க மறுக்க, அங்கிருந்து முகந்தெரியாத ஒருவரின் உதவியால் வேறொரு வாடகை மகிழூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு செல்லும் சமயம், திருவாவடுதுறையை அடைந்தபோது குறித்த ஓட்டுனர் "எல்லா இடங்களிலும் நிற்பாட்டமுடியாது" என மறுக்கவே தஞ்சாவூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு போய் சேர்ந்தால் காணும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்கும் பேறை இழந்தேன். வாகன ஓட்டுனர் "இலங்கைத் தமிழர்" என ஏமாற்ற முனைந்த சமயம் "இலங்கைத் தமிழர்" என பரிதாப முகத்துடன் நலம் விசாரித்த நல் நெஞ்சங்களின் முகங்கள் என் மனத்திரையில் வந்துபோயினர். இங்கு தஞ்சாவூரில் நடந்த சம்பத்தையும் சுட்ட விரும்புகிறேன். நெல்லிக்காய் வியாபாரி என்னை "இலங்கைத் தமிழர்" என தெரிந்துகொண்ட பின்னர் கொடுத்த நெல்லிக்காய்குரிய பணத்தை பெற மறுத்துவிட்டார். "வசதியில்லாமல் வன்னியில் மக்கள் துன்பப்படுகையில் உங்களிடம் பணம் கொடுக்காது அவர்கள்மேல் தங்களுக்குள்ள இரக்கத்தை நான் பயன்படுத்துவது சரியல்ல" என்றேன். உடனே "எனக்குத் தெரியும்.உங்களிடம் வசதி உண்டு. அதனாலேயே தமிழகத்துக்கு வரமுடிந்தது.ஆனால் எங்கள் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை.அதுதான் இது என்னுடைய மனசாட்சிக்காக" என்று இறுதிவரை பணம் வாங்க மறுத்துவிட்டார். இப்படி பல நல்ல முகங்கள் வாழும் தமிழகத்தில் ஏமாற்ற முயலும் இப்படிப்பட்டவர்கள் பிறந்தது திருஷ்ட்டிப் பொட்டு!
திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்க முடியாமல் போன மனக்குறை நெஞ்சை வாட்டிய வண்ணமே இருந்தது. இப்படி ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு, திரும்பியபின் ஒருநாள் "மயிலை(மயிலாப்பூர்) கபாலீசுவரர் ஆலயத்திற்கு (எங்கள் வீட்டில் இருந்து பேரூந்தில் செல்வதாயின் 30 நிமிட தூரம்) சென்றபோது அங்கு சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே ஆவலுடன் சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்றேன். ஆகா......என்ன அற்புதம்!!!!!!



திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் வீற்றிருந்து அருளாசி வழங்கிய வண்ணம் இருந்தார். நெஞ்சு ஆனந்தக் கண்ணீரைச் சொரிய கண் குளிரக் கண்டு இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தேன். அம்மையை இடப்பாகத்தே கொண்ட சிவபெருமானின் திருவருட் சம்மதம் எளியேனை ஆட்கொண்டுள்ளதை உணர்ந்து பூரித்தேன்.


(குரு முதல்வரிடம் திருநீற்று பிரசாதம் பெறும்பேறு பெற்ற எளியேன்)

குரு முதல்வரிடம் இருந்து திருநீறு பெறும் பேறையும் பெற்றேன். என்ன அற்புதம்!!!!!யாரை நான் சந்திக்க முடியவில்லை என்று வருந்தினேனோ அவர் இறைவனின் திருவருட் சம்மதத்தால் கபாலீசுவரர் ஆலயத்திற்கு அன்று வருகை தந்திருந்து எளியேனின் மன வருத்தத்தை போக்கி அருளினார். எல்லாம் திருவருட் சம்மதம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மேலும் படிக்க...

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி ஒரு தொகுப்பு

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா"

என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார்.
முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய உணர்விக்கின்ற செல்வம் ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவரும் சிவனது திருமகனும் ஞானச் சிகரமாய் விளங்குபவரும் அறிவினில் வைத்து வணங்க வேண்டிய திருவடிகள் உடையவரும்மாகிய விநாயகப் பெருமான்.
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"
திருமந்திரம்.
சிவபெருமானின் திருவருட் சம்மதத்தோடு உமையம்மையால் ஆக்கப்பட்ட குழந்தையே விநாயகப் பெருமான். நந்தி(சிவன்) மகன் என திருமந்திரம் சிவபெருமானின் திருப்பிள்ளையை உரைக்கின்றது.

எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய சிவனுக்கும் தாயாகிய உமைக்கும் முதல் பிள்ளையாய் பூத்ததால் பிள்ளையார் எனும் செல்லப் பெயருக்கு உரியவர். பார்வதி தேவி நீராடும்வேளையில் தனது பாதுகாப்புக்காக தோற்றுவித்த புதல்வனே விநாயகர் என்றும்
புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி தான் நீராடும்போது பாதுகாப்புக்காக விநாயகரை உருவாக்க, கஜமுகசூரனின் வதமே சிவனின் திருவருட் சம்மதமாக இருந்தது. ஆற்றங்கரைகளிலும் கிணற்றுக் கரைகளிலும் பிள்ளையார் குடிகொண்டது பார்வதி தேவி நீராடும்போது தனது பாதுகாப்புக்கு உருவாக்கியதன் நிமித்தமே என்பர்.
ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, அரச மரத்தடியிலும் பிள்ளையாரைக் காணலாம்.

அரச மரத்தில் பதினொரு உருத்திரர்களும் அட்ட வசுக்களும் மும்மூர்த்திகளும் வாசம் புரிவதாக பிரமாண்ட புராணம் கூறுகின்றது. அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனிசுவரனால் ஏற்படும் இன்னல்கள் சூழமாட்டாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும் சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனிசுவரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.
சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே! பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான்,தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் "நாளை வருவேன்" என எழுதி வைக்கச் சொல்லுகிறார். எனவே சனீசுவரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். "நாளை வருவேன்" என சனிசுவரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனிசுவரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார். பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனிசுவரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு "அதிக இன்னல்களை கொடுக்கேன்" என வாக்குறுதி வழங்கினார்.இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனிசுவரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனிசுவரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும் பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.


விநாயகரின் நாபி பிரம்ம அம்சம்,முகம் திருமாலின் அம்சம்,கண்கள் சிவமயம்,இடப்பாகம் சக்தி அம்சம், வலப்பாகம் சூரிய அம்சம்.அரச மரம் மும்மூர்த்திகளின் தெய்வாம்சம் நிறைந்த விருட்சமாதலால் மும்மூர்த்திகளின் திருவருள் நிறைந்த பிள்ளையார் அங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பதும் முறையே.

விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். "கண்ணெதிரே காணும் இந்த உலகனைத்தும் ஓங்கார வடிவம்.சென்றவை,இருப்பவை,வருபவை எல்லாம் ஓங்காரம்.காலத்தின் மூன்று பகுதிகளைக் கடந்து நிற்கிற ஒன்றும் ஓங்காரமே." என்கிறது மாண்டூக்ய உபநிடதம்.
"வேதங்கள் எந்த வார்த்தையைக் குறிக்கோளாய்க் கொண்டிருக்கின்றனவோ, எதை முன்னிட்டு எல்லா தன்னொழுக்க முறைகளும் (தவம்) மேற்கொள்ளப்படுகிறதோ, எதை நாடி பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மந்திரம் ஓம் என்பதாகும்"
"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.இதுவே கடைசி எல்லை. இம்மந்திரத்தை அறிந்தவன் எதை விரும்பினாலும் அது கிடைக்கும்.இதுவே மிகச் சிறந்த ஆதாரம்.இதுவே மிக உயர்ந்த ஆதாரமும்.இந்த ஆதாரப் பொருளை அறிந்தவன் பிரம்ம லோகத்தில் சிறப்படைகிறான்"
என ஓங்காரம் வேத சாரம் என்பதை தெளிவாக்கிறது கட உபநிடதம். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் தொடங்கி, கன்னம்,தலை வழியாகச் சுற்றிக் கொண்டு இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை வந்தால் ஓம் எனும் வரி வடிவத்தைக் காணலாம்.

ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம்,உகரம்,மகரம் எனும் மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும், "ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது. ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார் மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது தெளிவாகும்.
எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார் சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக் கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.
முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான்.சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்படுவார்.
கணேசன்,ஏகதந்தன்,சிந்தாமணி,விநாயகன்,டுண்டிராஜன்,மயூரேசன்,லம்போதரன்,கஜானனன்,ஹேரம்பன்,வக்ர துண்டன்,ஜேஷ்டராஜன்,நிஜஸ்திதி,ஆசாபூரன்,வரதன்,விகடராஜன்,தரணிதரன்,சித்தி புத்தி பதி,பிரும்மணஸ்தபதி,மாங்கல்யேசர்,சர்வ பூஜ்யர்,விக்னராஜன் என்று இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும். அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,திருச்செந்தூர் கோயில்,திருவண்ணாமலை அம்மன் ஆலயத் தூணிலும் ,ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில் இப்பிள்ளையாரைக் காணலாம். எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. சித்தி,புத்தி என மனைவியர் இருவர் பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.
விநாயகப் பெருமானின் திருநடனத்தை கண்டு சிரித்தமையால் சந்திரன் தேயத் தொடங்கினான். விநாயகர் நிந்தை செய்வோருக்கு ஞானத்தில் தேய்பிறை என்பது திண்ணம்.ஞானம் கைகூடாது. கைகூடிய ஞானமும் கைவிட்டுப் போகும் என்க.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது கொன்றைவேந்தனில் ஔவையாரின் வாக்கு.
மாங்கனிக்காய் உலகை சுற்றிவர வேண்டியிருக்கையில் தாயையும் தந்தையையும் சுற்றி வந்து மாங்கனியை வென்றவர் பிள்ளையார். "தாயும் தந்தையுமே உலகு" என்பதையும் சிவசக்திக்குள் உலகம் அடக்கம் என்பதையும் உணர்த்தவே மாங்கனித் திருவிளையாடல் என்க.

முருகனோடு வள்ளி காதல் கொள்ள யானையாக வந்து உதவியவர் பிள்ளையார்.
வள்ளி என்னும் ஆன்மாவை இறைவனாகிய முருகன் தேடி வந்து தன்பால் ஈர்க்க முயலும்போது இறைவனாகிய விநாயகர் உதவுதல் என்பதே இதில் உள்ள தத்துவம் என்க.


பாசங்களில் இருந்து பசுக்களை மீட்டு தன்பால் ஈர்க்கும் பதியின் கருணையை சுட்டுவதே இதன் பொருளாகும். வள்ளியைத் தேடி முருகன் காடுகளிலும் அருவிகளிலும் அலைவது ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட இறைவன் எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது. விநாயகர் யானையாக வந்து வள்ளியை முருகன்பால் திருப்புவது, இறைவன் ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட்டு பதியை நோக்கி நகர இறைவனே சோதனைகளை உருவாக்கி இறைவனை உணர்த்துவான் என்பதாகும்.


மாணிக்கவாசகப் பெருமானுக்கு நரி-பரி என்று பல்வேறு சோதனைகளையூட்டி ஆட்கொண்டமை இந்தத் தத்துவத்தை தெளிவுபடுத்துகிறது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகராகிய மாணிக்கவாசகர் உருகுவதும் இதனையே ஆகும்.
கஜமுகசூரனின் மனைவியார் உமையை வழிபட்ட காரணத்தால் கஜமுகசூரனுடனான போரில் அவனை வதைக்காது மூசிக வாகனமாக மாற்றி ஏற்றருளியவர் விநாயகப் பெருமான்.
சிவபெருமான் விநாயகரை மறந்து திரிபுர தகனத்திற்கு சென்றதனாலேயே சிவபெருமானின் தேர் அச்சு முறிவுக்கு உள்ளாகியது என்பர். பரம்பொருளான சிவபெருமான் காரிய சித்தி தங்குதடையின்றி கைகூட வேண்டுமென்றால் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை பாருக்கு அறிவிக்கவே அவ்வாறு திருவருட்சம்மதம் பூண்டார் எனலாம்.

"நற்றவா உன்னை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே" என்கின்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அதுபோல் பிள்ளையாரைக் கண்டதும் மனம் மறந்தாலும் உடல் அவயவங்கள் தோப்புக்கரணம் போட மறக்காது என்பது மனதார யாவரும் உணர்ந்ததே! கஜமுகாசூரனிடமிருந்து தேவர்களை மீட்ட பிள்ளையாருக்கு செலுத்தும் நன்றியுணர்வாக அசூரன் முன்னேயிட்டு வந்த தோப்புக்கரணத்தை, தேவர்கள் பிள்ளையார் முன் இட விரும்பி வரமாக பிள்ளையாரிடம் வேண்டினர். அசூரனிடம் இருந்து தேவர்களை மட்டுமா மீட்டார்? உலகையே மீட்டார் என்பதாலேயே நாமும் தோப்புக்கரணம் நன்றியுணர்வுடன் போடும் பழக்கம் உருவாயிற்று.
மகாவியாச முனிவர் மகாபாரதத்தைப் சொல்லச்சொல்ல எழுதிக் கொண்டிருந்த விநாயகப் பெருமானின் எழுத்தாணியின் முனை மழுங்க, தனது வலது தந்தத்தை முறித்து அதையே எழுத்தாணியாகப் பயன்படுத்தி மகாபாரதத்தை தொடர்ந்து எழுதினார். அதேபோல் ஒருமுறை பரசுராமர் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் வந்தபோது, இடைமறித்த விநாயகருடன் போர் தொடுத்தார். அப்போது சிவபெருமானால் அளிக்கப்பட்ட பரசு ஆயுதத்தை விநாயகப் பெருமான் மீது ஏவ அது சிவாம்சம் பொருந்திய ஆயுதம் என்பதால் அதை எதிர்ப்பின்றி தனது இடது தந்தத்தால் தாங்கியபோது, அவரது இடது தந்தமும் உடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு இருதந்தமும் இல்லாத நிலையில் அருள்பாலிக்கின்ற விநாயகரை திருவாரூர் தியாகேசர் கோயிலில் பாதிரி மரத்தடியில் காணலாம்.

மாணிக்கவாசகப் பொருமான் சிதம்பரத்துக்கும் தில்லைக் காளியம்மன் ஆலயத்திற்கும் இடையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சதுர்முடி விநாயகர் ஆலயத்தை வழிபட்ட பின்னரே திருவாசகத்தைப் பாடினார் என்கின்றது அவ்வாலயத்துக்குரிய கர்ணபரம்பரை கதை.

சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்த ஔவையார் (பல ஔவையார்கள் உண்டு.), சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீது ஏறிக்கொண்டு திருக்கயிலைக்குச் சென்று கொண்டிருக்க, விநாயகர் பூசையை செய்து விநாயகர் அகவலைப் பாடி, விநாயகப்பெருமானின் துதிக்கையின் உதவியுடன்(துதிக்கையால் ஔவையாரை தூக்கி கைலாயத்தில் இறக்கிவிட்டார்) அவர்களுக்கு முன்னரே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார்.விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவ் ஔவையார் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் என்பர் தமிழறிஞர்கள்.
"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே." என்று ஆத்தி சூடியிலும் (ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும்)"கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்று கொன்றை வேந்தனிலும் ("கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். ) "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு" என்று மூதுரையிலும்
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் "
என்று நல்வழியிலும் பிள்ளையாரை கடவுள் வாழ்த்தில் பாடும் ஔவையார்; பிள்ளையாருக்கு,
"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
............."
என்று "விநாயகர் அகவல்" என்னும் பாமாலையையும் சூட்டியுள்ளார்.

முருகன் மீது தமிழை திருப்புகழாக்கி சூட்டிய அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பிள்ளையாருக்கு உகந்த இருபத்தியொருவகையான படையல்(நிவேதன) பொருட்களை பட்டியல் இடுகின்றார்.
"இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்று வரையிள நீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழமிடிப் பல்வகை தினிமூலம்
மிக்க அடிசிற் கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமார்த்தனெனு மருளாழி
வெற்ப குடி லச்சடிவ விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே"

இக்கு(கரும்பு), அவரைக்காய், நற்கனிகள்,சர்க்கரை,பருப்பு, நெய்,எள்,பொரி,அவல்,துவரை,இளநீர், வண்டு எச்சில்(தேன்),பயறு,அப்பம்,பச்சரிசி,அரிசி மாவினால் செய்யப்பட்ட பிட்டு, வெள்ளரிப்பழம், இடிப்பல் வகை(அரிசியை இடித்து செய்யப்படும் மோதகம்) தனி மூலம்(ஒப்பற்ற கிழங்குகள்) மிக்க அடிசில்(சிறந்த உணவு வகைகளான சித்ரான்னம்),கடலை என விநாயகப் பெருமானுக்கு உவந்த நிவேதனப் பொருட்களை திருப்புகழில் தீட்டியுள்ளார் அருணகிரிநாதர்.

முருக பக்தரான அருணகிரிநாதர் ஏன் பிள்ளையாரின் படையலுக்கு ஏற்ற பொருட்களை பாடலாக்க வேண்டும் என ஐயம் எழலாம். வயலூர் எனும் தலத்திற்கு வந்த அருணகிரிநாதருக்கு எதைப்பற்றி பாடுவதென்று உணரமுடியாது குழப்பம் ஏற்படவே திருப்புகழை தொடர்ந்து பாட முடியாமல் போயிற்று. அப்போது அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பொள்ளாப் பிள்ளையார்(உளியால் செதுக்கப்படாது தானாகத் தோன்றிய பிள்ளையார்) ஆறுமுகன் புகழைப் பாட வழிகாட்டினார். ஆதலால் ஐம்முகனுக்கு நன்றி செலுத்தவே பிள்ளையார்மீதும் திருப்புகழைப் பாடிப்பரவசம் அடைந்தார்.
எருக்கம் பூ, அருகம் புல் போன்ற எளிய பொருட்களால் வழிபடக் கூடியவனும் ஆகம முறை, ஆகமம் அற்ற முறை என இருமுறைகளிலும் எழுந்தருளியிருப்பவனும் கோமயமும் அருகம்புல்லும் இருந்தாலே திருவுருவம் தாங்கும் தன்மையினால் ஏழை எளியவர்களின் குடிசைகள் தொட்டு செல்வந்தர்களின் மாளிகைகள்வரை எளிமையாக எழுந்தருளக்கூடியவனுமாக விளங்குபவன் விநாயகப் பெருமான்.
அருகம்புல்லுக்கு இணையானது என்று வன்னி மர இலையும் மந்தார மலரும் கருதப்படுகின்றது. இரு திருடர்கள் வன்னி மரத்தின் மேலேறி நின்று சண்டையிட்டு கிழே விழுந்து மரணித்தபோதும், அவர்கள் சண்டை செய்கையில் உதிர்ந்த வன்னி மர இலைகள் கிழே இருந்த விநாயகப் பெருமான் மீது வீழ்ந்த காரணத்தால் தேவலோக வாழ்வை பெற்றனர் என்று ஓர் கதையும் உண்டு.
காசியப்ப முனிவரின் யாகத்தினைக் குழைக்க முயன்ற அசுரனை யாகத்திற்காக வைத்திருந்த கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை எடுத்து அவன் மீது வீசி அவ்வசூரனை அழித்தார். யாகத்திற்கு ஏற்பட்ட இடையூறை தேங்காயைக் கொண்டு அழிந்ததனால், விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரன் முன்னால் "இடர்களை உடைத்து காப்பான்" என்பதை உணர்த்தும் பொருட்டு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாயிற்று.
மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கியதால் விநாயகரின் திருமேனி வெப்பத்தால் தகித்தது.இந்த வெப்பத்தைப் போக்கி விநாயகரை குளிர்வித்த மகிமையுடையது அருகம்புல். அகரம் புல் என்பதுவே அருகம்புல் என வழங்கலாயிற்று என்பர். இவ் அருகம்புல் விநாயகரை வழிபட எளிய பூசைப் பொருளானதும் இதன் பொருட்டே!

பிள்ளையாருக்கும் அனந்தேசர் என்பவரின் பிள்ளையாகிய நம்பியாண்டார் நம்பிக்கும் உள்ள பந்தம் மூலம் திருமுறைகளை சைவத்தமிழ் உலகுக்கு அளித்த அருமை பிள்ளையாரின் பெருமையாகும்.அனந்தேசர் என்ற அந்தணர் திருநாரையூரில் உள்ள சுயம்பு பிள்ளையாராகிய பொள்ளாப் பிள்ளையாருக்கு பூசை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் நைவேத்தியத்தை கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூசை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ மன்றாடி மனமுருகிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்தியம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையில் முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டார். இதை அறிந்த தந்தை அனந்தேசர் "நம்பி உண்டுவிட்டு பொய் சொல்கிறான் பிள்ளையார் எப்படி சாப்பிடுவார்?" என ஐயம் கொண்டு அதட்டியபோது நம்பி பிள்ளையாரே உண்டார் என பதிலளிக்கவே, மறுநாளும் நம்பியையே பூசைக்கு அனுப்பி சோதித்தபோது பிள்ளையார் உண்பதை உணர்ந்து நம்பி பொய்யுரைப்பதாக தவறாக கருதி தண்டித்ததை எண்ணி வருந்துகிறார். இப்படி நம்பியுடன் விளையாடியதால் "பொல்லாப்"பிள்ளையார் என்றும் இப்பிள்ளையார் வழங்கப்படலானார்.
நம்பியாண்டார் நம்பிக்கு வேதாகமங்களை ஓதாமல் உணர்வித்த இப்பொள்ளாப் பிள்ளையாரை "திருமுறை காட்டிய விநாயகர்" என்றும் அழைப்பர். திருமுறைகள் இருக்கும் இடத்தை அசரீரியாக நம்பியாண்டார் நம்பிக்கு கூறி,உலகுக்கு கிடைக்க வழிசெய்தமையால் இக்காரணப் பெயரும் உருவாயிற்று.
"பொள்ளா" என்றால் உளி கொண்டு செதுக்காத சுயம்பு என்று பொருள் - இது காழியூரார் அளித்த விளக்கம்.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணத்தில்
,"கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து"
என்று "பொல்லாப் பிள்ளையார்" எனக் குறிப்பிடுதல் நம்பியாண்டார் நம்பிக்கு செய்த திருவிளையாடல்களை கருத்தில் கொண்டே என்க.

காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டு காவேரியை பெருக்கெடுத்து ஓடச் செய்தமை, விபூடணனின் கைகளில் இருந்த திருவரங்கப் பெருமானை காவேரிக் கரையில் எழுந்தருளச் செய்தமை என பிள்ளையார் பெருமைகள் ஏராளம்.
"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்" பெருமைகளை மனதில் நிறுத்தி விநாயகர் சதுர்த்தியை அநுட்டித்து சிவஞானம் சித்திக்க வேண்டுவோமாக.
"பிடியத னுருவுகை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வெளி வலமுறை இறையே"
என்கின்ற ஞானக்குழந்தை திருஞானசம்பந்தனின் தமிழால் பார் முழுதும் அமைதியும் சமாதானமும் உண்டாக பிரார்த்தித்துக் கொள்வோம்.
மேலும் படிக்க...

Thursday, August 20, 2009

திருக்கோயில் வழிபாட்டு விதிகள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார்.

"திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பல தளிகளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே"


என்று திருக்கோயில் இல்லாத ஊரை அடவி காடு என குறிப்பிடுகிற அப்பர் பெருமான் "ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ராரே" என்று வருந்துகின்றார்.
இவை ஆலய வழிபாடு ஆன்மா இறைவன்பால் லயப்படுவதற்கு அவசியம் என்பதால் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என அப்பரடிகள் வலியுறுத்துவதை உணரலாம்.




ஆ- பசு எனப் பொருள்படும்.பசு என்றால் ஆன்மா. ஆன்மா லயப்படும் இடம் என்பதே ஆலயத்தின் பொருளாகும். கோ என்றால் அரசன். இல் என்றால் இருக்கும் இடம்.எனவே கோயில் என்பது பசுக்களின்(ஆன்மாகளின்) பதியாகிய இறைவன் சிவப்பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் இடம் என பொருள்படும்.

கற்பனைக் கடந்த சோதியாகிய சிவப்பரம்பொருள் ஆன்மாக்களை ஈடேற்றும் கருணையின் நிமித்தம் அற்புதக் கோலந்தாங்கி எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு சைவ சமயிகள் யாவரும் நாள்தோறும் சென்று விதிப்படி பயபக்தியுடன் வழிபடுதல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆலயம் செல்ல இயலாதவர்கள் சோமாவாரம் , மங்கலவாரம், சுக்கிரவாரம்,பிரதோசம்,பௌர்ணமி,அமாவாசை,திருவாதிரை,கார்த்திகை,மாதப்பிறப்பு,சூரியகிரகணம்,சிவராத்திரி,நவராத்திரி,விநாயசதுர்த்தி,விநாயகசட்டி,கந்த சட்டி,போன்ற விசேடநாள்களில் தவறாது செல்லுதல் வேண்டும்.

திருக்கோயில் கோபுரம் தூலலிங்கம் எனப்படும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர்.

ஆதலால் திருக்கோயில் கோபுரத்தை கண்டதும் கைகூப்பித் தொழுது திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணியதீர்த்தத்தில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைதரித்து (ஈர ஆடையுடன் ஆலயம் செல்லல் தவறு) பரிசுத்தமாக கோயிலுக்கு செல்லல் வேண்டும்.

ஆலய புண்ணிய தீர்த்தத்தில் குளிக்க முடியாதவர்கள் இல்லத்தில் நித்திய கருமங்களை முடித்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆலயத்துக்கு வரவேண்டும். வரும்போது இயலுமானவரை அந்நியமான எவருடனும் முட்டாது அவர்களைத் தீண்டாது வரவேண்டும்.(அறிமுகம் இல்லாதவர் மரணவீட்டிற்குச் சென்றுவிட்டும் வரலாம்.எனவேதான் எவரும் தீண்டாதவண்ணம் இயன்றவரை வரவேண்டும்.) ஆலயம் வந்ததும் கேணியில் கால்களை கழுவுதல் வேண்டும்.

தேங்காய்,பழம்,பாக்கு,வெற்றிலை,கற்பூரம்,மலர்கள்,மாலை முதலியனவற்றை தட்டில் அல்லது பாத்திரத்தில் வைத்து அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக் கொண்டு போதல் அவசியம்.
நாம் யாரேனும் பெரியவர் வீட்டுக்கோ அல்லது தெரிந்தவர் வீட்டுக்கோ செல்லும்போது ஏதேனும் அவர்களுக்கு கொண்டுசெல்வதை மரியாதையாக கருதுகிறோம். ஐந்தொழில்களையும் புரிகின்ற இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு செல்லும்போது அன்பு என்ற ஒன்றே உண்மையில் போதுமானது.ஆனால்?
ஏதேனும் இறைவனுக்கு செய்யப்படும் பூசைக்கு உதவக்கூடிய பொருட்களில் ஒன்றையேனும் கொண்டுசெல்லாவிட்டால் அந்த அன்புக்கு மரியாதையை நாம் செய்யவில்லை என்றே அர்த்தமாகிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தின் அருகில் நிலத்தில் விழுந்து ஆண்கள் அட்டாங்கமாகவும் பெண்கள் பஞ்சாங்கமாகவும் வணங்க வேண்டும்.

அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,மேவாய்,புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல்

இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் என பண்ணுதல் வேண்டும்.
விழுந்து வணங்கும்போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் தலைவைத்து வழிபடல் வேண்டும். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.

பின்னர் பலிபீடத்தில் பாசங்களை பலியிட்டு பின் நந்திதேவரிடம் நின்று வணங்கி அவர் அனுமதி பெற்று துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
"நந்தியெம்பெருமானே, பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழுமுதற்பொருளுமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.இறைவனின் திருவருள் கிட்ட அருள்பாலியும் ஐயனே" என்று வேண்டலாம்.



பிறகு ஆலய விநாயகர் சன்னிதியில் (வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது விதி) நின்று வழிபட்டு குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டு பின்னர் திருமூலட்டானத்தினை நோக்கி செல்ல வேண்டும். அதனையே கருவறை, மூலத்தானம் எனவும் அழைப்பர்.

மூலத்தானத்தில் உள்ள முழுமுதற் பொருளாகிய சிவலிங்கத் திருமேனியை அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை;
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

மண்டையோட்டுத் தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
என திருமுறைகளை ஓதி மனமுருகி வழிபடல் வேண்டும்

பின் அந்தணரிடம் இருந்து திருநீறு பெற்று சிவ சிவ என உச்சரித்தவண்ணம் பூசுதல் வேண்டும். பின் வலம் வருதல் வேண்டும்.


தெற்குப் பாகத்தில் தென்முகக் கடவுளை வழிபடுதல் வேண்டும். கல்லாலின் புடையமர்ந்து நான்கு மறை ஆறு அங்கம் முதலியவற்றைக் கேள்வி வல்லவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் வாக்கியலைக் கடந்த நிறைவாயும் வேதங்கட்கு அப்பாற் பட்டதாயும் எல்லாமாயும் அல்லது மாயும் உள்ளத்தின் உண்மையை உள்ளபடி காண்பித்துக் குறிப்பால் உணர்த்திய தட்சிணா மூர்த்தி சந்நிதியின் முன்நின்று பாடலோதி வணங்குதல் வேண்டும்.
பின் தென்மேற்கு மூலையில் விநாயர் இருப்பர். அவரை வணங்கி பின் அடுத்தடுத்தாற்போல் உள்ள ஆலய மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.

மூலதானத்திற்கு நேர் பின்புறம் முருகன் அல்லது திருமால் இருப்பது மரபு. திருமால் இருப்பின் வடமேற்கு மூலையில் முருகன் இருப்பது மரபாகும். சில கோயில்களில் பின்புறம் முருகனும் வடமேற்கு மூலையில் கஜலட்சுமியும் இருப்பது மரபாகும்.

தெற்கு நோக்கி ஒவ்வொரு திருக்கோயிலிலும் நடராசப் பெருமான் எழுந்தருளியிருப்பர்.சைவ சமயத் தத்துவங்களைத் தாங்கிநிற்கும் திருவுருவம் நடராசப் பெருமான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண் நீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுமாய் எழுந்தருளி ஐந்தொழில்களையும் ஆட்டுவிக்கும் நடராசப் பெருமானின் முன்நின்று திருமுறைகளை ஓதி வழிபடல் வேண்டும்.

அம்மன் திருக்கோயில் பெரும்பாலும் தெற்குநோக்கியே அமைந்திருக்கும். சில கோயில்களில் மூலத்தானைத்தை அடுத்து இடப்பக்கமாக தனிக்கோயிலாக அமைந்திருக்கும். தனம் தருபவருளும் கல்வி தருபவளும் ஒருநாளும் தளர்வறியா மனம் தருபவளும் தெய்வ வடிவம் தருபவளும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருபவளும் நல்லன என்ன என்ன உண்டோ அவையாவையும் அள்ளித் தருபவளும் அன்பர்களுக்கு எல்லாப் பெருமைகளையும் தருபவளுமாகிய நறுமணப் பூவினைச் சூடியுள்ள கூந்தலையுடைய அம்மையை வழிபடல் வேண்டும்.

பின் துர்க்கையை வழிபட்டு சண்டிகேசரை வழிபடல் வேண்டும். "பெருமானே,அடியேனுக்கு கிட்டிய திருவருட்சம்மதத்தால் திருக்கோயிலை வழிபடும் பேறு பெற்றேன்.வழிபாட்டில் அபுத்தி பூர்வமாக ஏதேனும் தவறிழைத்திருந்தால் அவற்றைப் மன்னித்து அருள வேண்டும்' எனப் பிரார்த்திக்க வேண்டும்.சண்டிகேசரை வழிபடும்போது கையை மெதுவாகத்தட்டுவது மரபு.
உரக்கத்தட்டுதலைத் தவிர்க்க. சண்டிகேசர் நிட்டையில் இருப்பதால் நமது வரவை தெரிவிக்கவெ இவ்வாறு மெதுவாக கைதட்டுவது மரபு. சண்டேசுவரர் எழுந்தருளியுள்ள பிரகாரத்தை வலம் வருதல்,வீபூதி, குங்குமம் சண்டேசுவரர்மேல் எறிதல்,நூல் கழட்டி வைத்தல்,சுண்டுதல் என்பன பெருந்தவறாகும்.(தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டிகேசர் பிரகாரத்துள் நுழைந்து சண்டிகேசரைத் தீண்டி வணங்குவது கண்டு "தவறு' என எடுத்துக் கூறியபோது "இவ்வாலயத்தில்" இது சரி என அன்பர் வாதிட்டார். பின்னர் அங்குள்ள அந்தணரிடம் விசாரித்தபோது "பிழை" என்று சொன்னவர் மக்களின் தவறான நம்பிக்கையின் விளைவால் ஏற்பட்டது என்று வருந்தினார்.



பின்னர் பைரவர் சந்நிதியை வழிபட்டு விடைபெற்றுச் செல்லல் வேண்டும். பைரவர் திருக்கோயில் காவல் தெய்வமாகும்.
பின் புறங்காட்டாது பலிபீடத்திற்கு இப்பால் வந்து இடபதேவருடைய கொம்புகளினூடாக சிவலிங்கப் பெருமானை வழிபட்டு விழுந்து வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து சிவபெருமானை மனதில் எழுந்தருளச் செய்து திருவைந்தெழுத்தை உச்சாடனம் செய்து திருமுறைகளை ஓதி வழிபடல் நன்று.

"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே"

என்று அம்மையினுந் துணை ஐந்தெழுத்தே என இறைவியிடம் ஞானப்பால் பெற்று அருந்திய திருஞானசம்பந்தர் எமக்கு விளக்கியுள்ளார். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர்.
"சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாயிலைக் கடந்துபோன வாயுவை
உபாயமிட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே"

என்று ஐந்தெழுத்தே மரணத்தின் பின் உபாயம் என்கிறார் சித்தர் சிவவாக்கியார்.
உருக்கழிக்கு முன்னமே உரையுணர்ந்து கொள்ளுமே என்று ஐந்தெழுத்தை உணரும்படி வேண்டுகிறார். எனவே ஐந்தெழுத்தை; நம சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தை 'ஓம்" என்னும் பிரணவம் சேர்த்து செபித்தல் வேண்டும்.



சிவாலயங்களை மூன்றுமுறை வலம்வருதல் விதி. எனவே பின்வருமாறும் ஆலய வழிபாடு மேற்கொள்ளப்படும்.
முதல் வலமாக கொடிமரத்தின் கீழ் விழுந்து வணங்கிய பின் வெளிப் பிரகாரத்தை சுற்றுதல்.
பின் திருமூலட்டானத்தை வழிபட்டபின் அம்மையை வழிபட்டு வலம் வருதல். இவ் இரண்டாம் வலத்தின்போது உற்சவமூர்த்திகள், நடராசப் பெருமான் ஆகியோரை வழிபட்டு சமயகுரவர்,சந்தான குரவர், அறுபத்து மூவர்,சேக்கிழார் ஆகியோரை வழிபட்டு முருகப் பெருமானை வழிபடல் வேண்டும் என்பர்.
மூன்றாம் சுற்றில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, பின் துர்க்கையை வழிபடல் வேண்டும்.கடைசியாக சண்டேசுவரரை வழிபடல் வேண்டும். ஒவ்வொரு சுற்றுப் பூர்த்தியிலும் பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணங்குதல் வேண்டும்.



திரும்பும்பொழுது ஆலயத்தின் வாயிலில் சற்று அமர்ந்து பின் எழுந்து செல்லல் வேண்டும். சிவாலயங்களில் ஏழு சிரஞ்சீவிகள் தங்கியிருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடுவரை வந்து மரியாதை செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே அவர்களை "நீங்கள் இருங்கள்,நாங்கள் சென்று வருகிறோன்" என்னும் பொருளிலேயே இவ்வாறு ஆலய வாயிலில் அமர்ந்து எழுந்து செல்லல் மரபு.

கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவ னாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை மனம்,மொழி,மெய்யினால் வழிபட்டு ஆலய வழிபாட்டை இறைசிந்தையுடன் பூரணப்படுத்தல் வேண்டும்.

திருக்கோயிலில் நுழைந்தது முதற் வெளியேறும்வரை இறைவனைத் தவிர வேறுயாரையும் கைகூப்பியோ அன்று விழுந்து வணங்கியோ அன்றி சாதரணமாகவோ வணங்குதல்/கும்பிடுதல் கூடாது. இறைவனுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் இது என்பதை நினைவில் கொள்க. எவரும் யாருடைய வணக்கத்தையும் ஏற்றலும் கூடாது.
அந்தணரை வணங்குதல், கும்பிடுதல் அறியாமையால் இன்று நிகழ்வதுண்டு. இது தவறாகும்.
இறைவன் சம்பந்தப்பட்ட வேறு பேச்சுக்களை பேசக்கூடாது.

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தங்கள்
நடராசர் :- படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிகளையும் செய்யும் கடவுள் அம்பலவாணர் திருவுருவம்.

உமாதேவி:- சிவபெருமானுடைய திருவருட்சக்தி. ஐந்தொழில்களுக்கும் துணையாகவுள்ள சிவசக்தி.உமாமகேசுவரராகிய சிவனே அம்மை வடிவங்களை வழிபடும் அன்பருக்கு அருள்பாலிப்பவர் என்பதை "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்னும் திருவாசகம் மூலம் அறியலாம்.

சந்திரசேகரர்:- உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட போகவடிவம். சடையில் ஒற்றைப்பிறை விளங்கும்.

சோமஸ்கந்தர்:- சர்வலோகங்களையும் தேராய் அமைத்து ஆரோகணித்து முப்புரங்களையும் எரிக்கப்புறப்பட்ட கோலம்.

தட்சணாமூர்த்தி:- குரு வடிவம் கல்லால மரத்தின்கீழ் ஞானகுருவாக எழுந்தருளிய சிவபிரான் வடிவம்.

பிட்சாடனர்:- ஆன்மாக்கள் செய்யும் செப,தப அனுட்டானங்களை ஏற்கும் திருவடிவம்.

மேலும் திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.

விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை

பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணக்க வேண்டும். கோயிலில் வேறு எங்கும் எச்சந்நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது.
சமய சின்னங்கள் இன்றி ஆலயம் செல்லல் ஆகாது.
இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு,வில்வம்,மலர் போன்றவற்றை மிதித்தல் ஆகாது.
ஒரே ஒருமுறை பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
தனித்தனியாக ஒவ்வொரு பிரகாரத்தையும் வலம் வருதல் கூடாது.
கோயிலில் படுத்து உறங்குதல் கூடாது.
சந்தியா வேளையில் உணவோ வேறு தின்பண்டமோ உண்ணல் ஆகாது.(சந்தியா வேளை மாலை 5.31 முதல் 7.30 மணிவரை.)
இரைந்துசிரித்தல் ஆகாது.
ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குதல் கூடாது.
கம்பளி ஆடை தரித்து கோயிலுக்குள் நுழையக்கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணுதல் கூடாது.
தாம்பூலம் தரித்தல் கூடாது.
தலைமுடி ஆற்றுதல் கூடாது.
ஆராதனைக்குரிய பொருள் இன்றி ஆலயம் செல்லல் தவறு.
கோயிலில் வேகமாக வலம் வருதல் கூடாது. கர்ப்பிணிப் பெண் மெதுவாக நடப்பதுபோல் வலம்வருதல் வேண்டும்.
ஆண்கள் சட்டையணிந்து கொண்டோ போர்த்துக் கொண்டோ ஆலயம் செல்லல் தவறு. மேல் வேட்டியை(சால்வையை) இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லல் வேண்டும்.தலைப் பாகை அணிந்திருத்தல் கூடாது.
மூர்த்திகளை தீண்டுதல்,மூர்த்திகளின் கீழ் கற்பூரம் ஏற்றல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனமாகும்போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
நந்திக்கும் சுவாமிக்கும் குறுக்கே போதல் கூடாது. நந்தியெம்பெருமான் இமைக்காது சிவபிரானை பார்த்து தொழுதவண்ணம் இருப்பதால் குறுக்கேபோவது பாவத்தை ஏற்படுத்தும். தூபி,பலிபீடம்,கொடிமரம்,விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல் பாவம் இல்லை என்பர். திருவிளக்குகளை கையால் தூண்டவோ,தூண்டிய கைகளில் உள்ள எண்ணெய்யை தலையில் தடவுதலோ அன்றி கோயிற் தூணில் துடைத்தலோ கூடாது.
அபிடேக காலத்தில் உட்பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணக்கூடாது.
தீட்டுடன் செல்லல் கூடாது ஒருவரை ஒருவர் நிந்தித்தல் கூடாது.
சண்டையிடுதல்,எச்சில் துப்புதல், காறி உமிழ்தல் அல்லது துப்புதல், மல சலம் கழித்தல்,வாயு பறிதல் (fart), என்பன பாவத்தை ஏற்படுத்தும்.

பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?

மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.

விநாயகர் வழிபாடு நந்தியெம்பெருமானை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டபின்னர் மேற்கொள்வதா அன்றி அதற்கு முதலிலேயே வழிபடல் வேண்டுமா?

பெரிய சிவாலயங்களில் (ஆகமவிதிப்படி முறையாக அமைந்த ஆலயங்கள்) கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள விநாயகரை வழிபட்டு, பின் கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபட்டு பின்னர் துவாரபாலகர்களை வழிபட்டு தொடர்ந்து விநாயகர் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிவபெருமானை வழிபடல் வேண்டும்.திருக்கைலாயத்திலும் நந்தியின் அனுமதியுடனேயே திருக்கைலாயம் நுழைய முடியும். பின்னர் துவார பாலகர்களின் அனுமதி பெற்று உட்செல்லும் போது சிவகுடும்பத்தை வணங்க முடியும். சிவ குடும்ப வணக்கத்தில் விநாயகர் வணக்கம் முதன்மை பெறுகிறது. எனவே துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகர் வழிபாடும் அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி வழிபாடும் விதியாகிறது.

சேரமான் பெருமானுக்கு முன்னமே ஔவையாரை துதிக்கையால் திருக்கைலாயம் கொண்டு சென்றவர் விநாயகர் என்ற தத்துவத்தை கருத்தில் நிறுத்தின் விநாயகர் வழிபாடு திருக்கைலாயம் செல்லும்போது ஏற்படும் இடர்களை நீக்கவல்லது.அதுபோல் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய இடர்களை விநாயகர் வழிபாடு நீக்க வேண்டியே பெரிய சிவாலயங்களில் கோபுரவாசலின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது மரபு என உணரலாம்.

எனவே கோபுர வாசலில் வெளியே வலப்புறமாகவுள்ள விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் நந்தியை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டு அதன்பின்னர் விநாயர் சந்நிதி இருக்குமானால் அவ்விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் மூலமூர்த்தியை வழிபடல் வேண்டும் என்பது புலனாகிறது.


சுருங்கக் கூறின்

  • நித்திய கருமங்களை முடித்து நீராடி தூய ஆடையணிந்து சிவசின்னங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணிந்து ஆலயம் செல்லல் வேண்டும்.

  • கோபுரத்தை கண்டமாத்திரம் கைகூப்பி தொழவேண்டும்.

  • மலர்கள்,பாக்கு,மாலை,கற்பூரம்,பழம் என்பவற்றை கொண்டுசெல்லல் வேண்டும்.

  • தல விநாயகரை(கோபுரத்துக்கு வெளியே வலப்புறமாக இருப்பார்.) தரிசித்து குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு உட்செல்ல வேண்டும்.

  • கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.

  • துவார பாலகர்களை வணங்கியபின்னர் ஆலய திருமூலட்டானத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதியில் வழிபடல் வேண்டும்.

  • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள ஏனைய மூர்த்திகளை வழிபடல் வேண்டும்.

  • சண்டேசுவரரை மெதுவாக மும்முறை கைகளைத் தட்டி பின் வணங்குதல் வேண்டும். திருநீற்றை இருகைகளாலும் பணிவுடன் பெற்று சிவசிவ என உச்சரித்த வண்ணம்

  • மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும்.கிழே சிந்துதல் கூடாது.

  • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும்.

  • கொடிமரத்தின் கீழ்(பலிபீடத்திற்கு அப்பால்) விழுந்து வணங்க வேண்டும்.

  • வடக்கு முகமாக சற்று அமர்ந்து திருமுறை, திருவைந்தெழுத்தை ஓதி ஆலய வழிபாட்டை பூரணப்படுத்தல் வேண்டும்.
மேலும் படிக்க...

Wednesday, August 19, 2009

வீரமாமயில் ஏறும் வேலவா

இன்று தேரேறி வலம்வந்த நல்லூர் முருகப் பெருமானின் மேல் சித்தர் யோகர் சுவாமி பாடிய பாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றை இங்கு பதிவாக்கியுள்ளேன்.


எல்லாம் திருவருட் சம்மதம்





இராகம்- கரகரப்பிரியா
தாளம்- ரூபகம்

பல்லவி

வீர மாமயில் ஏறும் வேலவ-விளங்குங்
கௌரி பாலகா- வா

அநுபல்லவி

கானக் குறத்தி மகிழும் பாதா - காக்கும்
கடவுள் துதிக்கும் நாதா (வீர)

சரணம்

எனக்கும் உனக்கும் பேத மேனோ
எடுத்துச் சொன்னால் போதம் போமோ
மணக்குஞ் சோலை நல்லூர் வாசா
வணங்கும் யோக சுவாமி நேசா (வீர)

இன்று நடைபெற்ற தேர்த் திருவிழா நிழற்படங்களை கீழே உள்ள சுட்டியை அழுத்துவன் மூலம் கண்டு இறையின்பம் நுகரலாம்.


மேலும் படிக்க...

Friday, August 14, 2009

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல்

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் இனிதே நடைபெற எல்லாம் வல்ல கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரத்தான் திருவருட் சம்மதம் கைகூட வேண்டுகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பர். இப்படி கூடி வாழ்வதை வலியுறுத்தும் எம் பண்பாட்டில் பூத்த வலைப்பூ எழுத்தாளர்கள் ஒன்றுகூடுவது இயல்பே! இப் பழமொழிகள் ஒன்றுகூடினால் பயன் கூடும் என்பதை வலியுறுத்துதைக் காண்க. ஒன்றுகூடல் பல பயன்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஒன்றுகூடல் ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள். ஒன்றுகூடல் இனிதே அரங்கேறி நிறைவுபெற வாழ்த்துகிறேன்.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என் கடன் பணி செய்து கிடப்பதே
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Wednesday, July 29, 2009

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி அனந்தனின் பிடியில் இருந்து நழுவிப் பறந்து சென்று வீழ்ந்தது. அப்படி விழுந்ததால் உருவாகிய மலையே சிரகிரி, சிகரகிரி,புஷ்பகிரி,மகுடகிரி,சென்னிமலை என்றெல்லாம் அழைக்கப்படலாயிற்று.இங்கு குடிகொண்டிருக்கும் சிரகிரி வேலவனை "சென்னிமலை முருகன்" என அடியார்கள் துதிப்பர்.


இங்கு முருகன் எழுந்தருளிய கதை முருகப் பெருமானின் அற்புதத்தை பாருக்கு உணர்த்துகின்றது.சென்னிமலைக்கு அருகில் நொய்தல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் ஊரில் முற்காலத்தில் பண்ணையார் ஒருவர் ஒரு காராம் பசு உட்பட பல பசுக்களை வளர்த்து வந்தார். மாடுகளை மேய்க்கும் இடையன் ஒருசில நாட்களாக வனத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வருகின்ற காராம் பசுவின் மடியில் பால் வற்றியிருப்பது கண்டு வியந்தான். பண்ணையாரிடம் தெரியப்படுத்தினான். இருவரும் காராம் பசுவையும் ஏனைய பசுக்களையும் வழமைபோல் புல்மேய வனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னால் சென்றனர். காராம் பசு ஏனைய பசுக்களை விட்டு நீங்கிச் சென்று மண்மேடு ஒன்றில் தானாகவே பால் சொரிவதை அவதானித்தனர். குறித்த மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். அழகாக இருந்த குறித்த சிலையின் இடுப்புப் பகுதிக்கு கீழ் முறையற்ற வேலைப்பாடு இல்லாது கரடு முரடாக இருக்கக் கண்டார். சிற்பியை அழைத்து கீழ்ப்பகுதியை திருத்தப் பணித்தார்.

உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி பதறியடித்து "சாமிக் குற்றம்" ஆகிவிட்டது என்று பண்ணையாரிடம் தெரிவிக்கவே, முருகப் பெருமானின் விருப்பம் இவ்வண்ணம் இருப்பதே என்று உணர்ந்து அப்படியே தாபித்து கோயில் எழுப்பினார். இன்றும் கருவறையில் உள்ள இச்சிலையின் இடுப்புக்கு கீழான பாகத்தை வெள்ளிக்கவசத்தால் மறைத்து பூசை செய்கின்றனர்.



கந்த சட்டிக் கவசத்தை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் காங்கேயம் அருகில் உள்ள மடவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தவர். முருகப் பெருமானின் பணித்தமைக்கு அமைவாகவே சென்னிமலை முருகன் ஆலயத்தில் கந்தசட்டிக் கவசத்தை அருளிப் பாடி அரங்கேற்றினார். 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற கந்தர் சட்டிக் கவச வரி இம்முருகப் பெருமானையே குறிக்கிறது.


அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம் என்பது இவ்வாலய அருட்சிறப்பை மேலும் புலனாக்கிறது.

சிவாலயச் சோழன் கட்டப்பட்ட திருக்கோயில்வாகும். பிரம்மகித்தித் தோசம் பீடிக்கப்பட்ட மன்னன் தான் வழிபடும் சென்னிமலை முருகனை வழிபட்டு தோசத்தில் இருந்து மீள்வதற்கு ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஆலயத்தில் பூசகர் எவரும் இல்லாதது கண்டு மனம் நொந்து சகுனத் தடையென எண்ணி வாடினார். சிவாலயச் சோழனின் வாட்டத்தைப் போக்க அர்ச்சகர் உருவில் முருகப் பெருமானே எழுந்தருளி மன்னனுக்காக பூசை செய்து மன்னனைப் பீடித்திருந்த பிரம்மகித்தி தோசத்தைப் போக்கியருளினார்.

இத்தகு சிறப்புகள் கொண்ட
சென்னிமலை முருகனை வழிபட :- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
சென்னிமலை,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். தொலைபேசி:- 04294 250223, 04294 250263(மலைக் கோயில்)

காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வந்து தமிழர் துயரங்களை போக்க பக்தியோடு வழிபடுவோமாக.
மேலும் படிக்க...

Monday, July 27, 2009

நல்லூர் கொடியேற்றம்- யோகர் சுவாமி போற்றிப் பாடிய நல்லூரான்

ஈழவள நாட்டுமக்கள் இன்னல்களால் சூழப்பட்டு வாடியிருக்கும் இவ்வேளையில் காவல் தெய்வமாகிய நல்லூர் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகின்றது. முருகனின் அருள்மழை ஈழத்தமிழுக்கு விடிவை நல்க வேண்டியோகர் சுவாமிகள் நல்லூரான்மேல் பக்தியோடு பாடிப்பரவசமடைந்த இவ்வரிய பாடலை பதிவிடுகிறேன்.

இப்பாடலை நல்லூர் அடியார்கள் நாள்தோறும் பாடிவரின் பொல்லாங்குகள் யாவும் தீரும் என்பது திண்ணம். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர். "பொல்லாங்கு தீரும்" என்ற யோகர் சுவாமியின் வாக்கு எங்கனம் பொய்க்கும்? ஆதலால் நம்பிக்கையுடன் படியுங்கள். பாடுங்கள்.

எல்லாம் திருவருட் சம்மதம்














நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி-கிளியே!
இரவுபகல் காணேனெடி

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி-கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி-கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள்-கிளியே!
காவல் அறிந்திடெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி-கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி-கிளியே!
பொல்லாங்கு தீருமெடி




மேலும் படிக்க...