"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, May 20, 2020

கோப்பாய் சிவம்- திரு.சிவானந்த சர்மா அவர்களின் பதிவுகுறித்த கட்டுரை

இப்பதிவினைப் படிக்கமுதல், ஆதிசைவப் பிராமணர், மகாசைவப் பிராமணர் என்றால் யாரென்ற தெளிவு இருத்தல் வேண்டும்.
சைவநூல்களில் 
வர்ணங்கள்(மற்றும் சாதிகள்) குறித்து மூன்று முடிவுகள் உண்டு.

இதில்,
1) பிறப்பால் வர்ணங்கள் இல்லையென்று கூறப்பட்டுவரும் கருத்துகள் வைதீகத் தத்துவ மரபில் சைவசமயத்திற்கு தனித்துவமான கருத்துக்களாகும்.
உத்தமமான கருத்தென்று நாம் இதைக் கொள்கின்றோம்.

2)பிறப்பால் உள்ள வர்ணங்கள் தீட்சைகளால் ஒழியும் என்பதும் சைவசமயத்திற்கே சிறப்பான கொள்கையாக விளங்குகின்றது. இது மத்திமமான கருத்தென்று போற்றலாம்.

இவ்விரண்டுமே தீட்சைப்பாரம்பரியத்தைத் தூக்கிப்பிடிப்பதால்- தீட்சைமரபு என்று நாம் இக்கட்டுரையில் பாவிக்கின்றோம்.
3)பிறப்பால் உண்டாகும் வர்ணம் அழியாது என்னும் கோட்பாடு கொண்டாரும் உளர். இதுவும் ஆகமங்களில் சில இடங்களில் கூறப்பட்டுள்ள கருத்தேயாகும். எனினும் இக்கருத்துகள்  ஏனைய ஆகமங்கள்/சைவநூல்களுக்கும்  ஒவ்வாததாக இருப்பதால் - இக்கருத்து புகுத்தப்பட்டதென்பது தெளிவாகின்றது. எனினும் ஸ்மார்த்தமதவாச வர்ணப்பிடிப்பு உள்ளோர் இக்கருத்தில் உறுதியாய் இருப்பர்., இங்கு நாம் அதை வாதத்துக்கு உள்ளாக்கவில்லை. ஏனெனில் இக்கட்டுரை துகுறித்த வாதத்துக்குரியதல்ல. இதனைச் சுமார்த்தவாசக்கருத்து எனலாம்.
பிறப்பால் தோன்றும் வர்ணங்கள்  ஒருபோதும் ஒழியாது என்னும் கோட்பாடுகளுக்கு அமைவாக, ஆகமத்தில் பிராமணரினை இருவகையாகப் பிரிப்பர். 
1) ஆதிசைவப் பிராமணர்
2) மகாசைவப் பிராமணர்

இதில் ஆதிசைவப் பிராமணர் என்போர் சிவபெருமானின் ஐந்து முகங்களினால் தீட்சிக்கப்பட்ட முனிவர்களின் கோத்திரத்தினைச் சார்ந்தவர்களாவர்.  கௌசிகர்,காசிபர்,பரத்வாஜர்,கௌதமர்,அகத்தியர்(அல்லது அத்திரி)  என்று இக்கோத்திரங்களை ஆகமநூல்கள் கூறுகின்றன.   இவர்களுக்கே கருவறைக்குள் நுழைவதற்கும், சிவபெருமான் முதலிய தெய்வங்களுக்கு பூசைகள் செய்வதற்கும் அதிகாரம் உண்டு. ஏனையாருக்கு இல்லை.

மகாசைவப் பிராமணர் என்போர், ஸ்மார்த்தமதத்தில் பிறந்த பிராமணர். பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறப்படும் பிராமணக்கோத்திரங்களை உடையவர்கள். எனினும், சைவசமயத்தினைச் சார்ந்து, சைவசமயதீட்சை முதலியன எடுத்துக்கொண்டு, சைவவழி நிற்போர். இவர்களுக்கு யாகம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால் கோயில்களில் பூசைசெய்யும் அதிகாரம் இல்லை. இது ஆகமத்தில் பிறப்புவழி வர்ணம் ஒருபோதும் ஒழியாதென்னும் கருத்திற்கு அமைவான கொள்கையாகும்.


(சைவசமயநெறி என்னும் ஆகமசார நூலிலிருந்து விளக்கம் தமிழில் இருக்கும்பொருட்டு தரப்படுகின்றது.)

இதுவரைகாலமும், சைவசமயத்தில் ஸ்மார்த்தமத சம்பிரதாயங்கள் வலுத்துள்ளதென்றும், கிரியைகளில் மிகவும் பெருத்துள்ளதென்றும், சைவசமயப் பூசகர்களிடையே ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களே முதன்மைபெற்று நிற்கின்றதென்றும் கூறிவந்தபோது, ஆரம்பத்தில் சிலர் மறுத்தனர். அப்படியானவர்களில் ஒருவர் கோப்பாய் சிவம் எனப்படும் திரு.சிவானந்த சர்மா அவர்கள்.  அவருடைய நூலில் ஸ்மார்த்தமதமே சைவமாக இட்டுக்கட்டப்படுவதைச் சுட்டிப் பதிவு நாம் இட்டும் இருந்தோம்.  எனினும், அதற்குரிய நேர்மையான பதில்கள் கிடைக்காதவிடத்தும், ஸ்மார்த்தமத பிராமணர்கள் சைவதீட்சைகளெடுத்து பூசைசெய்யும் பிராமணரில் குறிப்பிட்டளவு உள்ளனர் என்றும், ஏனையோர் சிவப்பிராமணர் என்றும் கூறினார். தற்போது, இலங்கையிலுள்ள பிராமணர் எல்லோரும் ஸ்மார்த்தமதப்பூர்வீகத்தையுடைய "மகாசைவப்பிராமணர்" என்று எழுதியுள்ளார். 


விரிவுரையாளருடைய பதிவுகள் குறித்த நமது கருத்துகள்
1)  அச்சுவேலிக் குமாரசுவாமிக்குருக்கள் பெருமானார் முதலிய பல்வேறு ஆதிசைவப் பிராமணர் இருந்தனர் என்பது உறுதி. எமது ஊகத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில பிராமணரின் மூலத்தினைத் தேடினால் ஆதிசைவப்பிராமணராகவேயிருப்பார்கள். ஆனால் பிற்காலத்தில் ஸ்மார்த்தப்பிராமணர்கள்(மகாசைவராகி) குருகுலங்களை நடத்தத்தொடங்கியமையினால்- செல்வாக்காக இருந்தமையினால், ஆதிசைவ பிராமணரின் மரபுகளை கைவிட்டு, ஸ்மார்த்தமத மரபுகளைப் பலரும் கைக்கொள்ளும் நிலைக்கு உள்ளாயினர்.

பலருடைய தந்தையாரின் பெயரில், தந்தையாரின் முன்னோர்களின் பெயரில் சர்மா இருக்காது.ஆனால் இன்றைய தலைமுறையினரில் சர்மா பெயர் இணைத்துக்கொண்டிருப்பர். இவை, ஸ்மார்த்தவழக்கம் என்று தெரிந்துகொள்ளாமல், வர்ணப்பற்றில் இட்டுக்கொண்டவையேயாகும். இப்படித்தான், ஆதிசைவப்பிராமணர் பலர், ஸ்மார்த்தவழக்கத்தினுள் நுழைந்தனர்.
இதனாலேயே, இன்றுள்ள அனைத்துப் பிராமணரினையும் திரு.சிவானந்த சர்மா அவர்கள் மகாசைவப் பிராமணர் என்று கூறிவிட்டார். இதனை அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் முதலிய ஆதிசைவப்பிராமண அடியினையுடையார் ஏற்றுக்கொள்வார்களா? என்பது எமக்கு வியப்பாகும்.


2)ஆலய பரிபாலனம் தொடர்பாக அச்சுவேலிக் குமாரசுவாமிக்குருக்கள் எழுதிய நூல்களில், மகாசைவப்பிராமணருக்கு கருவறைக்குள் நுழையும் அதிகாரம் இல்லையென்று தெளிவாக மறுக்கின்றார். அவர்மட்டுமல்ல, தமிழக சிவாசாரிய அமைப்புகளும் மறுக்கின்றன. 
ஆகமமும் "பிறப்புவழியில்" பொருள்கொண்டால் அதனை அறுதியாகவும் உறுதியாகவும் மறுக்கின்றன. எனவே, கோயில்களில் மகாசைவப்பிராமணர் பூசைசெய்வதை  ஆதரிக்கும் திரு. சிவானந்த சர்மா அவர்கள் பிறப்புவழியில்  தீட்சைகளினாலும் ஒழியாதென்று கொள்ளும் வர்ணாச்சிரமத்தினைவர்ணாச்சிரமத்தினை ஏற்கின்றாரா? இல்லையா?
பிறப்புவழி வர்ணாச்சிரமம் தீட்சைகளினாலும் ஒழியாதென்னும் நிலைப்பாடுடையாரின் பிரமாணமே ஆதிசைவப்பிராமணர்,மகாசைவப்பிராமணர் முதலிய பகுப்புக்கள். 

மகாசைவப்பிராமணர் என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், பிறப்புவழியில் தீட்சையால் ஒழியாத வர்ணாச்சிரமத்தினை ஏற்றுக்கொள்கின்றார் என்பதே பொருளாகும். ஆனால், அப்படியான மகாசைவப்பிராமணர் சைவக்கோயில்களில் பூசைசெய்வதை ஆதரிக்கின்றார். இது எந்தவகையில் நியாயம்? மேட்டிமை சிந்தனைக்கும் அடுத்தவரைக் கீழானோர் என்னும் மனோபாவத்துக்கும் உதவும் பிறப்புவழி வர்ணாச்சிரமம் வேண்டும்.ஆனால், அந்த வர்ணாச்சிரமம் கூறும் "மகாசைவப்பிராமணர்" கோயில்களில் பூசைசெய்யும் அதிகாரம் அற்றோர் என்னும் கருத்துமட்டும் வேண்டாம்!!!!

நாம் இதுவரைகாலமும் எழுதிய பதிவுகள் ஒரு நோக்கம் பற்றியது. அதுதான் இங்கு இனி விரிவாக எழுதப்படவுள்ளது. எனவே, பொறுமையோடு படிக்க. மகாசைவப்பிராமணர்தான் உள்ளோம் என்று கோப்பாய் சிவம் அவர்கள் ஏற்றுக்கொண்டது எமது கட்டுரைகளுக்கு கிடைத்திருக்கும் பயனாகும்.

  

3)சித்தாந்த சைவசமயம், பிறப்புவழியில் வர்ணாச்சிரமத்தினைக் கொண்டாடுவதில்லை என்பதை நாம் நம்புகின்றோம். தீட்சைவழியிலேயே  என்பது சிந்தாந்தத்தெளிவாய் உண்டு.  
இதனை ஏற்றுக்கொண்டால், மகாசைவர் என்கின்ற பாராபட்சம் சைவசமயத்தினைத் தழுவிக்கொண்ட ஸ்மார்த்தமதத்தினாரைத் தொற்றிக்கொள்ளாது. எனினும் முடிவு அவர்களே எடுக்கட்டும்.ஆனால், அந்த முடிவு எல்லோருக்குமானது. வெறுமனே தனியொரு சமூகத்துக்குரியதல்ல!  சரி, விசயத்துக்கு வருவோம். இவற்றையெல்லாம் ஏன் ஆராயவேண்டிய தேவை வந்தது? அவற்றைப் பார்ப்போம்.

1) 2019ம் ஆண்டுகளில் "தேசிகக்குருக்கள் கொடியேற்றுவதா? பிராமணக்குருக்கள் கொடியேற்றுவதா? என்ற சிக்கல் யாழ்ப்பாணக்கோயில் ஒன்றில் உருவாகியது. பிராமணக்குருக்கள், தேசிகக்குருக்கள்மாருக்கு பிறப்புவழியில் அதிகாரம் இல்லையென்று பிடிவாதம் பிடித்தனர். நிர்வாகசபையும் அதனை ஏற்றுக்கொண்டது.முடிவு கத்திக்குத்தாயிற்று.
இங்கு பிறப்புவழியில் வர்ணம் உண்டாயின், தீட்சையினால் வர்ணம் நீங்காதென்ற நிலைப்பாட்டில் பிடிவாதம் பிடித்துநிற்பதாயின், சிவாகமங்களின் பிரகாரம் பிராமணக்குருக்களுக்கும் (மகாசைவப்பிராமணர்) கொடியேற்றும் அதிகாரம் இல்லை என்பதை பிராமணக்குருக்களும் தெரிந்திருக்கவில்லை. நிர்வாகத்தாரும் தெரிந்திருக்கவில்லை.
தீட்சையால் வர்ணம் ஒழியும் என்னும் சித்தாந்தத்தெளிவில் நின்றால் - இருவரும் சமமேயாகும்! கத்திக்குத்தும் நடந்திராது!!!
:- இதற்கெல்லாம் அடிப்படை ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

2)கொழும்பில் சிதம்பரநாதக்குருக்கள் விசேடதீக்கையினை ஒருசைவசமயிக்கு கொடுக்க மறுத்தார். ஏனென்றால், அதற்கு சூத்திரர் அதிகாரம் அற்றவர் என்பது அவரது நிலைப்பாடு. சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டு சமயதீட்சை வழங்கும் நிகழ்வு 2019ம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் ஒழுங்கமைப்பில் பங்களிப்புச்செய்திருந்தது. வந்திருந்த அடியார்களில் ஒருவர் விசேடதீக்கையினைப் பெறுவதற்கு வந்திருந்தார். அதனை அவர் வழங்கவில்லை. சாதி/வர்ணம் என்பவற்றினை கேட்டுப் பிரச்சினைகள் செய்தபோது, பலவாறு விளங்கப்படுத்தியபோதும் சைவாகமப்பிரகாரமான விசேடதீக்கை அவரால் மேற்கொள்ளப்படவில்லை. பிராமணர் அல்லாதவருக்கு சமயதீக்கை/விசேடதீக்கையெல்லாம் தேசிகக்குருக்களாலேயே வழங்கப்படுவதென்றும், பிராமணர் சூத்திரருக்கு தீட்சைவழங்குவதில்லையென்றும், தேசிகக்குருக்கள்மார் இல்லாதபடியினால் சமயதீக்கை மட்டுமே அளிக்கவந்ததாகவும் கூறிநின்றார்.
:- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

3) வடமாகாணத்தில் கிருஷ்தவர்கள் அதிகமுள்ள இடத்தில் சைவர்கள்  சிலர் சமயதீக்கையில் நாட்டம்கொண்டு, அத்தீக்கையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்தபோது   சூத்திரருக்கு பிராமணர் தீக்கை வழங்குவதில்லை என்னும் கருத்து நிலைப்பாட்டில், வருவதற்கு சம்மதித்த பிராமணக்குருக்களை ஏனைய சிலர் தடுத்துவிட்டனர். (எமது கழகம் நேரடியாக இவ்விடயத்தில் ஈடுபட்டிருகாததால், நாம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர்த்துள்ளோம்.) :- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

4) இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஏனைய சில இடங்களிலும் மாத்திரமே தேசிகக்குருக்கள்மார் உள்ளனர். மன்னார் முதலிய பல்வேறு பிரதேசங்களில் தேசிகக்குருக்கள்மார் இல்லை. இப்படியான பிரதேசங்களில் ஒருவர் மரணம் அடையும்போது, அபரக்கிரியைகள் செய்யமுடியாது வசதியற்றவர்கள் அல்லல்படுகின்றனர். மன்னாரில் சைவசமயி ஒருவரின் உடலுக்கு கத்தோலிக்கப்பாதிரியார் கிரியைசெய்துவைத்த விவகாரம் அண்மையில் பெரிதாகப் பேசப்பட்டது. பிராமணர் இறந்தால், பிராமணரில் ஒருவரே அபரக்கிரியைகள் செய்கின்றார். அப்படியான ஒருவர்கூட, ஏனையோருக்கு அபரக்கிரியைகள் செய்யமுன்வருவதில்லை. தமிழகத்தில் சிவாசாரியார்கள் குலகுருவாக விளங்கும் பிரதேசங்களில் அபரக்கிரியைகளையும் அவர்கள் முன்னெடுக்கும் வழக்கங்கள் உண்டு. பிராமணரில் பிராமணருக்கு அபரக்கிரியைகள் செய்யும் ஒருவர், ஏனையாருக்கு அபரக்கிரியைகள் செய்யக்கூடாதென்பது எந்தப் பிரமாணத்தில் உள்ளது?  :- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?
5) யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றில் ஆஞ்சநேயர் சன்னிதி வைக்கலாமா இல்லையா என்ற சர்ச்சை உருவாகி நீதிமன்றத்திற்கு வழக்குச்சென்றது. நீதிபதி யாழ்ப்பாணத்தில் பிரபல குருக்களிடம் இதற்கு ஆலோசனை வேண்டினார். நீதிபதிக்கு சைவசமயத்திற்கும் ஸ்மார்த்தசமயத்திற்குமான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை. வழக்குத்தொடுத்த வாதிகளுக்கும் -பிரதிவாதிகளுக்கும் இந்த வித்தியாசங்கள் தெரிந்திருக்கவில்லை. நீதிபதி ஆலோசனைக்கு நாடியவர் ஸ்மார்த்தமதப் பாரம்பரியத்தினை சைவப்பாரம்பரியமாகக் கருதி, ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பிராமணரையேயாகும். அவர் ஆஞ்சநேயரை பிள்ளையார் கோயிலில் தனிச்சன்னிதியாகப் பிரதிஷ்டைசெய்யலாம் என்று ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார். ஆகமப்பிரமாணங்களைச் சுட்டிக்காட்டியிருக்கவில்லை. ஆனால், பலரால் போற்றப்படும் குறித்தப் பிராமணர் சொன்னால் சரியென்று, நிதிபதியும் முடிவெடுத்து ஆதரவாகவே தீர்ப்பும் வழங்கினார். ((தகவல் அளித்த சிவநெறிப்பிராமணர், கோயில் பெயரினை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.))

சைவாகமங்களில் ஆஞ்சநேயருக்கு சன்னிதி எந்த ஆகமத்தில் உண்டு?
இது ஸ்மார்த்தமத சம்பிரதாயம் தானே?
பிரபலமான பிராமணர் எந்தவித பிரமாணங்களும் இல்லாமல் எழுதிய கடிதத்தினைப் பிரமாணமாக நீதிமன்றம் கொள்கின்றதென்றால்,  சைவசமயம்-ஸ்மார்த்தசமயம்; சிவப்பிராமணத்துவம் - ஸ்மார்த்தபிராமணத்துவம் முதலிய எந்த வேறுபாடுகளையும் நீதிமன்றமோ, நிர்வாகசபைகளோ தெரிந்திருக்கவில்லையென்றுதானே பொருள்?  உருப்படியாக இந்த வித்தியாசங்கள் தெரிந்திருந்தால் -இந்த வழக்கு நடந்திருக்குமா? குறித்த பிராமணர்தானும் கடிதம் கொடுத்திருப்பாரா? நீதிமன்றம் அக்கடித்தத்தினை ஏற்றுத்தான் இருக்குமா?
6) சைவசமயத்தின் குருக்கள்மார் சைவக்குருக்கள் என்றுதானே அழைக்கப்பட வேண்டும்......இந்துக்குருக்கள் என்று அழைப்பது ஏனோ? என்று நாம் வினாவியபோது, சிவத்திரு.சோமஸ்கந்தகுரு சாம்பசிவக்குருக்கள் (கனடா) சைவக்குருவென்றால் சூத்திரக்குருவென்றாகிவிடும் என்றார். எனவே, சைவக்கடவுள் என்றால் சூத்திரக்கடவுள் என்றாகுமா என்று நாம் கேட்டதும், தாம் முகநூலில் எழுதியவற்றை அழித்துவிட்டார்.

சைவசமயம் என்ற சொல்லில் பற்றில்லாதது, வர்ணப்பற்றுக்குள் மூழ்கியுள்ளனர் என்பதும்; வர்ணமா? சைவமா? என்னும்போது வர்ணமே என்னும் இழிநிலை பெருத்துள்ளதென்பதும்  மறைக்கப்பட்டு, சைவசமயம் என்ற சொல் கைவிடப்பட்டு இந்து என்றசொல் ஆதரிக்கப்பட்டு வருகின்றதே? அதற்கு இந்தியாவுடன் உறவு முதலிய போலிக்காரணங்கள் இட்டுக்கட்டப்பட்டுவருகின்றனவே? இவற்றுக்கு ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமப் பற்றுத்தானே காரணம்?

7)  ஆதிசங்கரர் தாபித்தது ஸ்மார்த்தமதம். அதில் சைவ,வைணவ,சாக்த,கௌமார,காணபத்திய,சௌர உபாசனைகள் உண்டு.இந்தச் சுமார்த்தமதம் சைவத்திற்கு புறச்சமயம். ஆனால், இந்துமதப்பிரிவுகள் என்னும்பெயரில் இன்று இந்த ஸ்மார்த்தமதப்பிரிவுகளையே சைவசமயத்தார் படிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.(திரு.சிவானந்த சர்மா அவர்கள் எழுதியுள்ள நூல்களிலும் இந்த வழக்குத்தான் உள்ளது.)
இந்த ஸ்மார்த்தமதத்தில் பிராமணர்க்கே ஞானத்தை உணரும் வாய்ப்பு உண்டாகுமென்றும், ஏனையாருக்கும் பெண்களுக்கும் இல்லையென்று மறுக்கும் கோட்பாடுகள் உண்டு. இதனைத் தாபித்த ஆதிசங்கரரை அன்பிலார் என்று சுவாமி விவேகானந்தர்கூடக் கண்டிக்கின்றார். ஆனால், சைவத்தில் செடி முதலாய அனைத்து உயிர்களுக்கும் முத்தியுண்டு என்பது கொள்கை. நாயன்மார்கள் பல்வேறு சமூகவகுப்புக்களைச் சார்ந்தவர்கள். ஆதிமுத்தர்,ஆதிபிரளயாகலர்,ஆதிவிஞ்ஞானகலர் என்றெல்லாம் மனிதப்பிறப்பேயில்லாது முத்தி/பதமுத்திகள் பெற்றோர் உளர். ஆனால் இவற்றுக்கு மாறான ஆதிசங்கரரினை,  சைவத்தினைச் சார்ந்துவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் ஸ்மார்த்தவாசர் கொண்டாடிக்கொண்டு - அவரைக் குருவாக பிரப்ல்யம்செய்துகொண்டு, அந்த ஸ்மார்த்தமதத்தின் மடங்களின் அதிபதிகளாகிய சங்கராசாரியார்களினை தலையில்வைத்துக் கொண்டாடிக்கொண்டு சைவசமயத்தவர்க்கு எப்படி கிரியாகுருமாராக 'மகாசைவப்பிராமணர்/ஸ்மார்த்தவாசப் பிராமணார்"இருக்கலாம்?  ஆக, சைவத்தினைச் சார்ந்த பிறகும் சங்கராச்சாரியார்கள் இனிப்பது -வர்ணாச்சிரம பற்றினால்தானே? சைவசமய குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் பெருமான், சந்தான குரவர்கள், நாவலர், மாயாவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளைகள் பெருமானார்,  காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், சூளை சோமசுந்தர நாயகர் பெருமானார் முதலிய சைவப்பரம்பரையே கண்டித்துவந்த/ தொடர்புகளை எள்ளளவும் பேணாதுவந்த/ சைவத்தால் அணுகத்தகாத இடமாகவே கொள்ளப்பட்ட மாயாவாத(சங்கராசாரிய) மடத்தினரை "குருவே நமஸ்காரம்"என்று கொண்டாடும் சைவசமய அந்தணர்களை ஈழநாடு சம்பாதித்திருப்பது - ஸ்மார்த்தவாச வர்ணாச்சிரமப்பற்றினால் தானே?

08)  தேசிகக்குருக்கள்மாருக்கு பூர்வக்கிரியைகள்/கோயிற்கிரியைகள் செய்யும் அதிகாரம் இல்லையென்றும், அவர்களிலிருந்து வேறுபாடுகாட்ட, 
  • சிவஶ்ரீக்குப் பதிலாக பிரம்மஶ்ரீ முதலியன பாவித்துக்கொண்டும், 
  • சமயமுரணாய் தீட்சைகள் எடுத்தபிறகும் வர்ணப்பெயரான சர்மாவினைப் பற்றிநிற்பது 
  • சைவக்குருக்கள் என்றுகூறாது, இந்துக்குருக்கள் என்றுகொண்டும்  - சைவசமயத்தையும், சிவசிறி என்னும் பதத்தினையும் புறக்கணித்துவருகின்றமை :- ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமப் பாசத்தினால் தானே?
09) ஸ்மார்த்தமதத்தினையும் அதன் சம்பிரதாயங்களினையும் சைவசமயத்தில் நிலைநாட்டியவாறு இருப்பதற்கு அத்திவாரமாக இருப்பது வர்ணாச்சிரமப்பற்று. இவ்வாறு சைவசமயத்தில் "வர்ணத்தினைத் தூக்கிப்பிடித்து" சைவசமயம் என்னும் சொல்லினையே கைவிட்டு நின்றமையினாலேயே, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் 
"தூக்கிப்பிடிக்கப்படும் வர்ணப்படி" பல பிராமணருக்கு பூசை அதிகாரம் ஆகமப்பிரகாரம்  இல்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று. ஸ்மார்த்தமதவாசம் கலந்திருப்பதை திரு.சிவானந்த சர்மா அவர்கள் ஏற்றிருப்பது
நாம் இதுவரை காலமும்  எழுதிய கட்டுரைகளுக்கு எம்பெருமான் அளித்துள்ள பலன்! இதனை ஆலய நிர்வாகத்தாரும் சைவசமயத்தாரும் இனித்தெளியவேண்டும் என்பது எம் அவா!!! அதுவும் கால ஓட்டத்தில் மெதுவாக மலரும்! எல்லாம் திருவருட்சம்மதம்!!! 

நாம் தீட்சையை நம்புகின்றவர். தீட்சையுள்ள எவரினையும் வர்ணங்கொண்டு நோக்காத உளவளத்தினை சிவபெருமான் எமக்கு அளித்துள்ளார். எனவே, பூர்வீகம் ஸ்மார்த்தமதமா? வைணவ மதமா? என்பது இங்கு பிரச்சினையில்லை. ஆனால், சைவசமயத்தினை சைவசமயமாக நின்று ஒழுகவேண்டும்.
தீட்சைகளினால் வர்ணம் நீங்காது என்று பிடிவாதம்பிடித்தால்- எங்களுக்கு ஸ்மார்த்தமத ஆதிசங்கரர்/சர்மா/பிரம்மஶ்ரீயிலேயே நாட்டமுண்டு என்றால், கருவறைக்கு வெளியே நிற்றலே சைவாகமங்களுச்செய்யும் உபகாரமாகும். ஏனெனில், தீட்சையினால் வர்ணம் ஒழியுமென்று நம்பினால்; அதனை சகல விடயங்களிலும் அனுசரிக்கவேண்டும். தீட்சையினால் வர்ணம் ஒழியாதென்று பிடிவாதம் பிடித்தால், அதனையும் நேர்மையோடு சகலவிடயங்களிலும் அனுசரிக்கவேண்டும். தீட்சையினால் வர்ணம் ஒழியாதென்று நினைத்தால், மகாசைவப்பிராமணர் கருவறையினுள் நுழையமுடியாது.
10)இப்போது மூன்று தெரிவுகள்தான் உண்டு. 
1) வர்ணாச்சிரமம் தீட்சையால் போகாதென்ற ஸ்மார்த்தவாசக் கருத்தினை ஏற்று, மகாசைவப் பிராமணர் என்று நிலைப்பாடெடுத்து;  வீட்டிலே  ஆத்மார்த்த பூசைகளோடு சிவசிந்தையோடு இருத்தல். இவ்வர்ணாச்சிரமக்கோட்பாட்டுப்படி, மகாசைவப்பிராமணருக்கு கோயில் பூசை அதிகாரம் இல்லை என்பதை கற்போடு உணர்ந்து ஏற்றொழுகல்.
2) ஸ்மார்த்தமதத்தார் என்னும் நிலைப்பாடெடுத்து;  சைவ நூல் வழிபாடுகளை விடுத்து - பிரம்மசிறி,வர்ணம் என்று ஸ்மிருதிகளில் உழலல்.
3)  வர்ணம் தீட்சையால் நீங்கும்/ பிராமணத்துவம் பிறப்பால் இல்லை என்னும் சைவநூற் தெளிவுகளை உள்ளன்போடு ஏற்று- சிவநெறிப்பிராமணராய் பூசைகள் ஆற்றுதல். ஏனைய சமூகத்தவரையும் அதுபோல் அரவணைத்தல். 
இவையே சைவநூல் வழங்கும் தெரிவுகள். கல்வியுடையார் கற்புடையார்!!!!

11) வேதாந்தம் என்னும்சொல், உபநிடதங்களினையும் குறிக்கும். ஆதிசங்கரர் முதலிய பிரம்மசூத்திரப்பாடியக்காரர் தாபித்த கொள்கைகளையும் குறிக்கும்.மாயை என்னும் சொல், சைவத்தில் ஒருபொருளும் மாயாவாதமதத்தில்(ஸ்மார்த்தமதத்தில்) பிரிதொருபொருளும் கொள்ளும்.
வைதீகம் என்னும்சொல், வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்பதற்கிணங்க சிவபரத்துவ வைதீகத்தினையும் குறிக்கும். ஸ்மார்த்தமதத்தினையும் குறிக்கும்.

ஸ்மார்த்தம் என்னும்சொல்கூட, மாயாவாதமதத்தினரையும் (ஸ்மார்த்தமதத்தினரையும்) குறிக்கும்.வேதவழி வழக்கினையும் குறிக்கும்.
விஷ்ணு/நாராயணன் என்பவை சைவத்தில் சிவபெருமானுக்கும் சிவபெருமானின் அதட்டித்தலில் உட்பட்டு நிற்கும் காத்தற்கடவுளாகிய திருமாலுக்கும் உரியது. வைணவத்தில் அவர்களின் முழுமுதற்கடவுள் திருமாலுக்குரியது. ஸ்மார்த்தமதத்தின்படியும் திருமாலுக்குரியது.
வீபூதி ஸ்மார்த்தமதத்தில் வெறும் புனித அடையாளம். வேதசம்பிரதாயம். சைவசமயத்தினைப் பொறுத்தவரை வீபூதி சிவசின்னம்.
இப்படி ஒருசொற்களே பலபொருள்களில் இந்திய சமயங்கள் பலவற்றிலும் உண்டு.

இந்த அடிப்படையை விளங்கிக்கொள்ளாது, வைதீகம்/ஸ்மார்த்தம்/வேதம் முதலிய சைவநூல்களில் புழகும் சொற்களுக்கு ஸ்மார்த்தமதத்தில் வழங்கும் பொருளை இழுத்துவந்து சேர்த்தல் பெருந்தவறு. அதனால் விளைந்ததுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமய விரிவுரையாளர், சமய அறிஞர் திரு.சிவானந்த சர்மா அவர்களின் ஏனைய மயக்கக்கருத்துக்கள்.அவற்றை விரிவாக வேறொருபதில் ஆறுதலாக விளக்குகின்றோம்.
எனினும், ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல்; பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் பலதும் எடுத்து சைவவைதீகத்தை ஸ்மார்த்தவைதீகமாக்கி சோடித்த இட்டுக்கதைகள் ஸ்மார்த்தத்துக்கு பிரமாணமாகாதென்பதற்கு பெரியபுராணத்தில்  சுந்தரமூர்த்தி நாயனார் புராணப்பகுதியிலிருந்தே இங்கு ஒரு பிரமாணம் தருகின்றோம்.ஏனைய ஆகமப்பிரமாணங்கள் முன்னைய கட்டுரைகளில் அளித்துள்ளோம்.
"மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ இத்தகைய வேடம்" என்று சுந்தரரின் திருமணக்கோலத்தினை தடுத்தாட்கொண்ட புராணத்தில் சேக்கிழார் வருணிக்கின்றார்.  வெறுமனே வைதிகமென்றால் ஸ்மார்த்தமதம் புகுந்துவிடுமென சேக்கிழார் வைதிகம் என்னும் பெயரினைப் பாவிக்கும் இடங்களில், அது சைவவைதீகமேயென்பதை உணர்த்தத் தவறுவதில்லை.  இங்கு, மெய்த்தநெறி வைதிகம் என்பது, மெய்நெறி சைவமென்பதால்; சைவவைதிகம் என்பதை வெள்ளிடைமலையாக்குகின்றார்.  வைதிகம் பலபொருள் குறித்தது. வைணவத்தில் வைதிகமென்றால், திருமாலை முதற்பொருளாகக் கொள்ளும் வேதநெறி என்று பொருள். இவற்றை பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்சிந்தையில் எடுத்துக்கொண்டால் நன்று.
12) எமக்கு எவர்மீதும் துவேசம் இல்லை. எந்தச்சமூகத்தின்மீதும் துவேசமில்லை. சைவசமயத்தினை சைவசமயமாக சைவசமயிகள் ஒழுகுவதற்குரிய தடைகளை நிவர்த்திசெய்யவேண்டியுள்ளது.
சைவத்தினுள் ஸ்மார்த்தமதம் ஊடுருவி நிற்றலை விலக்கவேண்டியுள்ளது. பாதிரிமார்கள் கத்தோலிக்கத்துக்கு விரோதமாக நடந்தால் கத்தோலிக்கர் குற்றம் சாட்டுவர். அதுபோலவே, சைவசமயக்குருமார் சைவசமயப்படி நிற்கவில்லையென்பதை நாம் சுட்டிக்காட்டுவது. இங்கு குருமார் என்பவர்கள் பிராமணரே என்பதால், அது பிராமண வெறுப்பாக சிலரால் தமது நலன்கருதி திரிபுசெய்ய வசதியாகவுள்ளது. பூசை செய்க என்றுதான் நாம் வேண்டுகின்றோம். ஆனால் சைவசமயிகளாக வாழ்ந்தவாறு பூசைசெய்க என்பதே வேண்டுதல்.
ஸ்மார்த்தமதம் ஸ்மார்த்தமதமாக இருப்பதில் எமக்கு எந்த இடரும் இல்லை. ஆனால் சைவசமயத்தில் ஸ்மார்த்தமதத்தினைக் கலக்கும் செயலை மௌனியாக ஏற்றுக்கொண்டிருக்கமுடியாது.   சைவசமயத்தினைச் சைவசமயமாகவே ஒழுகுதலும் வளர்த்தலும் வேண்டுமென்றால், பலருக்கு தலையிடி ஏன் உருவாகின்றதென்று நமக்கு விளங்கவில்லை!!!! ஆக; நாம் வேண்டுவதெல்லாம் - சைவசமயத்தினைச் சைவசமயமாகவே ஒழுகுதல் வேண்டும் என்பதுவே!!!!

13)  சமய அறிஞர் திரு.சிவானந்த சர்மா அவர்கள், " ஹரிஓம்/அனுட்டானம்/பிரம்மஶ்ரீ/நாமதாரணம்" முதலியன பிராமணரின் பிரச்சினைகள்.ஏனையார் தலையிடத்தேவையில்லை என்பதுபோன்ற தொனியில் எழுதியுள்ளார்கள்.
ஒரு மருத்துவர் இலங்கை மருத்துவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவரா இல்லையா என்பதை, ஒவ்வொரு நோயாளியும் தெரிந்துகொள்ளும் உரிமை நோயாளியின் அடிப்படை உரிமையாகும். ஒரு பாதிரியார் பாதிரியாருக்குரிய கல்விகளை முடித்தவரா இல்லையா என்பதை ஒவ்வொரு கத்தோலிக்கரும் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களது அடிப்படை உரிமையாகும். 
அதுபோல், சைவசமயக்கோயில்களில் பூசைசெய்யும் அந்தணர்கள், சைவாகமப்படி உள்ளனரா இல்லையா என்பது சைவர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளல் சைவசமயத்தாரின் அடிப்படை உரிமையாகும். 

சிவாகமங்களுக்கு விரோதமான சம்பிரதாயங்களைத் தழுவியவாறுள்ளோர் செய்யும் பூசைகளால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடுகள் என்பதை சிவாகமங்கள் திடமாய் வலியுறுத்துகின்றன. திருமந்திரம் முதலான நூல்களிலும் இவை விரிவாக எழுதப்பட்டுள்ளன. சமய அறிஞரும் பல்வேறு நபர்களால் பாராட்டுகள் பெற்றவருமான திரு.சிவானந்த சர்மா அவர்கள் இவற்றுக்குரிய பிரமாணங்களை நம்மிடம் எதிர்பாரார்.அவருக்கே இவற்றில் போதிய தெளிவு இருக்கும் என்று நம்புகின்றோம். சைவவைதிக/சைவ அனுட்டானங்கள், ஆத்மார்த்த பூசைகள் இல்லாதோர் செய்யும் பரார்த்தபூசை பலனளிக்காதென்பதோடு, தீமையையே மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும் என்பதால், பரார்த்தபூசை செய்வோர் தம்வீடுகளில் சைவாகமப்படி ஆத்மார்த்தபூசைகள் செய்கின்றார்களா இல்லையா என்பதையும், சைவசமய ஒழுங்கங்களில் உறுதியாக உள்ளனரா என்பதையும் அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு சைவசமயிக்கும் உண்டு.  பரார்த்தபூசை செய்யாதோர் இல்லத்துள் எந்தவொரு நபரும் மூக்கை நுழைக்கார்!!!!!
குறிப்பு:- அன்பே சிவம் என்பதால் அன்பே சைவம் என்பது தெளியப்படுதலால், சைவ அன்புடையாரின் ரிஷிமூலம் எதுவும்  தேவையில்லை.அன்பிலாருக்கு சைவத்தில் இடமில்லை. இவையே சிவபத்தி எமக்களித்த வரம்.

எல்லாம் திருவருட்சம்மதம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கோப்பாய் சிவம்- திரு.சிவானந்த சர்மா அவர்களின் பதிவுகுறித்த கட்டுரை"

Post a Comment