"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்" கருத்தைக் கேட்டு அவரது facebookதளத்தில் சிறுகுறிப்புப் பகுதியில்(note) குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


அன்பர் தமிழ் சமூகத்தில் கொண்டுள்ள தீராத பற்றால் எளியேன் கவரப்பட்டிருந்ததால் உருவான அன்புப் பிணைப்பும் எளியேனின் நண்பராதலால் ஏற்பட்ட உரிமையோடும் சைவப் பிரசையாதாலால் எளியேனுக்கு விதிக்கப்பட்ட கடமையின் நிமித்தமும் அன்பருடைய சிறுகுறிப்பில் பல துண்டுகளாக எளியேன் எழுதிய பின்னூட்டங்களைத் தொகுத்து சிறு திருத்தங்களோடு இங்கு பிரசுரம் செய்கின்றேன். அன்பர் என்னிடம் இதுபற்றி முழுமையாக விபரித்து எழுதும்படி வேண்டினார். எனினும் பல்கலைக்கழக கல்விச்சுமை எளியேனை வாட்டி வதைப்பதால் எழுதுவதற்கு போதிய அவகாசம் இன்னும் கிட்டவில்லை. எனவே அன்பரின் சிறுகுறிப்புப் பகுதியில் எழுதியவற்றையே தொகுத்து இங்கு பிரசுரம் செய்ய வேண்டியதாயிற்று.


இந்துவைப் பற்றி சிகல உறுமய சொன்னதில் என்ன தவறு?
கலைஞர் கருணாநிதி( தமிழரின் சொத்தான சைவம் இந்து எனும் ஆரியத்தால் அபகரிக்கப்படுவது தெரியாத நாத்தீக வித்தகர். இந்துவை எதிர்க்கிறேன் சைவத்தை மறந்த அரசியல் மேதை) மட்டுமல்ல சைவ புலவர்கள் சைவ ஆதீனங்கள் எல்லாமே அதைத்தானே சொல்லுகின்றனர்.

சிங்கள சிறீயைத் தமிழன் எதிர்ப்பது நியாயம் ஆனால் ஆரிய இந்துவை தமிழன் ஏற்பது முறை! என்ன நியாயம் இது?

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர்.சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்றார் திருமூலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? தமிழ் வாழப் போராட்டம் தமிழ் வரலாறு வாழப் போராட்டம் என்று நம் முன்னோர்கள் விட்டதவறால் நாம் இன்று தவிப்பது அதுபோல்த்தான் இன்று இந்துவுக்கு அனுமதி அளித்தால் நாளை சைவத்துக்காய் போராடவேண்டி இருக்கும்.

இந்து எனப்து ஆரியம் சைவத்தை அழிக்க உருவாக்கிய கலப்படச் சமயம். அப்படியே சங்கராச்சாரியாரின் சுமார்த்த மதத்தை copyபண்ணி உருவாக்கப்பட்ட மதம். அங்கு சைவத்திற்கு வேலையேயில்லை. சுவாமி விவேகானாந்தர் அமெரிக்கா மாநாட்டில் இந்து என்ற பெயரை பயன்படுத்தியதால் ஏற்பட்டவிளைவுதான் இந்துவும் இந்துவோடு கூடி சுமார்த்தமும் பிரபல்யமடைய ஏதுவாயிற்று.

சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்திருந்தவேளை அவரை மகிழ்விக்கும் பொருட்டு அடிக்கடி இந்து என்ற சொல்லை பலர்பயன்படுத்தியபோது இலங்கையின் சைவச் சிறப்புத் தன்மையை கண்டு "இந்து என்ற பெயருக்குப்பதில் சைவன் என்றே கூறவேண்டும்" (உதயன் 07.09.98)என்று சுவாமிகள் கூறியது எப்படி மறந்துபோனது சில புத்திஜிவிகளுக்கு?

சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் கப்பலில் பயணம் செய்தபோது அவரைச் சந்தித்த அமெரிக்கர் "தாங்கள் இந்துவா?" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள் .நாங்கள் சைவர்கள்" என்று மறுத்துக்கூறியிருந்தார். திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் இன்றும் சாட்சியாய் அவர் கருத்து பதியப்பட்டுள்ளது. அன்று விவேகானந்தர் ஈட்டிய வெற்றிவாகையை கொண்டாடும் காலகட்டத்தில் மலர்ந்த கல்லூரிகளும் பத்திரிக்கைகளும் இந்து என்ற பெயரைத் தாங்கத் தொடங்கின. ஆனால் அவை இம்மியளவும் இந்து என்ற பெயர்மூலம் ஆரியச் சதிக்கு இடமளிக்கவில்லை.

ஆனால் இன்று? அஞ்சனேயர் வழிபாடு. சாயி வழிபாடு, கல்கி வழிபாடு, கண்டபாட்டுக்கு தேரோட்டம் அப்பப்பா எத்தனை கலவைகள்! இக்கலவைச் சமயத்தால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானது. கலைஞர் கருணாநிதிகூட இதே கேள்வியைக் கேட்டதோடு இந்து என்றால் கள்ளர் என்றும் கூறியிருந்தார். சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களிடம்(திராவிடர் எனப்து ஆராய்சித்துணிபு) வெறுப்புக்கொண்ட பாரசீகர் கிந்து என்றால் கள்ளர் என்று பொருள் கொண்டனர். ஆங்கிலேயர் இந்தியா என்று பெயர் சூட்டியதும் ஆரியர் இந்தியாவில் தோன்றிய சமயங்களை இணைத்து ஆரிய சமயத்தை வளர்க்க சுமார்த்த மதத்தை தெரிவு செய்தனர்.( சங்கராச் சாரியாரால் உருவாக்கப்பட்டது. சிவன் முழுமுதற்கடவுள் அல்ல. பிரம்மம் தான் கடவுள் என்ற கொள்கை. பிரம்மம் சிவனாகவும் விஷ்ணுவாகவும் சக்தியாகவும் தோற்றம் கொள்ளும்)

ஆனால் சுமார்த்தத்தை தமிழர் ஏலவே நிராகரித்துவிட்டதால் அதற்கு புதுப்பெயர் கொடுக்கவிரும்பி இந்து என்ற பாரசீகரின் சொல்லை இட்டனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதம் என்பது பௌத்தம் சமணம் சீக்கியம் உள்ளடக்கியதாகும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பது இலங்கையில் பௌத்தத்திற்கும் உடமையான மன்றமா? சீக்கியமும் சமணமும் இலங்கையில் உண்டா?

சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து என்பது எம்மொழிச் சொல் என்று வாதிட்டு ஆய்வு நடாத்தி அது தமிழுக்கு விரோதமான தமிழ் பண்பாட்டிற்கு விரோதமான தமிழர் சமயமான சைவத்தை அழித்து ஆரிய வைதீக சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஆரியச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் என இனங்கண்டு நிராகரித்து யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி அதன்பெயரை சைவ வாலிபர் மன்றம் என்று 1956களில் மாற்றி புரட்சி செய்ததை இன்று இந்து மாமன்றம்............. இந்துக் கல்லூரி.............( அடியேனும் ஓர் இந்துக் கல்லூரியில்த்தான் கற்றவன்) கொழும்பில் உள்ள இந்து குருமார் பீடம்(யார் தமிழின் மேன்மைகாக்க மாற்றினாலும் இவர்கள் இந்து என்ற ஆரியச் சதியை விட்டுக் கொடுக்க்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள்தான் ஆரியச் சதியின் இலங்கை ஏஐண்டுகள்) இப்படிப்பல சிவபாத சுந்தரனாருக்கும் தமிழருக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் கேட்டை விளைவிக்கின்றனர்.(தெரிந்தும் தெரியாமலும்)

தேவாரங்கள் திருவாசகம் பெரியபுராணம் கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் சைவ ஆகமங்கள் திருமந்திரம் சைவ சித்தாந்த நூற்கள் எவற்றிலுமே இந்து என்னும் பெயர் சமயத்தின் பெயரைத் தாங்கி வந்ததில்லை. தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரியும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள் வழங்கி சிரிக்கும்.
சைவம் என்பது தொன்று தொட்டு சிவனோடு சம்பந்தமானது எனும் பொருளில் விளங்கிவருவது. சுத்தத் தமிழ்ப் பெயர். சிங்கள சிறிக்கு எதிராகப் போராடிய எம்மவ்ர்கள் ஆரிய சதிக்கு வரவழைக்கப்பட்ட பாரசீகச் சொல்லான இந்துவை முத்தமிடுவது வெட்கக் கேடானது!

"சிவனெனும் ஓசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்கிறார் அப்பரடிகள்.சிவன் என்னும் ஓசைக்கல்லது மற்றெவ்வோசைக்காயினும் திருநின்ற செம்மையுள்ளதா? சபதம் பிடிக்கவா? எனப்து அதன் பொருள்.
சட்டத்தரணிகள் எமது சமயத்தை தலைமைதாங்கும் இக்காலத்தில் அவர்களுக்கு அப்பரடிகள் பாடிய இப்பாடலின் பொருள் எப்படித் தெரியவரும்? சிவன் எனும் ஓசையோடு கூடியது சைவம் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?.

இந்து என்ற கலப்பட ஆரியச் சதியைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் சமயமான சைவத்தை வளர்ப்போம்.

மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்று வினாவினார் தாமோதரம்பிள்ளையார். மொழியோடு சமயமும் சமயத்தோடு மொழியுமாக இரண்டறக்கலந்து விளங்குவது சைவமும் தமிழும்.
தமிழராகிய நாங்கள் பண்டைய காலந்தொட்டு சைவத்தை அழித்து சுமார்த்தத்தை பரப்பத்துடிக்கும் ஆரியச் சதியை எப்படியெல்லாம் வென்று வந்தோமோ அந்த வரலாறுகளை மறக்காது எமது இளைய சமுதாயத்தை ஆரியத்திடம் கொடுத்து ஏமாந்து தமிழால் சபிக்கப்படாது விழிப்புக் கொள்வோம்.

பிற்குறிப்பு:- facebookகுழுமங்கள் தொட்டு பல்வேறுபட்ட இணையத்தளங்கள்வரை எளியேன் வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் தமது கல்லூரி பெயரை வலிய இந்து மகளீர் கல்லூரி என்று எழுதுவது காணும்போது கண்களில் குருதிவழிகிறது. கொழும்பில் சைவம் எனும் பெயரோடு இருக்கும் ஓரே ஒரு கல்லூரி சைவ மங்கையர் கல்லூரி. குறித்த கல்லூரி மாணவிகள் இந்து எனும் சொல்லில் மயங்கி கல்லூரி பெயரையே மாற்றியமை வருந்தவைக்கின்றது. சைவம் என்பதன் ஆங்கிலப்பதம் saivismஆதலால் colombo saivism ladies college என்பதே சரியானது.
சைவம் என்ற நல்ல தமிழ் சொல்லை இழந்து இந்து என்ற ஆரிய சதி சொல்லுக்கும் அதனோடு கூடி மறைந்திருக்கின்ற தமிழ்விரோத சதித்திட்டங்களுக்கும் சைவர்களே தமிழர்களே இரையாகிப் போகாதீர்.


பிற்குறிப்பு:-facebookஇல் தமக்கென profileவைத்திருப்பவர்களுக்கும் ஏனைய இணையத்தளத்தில் சமயப் பெயராக இந்து என்று தவறுதலாக பயன்படுத்தும் சைவப் பெருமக்களுக்கும் எளியேன் அன்போடு வேண்டுவது சைவம்/சைவன் saivism/saivite என்று மாற்றி இந்து என்ற ஆரிய தமிழ் விரோத ஆரியச் சதியை தோற்கடிக்க விழிப்புணர்வு கொள்வோம். ////சிறுதுளி பெரு வெள்ளம்//////

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
மேலும் படிக்க...

Tuesday, November 4, 2008

தமிழன் கண்ட முருகன்

எம்.கே.ஈழவேந்தன் ஐயா கந்த சட்டி விரதத்தை முன்னிட்டு எழுதிய "தமிழன் கண்ட முருகன்" எனும் கட்டுரையினை தினக்குரலில் இணையத்தளத்தில் சுவைக்கும் பேறுபெற்றேன். அடியேன் சுவைத்த ஐயாவின் தமிழ்த்தேன் ஒழுகும் குறித்த கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கின்றேன்.

ஐயாவினது கட்டுரையைப் படித்து சுவைக்க அழுத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
நன்றி
மேலும் படிக்க...

Wednesday, October 15, 2008

யுத்தசூழலில் சைவத்தின் இக்கட்டான நிலை

திருமூலரால் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட இலங்கை மண்ணில் ஆரியத்தின் கண்பட்டதா என்னவோ தெரியாது இராமன் வந்தது தொட்டு இன்றுவரை இரத்தந்தான்.

யுத்தத்தின் கோரம் எங்கள் மக்களுக்கு பழக்கப்பட்டதொன்றுதான்.ஆனால் யுத்த சூழ்நிலைகளில் அரசியல்பலம் அரசியல் பாதுகாப்பு போன்ற எக்கவசங்களும் அற்ற எமது சைவநிறுவனங்கள் எந்தவித உரிய ஆக்கபூர்வமான தொண்டுகளை செய்யமுடியாது இடம்பெயர்ந்து அல்லல் படுகின்ற மக்களை கைவிரித்துவிடுவது சைவசமூகத்தின் துரதிட்டமே.

ஆனாலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் உள்ள பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆலயங்கள், ஆலய நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் முன்னின்று இயன்றவரை உதவவேண்டும் எனபது ஒவ்வொரு சைவப்பிரசையினதும் அவா. குறித்த போர்ச்சூழலை சாதகமாக பயன்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுகின்ற அந்நியசக்திகளுக்கு இவ்வாறன சூழல்கள் ஒருவரப்பிரசாதமே. இங்கு நான் அவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. பிறநாட்டு சமயதொண்டுநிறுவனங்களிடம் உள்ள சேவை மனப்பான்மையை கீழ்த்தரப்படுத்தவும் விரும்பவில்லை.ஆனால் அரசியல்பலம் அற்ற சேவைசெய்யமுடியாத எமது சைவநிறுவனங்களின் நிலையால் வருந்தி இதை எழுதுகிறேன்.

கொழும்பில் இந்துமாமன்றம் எனும் திருப்பெயரில் சைவத்தை உரிமைகொண்டாடும் பெருமன்றத்திடம் ஓரளவு அரசியல்பாதுகாப்பு கவசம் இருப்பது ஒப்புக்கொள்ளவேண்டியதொன்று.அவர்கள் ஆழிப்பேரலையால் வாடிய மக்களுக்கு ஆற்றிய சேவையை அருகில் இருந்து கண்டு மனம் குளிர்ந்தவர்களில் நானும் ஒருவன். எனவே இடம்பெயர்ந்து வாடும் எம்மக்களுக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அவ்மன்றம் விரைந்து செயற்பட சைவப்பிரசைகளின் சார்பில் வேண்டிகிறேன்.

புறநாட்டு சமய தொண்டுநிறுவனங்களிடம் ஒரு தமிழனாய் வேண்டுவது இந்த நேரத்தை மதம்பரப்பும் நேரமாகக் கருதாது தங்களின் உயர்ந்தபட்ச சேவையை எம்மக்களுக்கு மதபேதமின்றி வழக்குக என்பதேயாகும்.

இந்தியாவில் உள்ள சைவநிறுவனங்களிடமும் சைவ ஆதீனங்களிடமும் எங்கள் நாட்டில் உள்ள சமயநிறுவனங்களை தொடர்பு கொள்வதன்மூலமோ (அகில இலங்கை இந்துமாமன்றம்) அன்றி நேரடியாக தொண்டர்களை பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களுக்கு அனுப்புவதன் மூலமாகவோ அன்றி இந்தியத்தூதரகம் ஊடாகவோ தங்கள் தொண்டை எங்கள் மக்களுக்கு உடன்விரைந்து செயற்பட இத்தருணம் சைவப்பிரசைகள் சார்பில் வேண்டுகிறேன்.( பார்பனீய பீடங்களுக்கும் பார்பனீய சமய ஆளுகைக்கு உட்பட்ட சமய நிறுவனங்களுக்கும் இது பயனற்ற வேண்டுதல் என்பதை அறிவேன்.)

எமது சிவபூமித் திருநாட்டில் நிரந்தர சமாதானம் மலர எல்லாம் வல்ல கௌரி அம்மை உடனுறையும் திருக்கேதீச்சரத்தானின் திருவருள் பாலிக்கட்டும்

ஐயனே என்
சிவனே
வாடுகின்ற பயிர்
காணின் வாடுவர்
சைவர்-அந்தமேல்
மக்கள் வாழும்
திரு நாட்டில்
குருதியின் கால்வாய்
முறைதானோ?

தமிழான சிவமே
சிவபூமித் திருவே
நாம் வாடுவதை
அறிகிலாயோ ஐயனே

தமிழின் திருவுருவே
சிவமே
தமிழ் படுந்துயர்
தீர்ப்பாய்
அழியா அமைதி
மலர திருவருள்
பொழிவாய்
எங்கள் சிவனே
தமிழ் பரம்பொருளே
மேலும் படிக்க...

Wednesday, October 8, 2008

சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும்

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.

நவராத்திரிக்கு சிறப்பு கட்டுரை எழுதவேண்டும் என்று தோன்றியவுடன் என் சக வலைப்பூ நண்பர்கள் நவராத்திரி விரத மகிமைகளை எழுதி பிரசுரித்துள்ளமையால் என் எழுத்திலேயும் அதே சங்கதியை மீண்டும் எழுதி அலுப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தவிரும்பவில்லை. பரீட்சைகள் காரணமாக நவராத்திரிக்கு உடனடியாக சிறப்புக் கட்டுரைகள் ஏதும் எழுதமுடியா துர்சூழல் அடியேனை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது. மன்னிக்க.


எனினும் பெண் வழிபாடு சைவப் பண்பாட்டிலும் பண்டைய திராவிட சைவ வழிபாட்டு முறைகளிலும் எவ்வாறு உள்ளதென்பதை அடியேனின் அறிவுக்கு எட்டிய அளவு ஆராயவிளையலாம் என நினைக்கின்றேன்.






சிந்துவெளி கரப்பா நாகரீகம் (இன்றைய பாக்கிஸ்தான்) திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்று அறிஞர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராச்சி முடிவுகளும் அவ்வாறே பறைசாற்றியுள்ளன. சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம் இலிங்க வழிபாட்டுடன் பெண் தெய்வ வழிபாடும் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பெண்ணில் இருந்து முளைத்து வளரும் செடி உடைய வழிபாட்டுச் சின்னத்தையும் அவர்கள் அதற்கு ஆதாரமாக வைக்கின்றனர். பண்டைய எமது சிந்துவெளித் திராவிட மக்கள் உலக உயிர்களின் தோற்றத்திற்கு பெண்ணே மூலம் என்பதால், அந்தப் பெண்ணை மதிக்கவும் வணங்கவும் ஆரம்பித்துள்ளனர் . இந்த மக்கள் கூட்டத்திடம் இருந்த பெண்தெய்வ வழிபாடு, சாதரண இலிங்க வழிபாடு என்பன சைவ சித்தாந்தமாக வளர்ச்சிகண்டபோது, பரம்பொருளாகிய சிவனின் சக்தி பெண் என்று சிறப்புப் பெற்றது.


சடம் சிவன். சக்தி உமை. சக்தி இல்லாது சடம் இல்லை. ஆகா என்னே அற்புதம்.........என்னே மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞானம்!சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. அர்த்த நாதீசுவரராய் அறுபத்தி நான்கு சிவ மூர்த்தங்களில் ஒன்றாய் ஆண் பாதி பெண்பாதி என்ற உயர்ந்த தத்துவத்தை சைவம் உலகுக்கு அறிவித்தது. வீரத்திற்கு துர்க்கையாகவும் செல்வத்துக்கு இலக்குமியாகவும் கல்விக்கு சரசுவதியாகவும் பெண்ணை போற்றியது எமது பண்பாடு.


சைவத்தால் அகப்புறச் சமயங்களில் ஒன்றாக வகுக்கப்பட்ட சாக்தவழிபாட்டில் துர்க்கை வழிபாடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று கல்கத்தாவில் இவ் வழிபாட்டுமுறை பெரிதும் பின்பற்றப்படுகின்றது. இவ் வழிபாட்டில் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு போகங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் அகப்புறச் சமயமாக வகுக்கப்பட்டுள்ளது.
சனாதன சைவத்தில் சக்தியானது பெண்ணாக உருவகிக்கப்பட்டு, உமையாக போற்றப்பட்டு பரம்பொருளின் ஒருபாதியாக அர்த்தநாதீசுவரராக உயர்த்தப்பட்டு பெண் வழிபாடு முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.




அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று மணிவாசகத்தால் அம்மையாகவே முதலில் அறியப்படுகின்றான் எம் பிரான். திருஞான சம்பந்தர் குளத்திலே மூழ்கி குளித்த தந்தையைக் காணாது அழுதபோது அம்மையே அப்பா என்று அழுததாக சிறப்பிக்கப்படுகின்றார். குழந்தை முதலில் சொல்வது "அம்மா" என்ற வார்த்தையைத் தான். எனவே அப்படிப்பட்ட அம்மையை சிவத்தோடு ஒருமித்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்கின்ற தத்துவத்தை சனாதன சைவம் உலகுக்கு அறிவிக்கின்றது.திருவிளையாடற் புராணங்களாகட்டும், பெரிய புராண நாயன்மார் வரலாறுகள் ஆகட்டும் இறைவன் இடப வாகனனாய் உமையோடு இணைந்தே எழுந்தருளி அருள் பாலிப்பதை அறியமுடியும். பெண்ணில்லாமல் செய்யும் இல்லறத்தோனின் தானம் செல்லுபடியற்றது என்பர். எனவே இல்லறத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பை வழ்ங்குவதில் சைவநெறி ஆழமான பங்களிப்பை செய்துள்ளது எனபது வெள்ளிடைமலை.

சாதரண அறிவற்றோர், எமது சமய வாழ்வியல் பண்பாடு பெண்களை வீட்டுக்குள் பூட்டி சுதந்திரத்தை பறித்துவிட்டதாக புலம்புவர்.புழுகுவர். உண்மை அதுவல்ல எனபது சமயத்தை ஆழ அறிந்தவர்கள் அறிவர்.

ஈசுடோரோஜோன் ஓமோன் புரோஜோஸ்டோரோன் ஆகிய ஒமோன்கள் பெண்களுக்கும் தெஸ்தெஸ்திரோன் ஒமோன் ஆண்களுக்கும் என்று வகுத்த இறைவன் நிச்சயம் பக்கசார்பானவன் என்று எப்படி அறியப்படமுடியும்? எதிலும் சமநிலை வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்றோர் ஆணின் ஓமோன்கள்களை பெண்களுக்கு(தங்கள் மனைவிமாருக்கு....பிள்ளைகளுக்கு)வழங்குவார்களா என்ன?இயற்கை வகுத்தவிதி இந்த ஓமோன்களின் செயற்பாடு. இயற்கையை உணர்ந்து ஒழுகுவதுதான் வளமான வாழ்கை. இதை உணர்ந்த எங்கள் பண்பாட்டு நெறி, மென்மையான பெண்களிடம் உள்ள சக்தி வன்மை உடையது என்று உணர்ந்து வழிபடத் தொடங்கினர். போற்றத் தொடங்கினர். சம உரிமை வழங்கப்படவிலை என்பது வெளித்தோற்றத்தில் இருந்து சமயத்தை நோக்குபவர்கள் கூறுகிற வதந்தி.பெண்ணிடம் அதிக கடமைகளை சைவம் ஒதுக்கவில்லை எனபதுதான் உண்மை. வீட்டுக்கு அரசியான பெண்ணிடம் இருந்த சுமைகள் ஏராளம். எனவே அவளிடம் சமூக கடமைகளை ஒதுக்கவிரும்பவில்லை.அவ்வளவே.ஆனால் சமூக கடமைகளில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை என்பதை உணர்க. அதனால்தான் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், ஔவையார்( ஔவையார் என்பது காலத்திற்கு காலம் தோன்றிய இலக்கிய பெண்களின் பொதுப்பெயர் என்க.),திலகவதியார் என்று சமூக,சமய பெண்கள் சரித்திரத்தில் தோன்ற முடிந்தது. ஏனைய நெறிகளில் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எமது பண்பாடு வழங்கிய சுதந்திரத்தின் எள்ளளவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும். இன்றுகூட ஐரோப்பாவில் வழங்கப்பட்டுள்ள பெண் சுதந்திரத்தை அவர்களின் சமயப் பண்பாடுகள் ஏற்கவில்லை. அரேபியாவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவதே அருமை.

ஆனால் மனித சுதந்திரத்தை......வழிபாட்டு சுதந்திரத்தை அறிவுறுத்துகிற எமது பண்பாட்டில் "கூடாது" என்று கூறப்படாததால் பெண் சமூகம் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்துள்ளது.

உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறல் என்பது மூடநம்பிக்கை. ஏதோ ஒர் ஊரில் கணவன் மீதுகொண்டிருந்த உயர்ந்த அன்பால் ஆழமான காதலால் உடன்கட்டை ஏறிய பெண்ணைக்கட்ட சிலர் உடன்கட்டை ஏறினாலேயே அவள் உண்மையாக கணவனை நேசித்தாள் என்று அர்த்தம் என்று பிதற்றியிருக்க அது பத்து ஊருக்குச் சென்று ஒரு பழக்கவழக்கமாக உருமாறியிருந்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு அர்த்தமற்ற கீழ்த்தரமான விடயங்களும் சைவத்தால் இம்மியளவும் அரவணைக்கப்பட்டதோ அன்றி அனுமதிக்கப்பட்டதோ அல்ல.


பெண்மையை போற்றுகின்ற எமது பண்பாட்டை மதிப்போம். பெண்ணை போற்றுவோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
மேலும் படிக்க...

Sunday, September 21, 2008

தமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை

அண்மையில் தினக்குரல் இணையத்தளத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களைப் பற்றி அருமையான கட்டுரை வெளியாகிவிருப்பதைக் கண்டு பயன்பெற்றேன்.அதில் தாமோதரம்பிள்ளை அவர்கள் மதம்மாறவேண்டிய சூழ்நிலைக்கு ஊந்தப்பட்டதாக பொருட்பட எழுதப்பட்டுள்ளது. இதில் அடியேன் உடன்பாடு கொள்ளவில்லை.
மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லாத வாழ்வும் ஒர் வாழ்வா என்ற ஒருவர் நிச்சயம் சூழ்நிலைகாரணமாக சைவத்தை தழுவியிருக்கவாய்ப்பேயில்லை. தமிழ் நெறி சைவம் என்றுணர்ந்து தமிழில் ஏற்பட்ட காதல் சைவநெறிவில் பிடிப்பை ஏற்ப்டுத்தியதென்பதே உண்மை.
பணத்திற்கும், பதவிகளுக்கும், சலுகைகளுக்கும்,கல்விக்கும் ஆக கிருத்தவ மதத்தை கட்டாயம் தழுவியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் அவர் சைவ சமயத்தை தழுவ நிர்ப்பந்திக்கப்பட்டார் எனும் பொருளில் எழுதியுள்ளது மதசார்பையே காட்டுகிறது.

குறித்த கட்டுரையின் முதல்பாகத்தில் தாமோதரம்பிள்ளையின் செல்வாக்கினாலேயே அவர் மாமனார் மீண்டும் சைவத்தை தழுவிக்கொண்டார் என்று எழுதப்பட்டுள்ளது. விருப்பமில்லாது கட்டாயத்தில் சைவத்தை தழுவிய ஒருவர் தனது மாமனாரை சைவத்தை தழுவும் படி எப்படித் தூண்டுவார் என்ற வினா தொங்கிநிற்பதை கட்டுரையாளர் விளக்கவேண்டும்.
நாத்தீகமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆத்திகத்தை இறுதியில் தழுவியது ஏதேனும் கட்டாயத்திலா? சுவாமி தந்திரதேவா எனும் அமெரிக்கர் சைவத்தைத் தழுவி துறவியாகி இலங்கை வந்து யுத்த சூழ்நிலையிலும் தொண்டே சிவம் என்று வாழ்ந்தது ஏதேனும் கட்டாயத்திலா?சைவ சமயத்திடம் பணம், அரசியல் பலம் எதுவும் இல்லை.அதுவும் பிரித்தானியர் காலத்தில் இருந்திருப்பதாய் சொல்வது புழுகு.
ஆபிரிக்கா கவிஞன் " நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது. இன்று எங்கள் கைகளில் பைபிளும் உங்கள் கைகளில் எங்கள் நாடும் உள்ளது" என்று ஆதங்கத்தில் கவிவரைந்தான்.இப்படியே போனால் தமிழ் சமூகமும் இப்படித்தான் ஆகும் என்று அறிந்து தமிழ்மீது ஏற்பட்ட காதலால் சைவத்தையும் அதன் மேன்மையையும் உணர்ந்து சைவத்தை தழுவிய சி.வை தாமோதரம்பிள்ளையவர்களை சாதிகாரணமாகவே மதம்மாறியதாக எழுதியது பாரியதவறாகும்.
தமிழ் ஏடுகளை பெறுவதற்காக அவர் சைவநெறியை தழுவவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார் என்பது சோடிக்கப்பட்ட பொய். வீரமாமுனிவர் எனும் கிருத்தவபாதிரியாரும், ஜி.யு.போப்பும் சிரமங்களை தாம் சார்ந்திருந்த மதம் காரணமாக அனுபவித்தார்களா? அதற்காக சைவத்தை தழுவினார்களா என்ன? ஜேர்மனியில் எத்தனையோ ஆயிரம் நமது ஏடுகள் இருப்பதாக பத்திரிக்கையில் படித்து அறிந்ததுண்டு. அவ்வேடுகளை சைவநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு பாதிரிமார்கள் எல்லாம் மதம் மாறினார்களா என்ன?மேலும் சைவ நிறுவனங்களிடம் (ஆதினங்கள்) சமயம் சார்ந்த தமிழ் நூல்களே பெரிதும் பாதுகாக்கப்பட்டு கிடந்தன. எனவே கட்டுரையில் இது ஒரு வர்ணம் பூசப்பட்ட பொய் என்பது தெளிவு.
அருமையான கட்டுரையில் மதசார்புக் காழ்ப்புணர்ச்சி வந்திருக்கவே கூடாது. மதசார்போடு எழுதி " மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லா வாழ்வும் வாழ்வா என்று உணர்வோடு உரைத்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் வாழ்க்கையை சாதி-மத பந்தங்காட்டி கட்டுரைக்கு கலங்கம் ஏற்படுத்தியது எவ்வளவு தவறு என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

குறித்த கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.


மேலும் படிக்க...