"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, March 10, 2010

ஜேர்மனியில் மகாசிவராத்திரி

மேலும் படிக்க...

Tuesday, March 9, 2010

சிறுதெய்வங்களும் மானிடரும் அருள்கின்றனவே....எப்படி?


மானிடரையும் மற்றச் சிறுதெய்வங்களையும் வழிபடும்போதும் நன்மைகள் கிடைக்கின்றனவே? அது எப்படி?  இவ்வண்ணம் எழுகின்ற வினாக்களை, சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் தெளிவுபடுத்துகின்றது. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை.சித்தியாருக்கு மிஞ்சிய நூலுமில்லை என்பது முதுமொழி.




சிவஞானசித்தியார் நூலின் சுபக்கம் இரண்டாம் சூத்திரம் 24,25,26,27 ஆம் பாடல்கள் சிவபெருமான் உயிர்கள் மேல் எவ்வளவு கருணையுடையவன் என்பதை உணர்ந்துகின்றன.

மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! (24)


தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும்  இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்.

யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே! (25)


எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.

இங்குநாம் சிலர்க்குப் பூசை
இயற்றினால் இவர்க ளோவந்(து)
அங்குவான் தருவார் அன்றேல்
அத் தெய்வம் எல்லாம்
இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்(கு)
ஆணைவைப்பால் அளிப்பான்  (26)


இங்கு நாம் சிறுதெய்வங்கள்,பெரியோர்,உயர்ந்தோருக்கு வழிபாடு செய்தால்,அவர்களே அவற்றுக்கான பலன்களை மறுபிறவியில் நமக்குத் தரமாட்டார்கள். எங்கும் உள்ள சிவனே வந்து அருள் செய்வான்.எல்லாம் அவன் ஆணை வழியாக நிற்பதுவும் இயங்குவதுமாகையால் அவனே நமக்குப் பயன் தருவான்.

காண்பவன் சிவனே ஆனால்
அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பறம் அரன் தன் பாதம்
மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன
விதிஅறம் விருப்பொன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும்
பூசனை புரிந்து கொள்ளே   (27)


எல்லாம் ஏற்பவன் சிவனேயாதலால், அவனடிக்கு அன்பு செய்வது சிறந்த அறமாகும். அவன் திருவடியை மறந்து செய்யும் அறங்கள், வீண் செயலே ஆகும். ஆகவே அவனை வழிபடுவதே அறமும் செய்யத்தக்கதாகும்.



சைவ சமயத்தில் பிறத்தல், சைவ சமயத்தை சார்ந்து ஒழுகுதல் புண்ணியத்தின் பயன் என்பதையும் இந்நூல் உணர்த்துகின்றது.


நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே
                                - சிவஞான சித்தியார்


மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம்.

வாழ்வெனும் மையல் விட்டு
வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே
                                                 -சிவஞான சித்தியார்


வாழ்வுபற்றிய செருக்குகள் பற்றாமலும், வறுமையில் சிறுமையடையாமலும் பணிவு கொண்டு, சைவ சமயம் சார்வது; நல்வினையில் பெறுதற்கரிய பேறு. மிக உயர்ந்த சிவஞானம் பெற்று பிறைமதி சூடிய, இறைவனை வழிபட்டு இருப்போர் அருள்மிகப் பெற்றவராம்.
                              
எனவே, வேதம் பயிலுகின்ற நாட்டில் பிறக்க முடியாதவர்களுக்கும், அன்றி பிறந்தும் நல்லூழ் குறைவால் திருநெறிச் சைவத்தை ஒழுகும் பெறு வாய்க்கமுடியாதவர்களுக்கும், அன்றி திருநெறிச் சைவத்தில் பிறந்தும் ஞானக்குறைவால் சிறுதெய்வவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் எம்பெருமான் சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு, அவர்கள் வழிபடும் தெய்வத்தின் வடிவம் தாங்கி அவர்களின் நல்வினை-தீவினைக்கு ஏற்ப அருள்பாலிக்கின்றார்.
 

பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றியை இழந்து தவித்தபோது தாய்ப்பன்றியாக உருவெடுத்து பாலூட்டிய எம்பெருமானின் கருணையை வார்த்தைகளால் அளவிடமுடியாது. அப்படிப்பட்ட எம்பெருமான்; நல்வழியில் நடப்பவர் ஞானக்குறைவால் தேவதைகளையோ அன்றி மானிடர்களையோ கடவுளாகக் கருதி வழிபட்டால், அவர்களை கைவிட்டுவிடுவாரா என்ன?

பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே ஆவர். எனவே வினைகள் செய்வனவாகவும், இன்ப-துன்பம் நுகர்வனவாகவும், பிறப்பு-இறப்பு என்னும் சாகரத்துள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இவர்கள் இருப்பதால் இச்சிறுதெய்வங்களால் ஆவதொன்றில்லை. ஆனால்  நல்வினை தீவினைக்கு ஏற்ப வந்தமைய வேண்டிய பலன்களை சிவபெருமானை அறியாத சிறுதெய்வ-பிறநெறி வழிபாட்டாளர்களுக்கு அவர்கள் நம்புகின்ற உருவெடுத்து சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்.  இது எப்பெருமானின் தனிப் பெருங்கருணையால் சிறுதெய்வ- பிறநெறி வழிபாட்டாளர்கள் பெறும் பயனாகும்.

எனவே; இத்தகு எம்பெருமானின் கருணையையும் முழுமுதற்தன்மையையும் உணர்ந்து எம்பெருமானின் திருவடிக்கு அன்பு செய்வதே சிறந்த அறமாகும். "காண்பவன் சிவனே ஆனால் அவனடிக்கு அன்பு செய்கை" என்று  மேலே தரப்பட்டுள்ள சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி  இதை வலியுறுத்துகின்றது.  இவ்வுண்மையை உணர மறுத்து,  சிவபெருமானின் திருவடியை மறந்து செய்கின்ற அறங்கள் யாவும் வீண் செயலே! "மாண்பறம் அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம் வீண்செயல்" என்று 
சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி இதை தெளிவுபடுத்துகின்றது.

மயக்கவுணர்வால் தேவதைகளையும், மானிடர்களையும் வழிபடுபவர்க்கு சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு பலனளிப்பதால், எல்லாவற்றுக்கும் உத்தவரவாதமாக விளங்கும் சிவபெருமானையே அன்புசெய்து பூசித்தல் வேண்டும் என்பதையே சிவஞானசித்தியார் நூல் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
 

நம்முடையதும் நம்மில் சிலர் மயக்கவுணர்வால் ஞானக்குறைவால் கடவுளாகக் கருதும் மானிடர்களினதும் தேவதைகளினதும் பிறப்பையும் இறப்பையும் அவரவர் கருவில் உதிக்கும் முன்னரே வரையறை செய்த எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செய்து பூசிப்பது தவப்பயனே!
 

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக்  கருணை செய் தானே " - திருமந்திரம்


ஆகமப் பொருளை சிவபெருமான் தமிழ்-ஆரியம் என்னும் இருமொழிகளிலும் ஏக காலத்தில் அம்மைக்கு விளக்கியபோதும் நமது நல்லூழ் குறைவால் சிவாகமங்கள் தமிழில் கிடைக்காமற் போயிற்று. எனினும் சமயகுரவர்கள் வழியாக சைவசித்தாந்த நூல்களாக தமிழில் சிவாகப் பொருளை அறியும்பொருட்டு நமக்கு எம்பெருமான் வழிசமைத்திருக்க, நாம் அவற்றை அறியாது, உதாசீனம் செய்து வாழ்வது, அறிந்தோர் எடுத்தியம்பும் அறிவுரைகளை செவிமடுக்காது தவிர்ப்பது யாவும் மீளாப்பழிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்வோமாக!

மானிடப் பிறவி தானும்
வகுத்தது மனவாக்கு காயம்
ஆன் இடத்து ஐந்தும் மாடும்
அரன்பணிக் காக அன்றோ
வானிடத் தவரும் மண்மேல்
வந்துஅரன் தனைஇர்ச் சிப்பர்
ஊன் எடுத்து உழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ
                              -சிவஞானசித்தியார்

மனிதப் பிறவிக்கு, மனம் வாக்கு காயம் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது சிவன் பணிக்காகவே ஆகும்.ஐம்பொறிகளும் சிவன் பணிக்காகவே! வானில் உள்ள தேவர்களும் மண்ணில் வந்து சிவனை வழிபடுவர். அப்படியிருக்க; உடம்பைப் பெற்றும் இவை உணராதவர்கள் அறியாமை உடையவரே ஆவர் என்று சிவஞானசித்தியார் நூல் உரைக்கின்றது.

தேவர் சிவனை வழிபடும் பொருட்டு பூமிக்கு வருகையில்; நாம், பூமியில் சிவாலயங்களால் சூழப்பட்ட நற்றமிழ் நாட்டில் வாழும் பேறுபெற்றும் சிவாலய வழிபாட்டை மறந்து சிறுதெய்வ-பிறநெறி தெய்வ- மானிடச் சாமிகளை மயக்கத்தால் வழிபடுபது தீய ஊழின்  விளைவே!


பிறவாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை வழங்குபவனுமாகிய சிவபெருமானை வணங்குங்கள்; அவ்வாறு வணங்கினால் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப் பேறு அடையலாம்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி  மாயா  விருத்தமு மாமே
                                                 -திருமந்திரம்

 

சிவனருள் இருந்தால்தான் சிவனை வழிபடும் பேறு அமையும் என்பதை திருவாசகத்தில் சிவபுராணத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் தனது தேன் தமிழால் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்கிறார். சிவபெருமானின் அருள் இருந்தால்தான் சிவபெருமானை வழிபடும் சைவநெறியை ஒழுகும் பேறு அமையும்.
மேலும் படிக்க...

Friday, March 5, 2010

சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்

இந்துமதம் என்ற கூட்டுச்சரக்குக்கு சங்கரபீடத்தின் சுமார்த்த அத்வைதக் கொள்கையால் துணியுடுத்தி, சைவம் என்றால் மாமிசம் அற்ற உணவுப் பண்டத்தை குறிக்கும் என்று பொருள்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில், சுமார்த்தம் வெற்றியீட்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதம் பக்தி, ஆனந்த விகடனின் சக்தி மற்றும் ஏனைய சமய இதழ்களாகிய திரிசக்தி, ஆன்மீகம், இராமகிருஷ்ண விஜயம் யாவுமே சுமார்த்த அத்வைதக் கொள்கையை போற்றுபவை. இவை சைவம் என்ற பெயரை தமிழகத்தில் சாப்பாட்டுப் பண்டத்தைக் குறிக்கும் வகையில் மாற்றியதில் முக்கியபங்கை வகுப்பவை.இவர்களுக்கு சிவனும் சும்மா. விஷ்ணுவும் சும்மா. எல்லாம் ஒன்று என்று "ஜால்ரா" அடித்து இந்தியா முழுவதும் ஒரேசமயமாக எந்தவிதமான கோட்பாட்டு வேறுபாடுகளும் இல்லாத இந்துமதத்தை உருவாக்கி, ஒற்றைப் பண்பாட்டை விதைக்க வேண்டும்.அவ்வளவுதான்!!!! இதன்மூலம் அகண்ட பாரதக் கனவை ஒருகால் நனவாக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே, இவர்களுக்கு சைவ சித்தாந்தம் தென்னாட்டில் இடைஞ்சலாக இருக்க, தென்னாட்டில் நிலவிய நாத்தீகவாதத்தை சாதகமாக்கி ஊடகபலத்தின் துணையால் சுமார்த்த அத்வைதக் கொள்கையை இலகுவாகப் பரப்பிவருகின்றனர். ஒருதசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையிலும் இதே கதையை உருவாக்கிவிட்டனர்.அதற்கு ஏதுவாக இருந்தது "இந்து" என்கின்ற பெயர்!!!!


இவர்கள் தமது சுமார்த்த அத்வைதக் கருத்துகளைப் பரப்ப, "நான் கடவுள்" என்று பிதற்றும் சாமியார்களை உருவாக்கி உலாவவிட்டார்கள். இவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் மக்கள் "இந்து" என்ற பெயரில் அத்வைதத்தை ஒழுகினால் போதும்! ஆன்மீக முன்னேற்றம், ஞான விருத்தி, முக்தி இவைபற்றி அக்கறையில்லை!!! நாள்தோறும் விலைவாசி உயர்வாலும், வீட்டுப் பிரச்சினைகளாலும் வேலையில்லாப் பிரச்சினைகளாலும் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏதேனும் புளுடாக் கதைகளை அவிட்டுவிட்டு, "நான் கடவுள்" என்று சொல்லித்திரிகின்ற யாரையேனும் பின்பற்றும்படி செய்துவிட்டால் போதும்!!!!

அத்வைதத்தை தாபித்த ஆதிசங்கரரை சிவனென்று கதையளந்து பார்த்தனர். பலிக்கவில்லை!!!! சிவனுக்கு இரத்தமும் சதையும் சேர்ந்த கருவறையில் பிறத்தல் என்பது ஒருக்காலும் இல்லை என்பது சைவம். எனவே, ஆதிசங்கரரை சிவனாக்க முயன்று தோற்றபின், கண்டவரையெல்லாம் கடவுளாக்கத் தொடங்கிவிட்டது.
 
திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் மற்றும் ஏனைய நாயன்மார்கள் யாவரும் இறையருளால் அற்புதங்கள் செய்து ஏனையோருக்கும் இறையருளை நுகர வாய்ப்பு வழங்கி மேன்மைகொண்ட சைவநீதியை பாரிலே நிலைபெற வழிசமைத்தனர். திருவாசகத்தை இறைவனே பிரதியெடுத்து "திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை உலகறியச் செய்தான். சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரை சிற்றம்பலத்து பஞ்சாட்சர வாசற்படியில் வைத்தபோது இறைவனின் திருவருட்சம்மததால் அவ்வாசற்படிக்கு அருகாமையில் இருந்த கல்யானைகள் தமது துதிக்கைகளால் தூக்கி நடராசப்பெருமானின் திருவடியில் வைத்து சைவ சித்தாந்த நூலின் புனிதத்தை பாரறியச் செய்தன.

இவ்வண்ணம் இறைவனின் திருவருட்சம்மதம் பொருந்திய சைவநீதியை "நான் கடவுள்" மாயாவிகளை வளர்த்து அவர்களின் துணையால் இந்துமதக் கூட்டுச்சரக்குக்குள் சைவநெறியை ஒழித்து வைத்து காலவெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்துவிடலாம் என்று கற்பனை காணுகின்றனர் சுமார்த்த பீடங்கள்!!!!!

சமணர் சுண்ணாம்புக்குள் போடுதல், கடலில் கல்லோடுகட்டி வீசுதல், யானையால் மிதிக்கச் செய்தல் என்று பல்வேறுவழிகளில் சைவரைத் துன்புறுத்தி, சமணத்தை வளர்த்தபோது அத்தனை கொடுமைகளையும் சிவனருளால் தகர்த்து சைவநெறியை நால்வர் மீண்டும் தழைத்தோங்கச் செய்தனர். மேற்குநாடுகளில் ஆட்சியில் தென்னாட்டில் சைவம் தளர்வுற்றபோது யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி தென்னாடெங்கும் சைவம் தழைக்க வழிசமைத்தார். இவ்வண்ணம் சைவநெறிக்கு பங்கம் உச்சமடையும்போதெல்லாம் சைவநெறியை-சைவ சித்தாந்தத்தை காத்து வளர்க்க அருளாளர்கள் பூப்பது சுமார்த்தர் அறியவில்லைப் போலும்!!!!!!!!

இவர்கள் வளர்த்துவிட்ட கல்கி பகவான்,சாயி பகவான் மற்றும் நித்தியானந்தரை இனிப் பார்ப்போம்!!!!!!

கல்கி என்பது வைணவம் சொல்லுகின்ற விஷ்ணுவின் பத்தாவது அவதாரம். கலி முற்றி பிரளயக் காலத்தில் கல்கியாக விஷ்ணு அவதரிப்பார் என்கின்றது வைணவம். ஆனால் விஜய்குமார் நாயுடு என்கிற இயற்பெயருடையவர் "தானே கல்கி" என்று கல்கிபகவான் என்று பெயர்பூண்டு கடவுளாக பிரபல்யமாகியுள்ளார்.இவருக்கு ஆந்திர மாநிலந்தொட்டு கொழும்பு-யாழ்ப்பாணம் என்று பெரு வரவேற்பு!

இவரை பிரபல்யமாக்கியது யார் என்றால் "இந்து"மதம் என்கிற சுமார்த்தக் கொள்கையே!!!!! இன்று இவரது ஆச்சிரமத்தின் ஒருபகுதியான வரதபாளையத்தில் உள்ள தொழில்நுட்பப் பகுதியை அங்குள்ள மக்கள் அடித்து நொருக்குமளவுக்கு அங்குள்ள மக்களுக்கு அசுரனாகியுள்ளார். ஏனைய வெளியூர்காரருக்கு தேவாதி தேவன்! இவர் "தப்புத்தாளங்கள்" செய்வதாக ஆந்திரா தொலைக்காட்சியொன்று அடிக்கடி செய்தி வெளியிட்டு சூடேற்றியுள்ளது. உண்மை இறைவனுக்குத்தான் தெரியும்!!!!!

ஆச்சிரமத்தில் போதைப்பொருள் இருப்பதாகவும் போதைப்பொருளே பிரசாதகமாக வழங்கப்பட்டு ஒருவித பரவசநிலையை ஊட்டப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் காவற்துறையில் புகார் செய்துள்ளனர். அதன் உண்மைத்தன்மையும் இறைவனுக்கே வெளிச்சம்!!!!

எனவே இப்பிரச்சினைகள் யாரும் உருவாக்கிவிட்ட வதந்திகளின் விளைவாகக்கூட இருக்கலாம்.அதனால் இப்பிரச்சினைகள்பற்றி ஆராயவிரும்பவில்லை.

ஆனால் ஏனைய சில கேள்விகள் கல்கிபகவான் என்று சுயபிரகடனம் செய்துள்ள விஜயநாயுடு மற்றும் அவரது துணைவியாரான இறைவியாகப் போற்றப்படும் அம்மா பகவான் பத்மாவதி தேவி தொடர்பாக எழுந்துள்ளது. அவற்றின் விடைகள் "இவர்கள் போலிகள்" என்றே புலனாக்குகின்றது. அவைதான் என்ன???

1) சிறப்புத் தரிசனத்துக்கு 25,000 கட்டணம், ஓமம் செய்ய 60,000 ருபாய் கட்டணம், என்று கட்டணத் தொகை பணக்காரரின் கடவுளாக இவரை வெளிக்காட்டியுள்ளது.

2) இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்கின்றார் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்மீதும் சிலர் காவற்துறையில் புகார் பதிவுசெய்துள்ளனர். கடவுளுக்கு மகன் உண்டா? அப்படியானால் இல்லற சுகத்தை இனிக்க இனிக்க சுவைத்தாரா? அல்குல் சுவையில் மயங்கி சேக்கைப்போர் செய்தாரா? விஷ்ணுவின் அவதாரம் என்று போற்றப்படும் இராமன் - கிருஷ்ணர் இருவரும் மனைவி பந்தம் கொண்டவர்களாகவும் புத்திரர்கள் கொண்டவர்களாகவும் காட்டப்படுவதால் இதை ஏற்பதில் என்ன தவறு? இராமர் பட்டாபிடேகத்துடன் கம்பராமாயணம் முற்றுப்பெறுகின்றது. காரணம் லவ-குச கதைகள் தென்னாட்டு கடவுள் மரபுக்கு இயல்பில்லை என்பதால்!!! கிருஷ்ணர் கதையும் இதற்கு விதிவிலக்கல்ல!

எனவே கடவுள் சேக்கைப்போர் புரிந்தார் என்பது தென்னாட்டு ஆன்மீகமரபில் வரவேற்கப்படாத ஒன்று! இராம அவதாரம்-கிருஷ்ண அவதாரம் யாவும் சேக்கைப்போரின் விளைவால் உருவாகாதவை!!! சீதையும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கல்கி என்று பிரகடனப்படுத்தியுள்ள இவருடைய பிறப்பு அதிசயப் பிறப்பா என்ன? இவரது துணைவியாரும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவரா என்ன?கடவுளின் மகன் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்வது முறையாகுமா என்ன?

வரதராஜுலுவு-வைதர்பி எனும் தம்பதியரின் மஞ்சப் போரில் இவர்களின் விந்துவும் முட்டையும்(சூல்) இணைவினால் உருவானவரே கல்கி என்று அழைக்கப்படும் விஜயநாயுடு.அதுபோல் வெங்கய்யா - பென்சலம்மா தம்பதியரின் மஞ்சத்து மோகத்தில் அவர்களுடைய விந்துவும் சூலும் இணைந்ததன் விளைவால் உருவானவரே பத்மாவதி இறைவி என்று கல்கியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவரது துணைவியார். எனவே, இவர்களின் பிறப்பு எமது சமயமரபு கூறும் இறை இலக்கணத்துக்கு ஏற்புடையதன்று! வைணவம் கூறும் கல்கி அவதார இலக்கணத்துக்கு எள்ளளவும் தொடர்பற்றது. ஆனால் இதுபற்றி சுமார்த்த அத்வைத இந்துமத முகவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களுக்கு வைணவமும்-சைவமும் தீண்டத்தகாதவை!!!

கண்ணன் ஆயர்குல மக்களுடன் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இராமன் குகனுடனும் குரங்கினங்களுடனும் தோழமைபூண்டு சகோதர உறவு கொண்டு வாழ்ந்ததாக இராமாயணம் தெரிவிக்கின்றது. ஆனால் கணனியுகத்தில் தோற்றிய இவர் 25,000 ரூபாயில் சிறப்புத் தரிசனம் கொடுக்கும் "பணம் நாடும்" கடவுளாகியுள்ளார்............என்ன கொடுமை? ஆலயங்களில் அன்று சிறப்புத்தரிசனம் என்று கட்டணம் வாங்கும் பழக்கத்தை மனிதர் புகுத்தினர். இவரும் அதே விதியைப் புகுத்தியுள்ளார். அப்படியானால் இவரும் வெறும் பணத்தேவையுள்ள மனிதராகியுள்ளார் என்பது வெள்ளிடைமலை!

ஏழைக் குசேலரின் அவலை உண்ட கண்ணன், சபரி கடித்துக் கொடுத்த எச்சில் பழத்தை உண்ட இராமன் என்று திருமாலின் அவதாரங்கள் போற்றப்படுகின்றன.ஆனால் இவரது கட்டண வசூலைக் கருத்தில் கொள்ளும்போது எள்ளளவுக்கும் இவருக்கு அவதாரங்களோடு தொடர்பில்லை என்பது தெளிவாகின்றது.

உள்ளம் உருகில் உடனாவர் என்று சைவ சித்தாந்த நூல் திருவுந்தியார் கூறுகின்றது. உள்ளக் கமலமே உத்தமனார் வேண்டுவது என்றார் விபுலானந்த சுவாமி. மலர்மிசை ஏகினான் என்றார் வள்ளுவர்.கடவுளுக்கு வேண்டியது மலர்போன்ற உள்ளம் ஒன்றே; கடவுள் என்று பிரகடனப்படுத்திய இவரோ 25,000 ருபாயை சிறப்புத் தரிசனத்துக்கு வசூலிக்கிறார் என்றால் வசூல்ராஜாக் கடவுள்தான் இவர்!!!!

கல்கியைவிட சாயிபாபாவுக்கு பக்தர்களும் "மவுசும்" அதிகம் எனலாம். சாயி பாபாவைப் பற்றி புகார்களை பிரித்தானிய வானொலி சேவையகம்- பிபிசி வெளியிட்டிருந்தமையும் டில்லி அமெரிக்க தூதரகம் தனது நாட்டவர்களுக்கு இவர்பற்றி அவதானமாக இருக்கும்படி எச்சரித்திருந்ததும் இவர்பற்றிய ஐயத்தை ஊட்டியுள்ளது ஒருப்பக்கம் இருக்கட்டும். கிருஷ்தவர்கள் இவரைப் பின்பற்றுவதாலும் இவரை சார்ந்துள்ளோரை மதம்மாற்ற முடியாது மிசனரிகள் பாடும்பாடாலும் எழுந்த வதந்திகளாக இவையிருக்கக்கூடும்!


ஆனால், இவரது பிறப்புக்கு அற்புதக்கதை கூறப்பட்டாலும் அது அவரது சுயசரிதையாக இருப்பதையே அறியக்கூடியதாகவே உள்ளது.

திருநீறையும் தங்க நகைகளையும் கையைச் சுழற்றி வித்தைக்காட்டி வரவைப்பவர் ஏன் பெரிய பெரிய பொருட்களை வரவைப்பதில்லை?
இலிங்கத்தை வாய்க்குள் இருந்து எடுக்கும் இவர் பாம்புகளை எடுத்து வித்தைகாட்டினால் கொஞ்சம் ஆச்சரியப்பட நியாயமுண்டு!


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


கண்ணன் தன்னை நம்பிய கோபியரை கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தார் என்று கண்ணன் கதைகள் கண்ணன் பெருமைகளைக் கூற, இவரோ தங்கச் சங்கிலி(ஆபரணம்) வரவைப்பதுடன் நிறுத்திக் கொண்டது ஏன்? சுனாமியைத் தடுக்காதது ஏன்? ஈழ யுத்த அழிவை தடுக்காதது ஏன்? நடமாடும் கடவுளாயிற்றே?

இவரே இராமன், இவரே கிருஷ்ணன், இவரே சிவன், இவரே அல்லா, இவரே இயேசு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்; அல்லது பிரகடனப்படுத்தியுள்ளார். போதாக்குறைக்கு சீரடி பாபாவும் இவரே என்று கூறியும் உள்ளார்.


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


இராமனாக இருக்கட்டும்! கண்ணனாக இருக்கட்டும்! அற்புதங்கள் வெறும் "மஜிக்மான்" செய்வதுபோன்ற ஆபரணங்கள் எடுக்கும் வித்தைகளை செய்யட்டும்! அதுபற்றி கவலையில்லை! ஆனால் பிறவாத, கருவறையில் உருண்டு பிரண்ட கதையில்லாத சிவனும் இவரே என்று கதையளப்பது அத்வைத சுமார்த்தம் இவரை வருடிவிடுவதை புலனாக்குகின்றது. ஆதிசங்கரருக்கு கட்டி எடுபடாதுபோன கதையை இப்போது திரைமறைவிலிருந்து சாயிபாபாவுக்கு கட்டிவிட்டுள்ளது.

"சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை" (5)


"அவனை ஒழிய அமரரும் இல்லை " (6)
'தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்" (7)

என்கிறது திருமந்திரம். சிவனைவிட மேம்பட்ட அமரர்கள் எவரும் இலர் என்பதையும் சிவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இலர் என்பதையும் திருமந்திரம் வலியுறுத்தியிருக்க;

"பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்" (25)

பிறப்பிலி இறப்பிலி என்று சிவனைப் போற்றியிருக்க;

பிறந்து மூப்பு,நரை, தோல் சுருக்கம் என்று அத்தனையும் அமைந்த இரத்தமும் சதையும் கூடிய உடலை அந்த உடலினுள் உள்ள குடலினுள் புழுக்களையெல்லாம் சுமக்கும் ஒருவரை மலம்,சலம் என்று இயற்கை உபாதைகள் என்று அத்தனையும் கொண்ட ஒருவரை பிறந்தான் வளர்ந்தான் சாமதியானான் என்று வரலாறு இல்லாத சிவனோடு ஒப்பிடுவதும் சிவனென்றே சொல்வதும் கிஞ்சித்தும் ஏற்கமுடியாத வொன்று.

திருமால் பிருகு முனிவரின் மனைவியை அடைய விரும்பியதால் பிருகுமுனிவர் "சிவனைத் தவிர வேறு தெய்வம் தொழுது அறியேன் என்பது உண்மையானால் திருமாலுக்கு பத்துப்பிறவிகள் உண்டாகட்டும்" என்று சாபமிட்டதன் விளைவே திருமாலுக்கு பத்து அவதாரங்கள் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. எனவே மாலன் அயன் அறியாத பரமனை தானே என்றும் பின்னர் மால் எடுத்த பத்து அவதாரங்களும் தானே என்றும் பாபாவைச் சொல்லவைத்தது சுமார்த்தம். சொல்லும் அளவுக்கு வளர்த்து விட்டதும் சுமார்த்தம்

அடுத்து நித்தியானந்தா........?

சந்தி சிரிக்கும் அளவுக்கு சுமார்த்த ஊடகம் வளர்த்துவிட்ட நித்தியானந்தா நடிகையோடு நடத்தும் மஞ்சப் போர் இணையத்தில் உலாவுவது இந்துசமயத்தவரை தலைகுனிய வைத்துவிட்டது என்று பலர் வாடிப்போய்யுள்ளனர்.ஆனால் உண்மையில் வாடிப்போய்யுள்ளவர்கள் சுமார்த்த முகவர்களே!!!!

தாம் வளர்த்துவிட்ட ஒருவரின் அந்தரங்க கூத்து ஊரெங்கும் உலாவருவதால் வாடிப்போய்யுள்ளனர். சைவர்களும் சுமார்த்த இந்துவை உணராது அறியாமையில் தலைகுனிந்துவிட்டனர். இந்த அறியாமையை சுமார்த்தம் இந்து என்ற போர்வையில் இத்தனைகாலமும் சைவர்களுக்கு ஊட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்!
பக்தர்களின் முகத்தை அவர்களின் நன்மைகருதி மறைத்துள்ளேன்.


இந்த நித்தியானந்தா யார்? சுமார்த்த அத்வைதத்தை இந்துமதம் என்று போதிக்க சுமார்த்த சங்கராச்சாரியார்களின் ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஆசாமி!!!! இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனார்.

இந்த நித்தியானந்தா சிவனே முழுமுதற் பொருள் என்றுணர்ந்து சிவபூசை செய்தாரா? சைவ சமயத்தை ஒழுகினாரா? இவரது வண்டவாளம் தண்டவாளங்கள் ஊரறிய உலகறிய இணையமெங்கும் தொலைகாட்சி செய்தியெங்கும் உலாவருவதைக் கண்டு நாம் தலைகுனிவதற்கு?


"நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே"
                                - சிவஞான சித்தியார்

சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது
                               -சிவஞான சித்தியார்

மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம் என்றும் சைவமாம் சமயத்தை ஒழுகுவது நல்லூழ் தரும் பயன் என்றும் மேலே உள்ள பாடல்கள் உணர்த்துகின்றன.

"நான் கடவுள்" என்று ஒன்றுக்கு பலர் கதைவிட யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று கலங்குவதைவிட மானிடரை கடவுளாக மாற்றும் சுமார்த்த அத்வைத இந்துத்துவாவை உதாசீனஞ்செய்து, சிவாகமவழி நின்று, சிவாலய தரிசனம், சிவபூசை என்று உயர்வழியில் ஒழுகுவதே உத்தமமானது.உயர்வை அளிப்பது.


போலிகள் பெருக்கெடுக்க வைக்கப்பட்டுள்ளனவேயொழிய தானாக பெருகவில்லை என்பதை உணருங்கள்! இந்த மானிடருக்கு தம்மைக் காக்கவே வழிதெரியவில்லை........எம்மைக் காப்பது எப்படி? எனவே, மனிதர்களை கடவுளாக்கி உலாவரவிட்டுள்ள சங்கரபீட சுமார்த்த அத்வைத இந்துமத வலைப்பின்னலை உணர்ந்து, அவற்றுள் மூழ்காது; உன்னத சைவநெறியின்பால் நின்று உய்வடைவதே உயர்ந்த மார்க்கமாகும்.
 
"மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகமெலாம்"
மேலும் படிக்க...

Thursday, February 11, 2010

சிவராத்திரி விரதம் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? (இரண்டாம் பாகம்)

"சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? " கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி எழுதியது.

கடந்த வீரகேசரி வாரவெளியீட்டின் கலைக்கேசரிப் பகுதியில்சிவராத்திரி சௌரமான முறையில் அனுட்டிப்பதே நியதியானது என்ற அடிப்படையில் ஏனைய சைவ ஆகமங்களைச் சுட்டிக்காட்டி விளக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. சிவாகமங்கள் என்பன சிவனின் வாக்காகக் கொள்ளப்படுகின்றன. காமிக ஆகமத்தில் மகாமாதத்தில் சிவராத்திரி அனுட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மகாமாதம் என்பது சௌரமான அடிப்படையிலான கும்பமாதமா(மாசி) அன்றி சாத்திரமான அடிப்படையிலான சாத்திரமாதமா என்று பெருங்குழப்பம் இரு பஞ்சாங்கத்தாராலும் சைவ சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சாத்திரமாத கணிப்பில் மாகமாசம் என்பதற்கு வேறு பெயர் எதுவும் இல்லை. சௌரமான கணிப்பில் கும்பமாதம் என்று உண்டு. இதையே மாசி என்போம். எனவே, தனியே காமிக ஆகமத்தைக் கருத்தில் கொள்ளும்போது சாத்திரமாதமே என்றே பொருள்படுகின்றது. இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரால் எழுதிப் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் ஏனைய ஆகமங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கையாண்டு விளக்கவில்லை. எனவே, காமிக ஆகமத்தை கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாள் என்று கட்டுரை பிரசுரித்திருந்தேன். எனினும் ஆத்திசூடியில் சொல்லப்பட்டுள்ள 'தூக்கி வினை செய்" என்றமைக்கு அமைவாக, ஆராய்ந்து பார்க்கும்போது ஏனைய சைவ ஆகமங்கள் திட்டவட்டமாக சிவராத்திரி விரதம் சௌரமான அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று என்று வரையறுத்து உள்ளமையால், காமிக ஆகமம் சொல்லும் மாகமாதம் கும்பமாதம்  என்றே கொள்ளவேண்டியுள்ளது.

சிவபெருமானின் வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய சூட்சம ஆகமம், ஈசான முகத்திலிருந்து தோன்றிய புரோத்கீத ஆகமம்,சத்யோசாதத்திலிருந்து தோன்றிய காரண ஆகமம் என்பன தெளிவாக கும்பமாதமே மாகமாதம் என்று வரையறுக்கின்றது. எனவே, இறைவனின் சத்யோசாத முகத்திலிருந்து தோன்றிய காமிக ஆகமமும் ஏனைய கந்தபுராணம் போன்றனவும் கூறும் மகாமாதம் என்பது கும்பமாதம் எனக்கொள்வதில் தவறில்லை.

சாத்திரமான கணிப்பை ஆதரிப்போர், காமிக ஆகமத்தில் சௌரமானதா அன்றி சாத்திரமானதா என எதுவும் கூறப்படாமையினாலும் ஏனைய காமிகத்துக்கு பிற்காலத்தில் கிடைத்த சைவாகமங்கள் சௌரமென்று வலிந்துரைப்பதாலும், பிற்சேர்க்கையாக இருக்க ஏதுவுண்டு என்று  சாதிக்கின்றனர்.

இன்று மூவாயிரம் பாடல்கள் உள்ளதாகக் கூறப்படுகின்ற திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்து ஏழு பாடல்களைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 47 பாடல்கள் பிற்சேர்க்கையே! எனவே பிற்சேர்க்கை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய வாதமாகவேபடுகின்றது எனினும்
ஆனாலும் ஏனைய எல்லா ஆகமங்களிலும் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டுள்ளதால், பிற்சேர்க்கையாக காட்டமுடியாது. மாகமாதம் என்பதைத்தவிர வேறு எப்பெயருமே சாத்திரமானக் கணிப்பீட்டுக்கு இல்லாமை அவர்களுடைய வாதத்துக்கு ஆதரமாக  உள்ளது. மாகமாதம் என்பது சாத்திரமானதுக்குரிய மாகமாதமா அன்றி சௌரமானதுக்குரிய கும்பமாதமா என்று குழப்பம் நிலவியமையால், எம்பெருமானால் சௌரமான கும்பமே காமிகத்தில் தாம் குறிப்பிட்ட மாகமாதம் என்பதை தெளிவுபடுத்த ஏனைய சைவாகமங்களை பூவுலகுக்கு அளித்தார் என்று கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிவபெருமானாலேயே சைவாகமங்கள் படைக்கப்பட்டதாக சைவமக்கள் போற்றுவர்.எனவே சைவாகமங்களின் சாரம் என்று கருதும்போது சௌரமான கணிப்பீடே சிவராத்திரிக்கு ஏற்றது என்றாகின்றது.

இ.வெங்கடேச ஐயர் எடுத்துக்காட்டுகளாக கையாண்ட ஆவணிச் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற விரதங்கள் சாத்திரமான முறையிலேயே கணிக்கப்படுகின்றன. இவ்விரதங்கள் சௌரமானமுறையில் ஒழுகவேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உத்தராயணக் காலப்பகுதி விரதங்கள் சௌரமான முறையில் கணித்தல் வேண்டும் என்று உள்ளது. எனவே உத்தராயணக் காலப்பகுதிக்குள் (தை-ஆனி) வராத ஆவணிச் சதுர்த்தி,நவராத்திரி என்பன சாத்திரமானமுறையில் கணிக்கப்படுகின்றன. எனவேதான் இங்கு எந்தவிதமான சிக்கல்களும் எழவில்லை. இவற்றுக்கு கடந்த எனது கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள கோட்டுப்படங்களின் விளக்கங்களே பொருந்தும் .


முன்னைய காலத்தில் இதுபோல் சர்ச்சை எழுந்தபோது திருவாவடுதுறை ஆதீன முதல்வர் பல ஆகம விற்பனர்களை அழைத்து கருத்தறிந்து சௌரமான முறையே உகந்தது என்று வலியுறுத்தியுள்ளார். எனவே சௌரமான முறைப்படி ஒழுகுவதில் தவறு இல்லையென்றே வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனினும் பெரும்பாலான சைவ ஆலயங்கள் தமிழகத்தில் பெப்பிரவரி 12ஐ அனுட்டிக்கின்றன. காமிக ஆகமத்தை முதன்மையாய்க் கொண்டு ஆச்சார அனுட்டானங்களையும் பூசைகளையும் பேணும் ஆலயங்களுக்கு காமிகமே முதன்மையானது. எனவே, இவ்வாலயங்கள் காமிகத்தைத் தாண்டி ஏனைய சைவ ஆகமக் கருத்துகளை அனுசரிப்பதில் சிரத்தை கொள்வதில்லை. இதுவே இவ்வண்ணம் பெப்பிரவரி 12ஐ சிவராத்திரியாக அனுட்டிப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

கட்டுரையாளர்கள் தமது கருத்தை வலியுறுத்துவதையே நோக்காகக் கொண்டு கட்டுரை எழுதுவதால் சமூகத்துக்கு முழுமையாக கருத்துகளை தெரிவிப்பதில்லை.தமது கருத்துகளை ஆதரிக்கும் விடயங்களை அலசிவிட்டு, ஏனையவற்றை கைவிட்டு விடுவர். ஆனால் சிறியேன், சைவ சமூகத்துக்கு சிறந்த ஊடக வழிகாட்டல் இல்லாமையினை உணர்ந்து எனது கருத்துகளை வழங்குவது என்பதைவிட சைவச் சான்றோர்களின் கருத்துகள் அடிப்படையில் சாலச் சிறந்த கருத்துகளை வழங்குவதையே நோக்காகக் கொண்டு; எழுதிவருவதை தொண்டாகக் கொண்டிருப்பதாலேயே, எனது கடந்த பதிவில் இ.வெங்கடேச ஐயர் எழுதிய கருத்துகளை வைத்து விளக்கம் பெற்று, அதை சைவ சமூகம் விளங்கிக் கொள்ளமுடியாமையைக் கண்டு, அவருடைய கட்டுரைக்கு அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் விளக்கி பெப்பிரவரி 12ம் நாள் மிக உகந்தது என்று பொருள்பட எழுதியிருந்தேன். குறித்த பதிவில் இதை தெளிவுபட உரைத்தும் இருந்தேன். ஆனால் வீரகேசரி வாரவெளியீட்டு கட்டுரையை அவர்களின் இணையத்தளத்தில் வாசித்தைக் கருத்தில் எடுத்து சீர்தூக்கிப் பார்க்கையில் மார்ச்சு 13ம்நாள் சாலச் சிறந்ததாகப்படுகின்றது.

வீரகேசரி வாரவெளியீட்டுக் கட்டுரையில் சிவராத்திரி நிர்ணயம் என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளனர். அதற்கு முன்னர் சௌரமான முறையே உகந்தது என்று கருத்து வெளியிட்ட எந்த சைவ அமைப்புகளுமாயினும் சரி, சைவ ஆலயங்களாயினும் சரி, சைவ அறிஞர்களாயினும் சரி, காரணமாக "திருவண்ணாமலை,சிதம்பரம் என்பன மார்ச் 13ம் நாள் அனுட்டிக்கின்றன" என்று கூறினரே ஒழிய எந்தவிதமான விளக்கத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் பெப்பிரவரி 12ம் நாள் உகந்தது என்று பரவலாக பலர் விளக்கம் கொடுத்திருந்தனர். ஞானசம்பந்த சிவாச்சாரியார், இ.வெங்கடேச ஐயர் போன்றோரின் விளக்கங்கள் இணையங்கள் ஊடாக இலகுவாக கிடைக்கக்கூடியனவாக இருந்தன. எனவே, நான் பல சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்தப் பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை" என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஒருசில அமைப்புகள் இரண்டில் ஒருநாளை முன்வைத்தனவே தவிர, அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. இதனாலேயே, பெப்பிரவரி 12ம் நாளை வலியுறுத்தி கட்டுரை வரைய வேண்டியதாயிற்று.

எளியேன் இங்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இங்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அதேநேரத்தில்,சைவ ஆகமங்களில் காமிக ஆகமத்தை மட்டும் கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாளில் சிவராத்திரியை பல சைவ ஆலயங்கள் அனுட்டிப்பதால், இந்நாளில் அனுட்டித்தால் பலனில்லை என்று சாத்திரமான கணிப்பீட்டை ஏற்றவர்களை பயமுறுத்துவதில் உடன்பாடில்லை. நாளும் கோளும் சிவனடியாருக்கு தீதில்லை என்பது ஞானக் குழந்தையின் வாக்கு. மேலும் காலனை அழித்து மார்க்கண்டேயரின் காலத்தை மாற்றியவர் காலனுக்கே காலனாகிய எம்பெருமான். அவர் இடப்பாகம் எழுந்தருளியுள்ள அம்மை, அபிராமிப்பட்டருக்காய் அமாவாசையை பௌர்ணமியாக்கி அருள்பாலித்தவள். காலனுக்கு காலனாகிய அமிர்தகடேசுவரத்தில் அமிர்தகடேசுவருடன் இடப்பாகம் கொண்டு இருப்பதால் அமிர்தகடேசுவரியாக உடனாய அம்மைக்கு முடியாதது என்ன உண்டு? எனவே, இங்கு இறை நம்பிக்கையே தலையாயது. சாத்திரமானதோ சௌரமானதோ.......நம்பினோர் கைவிடப் படார்.

வீரகேசரிக்குரிய தொடுப்பு:- வீரகேசரி
http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=16

எம் கடன் பணி செய்து கிடப்பதே

சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Thursday, February 4, 2010

சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன?

விரதங்களில் தலைசிறந்தது சிவராத்திரி விரதமாகும். முழுமுதற் பொருளை மனம் முழுதும் தியானித்தபடி நோற்கும் விரதமே சிவராத்திரி விரதமாகும்.
"எட்டுணையும் உளத்து அன்பிலரேனும்
உளரேனும் இந்நாள் எம்மை
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர்
நற்கதி அடைவர்"
என்று வரதபண்டிதரின் சிவராத்திரி புராணத்தில் சிவன் வாக்காக காணப்படுவது சிவராத்திரி விரத மகிமைக்கு தக்க சான்றாகும். உள்ளத்திலே எள்ளளவுக்கேனும் அன்பில்லாதவர்களாயினும் சரி, அன்புடையோராயினும் சரி, சிவராத்திரி விரத நாளில் சிவபெருமானைத் தரிசிப்பவர்,விரதம் இருப்பவர்,பூசை செய்பவர் யாவருக்கும் நற்கதி ஏற்படும் என்ற சிவன் வாக்கையே வரதபண்டிதர் நற்றமிழில் யாத்த சிவராத்திரி புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

இத்தகு சிறப்புடைய சிவராத்திரி விரதத்தை இம்முறை அனுட்டிப்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்முறை மகாசிவராத்திரி விரதமானது பெப்பிரவரி 12ம் நாள் அன்றா அன்றி மார்ச்சு 13ம் நாள் அன்றா என்பதே அனுட்டிப்பதில் ஏற்பட்டுள்ள பெருங்குழப்பமாகும்.

இங்கு சாத்திரமான அடிப்படையில் நோக்குவதா அல்லது சௌரமான (சூரியனின் பாதை) அடிப்படையில் நோக்குவதா பொருத்தம் என்ற வாதப்பிரதிவாதங்களே சிவராத்திரி நோன்பு பெப்பிரவரி 12ம் நாளா அன்றி மார்ச்சு 13ம் நாளா என்ற குழப்பத்தை உருவாக்கிற்று. இதுவரைகாலும் சாத்திரமான அடிப்படையும் சௌரமான அடிப்படையும் பொருத்தி வந்தமையால் இந்தக் குழப்பமேதும் உருவாகியிருக்கவில்லை.
 ஆந்திரமாநில சித்தூரைச் சேர்ந்த டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாள் அன்றே சிவராத்திரியை அனுட்டிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியமை தினமலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணிக்கும் இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரும் வலைப்பூவில் பெப்பிரவரி 12ம் நாளே சிவராத்திரிக்கு உகந்தது என்று விளக்கியுள்ளார்.

டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாளே உகந்தது என்று பின்வருமாறு விளக்கியுள்ளார்.

"இந்தாண்டு, விரோதி என்ற பெயருக்குத் தக்கபடி, பல மாற்றங்கள் உள்ளன. பூணூல் அணியும் சடங்கான உபா கர்மா, முன்னோர்க்கு சடங்கு செய்யும் சிராத்தம், சிவராத்திரி ஆகியவை, அமாவாசை வரும் மாதங்களில் தான் செய்ய வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் அமாவாசை சிராத்த திதியே வரவில்லை. எனவே, ஐப்பசி 30ம் தேதியே செய்ய வேண்டி இருந்தது. தீபாவளி கொண்டாடும் மாதத்தில் இரண்டு அமாவாசை நேரக் கூடாது என்பதால், இரண்டு அமாவாசை கொண்ட ஐப்பசி மாதத்தை விடுத்து, புரட்டாசியில் கொண்டாடினோம்.
மகா சிவராத்திரி அனுஷ்டிப்பதற்கு தனி விதி உள்ளது. ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயர் தான், மாதத்தின் பெயராக அமைகிறது. சம்ஸ்கிருதத்தில், இதற்கான பெயரைப் பார்த்தால், இது தெளிவாகும். இந்தக் கணக்குப்படி, சில நேரங்களில், ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை ஏற்படுகிறது; அதற்கு முந்தைய இரண்டு தினங்களான, த்ரயோதசியும், சதுர்த்தசியும், மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில், சம கால அளவில் ஏற்படுகின்றன. அது போன்ற காலங்களில், மாதக் கடைசி நாள் அன்றே, சிவராத்திரி கொண்டாட வேண்டும்.
மாதத்தின் முதலிலோ அல்லது கடைசியிலோ, த்ரயோதசி - சதுர்த்தசி அல்லது சதுர்த்தசி - அமாவாசை வந்தால், எந்த இரவில் சதுர்த்தசி அதிகமாக உள்ளதோ, அன்று தான் மகா சிவராத்திரி கொண்டாட வேண்டும். மகாசிவராத்திரி காலம் என்று அழைக்கப்படுவது, இரவு 9 மணிக்கு மேல், அதிகாலை 3 மணி வரையிலான, ஆறு காலங்கள் தான். ஒரு காலத்திற்கு, ஒன்றரை மணி நேரம் என்ற கணக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள விதிப்படி பார்த்தாலும், கோகுலாஷ்டமியிலிருந்து 184வது நாள், மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற விதிப்படியும், வரும் பிப்., 12ம் தேதி தான், மகா சிவராத்திரி ஏற்படுகிறது என்பதை அறிந்த கொள்ளலாம்.
வரும் மார்ச் 13ம் தேதி, மகாசிவராத்திரி ஏன் கொண்டாடப்படக் கூடாது என்பதற்கான விளக்கமும் உண்டு. அன்றைய தினம், மாசி 29ம் தேதி, சனிக்கிழமை ஏற்படும் சதுர்த்தசி திதியை விட, அடுத்த நாள் ஞாயிறு அன்று, 11 வினாடிகள், சதுர்த்தசி திதி அதிகமாக உள்ளது என்று கூறினாலும், அன்றைய தினம், "மீன சங்க்ரமண தோஷம்' உள்ளது. எனவே, அந்த இரண்டு தேதிகளிலுமே, மகா சிவராத்திரி கொண்டாட முடியாது.
சிவராத்திரி முதல் காலத்தில், த்ரயோதசியும், சதுர்த்தசியும் கலப்பது, உத்தமத்தில் மத்திமம்; இரண்டாம் காலத்தில், திரயோதசி -சதுர்த்தசி, ஆரம்பத்தில் கலப்பது, உத்தமத்தில் அதமம் என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே, இவ்வாண்டு, தை மாதமே, கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கப்படி, 12.2.10 அன்றே, மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்."

காமிக ஆகமம், குமார தந்திரம், கந்தபுராணம் என்று சிவராத்திரி பூசைவிதிகளை விரித்துரைக்கும் நூல்கள் மாகமாதத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்தசி திதி கூடுகின்ற இரவே சிவராத்திரி நோன்புக்கு உகந்தநாள் என்று கூறுகின்றன. இந்த மகாமாதம் என்பது எந்த மாதம் என்பதே இன்று சிவராத்திரி விரதநாளை அனுட்டிப்பதில் ஏற்பட்ட சர்சைகளுக்கு வித்திட்டுள்ளது. சாத்திரமானம் மற்றும் சௌரமானம் (சூரியனின் அடிப்படையில் கணிப்பது) என்று இருபிரிவினருக்குள் இந்த மாகமாதத்தை புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சர்சைகளே யாவற்றுக்கும் காரணமாயிற்று.

சௌரமானப்படி மாசிமாதம் கும்பம் எனப்படும். மகாமாதம் என்பது தைக்கும் மாசிக்கும் இடையில் வருவது. அதாவது மகரத்துக்கும்(தைக்கும்) கும்பத்துக்கும்(மாசிக்கும்) இடையில் வருவது. ஆனால் மாசிமாதமே மகாமாதம் என்ற கருத்துப்பிறழ்வு இப்பிரச்சினைகளுக்கு ஏதுவாயிற்று.


மகாமாதத்தின் நடுப்பகுதியில் இருந்து முடிவுவரை கும்பமாதமாகிய மாசியில் அமையும். எனவே இக்காலப்பகுதியிலேயே நாம் சிவராத்திரிக்குரிய சதுர்த்தசி திதி அமைவதால் நாம் சிவராத்திரி மாசிமாதம் வரும்விரதம் என்று மனதில் பதியவைத்துள்ளோம்.
தை முதலாம் திகதி சனவரி 14இல் வரும் என்று கட்டாயம் ஏதுமில்லை.ஆனால் அது பொதுவாக அப்படி அமைவதால் எம்மில்பலர் சனவரி 14 அன்றுதான் தைப் பொங்கல் என்போம். சிலசமயம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சனவரி 14இல் இருந்து குறைந்துகூட வாய்ப்புண்டு. அதுபோல்த்தான் இம்முறை தை 30ம் நாள் அதாவது பெப்பிரவரி 12ம் நாள் சிவராத்திரி விரதம் அமைந்திருப்பதால் "என்ன மாசியில் வரவில்லையே?" என்று குழம்பிவிட்டோம். எனவே மாசியில் வரும்படி மார்ச்சு 13 அன்று திதி அமைவதால் அந்நாளை சிவராத்திரியாக அனுட்டிக்க முனைந்துள்ளோம்.

இங்கு சௌரமானப்படி கணிப்பவர் காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசைவிதிகளை விதந்துரைக்கும் மகாமாதம் மாசிமாதம் என்றே கருதுகின்றனர்.

யாழ்ப்பாணத்து இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க மரபுவழி கணிப்பாளர் இ.வெங்கடேச ஐயர் மகாமாதம் என்பது " மகர சங்கிராந்திக்குப் (தைப்பொங்கல்) பின் முடிந்த அமாவாசை கழித்த பிரதமை முதலாக, கும்ப சங்கிராந்திக்குப் (கும்ப மாதமாகிய மாசிமாதம்) பின் முடிந்த இறுதியாகவுள்ள காலமே மாகமாசம்" என்று தெளிவுபடுத்துகின்றார். இது சாத்திரமானக் கணிப்புப்படியாகும்.


"விரோதி வருடத்தில் வரும் (2009-2010) மாக மாதமானது தைமாதம் 3ம் திகதி (16.01.2010) சனிக்கிழமை ஆரம்பமாகி மாசி மாதம் 2ம் திகதி (14.02.2010) ஞாயிற்றுக்கிழமை முடிவடைகின்றது. அமைவாசைக்கு முதற்தினம் வரும் சதுர்த்தசியே மஹாசிவராத்திரி எனும் விதிப்படி, விரோதி வருடம் தை மாதம் 30 திகதி (12.02.2010) வெள்ளிக்கிழமையே சிவராத்திரி விரதமாகும்" என்று வெ.வெங்கடேச ஐயர் மேலும் விளக்குகின்றார்.

காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசையை விரித்துரைக்கும் நூல்கள் குறிப்பிடும் மகாமாதம் சௌரமானக் கணிப்பின்படியான கும்பமாதமாகிய மாசிமாதம் அல்ல என்றும் இது பொதுவாக தை-மாசியில் அமையும் சாத்திரமான மாதம் என்றும் இ.வெக்கடேச ஐயர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கியுள்ளார்.
எனினும் சாத்திரநூலை நன்குணர்ந்தவர்களே இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், எனது மொழிநடையில் அவரது கருத்துகளை இங்கு பகிருகின்றேன். இங்கு கோட்டுப்படங்களை இணைத்துள்ளேன்.இவை சாத்திரமான மாதங்களையும் சௌரமான மாதங்களையும் (தை,மாசி,பங்குனி......) அடையாளங்கண்டு விளங்கிக் கொள்ள உதவும் என நினைக்கிறேன்.

ஆவணிச் சதுர்த்தி என்று நாம் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் அமைகின்றமையையும் புரட்டாசியில் அனுட்டிக்கும் நவராத்திரி சிலசமயம் புரட்டாசி-ஐப்பசியாகிய இருமாதங்களையும் கொண்டதாகவும் அரிதானசமயங்களில் ஐப்பசியில்மட்டுமே நவராத்திரி விரதநாட்கள் அமைவதையும் இ.வெங்கடேச ஐயர் சுட்டி விளக்கியுள்ளார்.


இவ்வாறு மாதங்கள் சிலவேளைகளில் மாறுவது ஏன்? கோட்டுப்படங்களை நன்கு பார்க்க. யாவும் புரியும்.


பாத்திரபத பூர்வபச சதுர்தசியே விநாயகர் சதுர்தசியாகும். பாத்திரபத மாதம் சாத்திரமானப்படியான மாதமாகும். இது ஆவணியையும் புரட்டாதியையும் கொண்டிருக்கும். தைமாதம் எப்படி சனவரியையும் பெப்பிரவரியையும் கொண்டிருக்குமோ அதுபோல்த்தான். எனவே, அமாவாசை ஆவணிமாதத்தின் நடுப்பகுதியில் அதாவது பாத்திரபத மாதத்தின் தொடக்கத்தில் அமையும்போது பூர்பபட்ச சதுர்தசி ஆவணிமாதத்துக்குள்ளேயே வந்து அமையும். ஆனால் சிலசமயம் அமாவாசை ஆவணிமாத இறுதியில் அமையும்போது பூர்வபட்ச சதுர்தசி புரட்டாதி மாதத்தின் ஆரம்பத்தில் அமையும். எனவே நாம் பொதுவாக ஆவணியில் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி விரதம் புரட்டாதியில் சிலவேளைகளில் அனுட்டிக்க வேண்டியேற்படுகின்றது.ஆனால் விதிப்படி எப்பிழையும் இல்லை.காரணம் பாத்திரபத மாதத்திலேயே நாம் விநாயகர்சதுர்தியை அனுட்டிக்கிறோம்.இவ்வாறுதான் இம்முறை சிவராத்திரிக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படம் மூலம் சாத்திரமானப்படியான மாத அமைப்பு எப்படி ஆவணி-புரட்டாசியை உள்ளடக்கிறது என்பதையும் ஏன் சிலசமயம் விநாயகர் சதுர்ததி புரட்டாதியில் வருகின்றது என்பதையும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.




மேற்சொன்ன கோட்டுப்படம் மூலம் விளங்கியிருக்குமானால் இனி சிவராத்திரி நாளை இலகுவாக உணர்ந்துகொள்வீர்.


காமிக ஆகமம் தொட்டு கந்தபுராணம்வரை கூறப்படுகின்ற மகாமாதம் தைமாதத்தின் கடைப்பகுதியையும் மாசிமாதத்தின் நடுப்பகுதிவரையாக காலத்தையும் கொண்டது. அமாவாசைக்கு முன்கூடுகின்ற சதுர்தசியே விரதநாள் ஆகும்.எனவே, அமாவாசையானது மகாமாதத்தின் இறுதிப்பகுதியில் வரும்போது அது மாசிமாதத்துள் அமைகின்றது.எனவே, மாசிமாததினுள்ளே நாம் சிவராத்திரி விரதநாளை அனுட்டிக்கின்றோம். இது வழமையாக நடைபெறும். ஆனால் இம்முறை மகாமாத முதற்பகுதியில் அமாவாசை வருவதால் சிவராத்திரி விரதம் தைமாதம் அனுட்டிக்க வேண்டியதாகிறது. தையின் இறுதிக்காலமும் மாசியின் நடுக்காலம் வரையும் மகாமாதத்துள் அமைவதால் ஆகமவிதிப்படி பிழை எதுவும் இங்கு இல்லை.

ஆனால் மாசியின் இறுதிப்பகுதியில்(30ம் நாள்) வரும் (ஆங்கிலத்திற்கு மார்ச்சு 13) சிவராத்திரி நாளோ அன்றி அதற்கு ஆதரமான அமாவாசையோ மகாமாதத்துள் வரவில்லை.அது மகாமாதத்துக்கு அடுத்த மாதத்தை சேர்ந்ததாகிவிட்டது. இங்கு சௌரமான அடிப்படையில் கணிப்போர் மகாமாதம் என்று ஆகமம் சொல்வது மாசியே என்று வாதிடுகின்றனர்.அப்படியானால் விநாயகர் சதுர்த்தி விரதம் (பாத்திரபத மாதம்), நவராத்திரி விரதம் (ஆஸ்வீஜ மாதம்) என்பனவற்றுக்கு சாத்திரநூல்கள் கூறும் மாதங்கள் சாத்திரமானமாதங்கள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சிவராத்திரிக்குமட்டும் மகாமாதம் என்பது மாசியென்று பிடிவாதம் பிடிக்கின்றனரோ?

மாசிக்கு கும்பம் என்று சௌரமானத்தின்படி தனிப்பெயர் இருக்க, ஆகமங்கள் மகாமதம் என்று சுட்டுவதால் மகாமதம் ஒருக்காலும் மாசியாகாது. அது தையையும் மாசியையும் கொண்ட சாத்திரமான மாதம் என்பது வெள்ளிடைமலை.
இலங்கையில் இருந்து எழுதுபவர் ஒருவர் இரகுநாதையர் வழிவந்தோர் இப்போது பலவருடங்களாக கணிப்பதில் பிழைவிடுகின்றனர் என்று காரசாரமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளை மதித்தே ஆகவேண்டும். அவர் பிழைகளை சுட்டி சைவசமூகத்துக்கு பணியாற்றிவரும் அன்பர். அதுபோல் பிழைகள் நேரும்போது அவற்றைத் திருத்தவேண்டியது கடமையாகும்.நக்கீரர் நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது சும்மாவா என்ன? ஆனால் தமிழகத்து வாக்கியக் கணிபாளர்கள் இரகுநாதையர் வழிவந்தோரிடம் கேட்டா கணிப்பவர்கள்? அவர்களும் இம்முறை பெப்பிரவரி 12ம் நாள் என்றே கணித்துள்ளனர். பிழைவிட்டார்கள் என்ற மந்திரத்தினூடாக சரியைப் பிழையாகக் காட்டக்கூடாது.



சிதம்பரம்,திருவண்ணாமலை போன்ற சிவாலயங்கள் வழியே சரி என்ற வாதமும் ஏற்புடையதல்ல.நாவலர் பெருமான் சிதம்பர அந்தணர்கள் ஆகமவழி நிற்காமையை கண்டித்திருக்கிறார். எனவே அவர்வழி வந்த ஈழவள நாட்டில் சிதம்பரம் செய்தால் சரி என்ற கொள்கை அபத்தம்!!!  சிதம்பரத்தில் ஓதுவாருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை அடிப்படையாகக் கொண்டு நாமும் அவமானப்படுத்தலாமா என்ன? நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது இங்கும் பொருந்தும்!

"தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே "என்று அப்பரடிகள் சிவபெருமானைப் துதித்துப்பாடுகின்றார். எனவே, சாத்திரமான அடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பை ஆதரிப்பதே சைவப் பெருமக்களுக்கு அழகுடையதாகும்.


மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்டிருந்த 16 வயது என்னும் காலக் கெடுவிலிருந்து காலனை உதைத்து காலனுக்கே காலனாகி மார்க்கண்டேயரைக் காத்தவர் எம்பெருமான். தை அமாவாசையை சுப்பிரமணிய பட்டராகிய அபிராமிப் பட்டருக்காக தனது காதிலிருந்த தோடகத்தை கழற்றி வானில்வீசி பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமியை இடப்பாக்கம் கொண்டவரே காலனுக்கு காலனாய் திருக்கடவூரில் அமிர்த்தகடேசுவராக எழுந்தருளியுள்ள எம் நாதன்.நாளும் கோளும் சிவனடியாருக்கு தீங்காக என்ற ஞானசம்பந்தக் குழந்தையின் அருள்வாக்கை மனதில் நிறுத்தின் நாளும் கோளும் சிவராத்திரி விரதக் கணிப்பில் ஏற்படுத்தும் சிக்கல்களை ஆராய்ந்து துயருரத்தேவையில்லை என்பது புலனாகும்.



எனவே, சைவப் பெருமக்களே, உங்களுக்கு அருகாமையில் உள்ள சைவாகம முறைக்கமைந்த சைவ ஆலயங்களில் சிவராத்திரி விரதநாள் அனுட்டிக்கப்படும்வேளை, நீங்கள் முழுமனதுடன் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க. பலன் முழுமையாய் உண்டு. உங்கள் மனதுக்கு ஈர்ப்புடைய சைவாகம ஆலயங்களில் சிவராத்திரி கடைப்பிடிக்கப்படும் நன்னாளில் மனதை சிவன்பால் செலுத்தி சிவராத்திரி நோன்பை நோற்குக. இங்கு, சிவராத்திரி விரதநாள் என்ற நம்பிக்கையுடன் மனதை சிவபெருமானின் திருவடிகளுடன் ஒன்றியிருக்கச் செய்வதுவே அடியார்கள் செய்யவேண்டிய கடமையாகும்.
மார்க்கண்டேயருக்கு காலனை அழித்து காலத்தை மாற்றியவர் அமிர்த்தகடேசுவராகிய திருக்கடவூர் எம்பெருமான். அதுபோல் அமாவாசையைப் பௌர்ணமியாக்கி அபிராமிப்பட்டரைக் காத்தருளிய தாய் அமிர்த்தகடேசுவரருடனாய அபிராமியம்மை.
எனவே, இறை நம்பிக்கையே முதலாவதும் அடிப்படையானதுமாகும்.  காலமும் நேரமும் இரண்டாம் பட்சம். சிவராத்திரி காலம் எவ்வளவு மகிமையுடையது என்பதை பல்வேறுகதைகளினூடாக எடுத்துக்கூறப்பட்டிருப்பினும், பூரணமான அன்புமிகுந்த பக்தி காலத்தையே மாற்றி இறையருளை ஊட்டும் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் மார்க்கண்டேயர் கதைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...