"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, April 10, 2009

திருநீறு அணியும் இலக்கணம்

ஆறுமுகநாவலர் பெருமானை அறுபத்தி நான்காவது நாயனாராக ஈழவள மக்கள் கருதுவர். பெருமானார் ஆற்றிய சிவதொண்டுகள் ஏராளமாயினும் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய எழுத்துநடையில் உருவாக்கிய சைவவினா விடை தமிழ் உலகிற்கு கிட்டிய அரிய சொத்து எனலாம். இத்தகு பெருமையுடைய சைவவினா விடையில் இருந்து திருநீற்றுவியலை பதிவிடுகிறேன்.

திருச்சிற்றம்பலம்

திருநீற்று இயல்

1) சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு

2) திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

3 ) எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.

4 )திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

5) திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

6) திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

7). திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.

8). திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

கூடாது.

9). திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும் திருநீறு அணிய வேண்டும்.

10) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

11). கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

12). திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.

13). திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

14). முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

15). முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

16). மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

17). மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

18) முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

19) சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

20). அவைகளுண்டான வகை எப்படி?

பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

21). அதனை அணிவதானால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொத்த விபூதியை பசுவின்சாணத்தினால் விளைக்கவேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

22). கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.

23). அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

24). உபகற்ப விபூதியாவது யாது?

இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

25). விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

26). எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "திருநீறு அணியும் இலக்கணம்"

ஜகதீஸ்வரன் said...

திருநீறு அணியும் இலக்கணம்
படித்தவுடன் புரிந்தது திருநீரின் அருமை.
மேலும் பல இடுகைகள் இடுங்கள்.தொடரந்து படிக்க காத்திருக்கிறேன்.

சிவத்தமிழோன் said...

நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு. சிவனருள் எழுதத் தூண்டவும் எழுதச் சூழல் ஊட்டவும் துணை நிற்கட்டும்.

Unknown said...

10) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

என்றிர்கள், இன்னுமொரு கட்டுரையில் கோயிலில் ஆசாரியர்களை விழுந்து வணங்க கூடாது என்று படித்தேன். கோயிலில் ஆசாரியார் திருநீறு தரும் போது விழுந்து வணங்கி பெறுவதா அல்லது அது தவறானதா?

சிவத்தமிழோன் said...

திருக்கோயிலில் இறைவனைத் தவிர பிறரை வணங்குதல்,துதிசெய்தல்,முகஸ்துதி பாடல் தவறு. அந்தணரின் காலில் வீழ்ந்து வணங்குதல் கூட தவறே ஆகும்.எக்காரணம் கொண்டும் இறைவனைத் தவிர ஏனையோரை வீழ்ந்து வணங்குதல் கூடாது. அது அந்தணருக்கும் பாவத்தை ஊட்டும் செயலாகும். "நான்"என்னும் அகந்தையை அறிந்தோ அறியாதோ அவருள் ஊட்டிவிடும் பாவத்தை செய்தவராவோம்.

திருநீறை வாங்கும்போது இறைவனை வீழ்ந்து வணங்கி கும்பிட்டு வாங்குதல் வேண்டும்.ஆலயம் தவிர்ந்த ஏனைய ஆதீனங்கள் போன்றவற்றில் ஆதீன முதல்வரை வீழ்ந்து வணங்கி வாங்க வேண்டியது முறை. அங்கு அவர் சிவவடிவமே! அந்தணர் சிவயோகிகள் சிவனடியார்களையும் ஆலயம் தவிர்ந்த ஏனைய சூழலில் வீழ்ந்து வணங்கி பெற்றுக் கொள்வது அழகாகும். திருநீறை பயபக்தியுடன் அணிவதே முதன்மையானது.

ஆறுமுகநாவலரின் திருநீற்று இயலில் திருக்கோயில் தவிர்ந்த ஏனைய இடங்களில் பொதுவாக திருநீறை சிவனடியாரோ அல்லது குருவோ அல்லது சைவாச்சாரியார்களோ தரும்போது( சமய வைபவங்கள், ஆதீன நிகழ்வுகள், வீட்டு சமய வைபவங்கள் போன்ற சந்தர்பங்களில்) எப்படிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையே சுட்டுகின்றது.

ஆறுமுகநாவலர் வேதங்கள்,சிவாகமங்கள்,சைவ சித்தாந்த சாத்திரங்கள்,திருமுறைகள் என யாவும் கற்றுணர்ந்த சீரிய சிவனடியார். நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பேறு பெற்றவர். சைவ ஆகமங்களின் விதிப்படி சிவாலயங்களில் இறைவனைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்குதலோ அல்லது யாரேனுக்கும் துதிபாடுவதோ தவறு எனப்பட்டிருக்கையில், நாவலர் பெருமான் சைவ வினாவிடையில் "ஆலயம் தவிர்ந்த ஏனைய இடங்களில்" திருநீறு பெற்றுக் கொள்ளும்போது எங்கனம் பெறவேண்டும் என்பதையே சுட்டுகின்றது என்பதை உய்த்துணரலாம்.

ஆர்வமான தங்கள் கேள்விக்கு நன்றி. மேன்மைகொண்ட எமது சைவநெறியை நெறிபிறழாது ஒழுகி மேன்மை பெறுவோமாக.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

திருநீறு பற்றிய அழகான தெளிவாக புரிகிறது.வாழ்த்துக்கள். உங்களுக்கு சிவனருள் உண்டாகட்டும்.வாழ்த்துக்கள்

Unknown said...

உங்கள் திருநீறு பற்றிய இடுகை பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு சிவனருள் கிட்டட்டும்

Post a Comment