"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 26, 2009

ஸ்ரீ பாஸ்கராச்சாரியாரின் சிவாஷ்டகம் பக்திமொழியான தமிழில்

ஸ்ரீ பாஸ்கராச்சாரியார் அருளிய சிவாஷ்டகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிப்ரவரி 2009-மாசி ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயத்தில் பிரசுரமாகி இருந்தது.மிகவும் பயனுடையதாக இருந்த இந்த மொழிபெயர்ப்பை படித்து யாவரும் சிவானந்தத்தை நுகர இணையம் ஏற்றுகிறேன். அருஞ்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில இடங்களில் மொழிநடையில் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளேன். படிக்கும்போது சிவானந்தத்தை இலகுவாக நுகரும் வகையில் இருக்கவேண்டும் என்று தோன்றியதால் அவ்வாறு செய்யவேண்டிய சூழல் உருவாயிற்று.பெண்கள் இதனைப் படிக்கும்போது, ஆன் எனும் விகுதிகளுக்கு ஆள் என பயன்படுத்துவதன் வாயிலாகவும், மகன்=மகள் என பெண்பாற் சொற்களாய் மாற்றுவதன் வாயிலாகவும்,தேவை ஏற்படின் சில வரிகளை/சொற்பதங்களைத் தவிர்ப்பதன்
வாயிலாகவும் இத்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய பயன்படுத்த முடியும்.

ஆழமான ஒருகருத்தைப் இங்கு சுட்ட விரும்புகிறேன். தமிழ்மறைகளாய்த் துலங்கும் திருமுறைகளை ஓதுதல் வேத மந்திரங்களாயினும் சரி, சமசுகிரத தோத்திரங்களாயினும் சரி யாவற்றுக்கும் நிகர் என்பதை மனதில் இருத்தினால் தமிழர்நெறியானது தழைத்து ஓங்கும். மந்திரங்களை வெறுக்கவில்லை. அர்த்தம் புரியாது படிப்பதில் அர்த்தமில்லை. மந்திரங்களுக்கு சந்தம்,சக்தி உண்டு என்பர். உண்மை. ஆனால் அர்த்தம் புரியாது படிப்பதில் எதுவும் இல்லை. அது அதைவிட உண்மை. பூம்பாவையை உயிர்ப்பிக்கவும்,கோயில் கதவுகளை திறக்கவும்,மூடவும், பொற்காசு பெறவும்,வெப்பு நோயைத் தீர்க்கவும், அனல் வாதம்,புனல் வாதம் என யாவற்றிலும் வெற்றி பெறவும், சமணர்களின் கொடும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கவும் என பல அற்புதங்களுக்கு தமிழ்த் திருமுறைகளே காரணமானது என்பதை மறைக்கவும் கூடாது.மறக்கவும் கூடாது. எனவே, மொழி இடைஞ்சல் இல்லை கடவுள் வழிபாட்டில் என்பது உறுதியான உண்மை.

சரி; நாம் பாஸ்கராச்சாரியாரின் சிவாஷ்டகத்தைப் படித்து சிவானந்தம் நுகருவோமாக.


ஆசைக்குட்பட்டு எட்டுத்திக்குகளிலும் பல்வேறு தேசங்களிலும் அலைந்து திரிந்தவனும் அமைதியை அடையாதவனும் கடமைகளைச் செய்யாது உருவில் மட்டும் பிராமணன் என்று கூறிக்கொள்பவனுமான எளியவனாகிய என்னைச் சர்வ சுகத்திற்கும் ஆதாரமாகவுள்ள மங்களமான திருவுருவுடைய சிவமே, காப்பாற்றுவீராக.


மாமிசம்,எலும்பு,மச்சை,மலம்,சலம் இவற்றிற்குரிய இந்த உடலின் மேற்கொண்ட பற்றுக்காரணமாய் கடமைகளை அடியோடு கைவிட்டவனும், "என்னுடையது" என்கின்ற அகங்காரம் உடையவனும்,மாய வலையாகிய இல்லறத்தில் அகப்பட்டுள்ளவனுமான என்னை, அழிவற்ற இன்பத்திற்கு இருப்பிடமான எம்பெருமானே, காப்பாற்றுங்கள்.

இல்லறம் எனும் மாயவலையில் மூழ்கிக்கிடப்பவனும் , சுழல்களில் உழல்பவனும்,அமைதியற்றவனும், எம்பெருமானாகிய உமது திருவடி சேவையில் ஈடுபடாதவனும், எல்லா ஆசைகளும் உள்ளவனும்,மிகத் தீயவனுமாகிய என்னை, அழிவற்ற பேரானந்தப் பெருவாழ்வின் இருப்பிடமான எம்பெருமானே,காத்தருளுங்கள்.

பொய் பேசுபவனும்,சத்கர்மங்களில் இருந்து நழுவியவனும்,தர்மத்தை வேண்டாதவனும்,ஆத்ம ஞானத்தை இழந்தவனும்,நீதி நெறிகள் சிறிதும் அற்றவனும்,துன்பங்களை உண்டாக்கும் ஆறு விதமான பகைவர்களாலும் பாதிக்கப்படுபவனும்,தீயவர்களில் தீயவனுமாகிய என்னை, பேரின்பப் பெருவாழ்வின் உறைவிடமான சிவபெருமானே, காத்தருளுங்கள்.

வேதம்,சாத்திரம் என்பவற்றை படித்து அதன் பொருளை சிறிதும் உணராதவனும்,எம்பெருமானே,உமது திருவடிகளைப் பூசித்து வணங்காதவனும்,வேதங்களால் சொல்லபடுகிற கடமைகளைச் செய்யாது இருப்பவனுமாகிய என்னை, வேதத்தின் திருவுருவாகவுள்ள எம்பெருமானே,சிவபெருமானே,பேரின்பத்தின் உறைவிடமே,காத்தருளுங்கள்.


நியாயமற்ற வழிகளில் பொருள் சம்பாதிப்பதில் மனம் செலுத்தியவனும் ,பிற பெண்கள் மீது ஆசையுள்ளவனும்,பிறர் உணவையே உண்டவனும்,மாசு நிறைந்த உடலைக் கொண்டிருப்பவனுமாகிய என்னை, மங்கள வடிவான எம்பெருமானே,காப்பாற்றுங்கள்.

முன்பு ஏற்பட்ட மூன்றுவித தாபங்களால் கொளுத்தப்பட்ட சாரீரத்தை உடையவனும் உன்னத நிலை அடையும் வாழிகளை மறந்து பிறருடைய அவமானம் ஒன்றையே ஆத்ம தியானமாகக் கொண்டவனும்,மானிடப் பிறவியில் தாழ்மை பெற்றவனுமாகிய எளியவனாகிய என்னை, நித்திய மங்களமான ஆத்ம ஞானம் எனும் பேரின்ப சுகத்தை அளிப்பவராகிய, ஐயனே,சிவபெருமானே,காத்தருளுங்கள்.

சர்வலோக பிதாவும்,பாரிற்கு அருள்பாலிப்பவரும் , கருணைக் கடலும், மங்களத்தை அளிப்பவருமாகிய எம்பெருமானே,தங்களின் சிவசேவையாவற்றிலும் குற்றம் செய்தவனாகிய என்னை, எப்படி தந்தையானவர் தம் மகனைக் காப்பாற்றுகிறாரோ, அப்படி தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "ஸ்ரீ பாஸ்கராச்சாரியாரின் சிவாஷ்டகம் பக்திமொழியான தமிழில்"

தங்க முகுந்தன் said...

அருமையான தமிழ்ப்பணி!!! நான் உண்மையாகவே ஒத்துக் கொள்கின்றேன். மாணிக்கவாசகரே சிவபுராணத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார் - சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று - ஒழுங்காக நாம் சிவபுராணத்தின் அர்த்தத்தையே அறியவில்லை! எப்படி வடமொழியாகிய சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வோம்? தமிழையே ஒழுங்காகக் கற்கவில்லை இதற்கு மேல் எப்படி இதைப் படிப்பது - அர்த்தம் தெரிவது? நமக்கு அன்பில் சிறந்த அரச்சளை பாட்டேயாகும் அதனால் சொற் தமிழில் பாடு என்கிறார் சிவபெருமான் - சேக்கிழார் புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணத்தில் வருகிறது. நாம் பாடுவதைத் தவிர்த்து கோவிலில் நடைபெறும் பூசைக்குள் போய் தலையைப் போட்டுக் குடைகிறோம். நேரத்தை செலவளிக்கிறோம். அவ்வளவுதான்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் நல்ல பதிவு.தமிழில் வழிபாடு என்ற உங்கள் நோக்கம் வெற்றிபெறும்.வாழ்த்துக்கள்.

Post a Comment