"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்" கருத்தைக் கேட்டு அவரது facebookதளத்தில் சிறுகுறிப்புப் பகுதியில்(note) குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


அன்பர் தமிழ் சமூகத்தில் கொண்டுள்ள தீராத பற்றால் எளியேன் கவரப்பட்டிருந்ததால் உருவான அன்புப் பிணைப்பும் எளியேனின் நண்பராதலால் ஏற்பட்ட உரிமையோடும் சைவப் பிரசையாதாலால் எளியேனுக்கு விதிக்கப்பட்ட கடமையின் நிமித்தமும் அன்பருடைய சிறுகுறிப்பில் பல துண்டுகளாக எளியேன் எழுதிய பின்னூட்டங்களைத் தொகுத்து சிறு திருத்தங்களோடு இங்கு பிரசுரம் செய்கின்றேன். அன்பர் என்னிடம் இதுபற்றி முழுமையாக விபரித்து எழுதும்படி வேண்டினார். எனினும் பல்கலைக்கழக கல்விச்சுமை எளியேனை வாட்டி வதைப்பதால் எழுதுவதற்கு போதிய அவகாசம் இன்னும் கிட்டவில்லை. எனவே அன்பரின் சிறுகுறிப்புப் பகுதியில் எழுதியவற்றையே தொகுத்து இங்கு பிரசுரம் செய்ய வேண்டியதாயிற்று.


இந்துவைப் பற்றி சிகல உறுமய சொன்னதில் என்ன தவறு?
கலைஞர் கருணாநிதி( தமிழரின் சொத்தான சைவம் இந்து எனும் ஆரியத்தால் அபகரிக்கப்படுவது தெரியாத நாத்தீக வித்தகர். இந்துவை எதிர்க்கிறேன் சைவத்தை மறந்த அரசியல் மேதை) மட்டுமல்ல சைவ புலவர்கள் சைவ ஆதீனங்கள் எல்லாமே அதைத்தானே சொல்லுகின்றனர்.

சிங்கள சிறீயைத் தமிழன் எதிர்ப்பது நியாயம் ஆனால் ஆரிய இந்துவை தமிழன் ஏற்பது முறை! என்ன நியாயம் இது?

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர்.சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்றார் திருமூலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? தமிழ் வாழப் போராட்டம் தமிழ் வரலாறு வாழப் போராட்டம் என்று நம் முன்னோர்கள் விட்டதவறால் நாம் இன்று தவிப்பது அதுபோல்த்தான் இன்று இந்துவுக்கு அனுமதி அளித்தால் நாளை சைவத்துக்காய் போராடவேண்டி இருக்கும்.

இந்து எனப்து ஆரியம் சைவத்தை அழிக்க உருவாக்கிய கலப்படச் சமயம். அப்படியே சங்கராச்சாரியாரின் சுமார்த்த மதத்தை copyபண்ணி உருவாக்கப்பட்ட மதம். அங்கு சைவத்திற்கு வேலையேயில்லை. சுவாமி விவேகானாந்தர் அமெரிக்கா மாநாட்டில் இந்து என்ற பெயரை பயன்படுத்தியதால் ஏற்பட்டவிளைவுதான் இந்துவும் இந்துவோடு கூடி சுமார்த்தமும் பிரபல்யமடைய ஏதுவாயிற்று.

சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்திருந்தவேளை அவரை மகிழ்விக்கும் பொருட்டு அடிக்கடி இந்து என்ற சொல்லை பலர்பயன்படுத்தியபோது இலங்கையின் சைவச் சிறப்புத் தன்மையை கண்டு "இந்து என்ற பெயருக்குப்பதில் சைவன் என்றே கூறவேண்டும்" (உதயன் 07.09.98)என்று சுவாமிகள் கூறியது எப்படி மறந்துபோனது சில புத்திஜிவிகளுக்கு?

சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் கப்பலில் பயணம் செய்தபோது அவரைச் சந்தித்த அமெரிக்கர் "தாங்கள் இந்துவா?" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள் .நாங்கள் சைவர்கள்" என்று மறுத்துக்கூறியிருந்தார். திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் இன்றும் சாட்சியாய் அவர் கருத்து பதியப்பட்டுள்ளது. அன்று விவேகானந்தர் ஈட்டிய வெற்றிவாகையை கொண்டாடும் காலகட்டத்தில் மலர்ந்த கல்லூரிகளும் பத்திரிக்கைகளும் இந்து என்ற பெயரைத் தாங்கத் தொடங்கின. ஆனால் அவை இம்மியளவும் இந்து என்ற பெயர்மூலம் ஆரியச் சதிக்கு இடமளிக்கவில்லை.

ஆனால் இன்று? அஞ்சனேயர் வழிபாடு. சாயி வழிபாடு, கல்கி வழிபாடு, கண்டபாட்டுக்கு தேரோட்டம் அப்பப்பா எத்தனை கலவைகள்! இக்கலவைச் சமயத்தால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானது. கலைஞர் கருணாநிதிகூட இதே கேள்வியைக் கேட்டதோடு இந்து என்றால் கள்ளர் என்றும் கூறியிருந்தார். சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களிடம்(திராவிடர் எனப்து ஆராய்சித்துணிபு) வெறுப்புக்கொண்ட பாரசீகர் கிந்து என்றால் கள்ளர் என்று பொருள் கொண்டனர். ஆங்கிலேயர் இந்தியா என்று பெயர் சூட்டியதும் ஆரியர் இந்தியாவில் தோன்றிய சமயங்களை இணைத்து ஆரிய சமயத்தை வளர்க்க சுமார்த்த மதத்தை தெரிவு செய்தனர்.( சங்கராச் சாரியாரால் உருவாக்கப்பட்டது. சிவன் முழுமுதற்கடவுள் அல்ல. பிரம்மம் தான் கடவுள் என்ற கொள்கை. பிரம்மம் சிவனாகவும் விஷ்ணுவாகவும் சக்தியாகவும் தோற்றம் கொள்ளும்)

ஆனால் சுமார்த்தத்தை தமிழர் ஏலவே நிராகரித்துவிட்டதால் அதற்கு புதுப்பெயர் கொடுக்கவிரும்பி இந்து என்ற பாரசீகரின் சொல்லை இட்டனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதம் என்பது பௌத்தம் சமணம் சீக்கியம் உள்ளடக்கியதாகும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பது இலங்கையில் பௌத்தத்திற்கும் உடமையான மன்றமா? சீக்கியமும் சமணமும் இலங்கையில் உண்டா?

சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து என்பது எம்மொழிச் சொல் என்று வாதிட்டு ஆய்வு நடாத்தி அது தமிழுக்கு விரோதமான தமிழ் பண்பாட்டிற்கு விரோதமான தமிழர் சமயமான சைவத்தை அழித்து ஆரிய வைதீக சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஆரியச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் என இனங்கண்டு நிராகரித்து யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி அதன்பெயரை சைவ வாலிபர் மன்றம் என்று 1956களில் மாற்றி புரட்சி செய்ததை இன்று இந்து மாமன்றம்............. இந்துக் கல்லூரி.............( அடியேனும் ஓர் இந்துக் கல்லூரியில்த்தான் கற்றவன்) கொழும்பில் உள்ள இந்து குருமார் பீடம்(யார் தமிழின் மேன்மைகாக்க மாற்றினாலும் இவர்கள் இந்து என்ற ஆரியச் சதியை விட்டுக் கொடுக்க்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள்தான் ஆரியச் சதியின் இலங்கை ஏஐண்டுகள்) இப்படிப்பல சிவபாத சுந்தரனாருக்கும் தமிழருக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் கேட்டை விளைவிக்கின்றனர்.(தெரிந்தும் தெரியாமலும்)

தேவாரங்கள் திருவாசகம் பெரியபுராணம் கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் சைவ ஆகமங்கள் திருமந்திரம் சைவ சித்தாந்த நூற்கள் எவற்றிலுமே இந்து என்னும் பெயர் சமயத்தின் பெயரைத் தாங்கி வந்ததில்லை. தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரியும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள் வழங்கி சிரிக்கும்.
சைவம் என்பது தொன்று தொட்டு சிவனோடு சம்பந்தமானது எனும் பொருளில் விளங்கிவருவது. சுத்தத் தமிழ்ப் பெயர். சிங்கள சிறிக்கு எதிராகப் போராடிய எம்மவ்ர்கள் ஆரிய சதிக்கு வரவழைக்கப்பட்ட பாரசீகச் சொல்லான இந்துவை முத்தமிடுவது வெட்கக் கேடானது!

"சிவனெனும் ஓசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்கிறார் அப்பரடிகள்.சிவன் என்னும் ஓசைக்கல்லது மற்றெவ்வோசைக்காயினும் திருநின்ற செம்மையுள்ளதா? சபதம் பிடிக்கவா? எனப்து அதன் பொருள்.
சட்டத்தரணிகள் எமது சமயத்தை தலைமைதாங்கும் இக்காலத்தில் அவர்களுக்கு அப்பரடிகள் பாடிய இப்பாடலின் பொருள் எப்படித் தெரியவரும்? சிவன் எனும் ஓசையோடு கூடியது சைவம் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?.

இந்து என்ற கலப்பட ஆரியச் சதியைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் சமயமான சைவத்தை வளர்ப்போம்.

மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்று வினாவினார் தாமோதரம்பிள்ளையார். மொழியோடு சமயமும் சமயத்தோடு மொழியுமாக இரண்டறக்கலந்து விளங்குவது சைவமும் தமிழும்.
தமிழராகிய நாங்கள் பண்டைய காலந்தொட்டு சைவத்தை அழித்து சுமார்த்தத்தை பரப்பத்துடிக்கும் ஆரியச் சதியை எப்படியெல்லாம் வென்று வந்தோமோ அந்த வரலாறுகளை மறக்காது எமது இளைய சமுதாயத்தை ஆரியத்திடம் கொடுத்து ஏமாந்து தமிழால் சபிக்கப்படாது விழிப்புக் கொள்வோம்.

பிற்குறிப்பு:- facebookகுழுமங்கள் தொட்டு பல்வேறுபட்ட இணையத்தளங்கள்வரை எளியேன் வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் தமது கல்லூரி பெயரை வலிய இந்து மகளீர் கல்லூரி என்று எழுதுவது காணும்போது கண்களில் குருதிவழிகிறது. கொழும்பில் சைவம் எனும் பெயரோடு இருக்கும் ஓரே ஒரு கல்லூரி சைவ மங்கையர் கல்லூரி. குறித்த கல்லூரி மாணவிகள் இந்து எனும் சொல்லில் மயங்கி கல்லூரி பெயரையே மாற்றியமை வருந்தவைக்கின்றது. சைவம் என்பதன் ஆங்கிலப்பதம் saivismஆதலால் colombo saivism ladies college என்பதே சரியானது.
சைவம் என்ற நல்ல தமிழ் சொல்லை இழந்து இந்து என்ற ஆரிய சதி சொல்லுக்கும் அதனோடு கூடி மறைந்திருக்கின்ற தமிழ்விரோத சதித்திட்டங்களுக்கும் சைவர்களே தமிழர்களே இரையாகிப் போகாதீர்.


பிற்குறிப்பு:-facebookஇல் தமக்கென profileவைத்திருப்பவர்களுக்கும் ஏனைய இணையத்தளத்தில் சமயப் பெயராக இந்து என்று தவறுதலாக பயன்படுத்தும் சைவப் பெருமக்களுக்கும் எளியேன் அன்போடு வேண்டுவது சைவம்/சைவன் saivism/saivite என்று மாற்றி இந்து என்ற ஆரிய தமிழ் விரோத ஆரியச் சதியை தோற்கடிக்க விழிப்புணர்வு கொள்வோம். ////சிறுதுளி பெரு வெள்ளம்//////

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்"

Anonymous said...

தமிழ் இறைப் பற்றாளர் சைவத்தை நன்கு அறிந்து கொள்வது நல்லது,
சைவ மடங்களே இன்று இந்து என்ற மாயையில் அடிமையாகி ஸ்மார்த்த சங்கராச்சாரி மதத்தலைவராக ஆகிவிட்டார்.
சைவத்தில் உள்ள அடிப்படை அழிந்து கொண்டே வ்ருகிறது.சைவத்தில் இந்து எனும் ஆரியத்தைத் திணித்து தமிழை அடிமையாக்கியிருப்பதை அனைவரும் உண்ர வேண்டும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அருமை..
இப்போதுதான் உங்களின் வலைப்பூ காண நேரிட்டது.

அனைத்தையும் படித்து விட்டு வருகிறேன்.

உங்களுடன் பேச விதயமிருக்கும் எனத் தோன்றுகிறது.

கோவி.கண்ணன் said...

புத்தரின் சூனிய வாதத் (ஏதுமற்ற) தத்துவத்துக்கு மாற்றாக வந்தது தான் சங்கரனில் பிரம்மம் (எல்லாமாக இருப்பது), அதனை வலியுறுத்துவது எளிதன்று என்பதாலேயே சமய (உருவ) வழிபாடுகளை சாமார்த்திய மாக நுழைத்து ஆறு சமய வழிபாடுகளை ஏற்படுத்தி திராவிட தெய்வங்களை ஆரியமயமாக்கினார்.

இது அறிய மூடர்களும் பிரம்மமே உயர்வானது சிவன், மாலன் எல்லாம் அதில் அடக்கம் என்று உளறுகின்றனர்.

ப்ரப்பிரம்மம் என்பதெல்லாம் வெறும் கற்பனைதான் கஞ்சா அடிப்பவன் நிலையும், பரப்பிரம்மத்தில் திளைத்திருப்பவனாகச் சொல்லும் நிலையும் ஒன்றுதான், இரண்டுமே தன்னிலை மறந்த ஒன்று.

சிவன், விஷ்னு போன்றவர்களே இல்லை இவற்றையெல்லாம் வழிபடுவது கீழான நிலை என்றெல்லாம் கூடச் சொல்லி வைத்தனர் பண்டாரங்கள், அதற்கு ஏதுவாக யோகம், நிஷ்டை கட்டுக்கதைகளையெல்லாம் இஷ்டத்துக்கு எழுதி வைத்தனர். பிரம்மத்தை அறிந்தவனே பிராமணன் மற்றோர் கீழானவர் என்றெல்லாம் சொல்லப்பட்டு பார்பனர் அல்லாதோரை சூத்திரன் என்று சொல்லத் துணிந்தது தான் பரப்பிரம்ம வாதிகளால் ஆன இழிவான செயல்.

எல்லாம் மாயை எல்லாவற்றையும் வெறுத்துவிடும் இவர்களின் பிரம்ம தத்துவத்தை...'உள்ளமே கோவில்..ஊனுடம்பே ஆலயம்..என்றும் மகிழ்வோடும், தூய்மையோடும் இருங்கள் என்று சொல்லிய நம் தமிழ் சித்தர்களின் தத்துவம் எவ்வளவோ உயர்ந்தது.

ஆரம்பத்தில் ஆண்குறிவழிபாடு என்று சிவலிங்க வழிபாட்டை இட்டுக்கட்டியவர்களே பிறகு சிவனும் பரப்பிரம்மத்தில் அடக்கம் என்று சிவனையே அடக்கம் செய்ய முயன்றார்கள்.

ஆரிய இட்டுக்கதைகளை அகற்றிக் கொள்ளாதவரை இந்திய சமயங்கள் தூய்மை அடையாது

Dr.Rudhran said...

thanks for all the information

சீனு said...

மத வெறி மட்டும் அல்ல. மொழி, இன, சமய வெறி ஊட்டுவதும் தவறு தான். திருந்துங்கள்.

Anonymous said...

அப்படியானால் நீங்கள் சைவம் தவிர சாக்தம், வைணவம் மற்ற பிரிவுகள் எல்லாம் நிஜம் இல்லை என்று சொல்றீங்களா? ஹிந்து சமயம் இந்த எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கியது இல்லையா? சைவ சித்தாந்தம் பிரம்மம் பற்றி கூறுகின்றது . so r u against that? but our religion book is not says any thing like this. can u clear my doubt?

Anonymous said...

கோவி.கண்ணன் says " யோகம், நிஷ்டை கட்டுக்கதைகளையெல்லாம்".
but yogam saiva naat paathangalil onru thane?

சிவத்தமிழோன் said...

அன்பர் தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. என்னை எழுதத் தூண்டுகின்ற தங்களின் பின்னூட்டங்கள் பலருக்கும் பயனுடையதாக இருப்பது கண்டு மகிழ்கிறேன்.

சைவ நாற்பாதங்களுள் ஒன்றுதான் யோகம். அன்பர் கோபி.கண்ணன் நாத்தீகத்தையும் ஆத்தீகத்தையும் கலந்து எழுதிவிட்டார் போல் தெரிகிறது. அவ்வளவே!

சாக்தம் வைணவம் என்பன அகப்புறச் சமயங்களாக ஒதுக்கப்பட்டவை. திருமாலும் உமையும் சைவத்தால் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் என்பதில் ஐயம் எழ வேண்டிய அவசியம் இல்லை. திருமால் முழுமுதற்பொருள் என்பது சைவத்திற்கு ஏற்றதல்ல.

ஆஞ்சநேயருக்கு உலகில் முதற்முதல் தேர் இழுத்தது கொழும்பில்த்தான். சற்று சிந்தியுங்கள், வைணவம் உள்ள இந்தியாவில் ஆஞ்சநேயருக்கு தேர் இழுக்கவில்லை.ஏன் எனில் வைணவ ஆகமம் அதற்கு வழிவிடவில்லை.

சைவர்கள இழுக்கச் செய்து, சைவர்களை சிவாகமத்திற்கு முரணாகவும் வைணவ ஆகமத்திற்கு முரணாகவும் நடக்கச் செய்து, சுமார்த்தத்தை பரப்பும் திட்டத்தின் ஓர் அம்சம்தான் இது.

ஆகம நெறி நில்லாதவர் தண்டனைக்குரியவர் என்று திருமந்திரம் தெளிவாகச் சொல்லியிருக்க, ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற திருமந்திரத்தின் பொருளை திரிபுபடுத்தி பரப்பி சைவர்களை பலவீனமான உள்ளம் கொண்டவர்கள் ஆக்கி,சைவத்தை அழித்துவரும் ஆரியரின் சதித்திட்டம்தான் கிந்து.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதன் பொருளை அடியேன் சிவத் திருமன்றத்தின் புத்தகம் ஒன்றில் காணக்கண்டு அறிவுபெற்றேன். சிவன், சிவன் அல்லாத ஆத்மாக்கள் என்று இருபிரிவு சைவத்தில் உண்டு. எனவே சிவன் ஒருவனே தேவன், சிவம் அல்லாத ஆத்மாக்கள் அனைவரும் ஒருகுலத்தையே சார்ந்தோர் என்பதே பொருள்.
எப்படிக் கிருத்தவம் கிருத்தவமாகவோ, இசுலாம் இசுலாமாகவோ இருக்கின்ற்தோ அப்படி
சாக்தம் சாக்தமாக இருக்கட்டும். வைணவம் வைணவமாக இருக்கட்டும். எங்கள் உயர் சைவம் சைவமாகவே இருக்க வேண்டும். அதுதான் தமிழரின் தனித்துவ அடையாளத்தைக் காக்கும்..

சைவம் என்பது தமிழரின் திரு நெறி.சமசுகிரதம் வந்து கலந்து ஓர் ஆதீக்கத்தை பெற்றதே ஒழிய அந்த வடக்கின் சூழ்ச்சியில் சைவம் அகப்படவில்லை. சைவத்தை தமிழரிடம் இருந்து பிரிக்க நடந்த சதியை எதிர்த்து அன்று தொட்டு போராட்டங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன.
திருமுறைகளை சிதப்பரத்தில் பூட்டி பார்ப்பனர் அழிக்கத்திட்டம் தீட்டி கறையானுக்கு இரையாக்கியபோது, நம்பியாண்டார் நம்பிகளும் இராச இராச சோழனும் அவற்றை பார்ப்பனரிடம் இருந்து மீட்டு தமிழ் உலகிற்கு தந்ததை நினைவிற்கொள்க.

கிந்து மதம்/இந்து மதம் என்பது இந்தியாவில் என்று உருவானதோ அன்றே நாத்தீகமும் உருவாகத் தொடங்கிவிட்டது. இந்து மதம் என்பது பார்ப்பனத்தை ஆளவிட்டு இந்தியா முழுவதும் ஒரே மதமாக ஆரிய வைதீக மதம் இருக்கவேண்டும் என்ற கொள்கையில் வளர்க்கப்படுவது. தமிழரின் தேசியம் இந்து மதத்தில் இல்லை. இந்துமத விசுவாசிகளான இந்து பத்திரிக்கை இதற்கு எளிதான உதாரணம்.

ஒருகணம் சிந்தியுங்கள், இலங்கையில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் சைவர்.இந்துக்கள் என்று அவர்கள் எங்களை எண்ணவில்லை. எண்ணியிருந்தால் இலங்கையில் இந்துக்கள் அடிக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர் என்று கொதித்து எழுந்திருப்பர்.

எனவே இந்து மதம் தமிழரின் தேசியத்தை ஏற்காத தமிழரின் தனித்துவமான சைவத்தை பலமிழக்கச் செய்யும் ஒரு கலப்படம்.

சைவ சித்தாந்தத்தின் முழுமுதற்பொருள் சிவனே என தெளிக.
எங்களுடைய சமயப் ப்த்தகம் என்று எதை தாங்கள் சுட்டிக் காட்டுகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பாடப்புத்தகங்கள் என்றால் எங்கள் பாடப்புத்தகங்கள் யாரால் இன்று எழுதப்படுகின்றன என்பதை பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயரை வாசிப்பதன் மூலம் அறியமுடியும். இராமகிருசுண மடம் தொட்டு பல்வேறு இந்தியா ஆரிய மடங்கள் எங்கள் சமயப் புத்தக ஆக்கத்திற்கு நிதி வழங்குவதன் மூலமாக ஆசிரியர் குழுவில் உள்ளனர். அதனால்த்தான் திருவிளையாடற் புராண அற்புதங்களை, சைவ சிறப்புத் தன்மைகளை எழுத மறந்துவிட்டு வெறும் ஆறுமுக நாவலர் எப்ப பிறந்தார் என்று தொடங்கி சம்பந்தர் என்ன சாதி என்று எழுதி அவற்றையே பரீட்சைக் கேள்விகளாகவும் ஆக்கிவிட்டு.......சைவ சித்தாந்தத்தை எக்கச் சக்கமாக ஒரே தலைப்பில் அள்ளிக் கொட்டி மாணவர்களின் மனதில் பதியாதவாறு துரத்தி, பரீட்சைக்கும் சைவ சித்தாந்தத்தில் இருந்து கேளிவிகள் வருவதைத் தவிரித்து மாணவர் மத்தியில் அதை தேவையற்ற ஒன்றாக்கிவிட்டனர். நான் சமய பாடம் படித்தச்போது ஆசிரியர் இதில் கேள்வி வருவது குறைவு என்று கூற நானும் அதைப் படிப்பதைத் தவிர்த்துவிட்டேன். சைவ சித்தாந்தம் படிக்காமல் அதி சிற்ப்பு சித்தியை சைவ சமய பாடத்தில் பெற்றேன் என்றால் சற்று சிந்தியுங்கள்!!!!!!
தரம் பத்துக்குரியதென்று நினைக்கின்றேன், இந்து மதத்தில் ஒருபிரிவு சைவம் என்றே புகட்டப்படுகின்றது. எவ்வளவு சிரிப்புக்குரிய விடயம் பாருங்கள்? தமிழரா இந்து என்ற மதத்தையும் அதற்குள் சைவம் ஒன்று என்பதையும் தீர்மானித்தது? ஆரியம் தீர்மானித்ததை நாங்கள் படிக்கின்றோம்.

அதுசரி, இந்து மதத்தில் பௌத்தமும் சீக்கியமும் சமணமும் உண்டு என்று இந்திய சட்டம் சொல்ல, எங்கள் பாடப்புத்தகத்தில் அதைப்பற்றி மூச்சே திறக்கவில்லையே....அதுஏன்?

பௌத்தமும் சீக்கியமும் தங்கள் சமயப் புத்தகங்களில் இந்து மதத்தின் ஒருபிரிவே எங்கள் மதம என்று எழுதுகின்றனரா....என்ன!?

இழிச்ச வாயன் தமிழன் என்றும் குனிந்தே பழகிப்போனவன் என்றும் ஆரியம் நினைப்பதை தமிழன் சரியென்று காட்டி நிற்பது வேதனையளிக்கின்றது.

சிவத்தமிழோன் said...

சீனு ஐயா, அடியேன் வெறி எதுவும் ஊட்டும் மதுவை இங்கு தெளிக்கவில்லை. பற்றை ஊட்டும் தமிழைத்தான் ஊட்டுகின்றேன். தாய்ப் பற்று, தமிழ்ப் பற்று, தாய் நாட்டுப் பற்று, தாய் மண் தந்த தாய் சமயப் பற்று என்பன தவறாகத் தெரியவில்லை எனக்கு.
இத்தனை பற்றுக்களும் இல்லாத மனிதன் துறவியாகின்றான். அல்லது போதையில் வாழ்கையைக் கழிக்கின்றான். தாங்கள் துறவியாயின் என்னை மன்னித்துவிடுங்கள்.

என் இனம், தனது மண்ணையும் மண் வாசணையையும் இழந்து பண்பாட்டை மறந்து வாழப் பழக்கப்படும் போது இன மானத்தை ஊட்டமால் துறவில்போய் சிவலோகத்தையோ வைகுண்டத்தையோ நாடி ஓடேன்.
மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்ற தாமோதரம்பிள்ளையை கன்னிப்பேச்சின் பொருளாக அறியாப் பருவத்தில் எடுத்து பேச வழிசமைத்தவன் சிவன்.

திருந்த வேண்டும் என்று ஓர் நிலை எனக்கிருந்தால் அது; எழுதிக் கொண்டிருக்கும் எளியேன், எழுத்துகளை செயலாக்க, களம் அமைக்க வேண்டும் என்பதேயாகும். காலம் வருகையில் களத்தையும் சிவனருள் கைகூடச் செய்யும்.

என் இனமானப் பற்றையும் சமயப் பற்றையும் பீறிட்டு எழுவைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

சிவத்தமிழோன் said...

Dr.Rudhran,கோவி.கண்ணன்,அறிவன்,பெயர் பரிமாறாத அன்பர் அனைவருக்கும் பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தியத்தேவன் said...

நல்லதொரு ஆராய்ச்சி. ஹெல உறுமய தேரரின் கருத்துக்கள் ஏனோ வெளியில் அவ்வளவாக வெளியிடப்படவில்லை. இலங்கையில் சைவத்தை ஒழிப்பதில் அகில இலங்கைக் கம்பன் கழகம் முன்னணியில் இருக்கின்றது. இவர்கள் வைஷ்ணவக் கடவுளான இராமனுக்கு விழா எடுப்பார்கள். மருந்துக்கும் சிவனுக்கோ தமிழ்க் கடவுள் முருகனுக்கோ விழா எடுப்பதில்லை. விஷ்ணுவின் மனைவி அஷ்டலஸ்மிக்கு கோயிலும் கட்டிவைத்துள்ளார்கள்.

இலங்கையில் சைவ சமய அழிப்பைத் திட்டமிட்டு ஒரு கும்பல் செய்துவருகின்றது. இதனால் எழுந்தவைதான் சின்மயாமிஷன் கிளைகள், ஆஞ்சனேயர் ஆலயங்கள் மற்றும் ஏனையவை.

சைவமங்கயர் கழக மாணவிகள் தங்களை ஹிந்து லேடீஸ் என அழைப்பதில் பெருமை கொள்கிறார்களே ஒழிய சைவ மங்கையர் என தமிழில் அழைப்பதை விரும்புவதில்லை காரணம் இவர்கள் எலிசபத் மஹாராணியின் பூட்டிகள் ஆச்சே.

Anonymous said...

சைவத்தை வளர்க்க வேண்டுமென விரும்பினால்,

சிவனின் பெருமைகளைப் பற்றி எழுதுங்கள்.
தேவரதிருவாசகங்களின் பெருமைகளை எழுதுங்கள்.
சிவன் ஆலயங்களினால் கிடைக்கப் பெற்ற அனுபவங்களை எழுதுங்கள்.

அதை விட்டு விட்டு நீங்களும் நாஸ்தீகர்கள் போல் அடுத்தவரை திட்டுவது, வசைபாடுவதும் சிவனுக்கே சினத்தையூட்டும்,

சிந்தை மகிழ சிவ நாமம் சொல்வீர்!
சிறப்புற்றகிலம் வாழ சிவனருளைச் சொல்வீர்!!

பல்மதமும் வாழட்டும்!
சைவமும் அங்கு சிறக்கட்டும்!!

சிவத்தமிழோன் said...

ஐயா அனோனிமுசுக்கு வணக்கம், சைவத்தைக் காத்து இன்றைய சந்ததிக்கு தந்த நாவலர் அன்று சமயப் பிரசங்கங்கள், பள்ளிக்கூடங்கள் என்று குறுகி இருக்கவில்லை. கிருத்தவ மத நூலான விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய வள்ளல் அவர். எனினும் கிருத்தவமதக் கண்டனங்கள் தொட்டு சைவ சமயத்தை சிதைக்கும் சைவர்களின் தவறான சமயச் சடங்குகளுக்கும் எதிராகவும் பிரசங்கம் செய்தார் என்பதை நினைவில் கொள்க. புகைத்தலை தடுக்க, புகைத்தல் கூடாது என்பதை பிரசங்கம் செய்யவேண்டியது அவசியம். சிக்கரட்டில் என்ன என்ன பொருட்கள் இருக்கின்றன, என்ன என்ன விதத்தில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது அறிவிக்கப்படவேண்டிய ஒன்று. எளியேன், பிறமதங்களைத் தூற்றவில்லை இங்கு. பிறமதங்கள் சைவத்துள் ஊடுருவும் வழிவகைகளை சுட்டிக்காட்டி தமிழினத்தை விழிப்புக்கு உள்ளாக்கவே முயலுகின்றேன். கருத்துச் சுதந்திரத்தை முழுமையா ஆதரிப்பது எளியேனின் கொள்கை. ஆதலால் தங்களின் கருத்துக்களை பிரசுரித்து என் செயலுக்கான விளக்கத்தையும் இங்கே தந்துள்ளேன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாவலர் என்னத்தைச் செய்தாரோ அதில் எள்ளளவேனும் செய்தே மடிவேன். தங்களின் அன்புக்கு நன்றி. தாங்கள் நினைவில் கொள்ளவேண்டியதொன்று இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

ஆபிரிக்க கவிஞன் பாடுகின்றான் " நீங்கள் வரும்போது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது இன்று உங்கள் கைகளில் நாடும் எங்கள் கைகளில் பைபிளும் உள்ளது"

"அன்று எங்கள் கைகளில் திருமந்திரமும் தமிழ் தேசியமும் இருந்தது. இன்று இந்துவானதும் தமிழ் தேசியம் இழந்து ஆரியரின் அடிமைகளாய் ஆகிவிட்டோம் சுமார்த்தத்தை நீங்கள் புகுத்தியதால்" இப்படித்தான் நாளை நம் இனம் பாடும்

அப்படி நடக்ககூடாது என்பது என் கனவு. நனவாக வேண்டி எழுதுகிறேன் அப்பன் சிவனருளால்.


பல் மதமும் வாழட்டும் சைவமும் சைவமாக செழிக்கட்டும் இதுதான் நான் வேண்டுவது!!!!!!!

சிவத்தமிழோன் said...

அன்புடன் வந்தியத்தேவன் ஐயாவுக்கு,

நன்றாகச் சொன்னீர்கள், எனக்கு ஞாபகம் இருக்கின்றது இலங்கையில் சுடரொளி வார இதழில் ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி பிரச்சினை எழுப்பப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை, கழகத் தலைவர் ஆரியச் சதியை ஆதரித்து இலண்டன் மெய்கண்டான் ஆதீன முதலர்வரை இழிவுபடுத்தும்வகையில் நீங்கள் ஆடைகளைத் துறந்துவிட்டா அங்கு உள்ளீர்கள் என்ற பொருளில் வினா தொடுத்ததோடு , இலங்கையில் மக்கள் துன்பப்படும்வேளை தாங்கள் இலண்டனில் என்ன செய்துகொண்டுள்ளீர்கள் என்ற பொருள் தொனியிலும் எழுதியிருந்தார். பாலசிங்கம் அய்யா இருந்ததும் இலண்டனில்த்தான் என்பது அவருக்குப் புரியவில்லை. அவரைக் குறைகூறமுடியுமா சொல்லுங்கள்? இலண்டனில் இருந்தால் உயிருக்கு வேண்டுமானால் பாதுகாப்பு கிடைகலாம். ஆனால் சொகுசு வாழ்க்கை என்பது அவர் வாழ்ந்தால்த்தான் தெரியும். குறித்த தலைவர் தென்னாபிரிக்கா சென்று சொற்பொழிவு ஆற்றியதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஏன் அங்குபோனார்? அங்குள்ள தமிழரிடம் தமிழ்வித்தையைக் காட்டத்தானே? அதுபோல் சைவத்தை இலண்டனில் உள்ள தமிழரிடம் பேண ஒருவர் ஆதீனம் அமைத்து அங்கேயே நிலையாக இருந்து சேவையாற்றுகின்றார். நிரந்தரமாய் இருந்தால் தவறு. போய்ப் போய் வருவது நியாயம். நான் நினைக்கிறேன் அவசர காலச் சட்டத்தின் ஆதீஇக்கமும் வெள்ளைவானும் கொழும்பில் பீதியைக் கிளப்பும்போதும் இவர் தென்னாபிரிக்கா கனடா என்று ஓடிவிடுவார். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பணமுதலைகளுக்கு போய் போய் வர விமானச் சீட்டுக்கு பணமிருக்கும். பாவம் ஆரியத்தின் பணப்பெட்டிகள் இல்லாத ஆதீன முதல்வர் அங்கேயே மடம் அமைத்துவிட்டார். அவருக்கு கொடுத்த மரியாதைதான் கம்பன் கழக தலைவரின் யோக்கியதை. அவர் அன்று எழுதியதை வாசித்தபோது புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் என்றும் புலம்பெயராதோர் நாட்டுப்பற்றாளர்கள் என்பதுபோலவும் பொருள் பதிந்து கிடந்தது புலனாகியது. சராசரியாக ஒவ்வொரு ஈழக் குடும்பத்திலும் ஒருவரேனும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் இரத்தத்தை வியர்வையாக்கி பணமாகமாற்றி அனுப்பும் பணத்தால்த்தான் யாழில் நூறு ருபாயானாலும் வாய்முடியவண்ணம் பாண் வாங்குகின்றனர். ஏன் வெள்ளவத்தையில் தமிழர் வந்த பிந்தான் விலைவாசிகூடியது. காரணம் விலைகுறைபதற்காக கடைக்காரர்களோடு சந்தையில் பேசுவதற்கு பஞ்சி. கேட்கும்விலையை அள்ளி இறைக்க, சந்தை சிங்களவர் ருசி கண்டனர். இவர்களுக்குத் தெரியாது அங்கு உழைப்பவரின் வேதனை.

Anonymous said...

இங்கு சென்று பாருங்கள் இந்தக் கூத்தை.

http://jeyamohan.in/?p=600

சிவத்தமிழோன் said...

வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா கிருத்தவர்கள் ஆத்திசூடிக்கு வழங்கிய இட்டுக்கதையை நகைச்சுவை என்று தலைப்பிட்டு பிரசுரித்திருக்கையில் எளியேன் சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்! திராவிட நாகரீகம் கிருத்தவப் பண்பாடு என்று வரலாற்றை திரிபுபடுத்தி மதப்பிரசாரம் செய்யும் குழுவுக்கு சாட்டையால் அடிப்பதுபோல் அவர் விளக்கம் கொடுத்து பிரசுரித்த கட்டுரையே தாங்கள் சுட்டிக்காட்டிய கட்டுரை. தமிழறிஞர் அவர் பிரசுரித்த குறித்த கட்டுரை பொய்ப்பிரசாரத்துக்கும் தோமஸ் எனும் பூச்சாண்டித்தனத்துக்கும் மயங்கிவிடக் கூடாது என்பதையே நோக்கமாய் கொண்டிருக்கின்றது. நானும் வாசித்து பொய்ப்பிரசாரம் செய்யும் கூட்டத்தின் நீயூயோர்க் பணவங்கிகளின் கோமாளித்தனத்தை நினைத்து சிரித்தேன். இனிமேலாவது நம்மவர்கள் கிருத்தவப் பள்ளிகளில் நம்பிள்ளைகளை சேர்க்காது பொய்வரலாறுகள் புகட்டப்படுவதில் இருந்து பாதுகாக்கட்டும்.(கிருத்தவப் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற முறையில் புகட்டப்படுவதாக குறித்த கோமாளிக்குழுவே அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.) நன்றி அனோனிமுஸ்

nagai said...

திருமூலரின் கவிதைகளில் இறைவனை அடைய 6 மதங்கள் கூறப்பட்டுள்ளது....நீங்கள் கூறுவது என்னை யொசிக்க வைக்கிறது....தயவு செய்து திருமூலரின் 1150 வது பாடல்களை படிக்கவும்...சந்திப்போம்

சிவத்தமிழோன் said...

திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அறுவகைச் சமயங்கள் வேறு. திருமந்திரத்தில் அகச் சமயங்கள், புறச் சமயங்கள் என திருமந்திரம் வகைப்படுத்தியுள்ளதுக்கும் ஆதிசங்கரர் கதைகட்டிய கௌமாரம்,காணப்பத்தியம்,சௌரம் என்ற நெறிகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. சைவத்தில் இருந்த முருக வழிபாட்டையும் சைவ வைணவ வழிபாடுகளில் இருந்த பிள்ளையார் வழிபாட்டையும் கௌமாரம் என்றும் காணபத்தியம் என்றும் பிரித்துக் காட்டி சைவத்தை ஆதாரமற்றதாகவும் சைவத்திடம் உள்ள தனிப்பெருந்தன்மையையும் பலமிழக்கச் செய்யவும் உருவாக்கிய பித்தாலாட்டம்.அவ்வளவே!!!!!!

http://www.saivaworld.org/pageview.cgi?iD=904&cat=9

இங்கு சென்று வாசிக்க.நன்கு விளங்கும் என நினைக்கிறேன். பெறுமதிமிக்க பின்னூட்டத்திற்கு நன்றி.ஐயங்களை வினாவுக.

சிவத்தமிழோன் said...

திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அறுவகைச் சமயங்கள் வேறு. திருமந்திரத்தில் அகச் சமயங்கள், புறச் சமயங்கள் என திருமந்திரம் வகைப்படுத்தியுள்ளதுக்கும் ஆதிசங்கரர் கதைகட்டிய கௌமாரம்,காணப்பத்தியம்,சௌரம் என்ற நெறிகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. சைவத்தில் இருந்த முருக வழிபாட்டையும் சைவ வைணவ வழிபாடுகளில் இருந்த பிள்ளையார் வழிபாட்டையும் கௌமாரம் என்றும் காணபத்தியம் என்றும் பிரித்துக் காட்டி சைவத்தை ஆதாரமற்றதாகவும் சைவத்திடம் உள்ள தனிப்பெருந்தன்மையையும் பலமிழக்கச் செய்யவும் உருவாக்கிய பித்தாலாட்டம்.அவ்வளவே!!!!!!

http://www.saivaworld.org/pageview.cgi?iD=904&cat=9

இங்கு சென்று வாசிக்க.நன்கு விளங்கும் என நினைக்கிறேன். பெறுமதிமிக்க பின்னூட்டத்திற்கு நன்றி.ஐயங்களை வினாவுக.

Anonymous said...

The information here is great. I will invite my friends here.

Thanks

Post a Comment