"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, January 2, 2017

கரே கிருஷ்ணாவும் ஈழத்து சம்புபட்ச நாராயணனும்

கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்துக்கு சென்றிருந்தேன். கரே கிருஷ்ணாக்காரர் வெளிவீதியில் கடைபோட்டு இருந்தனர்.ஏற்கனவே அவர்கள் ஒருமுறை உள்வீதிக்குள் நின்று பிரச்சாரம் செய்தபோது,ஆலய நிர்வாகத்திற்குச் சொல்லி, அவர்களை ஆலய நிர்வாகத்தின் உதவியுடன் வெளியேற்றிய வரலாற்றுப் பந்தம் அவர்களுக்கும் எனக்குமானது!

வழக்கமாக, சங்கடமான கேள்விகள் ஏதேனும் கேட்டால் அடியாட்களாக மாறும் வடநாட்டு இறக்குமதிகளே நிற்பர்.ஆனால் வழக்கத்துக்கு மாறாக, ஒரு அம்மையார் நெற்றியில் மேல்நோக்கிய சந்தன கீறோடு அங்கு நின்று விளக்கவுரைகளை நாடும் நபர்களுக்கு தமிழில் வழங்கிக்கொண்டிருந்தார். எனவே ஒரு தமிழரை இவர்கள் தமக்கு இரையாக்கியுள்ளனர் என்பதை அனுமானித்துக் கொண்டு,

நான் அவரிடம் ஏதேனும் "என் கேள்விகளுக்குரிய பதில்" கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு, அந்த அம்மையாரை நாடிச் சென்று என் கேள்விகளை முன் வைத்தேன்.



1. நான்: தென்கலை,வடகலை என்று இருவகை நாமங்கள் ஏற்கனவே இருக்க; தென்கலை நாமத்தையே விஷிட்டாத்வைத வைணவர்கள் பின்பற்றிவர, தாங்கள் சந்தனக் கோடுமாதிரி புதியவகை நாமத்தை போட்டிருப்பது வைணவ ஆகமத்துக்கு முரணானது அல்லவா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

2.நான்:பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை விளக்கவுரையானது விஷிட்டாத்வைத வைணவத்துக்கு உரியதா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

3.நான்: கௌடிய சம்பிரதாய வைணவம் என்ற உங்களுடைய வைணவப் பிரிவு வைணவ ஆகமங்களான பஞ்சராத்திரம்,வைகானசம் என்பவற்றினை ஏற்கின்றதா?

அம்மையார்: இப்ப அது எதற்குப் பிரபு

4. நான்: ஓம் நமோ நாராயணா என்னும் எட்டெழுத்து மந்திரமே முக்திக்குரியது என்று வைணவ ஆகமங்களும் ஆழ்வார் பாசுரங்களும் உறுதிசெய்கின்றன. கிருஷ்ணா,ராமா எனினும் முக்தி ஏற்படும் என்று வைணவர் நம்புகின்றனர். நீங்கள் கிருஷ்ணா,ராமா மட்டுமே முக்திதரும் என்கின்றீர்கள். அப்படியானால் ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

5. நான்: வைணவ ஆழ்வார்களில் பொய்கையாழ்வார்,பேயாழ்வார் சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று பாசுரங்களில் பாடியுள்ளனர். நீங்கள் அதனை ஏற்கி்றீர்களா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

6.நான்: தமிழ்ப் பாசுரங்களையும் ஆழ்வார்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

7. நான்: சிவபெருமானை கடவுள்களில் ஒருவராயேனும் வணங்குகின்றீர்களா?

அம்மையார் : இப்ப அது எதற்குப் பிரபு

இப்படி நான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,அந்த அம்மையார் ஈயாடிய முகத்தோடு பதிவுசெய்த ஒலிநாடா மாதிரி "இப்ப அது எதற்கு பிரபு" என்று மழுப்பிக் கொண்டிருக்க, ஒரு வடநாட்டு இறக்குமதிக் கூட்டத்தைச் சார்ந்த கரே கிருஷ்ணா அடியாள் ஏதோ வில்லங்கம் நடக்கின்றதென்பதை உணர்தவராய் ஓடிவந்தார். அவருக்கு என் முகம் நல்ல பழக்கமுடையதென்பதால் அவரது முகத்தில் கோபக்கனல் தெறித்தவண்ணம்,

கொச்சைத் தமிழில் "என்ன பிரச்சினை" என்றார்!!! நாராயணா என்றேன். அவர் இறுக்கமான முகத்துடன் இருக்க, புன்முறுவல் பூத்தபடி விடைபெற்றேன்.

எனது பாட்டனார் திருநீறு பூசித் தேவாரம்பாடி "நாராயணா" என்று துதிக்கும் நாராயணனைக் குலதெய்வமாக வழிபடும் சந்ததியைச் சார்ந்தவர். நானும் சிறுவயதிலிருந்தே எங்கள் குலதெய்வமான பொன்னாலை வரதராசப் பெருமாளை சம்புபட்ச நாராயணனாய் வழிபடும் அடியவன். 93ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்துக்குள் நுழைய முற்பட்டபோது, பெரும்யுத்தம் வெடிக்கின்றது. எனது அம்மா, பிரசவவலியால் துடிக்கின்றார். மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகனவசதிகள் இல்லாமல் போய்விட்டது. வீட்டில் பிரசவம்பார்த்து அனுபவங்கள் கொண்ட பாட்டிமார் வந்து பிரசவம் பார்க்கின்றனர். தம்பி பிறக்க இருக்கிறான். நான் பாட்டனாருடன் எமது வீட்டு வேப்பமரத்தடியில் நிற்கிறேன். ஒரு குண்டொன்று தூரே விழுகின்றது.வெடித்துச் சிதறிப் பறக்கின்ற அதனுடைய துண்டுகள் வீட்டின் பரந்த வளவில் பலமுனைகளில்த் தெறித்து விழுகின்றன. வீட்டின் கண்ணாடிகள் நொறுக்குகின்றன. பாட்டனார் "நாராயணா" என்று கத்துகின்றார். அவர் நாராயணா என்று கத்தியதும், நாராயணனின் வாகனமாக போற்றப்படும் பருத்துகள் சில எங்கிருந்தோ ஓடோடிவந்து வீட்டைச் சுற்றி வட்டமிட்டத் தொடங்கின. அதன்பின்னர் எத்தனையோ குண்டுகள் எங்கெங்கோ விழுகின்றன.ஆனால் ஒரு துண்டுகூட எங்கள் வளவுக்குள்ளும் வரவில்லை. வீட்டிற்கும் சேதமில்லை. பாட்டனார் நாராயணன் வந்துவிட்டார் என்று தேவாரங்களும் பாசுரங்களும் பாடியபடி நின்றார்.

இதன்பின்னர், 95ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு யுத்தத்தை ஆரம்பிக்கின்றனர். இராணுவம் முன்நோக்கி வருகின்றதென்று கூறப்பட்டதால் பாட்டனாரும் நாமும் வீட்டைவிட்டு வெளிக்கிட்டு, சனத்தோடு சனமாய் நடக்கின்றோம். ஒருகட்டத்தில் பாட்டனார் நடக்கமுடியாது என்று மறுக்கின்றார். ஒரு வீடொன்றில் இரு வயோதிப தம்பதியர் (தூரத்து உறவினர்) வெளிக்கிட விருப்பமில்லாது தங்கி நிற்கின்றனர். அதனைத் தெரிந்துகொண்டதும், பாட்டனார் அங்குதங்குவதாய்க் கூறி எம்மை வெளிகிடச் சொன்னார். கொஞ்சத்தூரம் சென்றதும், பறந்துவந்த விமானமொன்று குண்டொன்றைப் போடுகின்றது. அது எமது பாட்டனாரைத் தங்கவைத்துள்ள வீட்டில் விழுகின்றது. பெரும் கூக்குரல்ச் சத்தம். அம்மா கதறி அழுது அந்த வீட்டை நோக்கி ஓடுகின்றார். பாட்டனார் ஒரு தூணைப் பிடித்தபடி நிற்கின்றார். குண்டு அவ்வீட்டிலுள்ள குசினியில்(சமயலறையில்) விழுந்தமையால் சமைத்துக்கொண்டிருந்த பாட்டி உடல்சிதறி இறந்துவிட்டார். கொஞ்சநேரத்துக்கு முதல் எமது பாட்டனாரும் குசினிக்கு அருகில் இருந்த அறைக்குள்த்தான் இருந்திருக்கிறார். புழுக்கம்தாங்க முடியாது வெளியே வந்தவருக்கு அங்கிருந்த வேலையாள் "குண்டு விழுகிது" என்ற கத்திய சத்தத்தைக் கேட்டு "நாராயணா" என்றபடி அருகிலிருந்த தூணை அணைத்தபடி நிற்றிருக்கிறார். குண்டு வெடித்துச் சிதறி வீட்டிற்கு சேதங்கள் ஏற்பட்டபோதும் எமது பாட்டனாரின் மேனியில் எந்தக் கீறலையும் அவை ஏற்படுத்தவில்லை.

ஈழத்துச் சைவர்களில் குலதெய்வமாக நாராயணனைக் கொண்டோர்க்கு "நாராயணா" என்பது சம்புபட்ச மந்திரம். தேவார திருவாசகங்களோடு பாசுரங்கள்பாடி திருநீறு பூசி நாராயணா என்று மார்கழிச் சொர்கவாசல் பார்த்து, சிவராத்திரிக்கு கண் விழித்து சிவபுராணம் ஓதி, சிவபெருமானை முழுமுதலாயும் நாராயணனை சம்புபட்சமாயும்(சிவவடிவு) துதிக்கின்ற எமக்கு, எங்கள் பண்பாடு,தேசவழமை,மண்வாசணை அத்தனைக்கும் முரணாக;

                       நாராயணனின் அவதாரமான கண்ணபிரானை மட்டுமே ஏற்றுக்கொண்டு நாராயணனை நிராகரித்து, நாராயணா என்றால் முக்தி வராது என்று கூறும் முட்டாள்களைக் கொண்ட இந்த கரே கிருஷ்ணாக்கூட்டத்தார் கொடிய விசமே!!!



இவ் விசக்கூட்டத்திற்கு இலகுவில் பலியாகக்கூடியவர் திருமாலை குலதெய்வமாகக் கொண்டவர்களே! எனவே திருமாலைக் குலதெய்வமாகக் கொண்ட எம் சைவமக்களுக்கு, நாராயணனையே யாரென்று கேட்கும் நாதாரிக்கூட்டமே இந்தக் கரே கிருஷ்ணாக்காரர் என்பதையும் இவர்களின் நாமம் தொட்டு கொள்கைவரை அத்தனையும் வைணவ ஆகமங்களுக்கு முரணானது என்பதையும், வைணவ ஆகமங்களையும் ஆழ்வார்களையும் ஏற்றுக்கொள்ளாத "கேடிகள்" இவர்கள் என்பதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவனே மூவர் என்றும் ஒன்பது தினமும் அன்பால் பரமனை அருச்சித்தாரும் பாம்பு அணைப் பள்ளி வள்ளல்
புரம் அதுபொருந்தி வாழ்வர் -சிவதருமோத்தரம் (சைவ உப ஆகம நூல்)

பாம்பு அணைப் பள்ளியானைப்
பழிமொழி பகர்ந்த பாவி
கோம்பியாய் உதர அங்கி
கூர்ந்திடக் குலையும் - சிவதருமோத்தரம் (சைவ உப ஆகம நூல்)

சிவபெருமானே மூவராய் உள்ளார் என்று பிரம்மா,நாராயணனையும் சம்புபட்சமாய் (சிவவடிவு) கருதி,அன்பால் சிவபெருமானை ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக வழிபட்டவர் சிவபெருமானின் அருளால் வைகுண்டம் அடைந்து இன்புறுவர் என்றும்;

நாராயணனை நிந்தனை செய்பவன் ஓணானாகப் பிறந்து துன்புறுவான் என்றும் சைவ உபாகம நூலான சிவதருமோத்தரம் உரைக்கின்றது. ஆக; இதுதான் ஈழத்துச் சைவ சமயம். இங்கு நாராயணன் சம்புபட்சம்.

ஆனால், நாராயணனையே நிந்திக்கும்கூட்டம் "கிருஷ்ணா" என்ற பெயரில் தமிழருக்குள் ஊடுருவிக்கொண்டு வருகின்றது. இது கிருஷ்ணரின் பெயரால் சிவ -விஷ்ணு பேதத்தை இந்த மண்ணில் ஊட்டுகின்றது. இதன் வெளிப்பாடாய், திருகோணமலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திருமால் ஆலயமானது திருநீறினை பிரசாதமாய் வழங்க மறுத்துள்ளமையாகும். இதுவே ஈழநாட்டில் திருநீறை தடைசெய்துள்ள முதலாவது திருமால் ஆலயம்.

எனவே, இலங்கை சைவ மக்கள் இந்த வஞ்சகக் கூட்டத்தை வெறுத்து ஒதுக்க வேண்டியதுடன் , நாராயணனையே மதிக்காத இக்கூட்டத்தார் கிருஷ்ணரின் பெயரால் நாராயணனின் ஆலயங்களிற்கு வந்து பிரச்சாரங்கள் செய்வதனை நாராயணனின் அடியவர்கள் முன்வந்து தடுத்து நிறுத்தவேண்டும். அதுவே நம் சமயப்பண்பாட்டின் அழகுடமையைப் பேணுவதற்கு வழிவகுக்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "கரே கிருஷ்ணாவும் ஈழத்து சம்புபட்ச நாராயணனும்"

கிருஷ்ணா said...

நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக்கிறிர்களா இதற்கான விடை யே உங்கள் பதிவுக்கான விடை கண்ணன் அல்லால் இல்லை சரண் கற்பார் ராம பிரானை இல்லாது என்ற ஆழ்வார் பாசுரம் படித்தது இல்யைா

கிருஷ்ணா said...

நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக்கிறிர்களா இதற்கான விடை யே உங்கள் பதிவுக்கான விடை கண்ணன் அல்லால் இல்லை சரண் கற்பார் ராம பிரானை இல்லாது என்ற ஆழ்வார் பாசுரம் படித்தது இல்யைா

Mari said...

அருமையான பதிவு.
இருப்பினும் சிவத்தமிழன் அவர்களே!
108 வேத உபநிடதங்களையும் சைவர்கள் பிரமாணமாக உடையவர்கள்.அவற்றில் சாபால உபநிடதங்கள் ஐந்து.இந்த ஐந்தும் இன்னும் பல சிவபரத்துவ உபநிடதங்களுக்கும் சங்கராச்சாரியார்,ராமானுசர்,
போன்றோர் பாடியம் செய்யவில்லை என்பதால் அவை பிற்கால இடைச்செருகல்கள் என்றும் சிவபரத்துவம் சாதிக்க வந்த அரதத்தரும் அப்பைய தீக்கிதரும் கூட தமது நூல்களில் உருத்திர இருதய உபநிடதம்,பஸ்மசாபால உபநிடதம்,பிருஹஜ்ஜாபால உபநிடதம் ,சரப உபநிடதம் போன்றவைகளை மேற்கோள் காட்டாததால் அவையெல்லாம் இடைச்செருகல்கள் என்றும் அவற்றைக் கூறும் முக்திக உபநிடதமும் பொய் என்றும் உரைக்கின்றனர். இதற்கு சற்று விளக்கம் தர வேண்டுகிறேன்

Post a Comment