"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, February 23, 2009

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்

தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம்,கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் ,ரிசப விரதம் என்பன அவையாகும்.மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.
இவ்வாறு அருமையும் திருவருளும் நிறைந்த சிவராத்திரியானது நித்திய,பட்ச,யோக,மாத சிவராத்திரி,மகா சிவராத்திரி என ஐவகைப்படும்.
நித்திய சிவராத்திரி :- பன்னிரண்டு மாதங்களிலும் வருகிற தேய்பிறை,வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி எனப்படும்
மாத சிவராத்திரி :- ஒவ்வொரு மாதத்திலும் வருகிற தேய்பிறைச் சதுர்த்தசி மாத சிவராத்திரியாகும்
பட்ச சிவராத்திரி :-தை மாதத்தில்,தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூசை செய்தல பட்ச சிவராத்திரி என அழைக்கப்படும்.
யோக சிவராத்திரி :- திங்கள் கிழமையன்று அமாவாசையும் அறுபது நாழிகையும் இருந்தால் அன்றைய நாள் யோகசிவராத்திரி எனப்படும
மகா சிவராத்திரி :-ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும்
உத்தமோத்தம சிவராத்திரி,உத்தம சிவராத்திரி,மத்திம சிவராத்திரி,அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது இத்தம சிவராத்திரி.காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.
சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்
அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.
பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர்.இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.
வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.
சிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்
முதல் சாமம்: பஞ்சகவ்ய அபிடேகம்,சந்தனக் காப்பு,வில்வம்,தாமரை மலர்களால் அலங்கரித்தல் அர்ச்சனை செய்தல்,பச்சைப் பயிறு பொங்கல் நிவேதனம்,ரிக்வேத பாராயணம்
இரண்டாம் சாமம்: சர்க்கரை,பால்,தயிர்,நெய் கலந்த ரச பஞ்சாமிர்த அபிடேகம், பச்சைக் கற்பூரம்,பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்தல்,துளசி அலங்காரம்,வில்வ அர்ச்சனை,பாயசம் நிவேதனம்,யசூர்வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்: தேன் அபிடேகம்,பச்சைக் கற்பூரம் சார்த்தல்,மல்லிகை அலங்காரம்,வில்வம் அர்ச்சனை,எள் அன்னம் நிவேதனம்,சாமவேத பாராயணம்
நான்காம் சாமம்: கருப்பஞ்சாறு அபிடேகம்,நந்தியாவட்டை மலர் சார்த்தல்,அல்லி,நீலோற்பலம்,நந்தியாவர்த்தம் ஆகிய மலர்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம்,அதர்வண வேத பாராயணம்

சிவராத்திரி விரத விதிகள்
சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள்
அதிகாலை நீராடி,அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.
வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.
நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை லிங்கோத்பவ காலம் என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே!தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் திரு அருமைகள்

வேடனொருவன் வேட்டையாடச் சென்றபோது புலி ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது. செய்வதறியாது ஓடிச் சென்று மரமொன்றில் ஏறினான்.துரத்தி வந்த புலியும் அவனை கொல்வதற்காய் கீழேயே காத்திருக்கத் தொடங்கியது. இரவானது. புலி போனபாடில்லை. நித்திரை கொண்டால் மரத்தில் இருந்து தவறி விழுந்து புலிக்கு இரையாகும் வாய்ப்பு இருப்பதை எண்ணி நித்திரை கொள்ளாது மரத்தின்மேலேயே தங்கியிருந்த வேடன் மரத்தில் இருந்த இலைகளை பிடுங்கிப் பிடுங்கி கிழே போட்டவாறு இருந்தான். நித்திரையைத் தவர்ப்பதன் பொருட்டு அவன் மரத்தின் இலைகளைப் பிடுங்கிக் பிடுங்கிப் போட்டுக்கொண்டிருந்தான்.மறுநாள் காலை புலி தானாகவே விலகிச் சென்றுவிட்டது.
அன்று இரவு சிவராத்திரி இரவாகும். அவன் ஏறிய மரம் வில்வ மரமாகும். அவன் பிடுங்கிப் போட்ட வில்வ இலைகள் கிழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. இவ்வாறு தன்னையறியாமலே உண்ணாது உறங்காது சிவராத்திரி விரதத்தையும் சிவலிங்க பூசையையும் செய்த புண்ணியத்தை பெற்றவேடன் பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றான். இவ் அற்புதம் நடைபெற்ற புண்ணிய பூமி திருவைகாவூர் திருத்தலமாகும். (திருவைகாவூர் எனும் சொல்லின்மேல் சொடுக்குவதம் மூலம் குறித்த திருத்தலத்தைக் கண்டு இறையின்பம் நுகரலாம்.)
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று,மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி
எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

அர்ஜூனன் தவமிருந்து எம்பெருமானிடம் பாசுபதம் பெற்றநாள்
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்
மார்க்கண்டேயருக்காய் எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்
கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.(திருக்காளத்தி திருத்தலத்தை கண்டு சிவானந்தம் நுகர திருக்காளத்தி எனும் சொல்லின்மேல் சொடுக்குக)
"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம்.ஆனால் சிறப்பாக,மலர்கள்,நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.
நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
திருமந்திரம்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்"

சிவத்தமிழோன் said...

மகாசிவராத்திரி நாளன்று,
எனக்கு மோட்சம் வேண்டும்
எனது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு வேண்டும்
நான் வெளிநாடு போகவேண்டும்
நான் அது பெறவேண்டும் இது பெறவேண்டும்
என சுயநலமாகவே பலர் பொதுவாக வேண்டுவர். பக்குவப்பட்ட நிலையடைந்தோர் "எம்பெருமானே பிறப்பிறப்பு அற்ற பேரின்பப் பெருவாழ்வைத் அடியேனுக்கு அளியுமையா" என சரணடைவர்.

ஆனால் இந்த வருடம் மலருகிற மகாசிவராத்திரி நாளன்று,
தமிழர்கள் அனைவரினதும் வேண்டுதலாக இருக்க வேண்டியது " ஐயனே,தமிழரசே! உமது திருவடிகளை தொழுகிறோம். எம் இனத்தை காத்தருளும் ஐயா" என்பதேயாகும்.

கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம் என்பர். உண்மையே! பாரில் வாழுகிற எல்லாத் தமிழர்களும் ஒரே நாளில் ஒரே பொழுதில் மனதாரப் பிரார்த்திக்கும் பிரார்த்தனைக்கு எம்பெருமான் செவிமடுக்காது விடுவாரா என்ன சொல்லுங்கள் அன்பர்களே!
நம்பிக்கை தளராது பிரார்த்திப்போம்.

ஊழிக் காலத்தில் தனியாக இருக்கும் எம்பெருமானுடன் உடனிருக்கும் புகழ் பெற்றது தமிழ் மொழி எனலாம். மாணிக்கவாசகரின் தமிழை எழுதி தனக்கென ஒரு பிரதியை எம்பெருமான் எடுத்துக் கொண்டார். இதனை எம்பெருமான், ஊழிக் காலத்தில் மாணிக்கவாசகரின் தெவிட்டாத தமிழைப் படித்துத்துப் படித்துப் தனிமையையில் ஏற்படும் சலிப்பைப்போக்கவே இவ்வாறு பிரதி எடுத்துக் கொண்டார் என சைவப் பெரியோர் கூறுவர். எம்பெருமானுக்கு இனிமையை வழங்கும் தமிழ் இன்று துயரில் வாழுகின்ற இவ் இக்கட்டான காலகட்டத்தில் எளியவர்களாகிய நாம் அனைவரும் செய்யவேண்டிய பிரதான சிவப்பணி இவ்வேண்டுதலே ஆகும்.

தனது மகளான கன்னித் தமிழன்னைக்கு அபயம் அளிக்காது எம்பெருமான் எங்கனம் விடுவார் சொல்லுங்கள்?

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

மகாசிவராத்திரி நாள்:- திங்கள் கிழமை 11ம் நாள் மாசி மாதம் சர்வதாரி வருடம்
(ஆங்கில ஆண்டு 2009 பெப்பிரவரி மாதம் 23ம் நாள் திங்கள் கிழமை)

சிவத்தமிழோன்

Anonymous said...

சிவபூமி சிறப்புற
வேண்டும்
செந்தமிழ் செழித்திட
வேண்டும்


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!!!

சிவத்தமிழோன் said...

நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு அனோனிமஸ் அன்பரே,எம்பெருமான் சிவபெருமானின் திருவருள் நம் அனைவருக்கும் நல்ல பதில் அளிக்கும் என திடமாக நம்புவோமாக.

Anonymous said...

தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை.
எனது வேண்டுகோள் எல்லாம் தாங்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் மட்டும் அன்றி தமிழரின் உரிமைக்கும் எழுத்தின் மூலம் குரல் கொடுக்க வேண்டும் என்பதே .

ஓம் நமசிவாய

Post a Comment