"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, March 9, 2010

சிறுதெய்வங்களும் மானிடரும் அருள்கின்றனவே....எப்படி?


மானிடரையும் மற்றச் சிறுதெய்வங்களையும் வழிபடும்போதும் நன்மைகள் கிடைக்கின்றனவே? அது எப்படி?  இவ்வண்ணம் எழுகின்ற வினாக்களை, சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் தெளிவுபடுத்துகின்றது. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை.சித்தியாருக்கு மிஞ்சிய நூலுமில்லை என்பது முதுமொழி.




சிவஞானசித்தியார் நூலின் சுபக்கம் இரண்டாம் சூத்திரம் 24,25,26,27 ஆம் பாடல்கள் சிவபெருமான் உயிர்கள் மேல் எவ்வளவு கருணையுடையவன் என்பதை உணர்ந்துகின்றன.

மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! (24)


தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும்  இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்.

யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே! (25)


எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.

இங்குநாம் சிலர்க்குப் பூசை
இயற்றினால் இவர்க ளோவந்(து)
அங்குவான் தருவார் அன்றேல்
அத் தெய்வம் எல்லாம்
இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்(கு)
ஆணைவைப்பால் அளிப்பான்  (26)


இங்கு நாம் சிறுதெய்வங்கள்,பெரியோர்,உயர்ந்தோருக்கு வழிபாடு செய்தால்,அவர்களே அவற்றுக்கான பலன்களை மறுபிறவியில் நமக்குத் தரமாட்டார்கள். எங்கும் உள்ள சிவனே வந்து அருள் செய்வான்.எல்லாம் அவன் ஆணை வழியாக நிற்பதுவும் இயங்குவதுமாகையால் அவனே நமக்குப் பயன் தருவான்.

காண்பவன் சிவனே ஆனால்
அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பறம் அரன் தன் பாதம்
மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன
விதிஅறம் விருப்பொன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும்
பூசனை புரிந்து கொள்ளே   (27)


எல்லாம் ஏற்பவன் சிவனேயாதலால், அவனடிக்கு அன்பு செய்வது சிறந்த அறமாகும். அவன் திருவடியை மறந்து செய்யும் அறங்கள், வீண் செயலே ஆகும். ஆகவே அவனை வழிபடுவதே அறமும் செய்யத்தக்கதாகும்.



சைவ சமயத்தில் பிறத்தல், சைவ சமயத்தை சார்ந்து ஒழுகுதல் புண்ணியத்தின் பயன் என்பதையும் இந்நூல் உணர்த்துகின்றது.


நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே
                                - சிவஞான சித்தியார்


மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம்.

வாழ்வெனும் மையல் விட்டு
வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே
                                                 -சிவஞான சித்தியார்


வாழ்வுபற்றிய செருக்குகள் பற்றாமலும், வறுமையில் சிறுமையடையாமலும் பணிவு கொண்டு, சைவ சமயம் சார்வது; நல்வினையில் பெறுதற்கரிய பேறு. மிக உயர்ந்த சிவஞானம் பெற்று பிறைமதி சூடிய, இறைவனை வழிபட்டு இருப்போர் அருள்மிகப் பெற்றவராம்.
                              
எனவே, வேதம் பயிலுகின்ற நாட்டில் பிறக்க முடியாதவர்களுக்கும், அன்றி பிறந்தும் நல்லூழ் குறைவால் திருநெறிச் சைவத்தை ஒழுகும் பெறு வாய்க்கமுடியாதவர்களுக்கும், அன்றி திருநெறிச் சைவத்தில் பிறந்தும் ஞானக்குறைவால் சிறுதெய்வவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் எம்பெருமான் சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு, அவர்கள் வழிபடும் தெய்வத்தின் வடிவம் தாங்கி அவர்களின் நல்வினை-தீவினைக்கு ஏற்ப அருள்பாலிக்கின்றார்.
 

பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றியை இழந்து தவித்தபோது தாய்ப்பன்றியாக உருவெடுத்து பாலூட்டிய எம்பெருமானின் கருணையை வார்த்தைகளால் அளவிடமுடியாது. அப்படிப்பட்ட எம்பெருமான்; நல்வழியில் நடப்பவர் ஞானக்குறைவால் தேவதைகளையோ அன்றி மானிடர்களையோ கடவுளாகக் கருதி வழிபட்டால், அவர்களை கைவிட்டுவிடுவாரா என்ன?

பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே ஆவர். எனவே வினைகள் செய்வனவாகவும், இன்ப-துன்பம் நுகர்வனவாகவும், பிறப்பு-இறப்பு என்னும் சாகரத்துள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இவர்கள் இருப்பதால் இச்சிறுதெய்வங்களால் ஆவதொன்றில்லை. ஆனால்  நல்வினை தீவினைக்கு ஏற்ப வந்தமைய வேண்டிய பலன்களை சிவபெருமானை அறியாத சிறுதெய்வ-பிறநெறி வழிபாட்டாளர்களுக்கு அவர்கள் நம்புகின்ற உருவெடுத்து சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்.  இது எப்பெருமானின் தனிப் பெருங்கருணையால் சிறுதெய்வ- பிறநெறி வழிபாட்டாளர்கள் பெறும் பயனாகும்.

எனவே; இத்தகு எம்பெருமானின் கருணையையும் முழுமுதற்தன்மையையும் உணர்ந்து எம்பெருமானின் திருவடிக்கு அன்பு செய்வதே சிறந்த அறமாகும். "காண்பவன் சிவனே ஆனால் அவனடிக்கு அன்பு செய்கை" என்று  மேலே தரப்பட்டுள்ள சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி  இதை வலியுறுத்துகின்றது.  இவ்வுண்மையை உணர மறுத்து,  சிவபெருமானின் திருவடியை மறந்து செய்கின்ற அறங்கள் யாவும் வீண் செயலே! "மாண்பறம் அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம் வீண்செயல்" என்று 
சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி இதை தெளிவுபடுத்துகின்றது.

மயக்கவுணர்வால் தேவதைகளையும், மானிடர்களையும் வழிபடுபவர்க்கு சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு பலனளிப்பதால், எல்லாவற்றுக்கும் உத்தவரவாதமாக விளங்கும் சிவபெருமானையே அன்புசெய்து பூசித்தல் வேண்டும் என்பதையே சிவஞானசித்தியார் நூல் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
 

நம்முடையதும் நம்மில் சிலர் மயக்கவுணர்வால் ஞானக்குறைவால் கடவுளாகக் கருதும் மானிடர்களினதும் தேவதைகளினதும் பிறப்பையும் இறப்பையும் அவரவர் கருவில் உதிக்கும் முன்னரே வரையறை செய்த எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செய்து பூசிப்பது தவப்பயனே!
 

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக்  கருணை செய் தானே " - திருமந்திரம்


ஆகமப் பொருளை சிவபெருமான் தமிழ்-ஆரியம் என்னும் இருமொழிகளிலும் ஏக காலத்தில் அம்மைக்கு விளக்கியபோதும் நமது நல்லூழ் குறைவால் சிவாகமங்கள் தமிழில் கிடைக்காமற் போயிற்று. எனினும் சமயகுரவர்கள் வழியாக சைவசித்தாந்த நூல்களாக தமிழில் சிவாகப் பொருளை அறியும்பொருட்டு நமக்கு எம்பெருமான் வழிசமைத்திருக்க, நாம் அவற்றை அறியாது, உதாசீனம் செய்து வாழ்வது, அறிந்தோர் எடுத்தியம்பும் அறிவுரைகளை செவிமடுக்காது தவிர்ப்பது யாவும் மீளாப்பழிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்வோமாக!

மானிடப் பிறவி தானும்
வகுத்தது மனவாக்கு காயம்
ஆன் இடத்து ஐந்தும் மாடும்
அரன்பணிக் காக அன்றோ
வானிடத் தவரும் மண்மேல்
வந்துஅரன் தனைஇர்ச் சிப்பர்
ஊன் எடுத்து உழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ
                              -சிவஞானசித்தியார்

மனிதப் பிறவிக்கு, மனம் வாக்கு காயம் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது சிவன் பணிக்காகவே ஆகும்.ஐம்பொறிகளும் சிவன் பணிக்காகவே! வானில் உள்ள தேவர்களும் மண்ணில் வந்து சிவனை வழிபடுவர். அப்படியிருக்க; உடம்பைப் பெற்றும் இவை உணராதவர்கள் அறியாமை உடையவரே ஆவர் என்று சிவஞானசித்தியார் நூல் உரைக்கின்றது.

தேவர் சிவனை வழிபடும் பொருட்டு பூமிக்கு வருகையில்; நாம், பூமியில் சிவாலயங்களால் சூழப்பட்ட நற்றமிழ் நாட்டில் வாழும் பேறுபெற்றும் சிவாலய வழிபாட்டை மறந்து சிறுதெய்வ-பிறநெறி தெய்வ- மானிடச் சாமிகளை மயக்கத்தால் வழிபடுபது தீய ஊழின்  விளைவே!


பிறவாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை வழங்குபவனுமாகிய சிவபெருமானை வணங்குங்கள்; அவ்வாறு வணங்கினால் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப் பேறு அடையலாம்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி  மாயா  விருத்தமு மாமே
                                                 -திருமந்திரம்

 

சிவனருள் இருந்தால்தான் சிவனை வழிபடும் பேறு அமையும் என்பதை திருவாசகத்தில் சிவபுராணத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் தனது தேன் தமிழால் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்கிறார். சிவபெருமானின் அருள் இருந்தால்தான் சிவபெருமானை வழிபடும் சைவநெறியை ஒழுகும் பேறு அமையும்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறுதெய்வங்களும் மானிடரும் அருள்கின்றனவே....எப்படி?"

Post a Comment