"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 29, 2012

ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9

நீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது.

இறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை ஆன்மாவுடனாக இறைவனின் தொடர்பை முன்னைய பகுதிகளில் பார்த்தோம்!
அத்வைதம் என்னும் சொல்லுக்கு சங்கரர் கண்டது பிழையான பொருளென்றும் நம் சித்தாந்திகள் கண்டதே சாலச்சிறந்த பொருள் என்றும் பகுத்தறிந்தோம்.
முன்னைய பகுதிகள் :- சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8 

இனி, ஆன்மாவின் தன்மைபற்றி சைவசித்தாந்தம் என்ன கூறுகின்றதென்று பார்ப்போம்!
ஆன்மாக்கள் எத்தனை?

எண்ணற்றன! இதுதான் சைவசித்தாந்தம் சொல்லும் பதில்! பூமியில் செடி
,கொடி தொட்டு மனிதன் ஈறாய் எத்தனை உயிர்கள் உண்டென்று கணக்கெடுக்க முடியுமா?  பூமியில் உள்ளவற்றையே  கணக்கெடுக்க முடியவில்லையென்றால்...........மொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கையை சிந்தித்துப் பார்க்கத்தான் முடியுமா? முடியாது! அதனால்த்தான் எண்ணற்றன என்கின்றது சைவசித்தாந்தம்!

ஆன்மாக்கள் எப்போது உருவாகின?
ஆகா; ருமையான கேள்வி! ஏன் உருவாகின, எங்கிருந்து உருவாகின என்ற கேள்விகள்கூட மனதில் எழலாம். எனவே அத்தகைய கேள்விகளே எழுவதற்கு வாய்ப்பில்லாத அருமையான விடையை சைவசித்தாந்தம் பகருகின்றது.ஆன்மாக்களும் சிவனைப் போல் அநாதியே! இதுதான் சைவசித்தாந்தம் பகரும் அருமையான பதில்!

"சுடரொளியாய் என்றுமுள்ள அன்றளவும் யானும் உளன்" - உமாபதி சிவாச்சாரியார்

அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்?
ஆன்மாக்கள் பூமிக்கு வந்த பிற்பாடே காலத்தத்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கின்றன. ஆக; பஞ்சபூதங்களாலான, இவ்வுலகிற்கு வருவதற்கு முன்னர் காலம் என்னும் தத்துவத்தில் அவர்கள் இருந்திலர்.

ஒரு பிறந்த மனிதனுக்கே, குழந்தைப்பருவம் என்று தொடங்கி, மூப்பு வந்து காலத்தை உணர்த்துகின்றது. எனவே, காலம் என்பது சடப்பொருட்களால்; அதாவது ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பைப் பெற்றபின்னர் சடப்பொருட்களில்(ஐம்பூதங்களில்) நடைபெறும் மாற்றங்களைக் கொண்டு உணரும் ஒரு தத்துவம்!
எனவே, அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்? என்று சிந்திப்பது முரண்.

காலமே இல்லாத இயல்பில் உள்ள ஆன்மாவுக்கு காலத்தை ஏற்றிக் கதைப்பதும் பாலுக்கு உறைப்பு எக்காலத்திலிருந்து உண்டு என்று ஆராய்வதும் ஒன்றுதான்.

ஆன்மாவை இன்னும் விரிவாக அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்.
மேலும் படிக்க...

Friday, December 28, 2012

ஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்!

மாலறியா நான்முகனும் காணா மலையினை – திருவெம்பாவை ஒருவ ராயிரு மூவரு மாயவன்  - அப்பர் தேவாரம் (திருக்கடம்பூர்)
ஓருவாயினானை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்  படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - திருஞானசம்பந்தர் தேவாரம் (திருவெழுகூற்றிருக்கை)


என்னடா இது நாராயணனால் காணமுடியாத சிவபெருமான் என்று திருமுறைகள் துதிக்கின்றன. அதே திருமுறைகள் நாராயணனாய் இருப்பவன் சிவபெருமான் என்றும் துதிக்கின்றன! பெரும் முரணாயிற்றே!!!! 
ஏன் இப்படியொரு முரண்?
பார்த்திடுவோம்!

மூன்று மலங்களாகிய ஆணவம்,கன்மம்,மாயை ஆகியனவற்றில் கடைசி இரண்டும் பக்குவத்தால் அழிவுற்று ஆணவம் மங்கிநிற்கும் நிலையில், ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர். இவர்களில் ஆணவம் மென்மையாகக் காணப்படும்.

இந்த ஆன்மாக்கள் தாம்செய்த புண்ணியத்தின் பலனாக, பிரம்ம,விஷ்ணுக்களாகப் பதவி பெறுவர். இவர்கள் சிவபெருமானின் அதட்டித்தலால், தமது பதவிகளுக்குரிய தொழிலைப் புரிவர். இவர்களில் மங்கிநிற்கும் ஆணவம் சிலசமயம் மேலோங்கிவிடும். இதன் காரணமாகவே "நானே முழுமுதல்" என்ற சண்டைசச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவ்வகையான ஆன்மாக்கள் பிரம்ம,விஷ்ணுப்பதவிகளை அனுபவிக்கும்போது, அவ்வகையான பிரம்ம,விஷ்ணுக்களை அணுபட்ச பிரம்ம,விஷ்ணு என்பர். அதாவது காரியேசுவரர் என்று அழைக்கப்படுவர்.  அணுபட்சம் என்றால் ஆன்மா தொடர்பானது என்று பொருள்ப்படும்.
சிலசமயம், சிவபெருமானே பிரம்ம,விஷ்ணுக்களாய் திருவடிவம் கொண்டு  படைத்தல்,காத்தல் தொழில்களைச் செய்வார். இவ்வாறு சிவபெருமானின் திருவடிவங்களாக விளங்கும் பிரம்ம,விஷ்ணுக்களை சம்புபட்சம் என்பர். அதாவது காரணேசுவரர் என்று போற்றப்படுவர். சம்புபட்சம் என்றால் சிவசம்பந்தமுடையது என்று பொருள்ப்படும்

அதுசரி, சொர்க்கவாசல் பற்றி இங்கு என்ன தொடர்பு?

ஈழவளநாட்டில் இரண்டு பிரசித்தமுடைய திருமால் ஆலயங்கள் உண்டு. ஒன்று இந்திரனின் சாபத்தைப் போக்குவதற்காக ஆமையாகத் தோன்றி கல் ஆமையாக நிலைபெற்று அருளாட்சி செய்யும் பொன்னாலை வரதராசப்பெருமாள் ஆலயம். மற்றையது சக்கரமாக தோன்றி அருளாட்சி செய்யும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம்.  பொன்னாலை வரதராசப் பெருமாள் ஆலயத்துக்கும் எங்கள் குடுப்பத்துக்கும் பண்டுதொட்டு தொடர்பு இருந்துவருகின்றமையால் என்னுடைய குழந்தைப் பருவந்தொட்டு சிறுவயதுவரை இக்கோயிலோடுதான் என்னுடைய சைவசமய ஆன்மீக வாழ்வு பிணைந்திருந்தது. இடம்பெயர்வுகளாலும் புலம்பெயர்வுகளாலும் இக்கோயிலோடு மானசீகத்தொடர்பையே பதின்வயதின் பிற்பகுதியிலிருந்து பேணவேண்டியிருந்தது. ஆக, ஒரு தசாப்தத்தின் பிற்பாடு கோயிற் சொர்க்கவாசல் பூசைக்கு சென்றிருந்தேன்.சொர்க்கவாசல் பூசையும் அன்றைய தேரோட்டமும் எளியேனின் பெரியம்மாவுடைய பூசை என்பதால், வெளிநாட்டிலிருந்து வந்த பெரியம்மாவுடன் சென்றிருந்தேன். பெரியம்மாவின் மூப்பின் சிரமம் காரணமாக என்னையே தெற்பை(தர்ப்பை) போட்டு பூசையை மேற்கொள்ளப் பணித்திருந்தார். பல்லாண்டுகளின் பிற்பாடு ஈழத்துப் பாரம்பரியக்கோயில் ஒன்றின் பூசையில் கலந்துகொள்ளும் பேறை எம்பெருமான் எனக்கு அளித்திருந்தமையைக் கண்டு பூரித்தேன்.

ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் கைமணியைத் தந்து அடிக்கும்படி ஆலய அந்தணர் வேண்டியிருந்தார். நானும் கைமணியை அடித்தபடி அபிடேகத்தை பார்த்தவண்ணம் இருந்தேன். சம்புபட்ச திருமாலாகவே கண்டு மகிழ்ந்தவண்ணம் இருந்தேன். நான் அடித்துக்கொண்டிருந்த கைமணியின் பிடியில் சங்கரம் இருந்தது. திடிரென ஆலயத்து தலைவர் வந்து, "இந்தாரும் இதை அடியும்" என்று என்னிடம் இருந்த சக்கரக்கைபிடி போட்ட கைமணியை வாங்கிக்கொண்டு, நந்திச்சின்னம் கைபிடியில் பொறிக்கப்பட்ட கைமணியை என்னிடம் தந்தார்.என்னே அதிசயம்! ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது! சம்புபட்ச திருமாலாய் நான் பொன்னாலையத்தில் நாராயணனைப் பார்த்து உள்ளத்தில் அவ்வண்ணம் உருவகித்து வழிபட்டுக்கொண்டிருந்தபோது, நந்திக்கைபிடிபோட்ட கைமணியை என்னிடம் அளித்த அந்த அருட்செயல் எம்பெருமானின் திருவருட்சம்மதம் என்றுதான் சொல்லவேண்டும்!!!!
பொன்னாலயத்தில் நடைபெற்ற பூசைகளின் போது, அந்தணர் ஓதிய மந்திரங்களை நன்றாக செவிமடுத்தவண்ணம் இருந்தேன்.

ஓம் சங்கரப் பிரியாய நம" என்று அந்தணர் சொல்லும்போது சிவதீட்சை பெற்று கிருஷ்ணர் செய்த சிவபூசையும், இராமர் இராமேசுவரத்தில் செய்த சிவபூசையும்,தனது கண்ணையே தாமரைப்பூவாக பிடுங்கி சிவபெருமானுக்கு திருமால் செய்த பூசையும் அதற்கு மகிழ்ந்து சிவபெருமான் திருமாலுக்கு அளித்த திருச்சக்கரமும் என் நினைவுகளில் வந்து என்னை ஆட்கொண்டது. அணுபட்சத் திருமால்கூட ஒரு சிவனடியாரே என்ற உணர்வை என்னுள் ஊட்டியது.ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ - திருவெம்பாவை

பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால் சிவபெருமான்மேல் கொண்ட அன்புடமைபோன்று அன்புடமை பூண்ட உனது திறம் இதுதானோ? என்று திருவெம்பாவையில் திருமாலின் சிவபக்தி ஒப்புவமையாகக் கையாளப்பட்டுள்ளது.
சம்புபட்சமாய் திருமால் விளங்கும்போது சிவனாகவும் அணுபட்சமாக திருமால் விளங்கும்போது சிவனடியாராகவும் உள்ள திருமால் வழிபாடு சைவவிரோதம் அன்று!


அதுவும் ஈழத்திருநாட்டில் சைவவழி நின்றுதான் திருமால்வழிபாடு பேணப்படுகின்றது. விபூதியே அந்தணர்களால் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அந்தணர்களும் வீபூதியையே உடம்பெல்லாம் பூசியுள்ளனர்.

அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், "பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு " என்று கூறுகிறது. "திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்" என்பது பொருள். (நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"ராமம்...பஸ்மோத் தூளித சர்வாங்கம் " -ராம ரஹஸ்ய உபநிஷத்
இதன் பொருள்,"இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் " என்பதாகும்.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம் " எனும் பராசர ஸ்மிருதி சுலோகம்,விபூதியை திருபுண்டரமாகத் தரிப்பதால்,கேசவ மூர்த்திக்கும் லக்ஷ்மி தேவியாருக்கும் திருப்தியுண்டாகிறது என்று நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)
திருமால் வழிபாடு பண்டைய காலத்தில் திருநீறுவழி சைவவழிபாடாகவே விளங்கியது. பிற்காலப்பகுதியில் அதில் மாறுதல்கள் ஏற்பட்டு வைணவமாக திரிபடைந்தபோதும், சிவபூமியாக ஈழவளத்திருநாடு விளங்கிய அருமையினால், திருமால் வழிபாடு சைவவழிசார்ந்த வழிபாடாகவே பண்டுதொட்டு பேணப்பட்டு வருகின்றது.
திருமாலை சைவவழிநின்று வழிபடும் ஈழத்துப் பாரம்பரியத்துக்கு இன்று ஸ்மார்த்தர்களின் ஊடுருவலால் கேடுவந்தவண்ணம் உள்ளதென்பதையும், திருமால் வழிபாட்டை வைணவவழிபாடாக இவர்கள் ஈழத்தில் மேற்கொள்ளத்துடிப்பதையும் இன்று சில இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. இந்த ஆகமவிரோதத்துக்கு சைவர்கள் துணைபோகாது சைவ அறிவோடு சைவர்கள் விளங்க வேண்டுமென்று பணிவோடு வேண்டி, சம்புபட்ச திருமாலின் அருளை யாம் பெற்றதுபோன்று அனைவரும் பெற பொன்னாலையில் எழுந்தருளியுள்ள நாராயணனை வேண்டிக்கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



மேலும் படிக்க...

Tuesday, December 4, 2012

தமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்!

ஒரு இனம் தனித்துவமாக வாழ்வதற்கு நாடு தேவையில்லை! ஆனால் தனித்துவப் பண்பாடுகள் சிதைவுறாமல் பேணப்படுவது முதன்மையானது! உதாரணம் யூதர்கள்!
இதை உணர்ந்துதான் திராவிடநாடு கேட்ட தமிழினத்தின் தனித்துவப் பண்பாடுகளை சிதைத்து, இந்துத்துவ சாகரத்துக்குள் அனைவரையும் மூழ்கடிக்கச்செய்வதே இந்தியத்தேசியவாதிகளின் கனவு!
சைவம்-வைணவம் என்கின்ற பாரம்பரியங்களை மெதுவாக சிதைத்து சாம்பார் இந்துமதத்துக்குள் தமிழரை அழைத்துச்செல்வதே இந்தியத்தேசியவாதிகளின் குறி!!
என்றேனும் ஒருகால் தமிழரில் சிலருக்கு பழைய கனவில் பற்றுவந்தால், இந்துமதம் என்கின்ற சொல்லை வைத்து பெரும்பான்மைத் தமிழரை அச்சிலரில் இருந்து பிரிப்பதுவே சாம்பார் இந்துமதத்தின் நோக்கம்!
அதனால்த்தான் தமிழ்த்திருமுறைகளுக்கு ஆலயங்களில் தடா! தனியார் இந்துப்பாடசாலைகளில் வழிபாட்டுநேரத்தில் தமிழ்த்திருமுறைகளுக்கு பொடா!
இதற்கு பாபாக்களும், அம்மாபகவான்களும் பெரும் உதவி!

ஏழைக்கு வீபூதியும் அரசியல் தலைவர்களுக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கும் பிரபல்யங்களுக்கும் தங்கச்சங்கிலி!!!! என்னே கொடுமை!
இந்தக் கொடுமைக்கு தெய்வீகசாயம் வேறு!
சிலர் பாபாவின் போதனைகள் நன்றாகவுள்ளது என்று கூறுவதைக் கேட்டதுண்டு. நித்தியானந்தாவின் கட்டுரைகளைப் படித்தவர் நித்தியானந்தா மூடரைவிடக் கேவலமாக பேட்டிகொடுக்கத் தொடங்கும்வரை அவரது ரஞ்சிதா லீலைகளை நம்பவேயில்லை!!!
பாபா தமிழரின் பாரம்பரியத்தை சிதைப்பதற்கு இந்தியதேசியவாதிகள் பயன்படுத்தும் ஊடகம் என்பதற்கு இதோ ஆதாரம்!
"இந்திய மொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்பதை பாரதீய மாணவர்கள் அடையாளம் காணல் வேண்டும்" என்று பாபா திருவாய் மலர்ந்துள்ளார். ஸனாதன ஸாரதி ஜனவரி 2011 பக்கம் 15 இல் பாபாவின் அமுதமொழி தெய்வீக அருளுரை என்னும் சிறப்புப்பெயரோடு வெளிவந்துள்ளது.
இந்தியமொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்கின்றார் பாபா!!! என்னே மடத்தனம்! இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னரே இருந்த மக்கள் பழந்தமிழர்! தமிழுக்கு தாய்மொழி என்ற ஒன்று இல்லை! தமிழ்தான் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகியவற்றுக்குத் தாய்மொழி! இது மொழியியல் ஆய்வாளர் முடிந்தமுடிபாகக் கொள்ளும் அறிவியல்! இந்த அறிவியல் அறிவுகூட இல்லாத ஒருவரா பாபா? இவரையா சர்வவல்லமையுடைய கடவுளென்று எம்தமிழ்ச்சனம் நாடி ஓடியது?
தமிழ்ப்பதிப்பாக பாபாவின் சமித்தியால் வெளியிடப்படும் நூலில் இந்தியமொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே தாய்மொழி என்று பாபா கூறியது பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தமிழருக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகின்றது! பாபாவின் திருவாயால் அறிவியலுக்கு முரணான செய்தி பரப்பப்படுகின்றது!


பிறப்பு என்பதே வினையால் வருவது என்றும் கருவாசம் என்பது வினையின் பயன் என்றும் சைவத்தமிழ்த் திருமுறைகள் எங்கும் உரைக்கப்பட்டிருக்க, நம் தமிழ்ச்சனம் அதை உணராது பிறந்து, பிணி(வழுக்கி விழுந்து கால்வலியால் அவதிப்படுதல்),மூப்பு என்பவற்றுக்கு உள்ளாகி இறுதியில் செயற்கை சுவாசம், செயற்கை கழிவகற்றல் என்று மரண துன்பங்களையெல்லாம் அனுபவித்த ஒருவர், தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று உரைத்திட, நம்தமிழரும் கடவுள் உரைத்துவிட்டார் என்று கொண்டாடுகின்றனர் என்றுசொன்னால் முட்டாள்கள் நம்தமிழர் தானே?

இனி தமிழ்வழிபாடு வேண்டுமென்று எந்தக்கோயிலிலும் கேட்பீரோ?

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணை செய் தானே " – திருமந்திரம்தமிழையும் வடமொழியையும் ஒரேநேரத்தில் சிவபெருமான் உரைத்ததாக திருமூலர் தெரிவித்துள்ளார். சித்தர் திருமூலருக்குத் தெரிந்த உண்மைகூட கடவுள் பாபாவுக்கு தெரியாமல்ப்போனது எங்கனம்?



Tamil is one of the longest surviving classical languages in the world. It has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". - Wikipedia

பாவம் பாபாவுக்கு விக்கிபீடியாகூடத் தெரியாது! இவரா முற்றும் அறிந்த முதல்வன்?
கடவுளே........காலக்கொடுமையா இது!!!

பாபாவின் தாய்மொழியான தெலுங்குக்குகூட தமிழ்தான் தாய்மொழி என்பதை பாபாவுக்கு அவரை இயக்கியவர்கள் எடுத்துரைக்காமையே அறிவியலுக்கு முரணான அவரது பேச்சுக்குக் காரணமாயிற்று! பாவம் பாபா!!!

மங்குவர் செல்வம் மதிக்க மாட்டேன்மாயவித்தை காட்ட மாட்டேன் - யோகர்சுவாமி நற்சிந்தனை

பாபா செய்யும் மாயவித்தைகளைவிட பலமடங்கு சிறப்பான மாயவித்தைகளை மஜிக்மேன்கள்(மாயாவிகள்) செய்வதைக் கண்டிராதோர் இக்காணொளியைக் காண்க.

ஆரடா நீ என்று செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமியை ஆட்க்கொண்டார். மறைஞானசம்பந்தர் பட்ட கட்டையில் பகற்குருடு போகுதென்று கூறி உமாபதிசிவாச்சாரியாரை ஆட்கொண்டார்.

ஆக; குருவே சிவமாக எழுந்தருளும்போது தத்துவவித்தையே நடைபெறும்! மாயாவிகளுக்குத்தான் மாயவித்தை தேவை தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கு!!!

 
மேலும் படிக்க...