"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, September 13, 2009

ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்

ஸ்மார்த்த மதம் எமது சைவாச்சாரியகளான சிவாச்சாரியர்களை சாதிவலை கொண்டு தமக்குள் ஈர்க்கத் துடித்தவண்ணம் இருக்கும் இக்காலகட்டத்தில் நாவலர்பெருமானார் அன்று ஸ்மார்த்தரிடம் இருந்து சைவநெறியைப் பாதுகாக்க ஏற்படுத்திய விழிப்புணர்வுகளை பரப்புவது காலக் கடமையாகும்.

ஸ்மார்த்தர்கள் நாயன்மாருக்கு பூசை செய்கின்ற பிராமணர்களை பதிதர்கள் என அழைத்து சாதித்துவத்தை துதிபாடியபோது நாவலர் பெருமான் நமது சிவாச்சாரியார்களின் மனக்குறையை போக்கும் வகையில் ஐந்து வினாக்களை ஸ்மார்த்தர்மேல் தொடுக்குக என ஆணையிட்டுள்ளார்.

இதோ நாவலர் பெருமானின் திருவாக்கு
ஓ சைவ சமயிகளே, உங்களெதிரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு,அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள்.அவ்வினாக்கள் இவை.
1. ஓ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகரான ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ?
2. சௌந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசரியர் செய்த கிரகந்தங்கள் அன்றோ?
3. அறுபத்துமூன்று நாயன்மார்கள்ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைச் சௌந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுரநாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராச்சாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ?

4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே,அச் சங்கராச்சாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தர்களானீர்களோ அன்றோ?

5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாம் சொல்லி அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ?

மேலும் சைவத்தில் சாதி என்றால் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்."

இவ்வண்ணம் சாதி என்பதன் பொருள் சைவத்தில் எவ்வண்ணம் கையாளப்பட்டுள்ளது என்பதை வேதசிவாகமங்கள் சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள் யாவும் கற்ற ஈழவள நாட்டில் அறுபத்தி நான்காவது நாயனாராகப் போற்றப்படும் நாவலர் பெருமான் தெளிவாக விளக்கியிருக்க "சாதித்துவ குடைபிடிக்கும்" சுமார்த்தத்தை அறிந்தும் அறியாமலும் ஒழுகுவது எவ்வளவு மடமையாகும்!!!!!!!

"உங்கள் சங்கராச்சாரியர்" என நாவலர் பெருமான் சுமார்த்தரைச் சுட்டி வினாத் தொடுத்துள்ளதில் இருந்து ஆதிசங்கரர் கோட்பாடுகள் சைவநெறிக்கு ஏற்றதல்ல என்பதும் ஆதிசங்கரர் துதிபாடுவது சைவநெறிக்கு விரோதம் என்பதும் சங்கராச்சாரியர் பரம்பரை சைவநெறிக்கு உடன்பாடனதன்று என்றும் புலனாக்கியுள்ளார்.
சைவநெறியில் சாதித்துவம் உண்டு என்று உழறுகின்ற மூடர்களுக்கு நாவலர் பெருமானின் திருவாக்கு போதும் என நினைக்கிறேன்.
எனவே, சைவப் பெருமக்களே, இந்துத்துவம் என்னும் பெயரில் தமிழரில் தொன்று தொட்டு நிலவிவருகின்ற பண்பாடாகிய சைவப் பண்பாட்டை சிதைக்கும் வடக்குவலைக்கு சிக்காது சைவநெறி போற்றி மேன்மைகொள்வோம்.
மேலும் படிக்க...

Saturday, September 5, 2009

சிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்தேன்

கடந்த இரண்டு மாதங்களும் தமிழகத்தில் கல்வியாண்டு விடுமுறையைக் கழித்த சமயம் பெற்ற பயன்கள் ஏராளம். ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்பர். ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் என்பதை உணர்த்திய திருக்கோயில்கள் ஏராளம்.

தமிழகம் சென்றதில் இருந்து திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்ற அவா உள்ளத்தை தூண்டியவண்ணம் இருந்தது. சைவ சமயத்திற்குரிய ஆதீனங்களில் காலத்தால் பழமையும் ஞாலத்தில் தமிழ் தொண்டிற்கான பெருமையையும் தாங்கி நிற்கின்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் ஈழத்து சைவப் பாரம்பரியத்துக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. இத்தகு பெருமையை உடைய திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வரை தரிசனம் செய்து ஆசி பெறவேண்டும் என்ற அவா ஏற்படுவது இயல்பே!

எனவே; ஆலய தரிசன சுற்றுலாவுக்காக திட்டமிட்ட சமயம் திருவாவடுதுறை ஊடாக வாடகைக்கு அமர்த்திய மகிழூர்ந்து செல்லும்வகையில் பாதைகளை தெரிவுசெய்தேன். சீர்காழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மகிழூர்ந்து இயங்க மறுக்க, அங்கிருந்து முகந்தெரியாத ஒருவரின் உதவியால் வேறொரு வாடகை மகிழூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு செல்லும் சமயம், திருவாவடுதுறையை அடைந்தபோது குறித்த ஓட்டுனர் "எல்லா இடங்களிலும் நிற்பாட்டமுடியாது" என மறுக்கவே தஞ்சாவூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு போய் சேர்ந்தால் காணும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்கும் பேறை இழந்தேன். வாகன ஓட்டுனர் "இலங்கைத் தமிழர்" என ஏமாற்ற முனைந்த சமயம் "இலங்கைத் தமிழர்" என பரிதாப முகத்துடன் நலம் விசாரித்த நல் நெஞ்சங்களின் முகங்கள் என் மனத்திரையில் வந்துபோயினர். இங்கு தஞ்சாவூரில் நடந்த சம்பத்தையும் சுட்ட விரும்புகிறேன். நெல்லிக்காய் வியாபாரி என்னை "இலங்கைத் தமிழர்" என தெரிந்துகொண்ட பின்னர் கொடுத்த நெல்லிக்காய்குரிய பணத்தை பெற மறுத்துவிட்டார். "வசதியில்லாமல் வன்னியில் மக்கள் துன்பப்படுகையில் உங்களிடம் பணம் கொடுக்காது அவர்கள்மேல் தங்களுக்குள்ள இரக்கத்தை நான் பயன்படுத்துவது சரியல்ல" என்றேன். உடனே "எனக்குத் தெரியும்.உங்களிடம் வசதி உண்டு. அதனாலேயே தமிழகத்துக்கு வரமுடிந்தது.ஆனால் எங்கள் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை.அதுதான் இது என்னுடைய மனசாட்சிக்காக" என்று இறுதிவரை பணம் வாங்க மறுத்துவிட்டார். இப்படி பல நல்ல முகங்கள் வாழும் தமிழகத்தில் ஏமாற்ற முயலும் இப்படிப்பட்டவர்கள் பிறந்தது திருஷ்ட்டிப் பொட்டு!
திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்க முடியாமல் போன மனக்குறை நெஞ்சை வாட்டிய வண்ணமே இருந்தது. இப்படி ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு, திரும்பியபின் ஒருநாள் "மயிலை(மயிலாப்பூர்) கபாலீசுவரர் ஆலயத்திற்கு (எங்கள் வீட்டில் இருந்து பேரூந்தில் செல்வதாயின் 30 நிமிட தூரம்) சென்றபோது அங்கு சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே ஆவலுடன் சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்றேன். ஆகா......என்ன அற்புதம்!!!!!!



திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் வீற்றிருந்து அருளாசி வழங்கிய வண்ணம் இருந்தார். நெஞ்சு ஆனந்தக் கண்ணீரைச் சொரிய கண் குளிரக் கண்டு இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தேன். அம்மையை இடப்பாகத்தே கொண்ட சிவபெருமானின் திருவருட் சம்மதம் எளியேனை ஆட்கொண்டுள்ளதை உணர்ந்து பூரித்தேன்.


(குரு முதல்வரிடம் திருநீற்று பிரசாதம் பெறும்பேறு பெற்ற எளியேன்)

குரு முதல்வரிடம் இருந்து திருநீறு பெறும் பேறையும் பெற்றேன். என்ன அற்புதம்!!!!!யாரை நான் சந்திக்க முடியவில்லை என்று வருந்தினேனோ அவர் இறைவனின் திருவருட் சம்மதத்தால் கபாலீசுவரர் ஆலயத்திற்கு அன்று வருகை தந்திருந்து எளியேனின் மன வருத்தத்தை போக்கி அருளினார். எல்லாம் திருவருட் சம்மதம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மேலும் படிக்க...